disalbe Right click

Friday, November 29, 2019

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு
வழக்கின் சுருக்கம்:
வள்ளியம்மாள் என்பவரின் கணவர் தங்கவேலு. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 45 வருடங்கள் ஆகிவிட்டது. இவர்களுக்கென்று இருந்த ஒரு குழந்தையும் தனது 2 வயதுக்குள் இறந்துவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கணவரின் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்டு கணவர் தங்கவேலு உயிருடன் இருக்கும்போதே மனைவி வள்ளியம்மாள் அவர் மீதும், அவரது அண்ணன் மீதும் வழக்கு தொடர்கிறார். வள்ளியம்மாள் வழக்கில் வெற்றி பெற்றாரா?  பங்கு கிடைத்ததா?  வாருங்கள் பார்க்கலாம்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

  • வள்ளியம்மாள் என்பவர் பாகப்பிரிவினை கேட்டு தன் கணவர் மீதும், அவரது சகோதரர் மீதும் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்
  • தனக்கும், தனது கணவரான தங்கவேலுவுக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், தங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் இல்லாமலிருந்து, அதன்பிறகு சிவசுப்பிரமணியன் என்கிற மகன் பிறந்ததாகவும், அந்த குழந்தை 1 1/2 வயதான நிலையில் இறந்து போனதாகவும், அதுமுதல் தனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், பாகப்பிரிவினை கேட்டுள்ள சொத்துக்கள் மூதாதையர் வழி சொத்துக்கள் என்றும், அந்த சொத்துக்களை கணவரும், அவருடைய சகோதரரும் வாய்மொழியாக பாகப்பிரிவினை செய்து கொண்டதில் வழக்கு சொத்துகள் கணவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும், கணவருக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளதால் அந்த சொத்துக்களில் தனக்கும், காலம் சென்ற தன் மகனுக்கும் பங்குரிமை உள்ளதாக குறிப்பிட்டு பாகம் கோரினார்.
  • கணவர் மனைவியின் வழக்கை எதிர்த்து நடத்தினார். வழக்கு சொத்துகளில் சில மட்டுமே கூட்டு குடும்ப சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் சகோதரனின் தனிப்பட்ட சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் தனது சுய சம்பாத்திய சொத்துக்கள் என்றும் கூறி மனைவி பங்குரிமை கோர முடியாது என்றார்
  • வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வள்ளியம்மாளின் வழக்கை ஏற்றுக் கொண்டு பாகப்பிரிவினை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
  • அதனை எதிர்த்து கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கணவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இரண்டாம் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. RMT. டீக்காராமன் விசாரித்தார்.
  • வள்ளியம்மாளுக்கும் அவள் கணவருக்கும் திருமணம் நடைபெற்ற நாளை அடிப்படையாக கொண்டு இரண்டு கீழமை நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளது
  • அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் தங்கவேல் உயிருடன் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உயிருடன் குழந்தைகள் ஏதும் இல்லை
  • இந்த நிலையில், இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் மட்டுமே இந்த வழக்குக்கு பொருந்தும். அந்த சட்டத்தின்படி, வாரிசுரிமை அடிப்படையில், மூதாதையர் வழி வந்த சொத்தினை கணவர் பெற்றிருந்தால், அந்த சொத்தில் மனைவி பங்குரிமை கோர முடியாது
  • இது குறித்து பம்பாய் உயர்நீதிமன்றம் " உதய் நரேந்திரஷா Vs நரேந்திர அமிர்தலால் ஷா (AIR-2014-BOM-119)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. அந்த வழக்கில், இந்து கூட்டுக் குடும்ப சொத்தில் கூட்டு பங்குரிமையாளராக இருந்து கணவரால் பெறப்பட்டுள்ள சொத்தில் கணவர் உயிரோடிருக்கும் போது மனைவி தனக்கு பங்குரிமை உள்ளதாக கோர முடியாது என்று கூறியுள்ளது
  • வள்ளியம்மாள் வழக்கில் கண்ட சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவரான தங்கவேலுவின் தந்தைக்கு பாத்தியப்பட்டு, அவர் இறந்ததற்கு பின்னர், கணவருக்கும், அவரது சகோதரருக்கும் வந்துள்ளது
  • அதனால் தங்கவேல் உயிரோடு இருக்கும் போது வள்ளியம்மாள் அதில் பங்குரிமை கேட்க முடியாது. எனவே இரண்டு கீழமை நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகள் தவறானது என்று கூறி வள்ளியம்மாளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

S. A. NO - 510/2001DT - 2.11.2017
முத்துக்குமாரசாமி மற்றும் பலர் Vs வள்ளியம்மாள்
2018-1-MLJ-476

நன்றி: வழக்கறிஞரும் எனது முகநூல் நண்பருமான Dhanesh Balamurugan

Thursday, November 14, 2019

அரசு ஊழியர் - நீதிமன்றம் அளித்த தண்டணை

அரசு ஊழியர் - தண்டணை - துறைரீதியான நடவடிக்கை - மேல்முறையீடு

வழக்கின் விபரம்:
  • சகாதேவன் என்பவர் ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • அவரும் அவரது மனைவியும் சேர்ந்து சட்ட விரோதமாக சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 34 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று சகாதேவனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
  • அந்த தண்டனையை எதிர்த்து சகாதேவன் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
  • கூடவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
  • அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
துறை ரீதியான நடவடிக்கை:
  • இந்நிலையில் காவல்துறை இணை ஆணையர் சகாதேவனை பணியிலிருந்து நீக்கி 31.10.2010 ஆம் தேதி உத்தரவிட்டார்.
துறை ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ரிட் மனு:
  • அதனை எதிர்த்து சகாதேவன் ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • அதில் தனது மனைவிதான் சீட்டு நடத்தியதாகவும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சட்ட விரோதமாக தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும், மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் இணை ஆணையர் தன்னை நீக்கி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதி S. N. சுப்பிரமணியன் அவர்கள் விசாரித்தார்.
  • அரசு ஊழியர் ஒருவருக்கு குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், விதிகளின்படி அவரிடம் விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
  • ஆனால் இந்த வழக்கில் சகாதேவனுக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
  • அதனடிப்படையில் அவர்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் முன்.........
  • ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் கொண்ட நபர் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள அரசு ஊழியருக்கு விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி, அந்த அரசு ஊழியரால் அளிக்கப்படும் விளக்கத்தை பெற வேண்டும்.
  • அந்த விளக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய வகையில் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • இல்லாவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமை இல்லை!
  • சகாதேவனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
  • அதன் காரணமாக இணை ஆணையர் துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
  • சகாதேவனை நீக்கும் முன் அவருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
  • இணை ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், துறை ரீதியிலான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோர சகாதேவனுக்கு எந்த உரிமையும் இல்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு சகாதேவன் கோரலாம்.
  • ஆனாலும் அதில்கூட விதிகளுக்குட்பட்டே இணை ஆணையர் செயல்பட முடியும்.
  • ஒரு குற்ற வழக்கிலிருந்து அரசு ஊழியர் விடுவிக்கப்பட்டார் என்ற காரணத்திற்காக, துறை ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளகூடாது என்று அர்த்தமில்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கைக்கும், குற்றவியல் நடவடிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
  • தண்டணை பெற்ற அரசு ஊழியரை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
  • எந்தவொரு அரசு ஊழியரும் தண்டனை பெற்றால் அவரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்ககூடாது.
  • ஒருவேளை மேல்முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனால் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு கோரலாம்.
இந்த வழக்கில் சகாதேவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டத்திற்குட்பட்டே உள்ளது. அதனால் இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
W. P. NO - 33189/2018, Date : 02.04.2019
P. சகாதேவன் Vs இணை ஆணையர், போக்குவரத்து காவல்துறை, தெற்கு, சென்னை
2019-1-TLNJ-CRL-363

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/455787

நன்றி: எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு ‎Dhanesh Balamurugan