disalbe Right click

Showing posts with label சத்குரு. Show all posts
Showing posts with label சத்குரு. Show all posts

Thursday, September 7, 2017

நதிகளைக் காப்போம், வாருங்கள்!

நதிகளைக் காப்போம், வாருங்கள்!
அழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி!
சத்குரு: இன்று நாம் இவ்விதமாய் உருவாகியிருப்பதற்குக் காரணமே நதிகள்தான். மொகஞ்சதாரோ-ஹரப்பா போன்ற பண்டைய நாகரீகங்கள், நதிக்கரையில் பிறந்தன. நதிகள் திசைமாறியபோது அவையும் அழிந்தன.
மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்மூலம் உருவாக்குவோம்.
இன்று பல நதிகள் துரிதமாக அழிந்து வருகின்றன. இன்னும் இருபதாண்டுகளில் அவை அருகிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10, 12 நதிகள் முற்றிலும் அழிந்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன். இன்று, தென்னிந்தியாவின் மிக முக்கிய நதிகளாகிய காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை ஆண்டின் சில மாதங்களுக்கு கடலில் கலப்பதே இல்லை.
பூமி சூடாவதன் காரணமாக, இருபுறமும் கடல்கள் கொண்ட இந்தியாவின் தென் பிரதேசங்களில் கூடுதலாக மழை பொழிகிறது. கடலோர மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம்.
2016 டிசம்பர் மாதத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகள், மழை என்றாலே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் மீட்புப் படகுகளை தயார்நிலையில் வைத்துக்கொள்கிறார்கள்.
மழையின்மையால் வரும் பாதிப்பை விடவும், கூடுதல் மழை தென் மாநிலங்களை விரைவில் பாலைவனம் ஆக்கிவிடும். ஏனெனில், அதிகப்படியான மழை, காலப்போக்கில் பூமியை விவசாயத்திற்குத் தகுதி இல்லாததாகச் செய்துவிடும். இந்நிலை, தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உருவாகத் துவங்கிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது இருநூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இப்போது ஆயிரம் அடிகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.
ரயில்களிலும் லாரிகளிலும் தண்ணீர் விநியோகித்து இந்த தேசத்தை எத்தனை காலங்களுக்கு நடத்திச் செல்ல இயலும்
நான் எச்சரிக்கை மணி அடிப்பவனாக ஆக விரும்பவில்லை. ஆனால், நதிகளைத் தவறாக நடத்துவதால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, நதிகள் வற்றினால் ஒருவரையொருவர் கொன்று ரத்தத்தையா குடிக்க முடியும்?
பனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நம்மால் உயிர்ப்பிக்க முடியும். மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்மூலம் கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஆபத்தினை விளைவித்து விடுவோம்.
நதிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆதாயம் தரும் தீர்வுகளைத் தந்தால்தான் மக்கள் நதிகளைக் காக்க முன்வருவார்கள். மரக்கன்றுகளை வளர்ப்பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதன்மூலம், நாட்டில் பெருமளவு நிலம் பசுமைப் போர்வைக்குள் வரும்.
பருவமழை தவறாத சூழலை ஏற்படுத்தி, பூமி சிதைவுறுவதைத் தடுக்க முடியும். இது முழுமையான தீர்வாக அமைவதோடு, நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவில் 10% மட்டுமே ஆகும்.
நதியின் இரு கரைகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மரப்பயிர் விவசாயம் செய்யவேண்டும். அரசு நிலமாக இருந்தால் காடு வளர்க்கவும், தனியார் நிலமாக இருந்தால் மரப்பயிர் செய்யவும் திட்டமிட வேண்டும்.
தேவையான பயிற்சியையும், மானியத்தையும் அரசு வழங்கி ரசாயனக் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் மரப்பயிர் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், விளைநிலங்கள் முன்பைவிட நல்ல வருவாயை ஈட்டித் தரும்.
அரசாங்கங்கள் நதிகளின் நலனுக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் நம் கருத்தை ஏற்று, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசுக்கு ஈஷா அறக்கட்டளை ஒரு விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது.
தாங்கள் என்ன செய்தாலும் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதாலேயே பலரும் தோல்வியைத் தழுவுகிறார்கள். ஆனால், மாற்றத்தை உருவாக்க இதுவே நேரம். பத்தாண்டுகள் தாண்டினால் காலம் கடந்து போய்விடும்.
நமது பொருளாதார வேட்கையால் நதிகளையும் நிலங்களையும் பராமரிக்கத் தவறிவிட்டோம். நம் தலைமுறையிலேயே அவற்றை அழித்து விடக்கூடாது. இந்த ஆண்டு மரம்நட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரித்து அதன்பின், அடுத்த மரத்தை நட்டுப் பராமரிக்கத் துவங்கினால், இதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும்.
இதைச் செய்ய முடியுமாமுடியாதா என்பதல்ல கேள்வி; செய்ய விரும்புகிறோமாஇல்லையா என்பதே கேள்வி.
இது போராட்டமல்ல, இது ஆர்ப்பாட்டமல்ல, நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க செயல்புரிய வேண்டும்.
இதனை நாம் நிகழச் செய்வோம்.
அன்பும் அருளும்,
சத்குரு
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.09.2017

Tuesday, August 1, 2017

துயரத்தை உருவாக்குவதே நீங்கள்தான்!

துயரத்தை உருவாக்குவதே நீங்கள்தான்!
கேள்வி: சத்குரு, நிறைவேறாத  ஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?
சத்குரு: ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன் மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள்தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள்.
துயரங்கள் நீங்களே உருவாக்கிக்கொள்வது. 
அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய்விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடிகூட அதை விட்டு விலகி வரமுடியவில்லை. அதுதான் பிரச்சினை.
'துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?' என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம்தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 'ஸ்விட்ச்' தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத்தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சில நேரம் வேறேதோ ஒன்றைத்தொட, அது துயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
இது நீங்கள் ஒரு 'காரை' வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழிதெரியாமல் இருப்பதுபோல. மனம்போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித் தானே நடக்கும்?
இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு காரை ஓட்ட வேண்டும் என்றால் அதைப்பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம்.
இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும். இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிட வேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான்.
வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள்போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். 'இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது' இப்படிக்கூட நினைக்கிறீர்கள், இல்லையா?
ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்துகொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக்கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்குச் செடி வளர்க்க வேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா?
மண்ணில் தேவையான உரங்களைக்கலந்து, அதைச்சரியான பதத்தில் தயார்செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அதுவளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத்தான் வாழ்வின் புதையல்கள் கிட்டும்.
நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள் மலராது. அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறதுஎன்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர்தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்னசெய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.
ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது 'வேண்டும், வேண்டும்' என்று ஆசைகொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்.
ஒரு மலரை உங்களால் மலரச் செய்ய முடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும்.
வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்னவேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால்போதும், தேவையானது நடந்துவிடும். உங்களுக்கு சாதம் சமைக்கவேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால்போதும், சமைப்பதுதானாக நடந்துவிடும்.
முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளேவிட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டபிறகு, அங்கே நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள் அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தாலும், சாதம் தயாராகி விடும். இது அவ்வளவு சுலபம்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்கூட இதேபோன்றுதான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அதுநடப்பதில்லை.
ஒரு சிறுகடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அதுதாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள்தானே?
ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக்கொண்டு விட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப்பிடித்துப்போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை.
உங்களுக்கு எதுவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும். இல்லையெனில் அது நடக்காது.
இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும்.
அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிடவேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதைவிட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். 'எப்படியேனும் நான் என்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும்' என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களைவிட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களைவிட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள்.
அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்க முடியாதவற்றை வகுக்க நினைப்பதால்தான். என்னவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அதுபோதும், வேண்டியது நடக்கும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.08.2017