disalbe Right click

Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Thursday, December 14, 2017

ஆளில்லா ட்ரோன் விமானங்கள்

நான்கு மூலைகளில் எதிர் எதிர் புறத்தில் சுழல்கின்ற நான்கு இறக்கைகள் ஒரு பொருளை மேல் எழும்பச் செய்யும் என்ற அடிப்படை விதியின் கீழ்தான் இந்த வகையான குட்டி விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. வேவு பார்க்க என்று ஆரம்பித்த இந்த அரிய வகை விமானங்களின் மூலமாக வேவு பார்க்க, புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க, அத்தியாவசியப் பொருட்களை மிக அவசரமாக ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு அனுப்ப மற்றும் மலர்களில் மகரந்த சேர்க்கை ஏற்படுத்த என்று பல பயன்களை நாம் பெற்று வருகின்றோம்.
ட்ரோன் விமானங்கள் பற்றிய வீடியோவை காண இதனை https://youtu.be/rGK6Bpc8pH0 கிளிக் செய்யுங்கள்.
இன்றைய ராணுவத்தில் உயர் ரக இயந்திர துப்பாக்கிகளை ஏந்தி சென்று, எதிரிகளின் தளத்தை தாக்கும் ட்ரோன்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அதே நேரத்தில் இதனை தீவிரவாதிகளும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதை நாம் யாரும் மறுக்க முடியாது.
நமது நாட்டிலும் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சினிமாத் துறையில்ஏரியல் ஷாட்என்று சொல்லக்கூடிய வானத்தில் இருந்து எடுக்கும் காட்சிகள் ட்ரோன் கேமராக்களை வைத்துதான் எடுக்கப்படுகிறது. இதனால், சினிமாத் தயாரிப்பாளர்களுக்கு நேரமும், செலவும் மிகவும் குறைகின்றது. வசதியான வீட்டுத் திருமணங்களிலும்கூட இந்த ட்ரோன் காமிராக்கள் பயன்படுத்தப்படுகின்றது.



இங்கிலாந்து நாட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, தேவைப்படுகின்ற மருந்தை அந்த இடத்திற்கு ட்ரோன் விமானம் மூலம் அனுப்பி அங்கேயே சிகிச்சையை அளிக்கிறார்கள்.
இது பற்றிய வீடியோவைக் காண இதனை https://youtu.be/y-rEI4bezWc கிளிக் செய்யுங்கள். 
இந்த ட்ரோன் விமானங்களின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் ஆகும்.
சமீபத்தில் நமது தமிழ்நாட்டில் கோவையில் .டி.எம் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்கள் சிலர் இன்று நாமக்கல்லில் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் அருகிலுள்ள சோளக்காட்டிற்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்ளை ட்ரோன் கேமிராவைப் பயன்படுத்திதான் போலீஸார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
 ************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி 14.12.2017

Saturday, December 2, 2017

போட்டோ மிக்ஸ்

போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.diphso.no/FotoMix.html. 2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக்கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். டீ கப், பனியன் ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம்
விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது

Sunday, December 18, 2016

மைக்ரோ ஏ.டி.எம்


மைக்ரோ ஏ.டி.எம். - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்!
நம் பணம் சார்ந்த வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது ஏடிஎம். எனினும், இன்று அனைவரிடமும் நிலவும் பணப் பற்றாக்குறை பிரச்னையில் மைக்ரோ ஏடிஎம்கள் அதைவிட அதிகப் பலனை அளித்து வருகிறது. 

மைக்ரோ ஏடிஎம்!
ஏடிஎம்-ன் மினி பதிப்பே மைக்ரோ ஏடிஎம். மைக்ரோ ஏடிஎம் என்பது சிறிய பிஓஎஸ் வகை மெஷின். மைக்ரோ ஏடிஎம்களில் வாடிக்கை யாளர்கள் டெபாசிட் செய்வது, பணம் பெறுவது மற்றும் பணம் அனுப்புவது போன்றவற்றைச் செய்ய முடியும். 

மைக்ரோ ஏடிஎம், ஜிபிஆர்ஸ் வழியாக வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

இந்த மைக்ரோ ஏடிஎம்-ல் கைரேகை ஸ்கேனர், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த மெஷின்களை வங்கிப் பிரதிநிதிகளால் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல இயலும். 

இந்த மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் உள்ளே பணம் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள். மைக்ரோ ஏடிஎம்-ல் டெபிட் கார்டு தேய்க்கப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். 

இதற்குரிய பணத்தை வங்கிப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் வழியாக வாடிக்கை யாளர்களின் பணம் அல்லது சேவையைப் பெற்று, அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் பதிவுசெய்வது வங்கிப் பிரதிநிதிகளின் பொறுப்பு.

மைக்ரோ ஏடிஎம்-ல் என்னென்ன செய்ய முடியும்?
* பணம் டெபாசிட் செய்தல்
*பணம் எடுத்தல்
* பணம் அனுப்புதல்
 * பணம் கையிருப்பு விசாரணை
 * சேவை கோரிக்கை ஏற்பு   (Service Request Acceptance)
* வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது
* இ-கேஒய்சி சார்ந்த சேமிப்புக் கணக்கு துவக்கம்

மைக்ரோ ஏடிஎம் எப்படி இயங்குகிறது?
* சாதாரண ஏடிஎம் மெஷின்களைப் போலவே மைக்ரோ ஏடிஎம் மெஷின்களும் இயங்குகின்றன. 

* முதலில், நீங்கள் சரிபார்ப்புப் பணியை (Verification process) மேற்கொள்ள வேண்டும். சரிபார்ப்பு செயல்பாட்டில், ஆதார் அட்டையுடன்  கைரேகை ஸ்கேனிங் அல்லது உங்களுடைய டெபிட் / கிரெடிட் கார்டு வாயிலாகச் சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

* சரிபார்ப்பு முடிந்தவுடன் மைக்ரோ ஏடிஎம் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான விருப்பத்தைக் காண்பிக்கும்.

* உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்கான பரிவர்த்தனை நடக்கும். 

* பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தபின், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்குண்டான தகவல் திரையில் காட்டப்படும். அதன்பின் பற்றுச் சீட்டு (Print Receipt) வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும்.

* இறுதியில் உங்களுடைய பரிவர்த்தனை பற்றி உங்கள் வங்கியில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல், பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் போனுக்குக் கிடைக்கப்பெறும்.

* மைக்ரோ ஏடிஎம் மூலம் அனைத்து வங்கி களுக்கும் பரிவர்த்தனை வசதி அளிக்கப்படுகிறது. எனினும், உங்கள் வங்கிக் கணக்கில், உங்கள்  ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். 

நன்மைகள் என்ன?
* மைக்ரோ ஏடிஎம் மூலம் எந்த இடத்திலும் வங்கிச் சேவைகளைப் பெறலாம்.

* தற்போதைய ஏடிஎம் மெஷின்களைவிட இதற்கான செலவு மிகவும் குறைவு.

*  மைக்ரோ ஏடிஎம் ஒரு சிறிய சாதனம் என்பதால், எளிதில் கையாளலாம். எங்கு வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம்.

* பயோமெட்ரிக் வசதி இதில் உள்ளதால், படிக்காதவர்கள்கூட இதன் மூலம் பாதுகாப்பான முறையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். 

* மைக்ரோ ஏடிஎம் மெஷினில் எல்லா வங்கி டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.

* பணத் தட்டுப்பாடு நிலவிய சமயங்களில் இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. 

2 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள்!
மத்திய அரசு, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மைக்ரோ ஏடிஎம்களை அமைக்க வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் 90,000 ஏடிஎம்கள் நகர்ப்புறங்களிலும் 1.1 லட்சம் ஏடிஎம்கள் கிராமப் பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.

இனி நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் மைக்ரோ ஏடிஎம் மூலம் யார் வேண்டுமானாலும் எளிதில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்!

நன்றி : நாணயம்விகடன் – 11.12.2016


Thursday, December 8, 2016

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தில் யூபிஐ… தேவை நிறைய மாற்றம்!
வங்கிகளில் பணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்துங்கள். வங்கிகள் தரும் யூபிஐ (UPI – Unified Payment Inteface) வசதியைப் பயன்படுத்தி எளிதில் பணத்தை அனுப்புங்கள்’’ என்று சொல்கிறது மத்திய அரசாங்கம்.

பிரதமர் தொடங்கி ஒவ்வொரு மத்திய அமைச்சரும் இந்த யூபிஐ-க்காக பிரசாரமே செய்து வருகின்றனர்.
வங்கிகள் தரும் யூபிஐ வசதியை சாதாரண மக்களும் பயன்படுத்தும் நிலையில் அது எளிதாக இருக்கிறதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். களத்தில் இருக்கிற நிலைமை நம்மை அதிர்ச்சி அடையவே செய்தது.

யூபிஐ-யின் தொடக்கம்!

முதலில் இந்த யூபிஐ-யைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மொபைல் வழியிலான பணப் பரிவர்த்தனைகளை எளிதாகச் செலுத்தும் வசதியை யூபிஐ என்ற பெயரில் என்பிசிஐ அறிமுகப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் இந்த யூபிஐ-யை முறைப்படி அறிமுகப்படுத்த, ஜூலை 31-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 15 வங்கிகள் இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராகிவிட்டன. கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட பல வங்கிகள் பொது மக்களுக்கு இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராக இருந்தன.

என்ன நன்மை?

உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு வேலைகளைச் செய்ய முடியும். அதிகபட்¬ச¬மாக ஒரு லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக பணத்தை அனுப்பலாம். ரயில்வே டிக்கெட், சினிமா டிக்கெட் வாங்கலாம்; பார்கோடு அடிப்படையில் பணம் செலுத்தலாம்; இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். நன்கொடை, பள்ளிக் கட்டணங்கள் என கவுன்டர் பேமென்ட் வழியாகவும் பணத்தை செலுத்தலாம்; ஆன்லைன் மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கும் கட்டணத்தைச் செலுத்தலாம்;

24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது; உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்; யூபிஐ-ல் இ-மெயில் முகவரி போன்ற விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி, எளிதாகப் பணம் அனுப்பலாம் என யூபிஐ மூலம் கிடைக்கும் பல செளகரியங்களைச் சொன்னார்கள்.

விர்ச்சுவல் ஐடி

யூபிஐ-ல் விர்ச்சுவல் ஐடி மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர் எனில், அந்த வங்கியின் மொபைல் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயர், உங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து புதிதாக விர்ச்சுவல் இமெயில் முகவரி ஒன்றை உருவாக்கி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள், அந்த வங்கியின் மொபைல் ஆப்ஸ் மட்டுமில்லை, வேறு ஒரு வங்கியின் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இது போல் பல தரப்பட்ட வசதிகள் இந்த யூபிஐ-ல் இருக்கின்றன.

பணம் அனுப்புவதைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம். இது வங்கிகளுக்கு வங்கிகள் வித்தியாசப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு வங்கியில் இருந்தும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 10,000 ரூபாய் அனுப்புகிறார் எனில், ரூ.5 என்கிற அளவில் கட்டணம் வசூலிக்கப்படு கின்றன.

இத்தனை வசதிகள் இருக்கும் என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யூபிஐ வசதியை பல வங்கிகள், கடந்த மூன்று மாத காலத்தில் பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் பிரபலப்படுத்தவே இல்லை. இதனால் இந்தியா முழுவதும் இதுவரை 2.5 லட்சம் பேர் மட்டுமே இந்த யூபிஐ ஆப்ஸை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் ஆன்லைன் மூலம் கணக்குப் பரிவர்த்தனை செய்கிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இருக்கும்போது, வெறும் 2.5 லட்சம் பேர் மட்டுமே யூபிஐ ஆப்ஸை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மிகக் குறைவானவர்களே இந்த யூபிஐ வசதியைப் பயன்படுத்தி வருகிறபோதிலும், அவர்களும் இந்த வசதியானது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றே சொல்கின்றனர். உதாரணமாக, தென் மாநிலங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு பொதுத் துறை வங்கியின் யூபிஐ வசதியைப் பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, அதன் கஸ்டமர் ரெவியூகளைப் பார்வையிட்டோம். மிகச் சிலர் மட்டுமே இந்த வசதியைப் பற்றி நன்றாகச் சொல்லி இருந்தாலும் பலரும் தங்களது மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருக்கின்றனர்.
புகார் பட்டியல்!

‘‘இந்த ஆப்ஸ் சுத்த மோசம்; ஒருமுறை பணம் அனுப்பினால், மூன்று முறை பணத்தை எடுத்துவிடுகிறது; பணத்தை அனுப்பியவுடன், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், யாருக்கு பணம் அனுப்பினோமோ, அவருக்குப் பணம் போய்ச் சேரவில்லை; ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் எல்லாத் தகவல்களையும் கேட்கிறது. இதனால் பணம் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது’’ என்கிற மாதிரி எல்லாம் பலரும் புகார் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் புகார்களைப் படித்துப் பார்த்த அந்த வங்கி நிர்வாகம், அந்தக் குறைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக புகாருக்குக் கீழேயே பதில் சொல்லி இருக்கிறது. இதேபோல டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இன்னொரு வங்கியின் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தியவர்களும் தங்கள் அதிருப்தியை கொட்டவே செய்திருக்கிறார்கள்.

‘‘இந்த ஆப்ஸ் நம்பிக்கைக்குரியதாக இல்லை; இந்த ஆப்ஸை நான் வெறுக்கிறேன். இது ஒரு மோசமான அப்ளிகேஷன்; இந்த ஆப்ஸ் வீண்; இந்த ஆப்ஸில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும்; இது ஒரு நான்சென்ஸ் ஆப்ஸ்’’ என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுகிறோம்’ என பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.

யூபிஐ வசதியை எப்படிப் பயன் படுத்துவது? இப்படியொரு வசதி மக்களுக்குத் தெரியாமலே இருக்கிறதே..? சில வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டோம். சென்னை, அடையாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி அதிகாரி ஜானிடம் கேட்டோம்.

எப்படிப் பயன்படுத்துவது?

‘‘யூபிஐ ஆரம்பித்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால், எங்கள் வங்கியில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் இப்போதை யூபிஐ ஆப்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும் இதன் பயன் குறித்துத் தெரிவித்து வருகிறோம். எங்களுடைய வங்கி இணையதளத்திலும், மொபைல் ஆப்-லும் யூபிஐ குறித்து விளம்பரப்படுத்தி வருகிறோம். விர்ச்சுவல் ஐடியை எப்படி உருவாக்குவது, பணத்தை எப்படி அனுப்புவது, பெறுவது என அனைத்து விஷயங்களும் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கூட இந்த ஆப்-ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பியுள்ளேன். இதில் வங்கிக் கணக்கு விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் என பல தரப்பட்ட தகவல்கள் எதுவும் தரவேண்டியதில்லை. என் நண்பருக்கு பணம் அனுப்ப வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே ஆனது. வங்கிச் சேவையில் எப்போதும் பணத்தை அனுப்ப மட்டுமே முடியும். ஆனால், இந்த ஆப் மூலம் பணத்தை மற்றவர்களிடம் எளிதாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதால், இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர் எம்.எஸ்.சந்திரமொளலியிடம் கேட்டோம்.

“யூபிஐ வசதி இப்போதுதான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ், நெப்ட்-க்கு எல்லாம் ஐஎஃப்எஸ்சி கோட் தேவை. ஆனால், இதற்கு விர்ச்சுவல் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது. உடனடியாக பணத்தை அனுப்பலாம். மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது. யூபிஐ குறித்த விழிப்பு உணர்வு நன்றாகத்தான் உள்ளது.

இந்த ஆப்-ஐ இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆப்ஸை பற்றி சொன்னாலே பயப்படுகின்றனர். இதற்குக் காரணம், நம்முடைய பணம் பறி போய்விடுமோ என்ற பயம்தான்’’ என்றார்.

காலப்போக்கில் குறைகள் குறையும்!

சென்னையில் இருக்கும் ஒரு பொதுத்துறை வங்கியில் சீனியர் மேனேஜர் ஒருவருடன் பேசினோம்.
‘‘இப்போதுதான் யூபிஐ சேவையினை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். யூபிஐ பயன்படுத்துபவர்களிடம் எப்படி பயன்படுத்துவது என்ற பயம் இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், போதுமான அளவு விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.

விழிப்பு உணர்வை உடனே ஏற்படுத்திவிடவும் முடியாது. மக்களிடையே யூபிஐ-யை கொண்டு சேர்க்க கொஞ்சம் காலம் ஆகும். யூபிஐ-யை பயன்படுத்துவோர் பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருப்பதாக சொல்வதற்குக் காரணம், இதற்கான சப்போர்ட்டிங் சிஸ்டத்தை இனிவரும் காலங்களில்தான் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதனை மேம்படுத்திய பின்பு சேவையில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்” என்றார்.

இன்றைக்கு இந்தியாவில் சுமார் 34 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நல்லதொரு தரத்தில், பிழை இல்லாமலும் எளிமையான முறையிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி யூபிஐ ஆப்ஸை எல்லா வங்கிகளும் அறிமுகம் செய்திருந்தால், இந்த நேரத்தில் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு கோடி பேராவது அதனைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்களே! இதன் மூலம் பணத் தட்டுப்பாடு பிரச்னையை மிக எளிதாக சமாளித்திருக்க முடியுமே!

யூபிஐ ஆப்ஸில் இருக்கும் குறைகளை முழுவதுமாகக் களைந்து, அதைக் குறையில்லாத கருவியாக்கி, எல்லோரும் பயன்படுத்தும்படி பிரபலப்படுத்தினால் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும் என்பதை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, வெறுமனே பணமில்லா பரிவர்த்தனையை செய்யுங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது! அதனால் மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்!

சோ.கார்த்திகேயன், ஞா.சக்திவேல் முருகன்,


நன்றி- நாணயம் விகடன் – 11.12.2016