disalbe Right click

Showing posts with label மின் துறை. Show all posts
Showing posts with label மின் துறை. Show all posts

Sunday, February 11, 2018

மின்கட்டண அறிவிப்பு

உங்கள் செல்போனில் மின்கட்டணம் குறித்த அறிவிப்பை பெற வேண்டுமா?
முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கென்று  ஒவ்வொரு மாதத்தின் 15ம் தேதியை  கடைசி தேதியாக மின்சாரத் துறையினர் அறிவித்திருந்தனர். அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்கள். அதிலும் மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி தேதி 15ம் தேதிதான். இப்போது ரீடிங் எடுத்த நாளில் இருந்து இருபது நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தி  உள்ளனர். இங்குதான் நமக்கு குழப்பம் வந்துவிட்டது.  என்றைக்கு ரீடிங் எடுத்தார்கள். என்றைக்கு கடைசி கட்டணம் என்று ஞாபகம் வைத்துக் கொள்ள எல்லோரால் முடிவதில்லை.  
அபராதம் செலுத்துவது அதிகமானது
இரு மாதங்களுக்கு ஒருமுறை, நம் வீட்டிற்கே வந்து நம்ம வீட்டு மின் கட்டணம் எவ்வளவு? என்று மின் வாரியப் பணியாளர் கணக்கெடுத்து ,அந்தக் கட்டணம் எவ்வளவு என்பதையும்  அந்த மீட்டர் அருகில் நாம் வைத்திருக்கும் அட்டையில் எழுதியும் சென்றுவிடுவார்.  இருக்கின்ற  வேலைப் பளுவில் அதைப் பார்க்கத் தவறிவிட்டால், அல்லது அட்டை தொலைந்து விட்டால் நாம் கட்டணம் கட்ட மறந்திருப்போம். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு நமது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வயர்மேன் மூலமாக எச்சரிக்கப்பட்டு பிறகு அபராதத்துடன் அந்த மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும்
இதற்கு தீர்வு இருக்கிறதா?
இருக்கிறது. நமது மொபைல் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்டால், மின்சார வாரிய ஊழியர் நமது மின் கட்டணத்தை எடுத்துச் சென்று மின்வாரிய அலுவலகக் கணினியில் கட்டணம் எவ்வளவு என்று பதியும்போது, நமது மொபைல் எண்ணுக்கும் அது மெசேஜாக வந்துவிடும். அந்த மெசேஜில் நாம் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகை, நமது மின் இணைப்பு எண் மற்றும் நாம் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்இந்த குறுஞ்செய்தி நமது மின் கட்டணத்தைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்த உதவியாக இருக்கும். அபராதம் கட்டுவதை தவிர்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
நமது மின் இணைப்பு எண்ணை இரண்டு வழிகளில் நமது செல்போனுடன் இணைக்கலாம். முதல் வழி என்னவென்றால், மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று உங்களது பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய ஒரு விண்ணப்பத்தில் உங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் விண்ணப்பித்தால், உங்களது எண் உங்கள் மின் இணைப்புடன் அவர்களது கணினியில் இணைக்கப்பட்டுவிடும்.
இரண்டாவது வழி என்னவென்றால், இணையதளம் மூலமாக உங்கள் மொபைல் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்http://bit.ly/2H0wpRM என்ற இணையதளத்துக்குச் சென்று உங்கள் பகுதியை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மொத்தம் 9 பிராந்திய (Region) பகுதியைக் கொண்டிருக்கும். அவற்றில் உங்கள் பிராந்தியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிராந்தியத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
ஏற்கனவே பணம் கட்டியுள்ள உங்கள் மின் கட்டண ரசீதை எடுத்துப் பாருங்கள். அந்த ரசீதில் மின் கட்டண எண் 07 241 018 0062 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்  இந்த எண்ணை நீங்கள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் இரண்டு எண்கள் (07) உங்கள் பிராந்திய எண், அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் 07 என்பது திருநெல்வேலி பிராந்திய எண் ஆகும்.. இரண்டாவதாக உள்ள மூன்று எண்கள் (241) உங்கள் ஊரின் (Section Number) எண்  அடுத்த மூன்று எண்கள் (018) ஊரின் (Zone number)  பகுதி எண் ஆகும்..
இவை ஒற்றை இலக்கத்திலிருந்தாலும் அவை மூன்றெழுத்து எண்ணாகத்தான் எழுதப்பட வேண்டும். உதாரணத்துக்கு 6 என்பதை 006 என்று எழுதப்பட வேண்டும். கடைசியாக இருக்கும் எண்கள்  நமது வீட்டின் மின்இணைப்பு எண் (62) ஆகும். அவை ஒற்றை இலக்கத்திலிருந்து நான்கு இலக்க எண்கள்வரை இருக்கலாம். இந்த எண்ணையும் நான்கு டிஜிட்டில் குறிப்பிட வேண்டும். நான்கு டிஜிட் இல்லையென்றால்,  முன்னால் தேவையான சைபரை (0062) சேர்த்துக் கொள்ள் வேண்டும். 
பிராந்திய எண்களும், பிராந்தியப் பெயர்களும்
01 சென்னை - வடக்கு, 
02 விழுப்புரம், 
03 கோயம்புத்துார்
04 ஈரோடு
05 மதுரை, 
06 திருச்சி
07 திருநெல்வேலி
08 வேலூர்
09 சென்னைதெற்கு
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
அடுத்த உள்ள கட்டத்தில் நமது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக உள்ள மூன்று கட்டத்தில் ஏற்கெனவே மேலே குறிப்பிட்டவாறு நமது மின் இணைப்பு எண்ணில் முதல் இரண்டு இலக்கம் (07) போக மீதமுள்ள எண்களை முதல் கட்டத்தில் மூன்று எண்கள், நடுவில் உள்ள கட்டத்தில் மூன்று எண்கள், கடைசி கட்டத்தில் நான்கு எண்கள்  உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள பாக்ஸில் தெரிகின்ற Validate என்ற வார்த்தையை அழுத்தினால் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் நமக்குத் தெரியும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.02.2018 

Saturday, April 1, 2017

சூரிய மின் தகடு அமைக்கலாம், வாருங்கள்!


சூரிய மின் தகடு அமைக்கலாம், வாருங்கள்!

புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இல்லத்தில் சூரிய தகடு மின்சாரம் அமைப்பது எப்படி என்று சில அடிப்படை விவரங்களைப் பார்ப்போம். 

சூரிய மின்சக்தி எப்படித் தயாராகிறது எனத் தொழில்நுட்ப ரீதியாக அல்லாமல் எளிதாக நமக்குத் தேவையான சூரிய மின்சக்தி தொடர்பாக மட்டும் பார்க்கலாம்.

பொதுவாகக் கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிமாகத்தான் இருக்கும். இன்று குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மின் பயன்பாடு இயல்பாகவே கோடைக்காலத்தில் அதிகமாகும். அதே சமயம் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்போவதில்லை. இந்தக் கோடைக்காலம் மட்டுமல்ல பொதுவாக நமது வீட்டின் மின் தேவையைச் சமாளிக்க நமக்கு இயற்கையே தரும் ஒரு வழிதான் சூரிய மின்னாற்றல்.

பொதுவாக இன்றைக்குப் பெரும்பாலும் பல வீடுகளில் இன்வெட்டர் பொருத்தியிருக்கிறார்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெட்டரை வைத்துச் சமாளித்து வருகிறார்கள். ஆனால் இந்த இன்வெட்டரில் சேமிக்கப்படும் மின்சாரம் என்பது மின் வாரியம் மூலமாக நமக்குக் கிடைக்கும் மின்சாரம்தான். அதைத்தான் சேமித்துப் பயன்படுத்திவருகிறார்கள். 

ஆனால் இந்த சூரியத் தகடு (Solar Panel) மின் பற்றாக்குறையையும் சமாளிக்க உதவும். சூரியத் தகடு மற்றும் அதற்கான சார்ஜ் கன்ட்ரோலர் என்ற இயந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். 

உலகிலேயே இந்தியாவில்தான் வருடத்திற்கு அதிகபட்சமாக 300 நாட்கள் முழு அளவிற்கு சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

சாதாரணமாக ஒரு வீட்டில் இன்வெட்டர் வைக்கும்போது மின்சாரம் இல்லாதபோது 2 ஃபேன்கள் 3 லைட்டுகளை 3 அல்லது 4 மணிநேரம் இயங்குவது மாதிரி வைப்பது வழக்கம். 

இதற்கு ஒரு 150 எ.ஹெச் பேட்டரி மற்றும் 850 வி.ஏ இன்வெர்ட்டர் சரியாக இருக்கும். சூரியத் தகடு வைக்க இதை இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டராக மாற்ற வேண்டும். இதற்குச் சற்றுக் கூடுதலாகச் செலவாகும்.

 1கேவி சூரியத் தகடு பயன்படுத்த இந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் போதுமானது. 1 கேவி என்பது 1000 வாட்ஸ். இந்த 1000 வாட்ஸ் பேனலில் தினந்தோறும் 5 யூனிட் வரை மினசாரம் சேமிக்க முடியும். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதால் 60 தினங்களுக்கு நாம் 300 யூனிட்கள் வரை மிச்சப்படுத்தலாம்.

லாபம் தரும் செயல்

1000 வாட்ஸ் சூரிய சக்தி பேனல் வாங்க அதன் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து விலை விகிதம் மாறுபடும் சராசரியாக ஒரு யூனிட் சூரியத் தகடு ரூ. 40 முதல் ரூ. 60 வரை இருக்கும். இதன் ஆயுள் காலம் சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாகும். 

நாம் பயன்படுத்தும் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களின் ஆயுள் காலம் அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து 2 முதல் 4 ஆண்டுகாலம் இருக்கும். பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியதிருக்கும்.

ஆனால் சூரியத் தகடு 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதால் நமது முதலீடு கண்டிப்பாக லாபத்தையே தரும் என உறுதியாக நம்பலாம். சூரியத் தகடு சார்ஜ் கன்ட்ரோலரின் விலையும் அதன் நிறுவனத்தைப் பொறுத்து அமையும். இதுவும் சாராசரியாக ரூ.2000 முதல் 5000 வரை இருக்கும். தற்போது சார்ஜ் கன்ட்ரோலருடன் இணைந்த இன்வெர்ட்டர்களும் கிடைக்கின்றன.

சூரியத் தகடு பொருத்தினால் லாபமா நஷ்டமா என்று கேள்வி வரும். அதைப் பார்ப்போம்.

 1000 வாட்ஸ் சூரியத் தகடு இணைப்பு கொடுத்த வீட்டுக்கு ஒரு நாளைக்கு சுமார் 5 யூனிட் மிச்சமாகும் என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 150 யூனிட். வருடத்துக்கு 1800 யூனிட். 20 வருடத்துக்கு 36,000 யூனிட். சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிட்டால் (20 வருடங்களுக்குப் பிறகு யூனிட் கண்டிப்பாக இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்) ரூ1,44,000 மிச்சமாகும்.

இதில் நமது இன்றைய செலவு என்று பார்த்தால் சுமார் 60 ஆயிரம் மட்டும்தான் (கண்டிப்பாக அனைவரும் தங்களது வீட்டில் இன்வெட்டர் வைத்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் சூரியத் தகடு மற்றும் சார்ஜ் கன்ட்ரோலர் செலவு மட்டும்). 

ஆனால் சூரியத் தகடு பொருத்தும் பட்சத்தில் அதிகபட்சமாகத் தொடர்ந்து 4 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த சூரியத் தகடு மின்சாரம் தடைப்படாமல் வரும் என்பதை நிச்சயமாச் சொல்லலாம். பகல் முழுவதும் பராமரிப்புப் பணிக்காக மின்சார வாரியம் மின்சாரத்தை நிறுத்தினால் பகலில் 2 ஃபேன்களை தொடர்ந்து 7 முதல் 9 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.

சூரியத் தகடில் மானியம்

முதலில் சொன்னதுபோல் இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டர் மாட்டினால் பிறகு சிறிது நாள் கழித்துக்கூட சூரியத் தகடை மாட்டிக்கொள்ளலாம். ஆனால் புதிய வீடு கட்டும்போது செலவோடு செலவாக இதைச் செய்து விட்டால் பின்னால் கஷ்டமில்லாமல் இருக்கலாம்.

சூரியத் தகடிலிருந்து பேட்டரியில் சேகரமாகும் டிசி மின்சாரத்தை ஏசி-ஆக இன்வெர்ட்டர்கள் மாற்றித் தருவதால் நாம் வழக்கமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப் போலப் பயன்படுத்துகிறோம். மின் இணைப்பே வேண்டாம் என்றால் பகலில் சேகரமாகும் மின்சாரம் இரவில் சுமார் 4 மணிநேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதுவும் அதிகபட்ச வாட்ஸ் உள்ள டிவி, ஃபிரிட்ஜ், மிக்ஸ், மோட்டார் ஆகியவற்றை பேட்டரி மூலம் பயன்படுத்த இயலாது என்பதால் இம்முறை சாத்தியமில்லாதது.

எல்லாம் சரி, சூரியத் தகடு இணைப்பிற்காக அரசாங்கம் மான்யம் தருகிறதே அதை எப்படி பெறுவது என்பதைப் பற்றிச் சொல்லவேயில்லையே என்றால் அதற்கு பதில் இதுதான். 

மாநில அரசாங்கத்தின் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு பெற்ற சூரியத் தகடு நிறுவனங்கள் மூலமாக சூரியத் தகடு இணைப்பு பெற்றால் அவர்கள் தங்களது நிறுவனத்தின் மூலம் இன்வெர்ட்டர், பேட்டரி, சூரியத் தகடு, சார்ஜ் கன்ட்டோலர் என்று அனைத்துக்கும் மொத்தமாகக் கணக்கிட்டு அதில் அரசாங்க மான்யத் தொகை கழித்து மீதமுள்ள தொகையைச் செலுத்தினால் சூரியத் தகடு இணைப்பை அளிப்பார்கள். 

மான்யத் தொகையை பின்னர் அவர்கள் நமது சார்பில் பெற்றுக் கொள்வார்கள். இந்தச் சலுகையைப் பெற குறைந்த பட்சம் 1 கேவி அளவுக்குச் சூரியத் தகடு அமைக்கப்பட வேண்டும்.

வீ.சக்திவேல் 

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.04.2017

குறிப்பு :  மேலதிக விபரங்களுக்கு  
http://teda.in/ இணையதளம் செல்க.

Monday, April 6, 2015

மின் இணைப்பு பெறுவது எப்படி?



மின் இணைப்பு பெறுவது எப்படி?
****************************************************************************

மின்சாரம் இல்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லாதது இன்று. அப்படி அவசியமான மின் இணைப்பு வீடு கட்டும் முன்பே நமக்குத் தேவைப்படும். வீடு கட்டும் பணிக்கு நீர் அவசியமானது. நீருக்காக வெளியே அலைவதைக் காட்டிலும் வீடு கட்டப் போகும் நிலத்திலேயே ஆழ்துளை கிணறு அமைப்பது சாலச் சிறந்தது. மட்டுமல்லாமல் கட்டிடப் பணிகளுக்கு விளக்கு அமைக்க வேண்டும். இதற்குத் தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
****************************************************
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். http://www.tangedco.gov.in/formgallery1.php என்னும் இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
******************************************
மின் இணைப்புக் கோரும் நபர் இடம், வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும். வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல். வீட்டின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
அங்கீகாரம்
*******************
வீட்டுக்கான ஒயரிங் முழுவதுவமாக முடிக்கப்பட்டுவிட்டன என்பதை அரசு அனுமதி பெற்ற மின் பொறியாளர் உறுதிசெய்ய வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றவர்தான் வயரிங் பணிகளைப் பார்க்க வேண்டும். பிறகு அவரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
********************************
தனி இணைபைத் (Single Phase) தேர்ந்தெடுக்கிறோமா, மும்முனை (Three Phase) இணைப்பைத் தேர்ந்தெடுக்கிறோமா என்பதைப் பொறுத்து கட்டணம் வேறுபடும். மேலும் இணைப்புக் கோரும் இடத்துக்கு அருகில் மின் கம்பம் இல்லையெனில் அந்தச் செலவு இதில் கணக்கிடப்படும். அருகில் உள்ள மின்மாற்றியின் (Transformer) திறன் போதுமானதாக இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்து கட்டணத் தொகையை முடிவுசெய்வார்கள்.
எத்தனை நாட்கள் ஆகும்?
***************************************
அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும். மின்மாற்றி அமைக்க வேண்டும் எனும் பட்சத்தில் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.