disalbe Right click

Monday, January 30, 2017

மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்

மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர் வங்கிக் கணக்கில், பணத்தை செலுத்தியவர்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், மற்றவர்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி, அதற்கு சிறு தொகையை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பலர் மாற்றினர்.
வருமான வரித்துறைக்கு அதிகாரம்                     

'
இவ்வாறு மற்றவர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என,வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.

கடந்த ஆண்டு, நவ., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பினாமி சட்டத்தின் கீழ், கடும் அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

மேலும், சொத்தை பறிமுதல் செய்யவும், வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

87 பேருக்கு நோட்டீஸ்

இதற்கிடையில், செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு, 2016, டிச., 30 உடன் முடிந்தது. அந்த காலத்தில், வங்கி கணக்குகளில் செய்யப்பட்ட, 'டிபாசிட்'கள் குறித்து வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.
Advertisement
அந்த ஆய்வுகளின் அடிப்படையில், பினாமி பெயரில், கறுப்புப் பணத்தை செலுத்தி ஏமாற்றியதாக, 87 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'
மேலும், 42 வழக்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, வருமான வரித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 30.01.2017 

பிளாஸ்டிக் ஆதார் கார்டு

Image may contain: text

ஆதார் கார்டை பிளாஸ்டிக்கில் மாற்றி தருவது சட்டவிரோதம்

புதுடில்லி:பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கு வதாக, 200 ரூபாய் வரை வசூலிப்போருக்கு எதிராக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள அட்டை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு, நாடு முழுவதும், ஆதார் அடையாள அட்டைகளை இலவசமாக வினியோகித்து வருகிறது. இந்த அட்டைகளை, பிளாஸ்டிக் அட்டையாகவோ அல்லது ஸ்மார்ட் அட்டையாகவோ மாற்றித் தருவதாக, சிலர், 50 முதல் 200 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நேற்று கூறியதாவது:

காகிதத்தில் வழங்கப்படும், ஆதார் அடையாள அட்டைகள், முற்றிலும் செல்லத்தக்கவை. அதற்கு மாற்றாக, பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு வடிவில் ஆதார் அட்டைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. அவற்றுக்காக, 50 - 200 ரூபாய் வசூல் செய்வோர் குறித்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கடிதம், ஆதார் காகித அட்டை, இணைய தளம் மூலம் காகிதத்தில், 'டவுன்லோடு' செய்யப் படும் ஆதார் பதிவு, ஆகியவற்றை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட் ஆதார் அட்டை என்ற ஒன்றுஇல்லவே இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதற்காக, யாரும் பணம் செலவு செய்ய வேண்டாம்.

ஆதார் பற்றிய விபரங்களை, வேறு நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை, மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கார்டுகளாக மாற்றித் தருவதாக கூறி, ஆதார் கார்டுகளை பெறுவது சட்டவிரோதம்.இவ்வாறு அவர் கூறினா

நன்றி : தினமலர் நாளிதழ் - 30.01.2017

மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி பற்றிய விளக்கங்கள்

No automatic alt text available.


மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி பற்றிய விளக்கங்கள்

மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி குறித்து வெளியான புரளிகள் காரணமாக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம் நிச்சயம் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
இதுவரை தனியார் மருத்துவர்களிடம் சில நூறுகளைக் கொடுத்து போட்டுக் கொண்ட அதே ருபெல்லா மருந்தை, தமிழக அரசு இலவசமாகப் போடுகிறது என்றதும், எத்தனை இட்டுக் கதைகள், புரளிகள்.
அவற்றை, அறியாத பொது மக்களும் ஏதோ தங்களுக்குத் தெரிந்தவர்களையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு தவறான பார்வர்டுகளை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு மருத்துவம் தொடர்பான தகவல்களையும், உண்மை அறியாமல் தயவு செய்து பகிர வேண்டாம் என்பதுதான், ருபெல்லா தடுப்பூசி இலவசமாக குழந்தைகளுக்குக் கிடைக்க இதுவரை கடும் பிரயத்னம் மேற்கொண்டவர்களின் அன்பான வேண்டுகோளாக உள்ளது.
சரி விஷயத்துக்கு வருவோம். ஈரோட்டில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் அருண் குமார் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதை உங்களுக்கு நேரடியாக வழங்குகிறோம்.
இனி அவரே தொடர்கிறார்.
வணக்கம்,
டாக்டர் அருண்குமார், குழந்தை நல மருத்துவர், ஈரோடு.
நமது அரசு வரும் பிப்ரவரி மாதத்தில் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை MR எனப்படும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போடவுள்ளது.
இதை வழக்கம்போல், வெளிநாட்டு கம்பெனிகளின் பரிசோதனை, காலாவதியான மருந்து என்றும், இதை போட்டுக்கொள்ளும் குழந்தைகளுக்கு வீரியம் குறைவு, உடல் சோர்வு மற்றும் ஆட்டிசம் ஏற்படும் என்றெல்லாம் வாட்ஸாப்பில் கண்ட கண்ட பார்வார்டுகள் வந்த வண்ணம் உள்ளன. திடீர் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தினம் தினம் முளைத்த வண்ணம் உள்ளனர்.
இதை பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை தெரிவிக்கும் முன்னர்,இது போன்ற அறிவிலிகள் அனுப்பும் ஆதாரமற்ற முட்டாள்தனமான பார்வார்டுகளை யாரும் இன்னொருவருக்கு அனுப்பி சிலபல குழந்தைகளை முடமாக்கிய பாவத்தை சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற மெசேஜ் அனுப்புபவர்கள், தீவிரவாதிகளை விடவும் மிக பயங்கரமானவர்கள். பொடா, தடா என்று ஏதாவது சட்டத்தில் கைது செய்து இவர்களை உள்ளே தள்ள வேண்டும்.
தட்டம்மை(measles) என்பது என்ன?
குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடுப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்று. இது அம்மை தானே. நாங்கள் வேப்பிலை அடித்துக்கொள்கிறோம்.
இதற்கு எதுக்கு தடுப்பூசி?
மற்ற அம்மைகள் போலில்லாமல், நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சு சளி, ஜுரம், தீவிர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, போன்ற கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த தட்டம்மை.
1990 இல், ஒரு வருடத்திற்கு ஆறு இலட்சம் குழந்தைகள் தட்டம்மை நோயால் இறந்து போனதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
2015 இல், உலகில் ஒரு வருடத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகின.
மற்ற நாடுகளின் நிலைமை என்ன?
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தட்டம்மை 1990களில் வருடத்திற்கு 30000 பாதிப்புகளாக இருந்தது, இப்போது வருடத்திற்கு 150 முதல் 200 பாதிப்புகள் என்ற நிலையில் மட்டுமே உள்ளது. இந்த 200 புது நோயாளிகளுக்கும் காரணம் இது போன்ற தடுப்பூசி பற்றிய தவறான புரிதல்களும் பெற்றோர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதும் தான்.
இந்தியாவில் இதன் நிலைமை என்ன?
உலகில் 2015இல் தட்டம்மையினால் ஏற்பட்ட குழந்தைகள் இறப்புகளில், இந்தியாவில் மட்டும் எழுபதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகின. அதாவது உலக இறப்புகளில் 50 சதவீதம்.
இந்தியாவில் ஒரு வருடத்தில் எய்ட்ஸ் நோயால் இறக்கும் குழந்தைகளை விட தட்டம்மை நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.
தடுப்பூசியால் தடுக்கக்கூடிய இறப்புகளில் தட்டம்மை முதல் இடத்தில் உள்ளது.
எப்போது இருந்து இந்த measles தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது?
1985 ஆம் ஆண்டு முதல் இந்த measles(தட்டம்மை) தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக இதுவரை எந்த பிரச்னையும் இதனால் வந்ததில்லை.
இப்போது என்ன மாற்றம்? MR தடுப்பூசி என்றால் என்ன?
MR தடுப்பூசி என்பது, measles(தட்டம்மை) மற்றும் rubella(ருபெல்லா) ஆகிய 2 நோய்களுக்கு பாதுகாப்பு தருகிறது.
இவ்வளவு நாட்களாக MMR (measles, mumps, rubella) எனும் தடுப்பூசி தனியார் மருத்துவர்களிடம் மட்டுமே போடப்பட்டு வந்தது. 1990களில் இருந்து இந்த தடுப்பூசி இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இப்போது அரசே இலவசமாக measles, rubella நோய்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த MR தடுப்பூசியை போடவுள்ளது.
ரூபெல்லா(rubella) என்றால் என்ன?
ருபெல்லா நோயும் அம்மை நோய்களில் ஒருவகை தான். காய்ச்சல், நெறிக்கட்டி, தடுப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
இதென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நோயா?
ருபெல்லா குழந்தைகளுக்கு வருவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்நோய் தொற்று ஏற்படும் போது, கருவிற்கு நோய்க்கிருமிகள் சென்று கருவை தாக்குகின்றன. இதனால் congenital rubella syndrome எனப்படும் பிறவி குறைபாடு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும்.
இந்த congenital rubella syndrome நோய் கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு இலட்சம் குழந்தைகளை பாதிக்கிறது.
இதனால், காது கேளாமை, பிறவி கண் புரை(congenital cataract), இருதயத்தில் ஓட்டை(congenital heart defects), மூளை வளர்ச்சி குறைபாடு, கல்லீரல் மற்றும் இரத்தம் சார்ந்த கோளாறுகள் என்று பலப்பல பிரச்சனைகள் பிறக்கும் முதலே இந்த குழந்தைகளுக்கு இருக்கும்.
இந்த நோயுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், இவற்றை சரி செய்ய எந்தவொரு மருந்தோ சிகிச்சையோ கிடையாது.
கர்ப்பிணிகளுக்கு மட்டும் போட வேண்டியது தானே?
இந்த தடுப்பூசியை கர்ப்பிணிகளுக்கு போட இயலாது. குழந்தைகளுக்கு போட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தினால் தான் வருங்காலத்தில் வராமல் தடுக்க இயலும்.
இந்நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.
ஏற்கனவே அமெரிக்க கண்டத்தில் முற்றிலும் இந்நோய் பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் வருடத்திற்கு, கிட்டத்தட்ட 15000 முதல் 20000 குழந்தைகளுக்கு இந்நோய் வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
ஏன் திடீரென்று இந்த தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது?
போலியோ சொட்டு மருந்து 40 வருடங்களாக இந்தியாவில் கொடுக்கப்பட்டு வந்தாலும், pulse polio program எனப்படும் கட்டாய போலியோ சொட்டு மருந்து தின திட்டம் 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான், கொடிய போலியோ நோயின் தாக்கம் குறைந்து 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் போலியோ நோயே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல், தட்டம்மை தடுப்பூசி 1985 முதல் போடப்பட்டு வந்தாலும், இன்னும் தட்டம்மை இந்தியாவில் ஒழிந்தபாடில்லை. 
இப்போது தட்டமையுடன் ருபெல்லா நோயையும் ஒழிக்க வேண்டி இந்திய அரசு பல்ஸ் போலியோ திட்டம் போல கட்டாய MR(தட்டம்மை ருபெல்லா) தடுப்பூசி திட்டத்தை முதல் கட்டமாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது மாபெரும் முன்னேற்றமாகும்.
உலகத்தில் ஏற்கனவே 123 நாடுகள் இந்த தடுப்பூசியை கட்டாயமாக்கி உள்ளன. இந்தியா 124 வது நாடு. அவ்வளவே. இந்த தடுப்பூசியால் என்னென்னமோ பக்க விளைவுகள் எல்லாம் வரும் என்று கூறுகிறார்களே, உண்மையா? ஆட்டிசம் நோயை இந்த தடுப்பூசி ஏற்படுத்துமா? 
இவையெல்லாம் வெறும் புரளிகளே. MMR தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான ஊசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன.
இந்த முட்டாள்கள் கூறுவது போல் இந்த ஊசியினால் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்து போயிருந்தால் இந்நேரம் நாட்டில் உள்ள பாதி குழந்தைகள் மருத்துவமனையில் தான் அட்மிட் ஆகியிருக்கும். கோடி குழந்தைகள் ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்.
ஆட்டிசம் நோய்க்கும் MMR ஊசிக்கும் தொடர்பு என்று 1998 இல் வெளிவந்த ஒரு பொய்யான ஆராய்ச்சி கட்டுரை தெரிவித்ததினால் வந்த குழப்பங்களே இவை.
1998 இல், ஆண்ட்ரூ வேக்பீல்ட் எனும் ஆராய்ச்சியாளர், ஆட்டிசம் நோய் குறைபாடு வந்த 12 குழந்தைகளை மட்டும் வைத்துகொண்டு MMR ஊசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் தொடர்பு உண்டு என்று ஒரு பொய்யான ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு பிறகு Centers for Disease Control and Prevention, the American Academy of Pediatrics, the Institute of Medicine of the US National Academy of Sciences, the UK National Health Service, and the Cochrane Library ஆகிய பல பெரிய ஆராய்ச்சி மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்கள் இது உண்மையா என்று ஆராய்ந்து இது முற்றிலும் தவறு என்று 20க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஆராய்ச்சிகளில் நிரூபனப்படுத்தி உள்ளன.
பிரைன் டீர் எனும் பத்திரிக்கையாளரும் வேக்பீல்ட் செய்த தில்லுமுல்லுகளை கடும் முயற்சிக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு உலகிற்கு தெரிவித்தார்.
ஆட்டிசம் எனப்படுவது பிறப்பிலேயே இருக்கும் ஒரு மூளை செயல்திறன் குறைபாடு நோய். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 1 வயதிற்கு முன்னரே (அதாவது இந்த MMR தடுப்பூசி போடப்படும் முன்னரே) இந்த நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன. அதாவது, குழந்தை எல்லாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது, மழலை மொழி பேசாமல் இருப்பது, டாடா காண்பிக்காமல் இருப்பது, பெயர் சொன்னால் திரும்பாமல் இருப்பது, போன்ற அறிகுறிகள் ஒரு வயதிற்கு முன்னரே ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை காட்டி கொடுத்து விடும்.
தடுப்பூசி போடப்படும் முன்னரே நோயின் அறிகுறிகள் குழந்தைக்கு இருப்பது உண்மை என்றால், அந்த நோய்க்கு எப்படி தடுப்பூசி காரணமாகும்? 
கொஞ்சம் யோசிங்க பாஸ்.
தடுப்பூசி எதிர்ப்பினால் ஏற்பட்ட இழப்புகள் என்னென்ன?
ஆண்ட்ரூ வேக்பீல்ட் செய்த குழப்பத்தால், anti vaccine movement எனும் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கங்கள் உலகம் முழுதும் உருவாகி, ஏற்கனவே கட்டுபடுத்தப்பட்ட தட்டம்மை, கக்குவான் இருமல், டிப்தீரியா, டெடனஸ் போன்ற நோய்கள் இப்போது திரும்பவும் தோன்றி பல உயிர்களை காவு வாங்கி வருகின்றன.
இந்த ஒரு ஆசாமி செய்த குழப்பத்தினால் இதுவரை தடுப்பூசி போடாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 15 இலட்சத்துக்கும் மேல்.
இந்தியாவில் கூட சமீபத்தில் கேரளா மலப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே நன்று கட்டுபடுத்தப்பட்ட டிப்தீரியா நோய்க்கு தடுப்பூசி போடாமல் விட்டதினால், டிப்தீரியா நோய் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை தாக்கி பல குழந்தைகள் இறந்தும் போன கொடுமை நிகழ்ந்தது.
எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. பிப்ரவரி மாதத்தில் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை MR எனப்படும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்
.2. இது போன்ற அறிவிலிகள் அனுப்பும் முட்டாள்தனமான மெசேஜ்களை பார்வார்டு செய்வதை விட்டுவிட்டு, வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் போய் பார்க்க வேண்டும் என்று தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதோ அவரது பேஸ்புக் பதிவு உங்களுக்காக...
நன்றி   - அருண்குமார்
நன்றி : தினமணி நாளிதழ் – 28.01.2017

Saturday, January 28, 2017

இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்

Image may contain: text

இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள் 

5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு

ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18 கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

 இவற்றில் 5 கல்லூரிகள், தங்களது இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.

 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இ.சி.இ.) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது.

 இதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

 குறைந்த பி.இ. மாணவர் சேர்க்கை: கடந்த 2015 -ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422 -ஆக இருந்தன. இதில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.

 இந்த ஆண்டும் மொத்தமிருந்த 531 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,85,670 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 84,352 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,01,318 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன.

 இதன் எதிரொலியாக, 2016 -ஆம் ஆண்டில் 70 துறைகளை (படிப்புகள்) 30 கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைக்க 20 கல்லூரிகளும் அண்ணா பல்கலைகழகத்திடம் விண்ணப்பித்தன.

ஏஐசிடிஇ புள்ளி விவரம்:

மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் முற்றிலும் மூடுவதற்கான விண்ணப்பத்தை பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஏஐசிடிஇ-க்கு (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) விண்ணப்பித்து வந்தன.

 இதை ஏற்ற ஏஐசிடிஇ 2013 -14 கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2014-15 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2015-16 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும் முழுவதும் இழுத்து மூட அனுமதி அளித்தது.

10 கல்லூரிகள்: 

இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிடமிருந்து கடந்த 20 -ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள் மட்டுமே 2017-18 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

 இந்த நிலையில், கடந்த 20 -ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 12 கல்லூரிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

 விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத 12 கல்லூரிகளில், 5 கல்லூரிகளின் நிர்வாகிகள் தங்களது கல்லூரிகளை முழுவதும் இழுத்து மூடும் முடிவில் இருப்பதாகத் திட்டவட்டமாக தெரிவிóத்துவிட்டனர். 

இவற்றில் 4 பொறியியல் கல்லூரிகள், ஒரு எம்பிஏ கல்லூரி ஆகும்.

 மேலும் 2 கல்லூரிகளின் நிர்வாகிகள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 5 கல்லூரிகள் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, அவையும் வரும் கல்வியாண்டில் மூடப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

நன்றி : தினமணி நாளிதழ் – 29.01.2017

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?


அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?

சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் ஒரு வீடு வாங்க முடிவுசெய்தார் ஒரு நண்பர். வங்கியில் வீட்டுக் கடன் பெற்று அதை வாங்கத் தீர்மானித்தார். ஒவ்வொரு வங்கியிலும் தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று உண்டு. 

வங்கிக் கடன் பெற வேண்டுமென்றால் அவர்களில் ஒருவரிடம் அந்தச் சொத்து தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகுதான் வீட்டுக் கடன் அளிப்பது தொடர்பாக வங்கி முடிவெடுக்கும்.

வழக்கறிஞர் வீட்டுக்குச் செல்வதற்குமுன் தற்செயலாக என் வீட்டுக்கு அந்த ஆவணங்களுடன் வந்திருந்தார் அந்த நண்பர். அவற்றை வாங்கிப் பார்த்த நான், “இவை நகல்கள்தானே. அசல் இல்லையே!’’ என்றேன்.

 “நானும் கட்டுநரிடம் கேட்டேன். ‘ஒரிஜினல் ஆவணங்களைத் தருவது எங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை. தவிர இந்த நிலத்தில் 32 வீடுகளைக் கட்டப் போகிறோம். அவ்வளவு பேருக்கும் நாங்கள் அசல் ஆவணங்களைத் தர முடியாது’ என்று சொல்லி விட்டார்” என்றார் நண்பர்.

அசல் ஆவணங்கள் இல்லையென்றால் வழக்கறிஞர் சான்றிதழ் கொடுக்க மாட்டார் என்று கூறினேன். ஆனால், இரண்டே நாட்களில் நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல். வழக்கறிஞர் ‘க்ளியர்’ செய்துவிட்டாராம். அதாவது நகல் ஆவணங்களைப் பார்த்தே தன் பரிந்துரையை அவர் அளித்திருக்கிறார்.

நகல் அசலாகுமா?

இந்தப் போக்கு அதிகமாகிவருகிறது என்பதைக் காண முடிகிறது. வங்கி எதற்காக இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை யோசியுங்கள். 

‘சொத்துரிமையில் ஏதோ பிரச்சினை இருந்தால் அது கடன் அளித்தவரின் உரிமையைப் பாதிக்கும். சொத்து வாடிக்கையாளரின் கையைவிட்டுப் போனால் அவரால் வங்கிக் கடனைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகும். இதனால் வங்கிக்கும் நஷ்டம். 

இதற்காகத்தான் வங்கிகள் ‘வழக்கறிஞர் கருத்து’ (Lawyer’s opinion) என்பதைப் பெறுகிறது. அதுவும் திறமையான அனுபவமுள்ள வழக்கறிஞர்களைத்தான் இந்தக் குழுவில் வங்கி சேர்த்துக் கொள்ளும்.

வழக்கறிஞருக்கு சில ஆயிரங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும் இது ஒரு பாதுகாப்பான முறை. சொல்லப்போனால் வங்கி மூலமாகக் கடன் பெறவில்லை என்றால்கூட நீங்களாகவே கூட ஒரு சொத்தை வாங்குவதற்குமுன் இப்படி ஒரு வழக்கறிஞரின் மூலம் அந்த ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

ஆனால் இப்போதெல்லாம் ஆவண நகல்களை மட்டும் சரிபார்ப்பது என்பது வழக்கமாகி வருகிறது. இது ஆபத்தான ஒரு பழக்கம். கட்டுநருக்கு அவர் தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதும் இயல்புதான். 

எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் உங்களை நம்பி அவர் எப்படி அசல் ஆவணங்களைக் கொடுப்பார்? அதே சமயம் உங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் அதற்கு முன்பாக அந்த ஆவணங்களின் நம்பகத் தன்மையை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!

இந்த இரண்டு எதிர்கோணங்களையும் சந்திக்க வைக்கும் புள்ளி ஒன்று உண்டு. என் நண்பருக்கு நான் கூறிய ஆலோசனை இது. (இந்த வழிமுறையை நானும் முன்பு பின்பற்றி இருக்கிறேன்).

ஒரு மாற்று யோசனை

வழக்கறிஞரே நேரடியாகக் கட்டுநரின் அலுவலகத்துக்கு வந்து அசல் ஆவணங்களைச் சரிபார்க்கலாம். இதற்கு கட்டுநர் மறுப்பு சொல்ல மாட்டார். (கூடவே அவரும் உட்கார்ந்து கொண்டிருப்பார், அவ்வளவுதான்).

ஆனால் இதில் ஒரு சங்கடம் உண்டு. அதிகமாக அலுவல்கள் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு உடன்பட மறுக்கலாம். அல்லது இதற்கான நாளை தள்ளிப்போட்டுக் கொண்டடே செல்லலாம். அதற்கான தீர்வு இது. நீங்கள் அளிக்கும் நகல் ஆவணங்களை அந்த சீனியர் வழக்கறிஞர் தனது இருப்பிடத்திலேயே சரிபார்க்கட்டும். பில்டரின் அலுவலகத்துக்கு அவர் தன் ஜூனியர் ஒருவரை அனுப்பி வைக்கலாம்.

 அந்த ஜூனியரின் முக்கிய வேலை அந்த நகல் உண்மையான நகல்தானா என்பதை அசலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.

பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறைக்கும் வழக்கறிஞர் ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதுதான் நல்லது. அல்லது குறைந்தபட்சமாக அந்த ஜூனியர் வழக்கறிஞருக்குப் பதிலாக நீங்களே கட்டுநரின் அலுவலகத்துக்குச் சென்று அசலையும், நகலையும் கொஞ்சம் விவரமாக, நிதானமாக ஒப்பிட்டுப் பார்த்து விடுங்கள்.

நகல்களில் எந்தவித ஏமாற்று வேலைகள் பொதுவாக நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கலாம். கையெழுத்தில் இது நடைபெற வாய்ப்பு உண்டு.

பிரச்சினைகள் என்னென்ன?

இதோ ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வீட்டின் உரிமையாளர் யாருக்குமே ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுக்காத போதும் மோசடிக்காரர் ஒரு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ ஆவணத்தை முத்திரைத் தாளில் தட்டச்சு செய்து அதற்குக் கீழே வேறொரு இடத்திலிருந்து உரிமையாளரின் கையெழுத்தை அந்த ஆவணத்தில் நகல் செய்யலாம்.

அசல் ஆவணத்தைப் பார்த்தாலே இந்த வித்தியாசம் புரிந்துவிடும். ஆனால் அதன் நகலைப் பார்க்கும்போது வித்தியாசம் தெரியாமல் போகலாம். (ஒரு சின்ன குறிப்பு: இதுபோன்ற நகல்களில் மோசடியாகச் சேர்க்கப்பட்ட கையெழுத்து கொஞ்சம் மங்கலாகத் தெரியும். 

அதைக் கொண்டு ஓரளவு அது மோசடி ஆவணம் என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பிரிண்டர் செட்டிங்கை மாறுதல் செய்து இப்படி ஒட்டப்பட்ட கையெழுத்தும் தெளிவாகவே இருக்கும்படி மோசடி மன்னர்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர்).
எனவே மீண்டும் நாம் கூறுவது இதைத்தான். 

அசல் ஆவணங்களைச் சரிபார்க்காமல் ஒருபோதும் எந்தச் சொத்தையும் வாங்காதீர்கள்.

ஜி.எஸ்.எஸ்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 28.01.2017

Friday, January 27, 2017

வழங்கும் தகவல்களில் என்னென்ன இருக்க வேண்டும்?


வழங்கும் தகவல்களில் என்னென்ன இருக்க வேண்டும்?

பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்கும் தகவல்களில், தகவல் வழங்கும் அவரது பெயர் , பதவி, நாள், கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை இருக்கவேண்டும் என்பதைக் கூறும் தமிழ்நாடு தகவல் ஆணையர் அவர்களின் 25.03.2015 தீர்ப்பு நகல்.
No automatic alt text available.






தகவல் உதவி: திரு A Govindaraj Tirupurஅவர்கள்.

RTI - பதில் எவ்வாறு இருக்கவேண்டும்?

Image may contain: text

RTI - பதில் எவ்வாறு இருக்கவேண்டும்?

சென்னை: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இதுவரை இந்தச்சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு என்ன வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரையறை செய்யப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் மத்திய அரசு இந்த வழிமுறைகளை வெளியிட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை இவற்றை விளக்கி அரசின் அனைத்துத்துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Image may contain: text

அதில், விண்ணப்பித்தவர்களுக்கு அளிக்கப்படும் பதிலில், தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் தரும் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். 

ஒருவேளை விண்ணப்பதாரர் கோரிய தகவல்களை தெரிவிக்க இயலாது என்றால் அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

No automatic alt text available.

வேறொரு தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். 

இறுதியாக தகவல் கோரி முதல்முறையாக விண்ணப்பித்துள்ளாரா அல்லது மேல் முறையீடா என்பதைத் தெரிவிக்க வேண்டும். 

ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு, தேதி, அதனை அளிக்கும் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அலுவலக முத்திரையுடன் சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No automatic alt text available.

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்-22.12.2015

குற்றவியல் வழக்குகளில் அதிகபட்ச தண்டணை

குற்றவியல் வழக்குகளில் அதிகபட்ச தண்டணை

J.M COURT (இரண்டாம் நிலை) : ஒரு வருட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
➤ J.M COURT (முதல் நிலை) : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
➤  SUB DIVISIONAL JUDICIAL MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 SPECIAL METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 CHIEF JUDICIAL MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 CHIEF METROPOLITAN MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 ADDITIONAL SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 MAHILA COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SPECIAL COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 district &sessions court can impose DEATH SENTENCE WITH THE CONFORMATION OF TWO HIGH COURT JUDGES

IES - Indian Economic Service

No automatic alt text available.

IES - Indian Economic Service

இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை தீட்டுவதில், நீங்கள் பங்கேற்கவும், பொருளாதாரம் சார்ந்த துறைகளில் ஓர் உயரிய பொறுப்பை வகிக்கவும் உங்களுக்கு ஆசை இருக்குமானால் அல்லது பொருளாதாரத்தில் அதீத ஆர்வம் இருக்குமேயானால், நீங்கள் ஐ.இ.எஸ்., ஆக கனவு காணலாம்!
உலகளவில் பொருளாதார வளர்ச்சியை கண்காணித்து, அவற்றை மதிப்பீடு செய்து, நம் நாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விலைகளை நிர்ணயம் செய்வதிலிருந்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை கையாள்வதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நாட்டின் தேசிய மற்றும் மாநில நிர்வாகங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தான் நாட்டின் பொருளாதார திட்டங்களை வகுப்பதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கும். இத்தகைய பொறுப்பு மிக்க அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வே ‘இந்தியன் எக்னாமிக் சர்வீஸ்’!
யார் எழுதலாம்?
இந்திய பொருளாதாரப் பணிக்கான தேர்வுகளை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனோமெட்ரிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, இளநிலை பட்டப் படிப்பில் பொருளாதாரம், படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுத முடியாது.
வயது வரம்பு: 
ஐ.இ.எஸ்., தேர்வு எழுத ஜனவரி 1ம் தேதி கணக்கீட்டின்படி, 21 முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அரசாங்க விதிமுறைப்படி, வயது வரம்பில் தளர்வும் உண்டு.
பணி விபரம்: 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் இத்தேர்வு மூலம், ‘ஹயர் அட்மினிஸ்ரேடிவ் ஆபிசர்/பிரின்சிபல் அட்வைசர் மற்றும் சீனியர் எகனாமிக் அட்வைசர், சீனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடு/எகனாமிக் அட்வைசர் ஆகிய உயர்நிலைபொறுப்புகளை வகிக்க முடியும்.
ஆரம்ப நிலையில் ‘குரூப்-4’ பிரிவின் கீழ் ஜூனியர் டைம் ஸ்கேல், அசிஸ்டன்ட் டிரைக்டர் மற்றும் ரீசர்ச் ஆபிசர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இவற்றில், 60 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், 40 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
தேர்வு முறைஆயிரம் மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 200 மதிப்பெண்களுக்கு ’வைவா’ எனப்படும் நேர்முகத் தேர்வு, ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு: பொது ஆங்கிலம் (100 மதிப்பெண்கள்),
பொது அறிவு (100 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 1 (200 மதிப்பெண்கள்),
 பொருளாதாரம் தாள் 2 (200 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 3 (200 மதிப்பெண்கள்) மற்றும்
இந்திய பொருளாதாரம் (200 மதிப்பெண்கள்).
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் பல்வேறு பயிற்சிகள், இலவசமாக வழங்கப்பட்டு மதிப்புமிக்க ஐ.இ.எஸ்., பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகிறனர்.
மேலும் விவரங்களுக்கு: www.ies.gov.in

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

னிதன் சமூகமாக வாழத் தொடங்கியது முதலே, வன விலங்குகளை வீட்டு விலங்குக ளாகவும், செல்லப் பிராணிகளாகவும், வளர்க்கத் தொடங்கினான். நாடோடியாக இருந்தபோது, துணையாக நாய் வளர்த்தவன், விவசாய சமூகமாக மாறியபோது பசு, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.நாகரிகம் வளர வளர பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் என வளர்ப்புப் பிராணிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர்.
செல்லப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் இருக்கும் நமக்கு அவற்றைப் பராமரிப்பது எப்படி, கடித்துவிட்டால், நகத்தால் பிராண்டினால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை.
செல்லப்பிராணிகள் கடித்தவுடன் செய்யவேண்டியவை
வீட்டில் வளர்க்கும் நாய், பூனை கடித்தாலும், பறவைகள் கொத்தினாலும், முதலில், குழாயைத் திறந்துவிட்டு வேகமாக வரும் தண்ணீரின் அடியில் கடித்த பகுதியை வைத்து, சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். குறைந்தது 5 – 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் கழுவுவது நல்லது.
காயத்தின் மீது சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அந்த இடத்தை நன்றாகக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
எந்த ஒரு விலங்கு கடித்தாலும் முதலில், டி.டி (Tetanus vaccine) தடுப்பூசி போட வேண்டும். நாய்க்கடியாக இருந்தால், பிறகு, ஆன்டி-ரேபிஸ் ஊசியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு ஒரு மி.லி. இது, புஜத்தில் போடப்படும். முதல் நாளே ஊசி போடப்படும். அதில் இருந்து 3, 7, 14, 28ம் நாள் என மொத்தம் ஐந்து ஊசிகள் போட வேண்டும். 
நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடி, வெளவால் கடி போன்றவற்றுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படும். எனவே, இந்த விலங்குகள் கடித்தாலும் டாக்டர் பரிந்துரைத்தால், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.
எலி கடித்தால், எலியின் கழிவுகளை மிதித்தால் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும்  எலிக் காய்ச்சல் வரும். இதைத் தடுக்க, தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளின் இறகு, எச்சம், கழிவு மூலமாக நிமோனியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றால், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
செய்யக்கூடாதவை!
விலங்குகள் கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறு அல்லது துணியை இறுக்கமாகக் கட்டி ரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிகிச்சையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
கடித்தால் மட்டும்தான் பிரச்னையா?
செல்லப் பிராணிகள் கடிப்பதால் மட்டும் நோய் வருவது இல்லை. அவற்றின் உடலில் உள்ள வெட்டுக் காயம் மூலமாகவும் உண்ணிகள் மூலமாகவும் நமக்கு நோய்கள் வரலாம். சொறி, சிரங்கு, லைம் (Lyme) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். இதைத் தடுக்க, வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.
மருத்துவரின் அறிவுரைப்படி, பிராணிகளின் எடைக்கு ஏற்றபடி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடல் புழு மருந்து (De-worming) கொடுக்க வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட, கால இடைவெளியில் தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும். 
உண்ணிகள், பேன்கள் போன்றவை வராமல் இருக்க மருந்துகள் போட்டு, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால், நோய்களில் இருந்து நம்மையும் நம் செல்லப்பிராணிகளையும் காக்கலாம்.


கவனிக்க
* எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலும், விளையாடினாலும் உடனடியாக கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
* அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனை ரோமம் உதிர்வால், உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
* எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள், புழு அழிப்பு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாப்புழு வரும். அதனால், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்க்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.
* விலங்குகளுக்கு இறைச்சியைச் சமைக்காமல் கொடுக்கக் கூடாது. செல்லப் பிராணிகளின் கூண்டு, தங்கும் இடம் ஆகியவை விசாலமாக இருக்க வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
சுந்தரராமன், பொது மருத்துவர்

நன்றி : டாக்டர் விகடன் – 01.02.2017

கட்ட பஞ்சாயத்து : போலீஸ் டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

Image may contain: one or more people and text

கட்ட பஞ்சாயத்து : போலீஸ் டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காசோலை மோசடி வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பும் போது அதை கொடுத்தவருக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுண்டு. குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் போது, 'பிடிவாரன்ட்' பிறப்பிப்பதும் உண்டு. 

அப்போது, போலீசார் தான், காசோலை கொடுத்தவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். 

அவ்வாறு, பிடிவாரன்ட் பிறப்பிக்கும் போது போலீசார் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக, (ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலமாக) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு: காசோலை மோசடி வழக்குகளில், கட்டப் பஞ்சாயத்து செய்து போலீஸ் மூலம் பணத்தை பெறுவதற்கு, புகார் கொடுத்தவர் உத்தரவாதம் பெறுகிறார். 

பின், வாரன்டை அமல்படுத்தாமல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்; அதன் மூலம் நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கின்றனர்.

எனவே, இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, போலீசாருக்கு, டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுக்க, இந்த உத்தரவின் நகலை, டி.ஜி.பி.,க்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 27.01.2017