disalbe Right click

Thursday, August 31, 2017

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சா.....?

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சா.....?
ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு
வாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து, போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங் களின் நகல் பெறவும், http:/eservices.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில், இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர், இழப்பீடு தொகையை பெறவும், சாலை விபத் தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகளும், இந்த வசதியின் வாயிலாக, விரைவாக ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணை யின்போது, போலீசில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் அடிப்படையில், ஆவணங்கள் கோருவோருக்கு அனுமதி வழங்கப்படும்.
'நெட் பாங்கிங்' வசதியை பயன்படுத்த, ஒரு ஆவணத்திற்கு, 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
கூடுதலாக கோரப்படும் ஆவண நகல்கள், இ - மெயிலில் அனுப்பி வைக்கப்படும். அரசு இ - சேவை மையத்துடன், இந்த சேவையை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனால், பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து, போலீ சில் புகார் அளிக்கும்நடைமுறையும், மாற்று ஆவணம் பெறுவதும் எளிமையாக்கப்பட்டு உள்ளது. மாற்று ஆவணங்கள் கோருவோரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்,
ஓ.டி.பி., எனப்படும் ரகசிய எண்கள் அடிப்படையில், இதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.பின், தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண நகல், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன், உடனடியாக பயனாளிக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த நகல், அவரின் இ - மெயிலுக்கும் அனுப்பப்படும்.
ஆவணம் வழங்கும் அதிகாரிகள், உண்மை தன்மை யை சரிபார்க்க,இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, ஓட்டுனர் லைசென்ஸ் உட்பட, அரசு ஆவணங் களை, அந்தந்த துறைகளில் உடனடியாக பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைய தள சேவை, இன்று முதல், சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகருக்கான சேவை, நாளை துவங்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போலீசுக்கும் 3 மாதம் சிறை!
'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாத, போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நாளை முதல், வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, அமலுக்கு வருகிறது. ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர்.
இந்த நடைமுறையை, 'தமிழக காவல் துறையில் பணிபுரியும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி னால், மூன்று மாதம் சிறை அல்லது, ரூ.500 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும். இது, பொது மக்களுக்கு மட்டுமல்ல; போலீசாருக்கும் பொருந்தும். செப்., 1 முதல், ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல், யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம்' என எச்சரித்துள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 30.08.2017

Monday, August 28, 2017

ஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்!

ஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்!
மனைவிக்கு ரூ.4 லட்சம் வழங்க பணக்கார கணவனுக்கு உத்தரவு
புதுடில்லி : 'பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக, மாதத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பணக்கார கணவனுக்கு, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை விட்டு பிரிந்து சென்று, குடும்பத் தொழிலை கவனித்து வரும் மிகப் பெரிய பணக்காரரான கணவன், தனக்கு மாத இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஒரு பெண், வழக்கு தொடர்ந்தார். 
கீழ் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 'பணக்கார கணவனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, மாத பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்' என, மீண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கே, இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கில் தொடர்புடைய கணவனின் குடும்பம், மிகப் பெரிய பணக்கார குடும்பம்; அந்த குடும்பத்தினர், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது தொழில் மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள மைனர் மகளின் மாத பராமரிப்புக்கு, கணவர், ஒவ்வொரு மாதமும், நான்கு லட்சம் ரூபாயை பராமரிப்பு செலவாக அளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீதம் உயர்வையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.08.2017

ஈமு கோழி வளர்ப்பு மோசடி

Image may contain: 1 person, standing, outdoor and text
ஈமு கோழி வளர்ப்பு மோசடி

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -5
"வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதும், ஈமு கோழி வளர்க்கறதும் ஒண்ணு. ஆரம்பத்துல ஜாலியாதான் இருக்கும். அப்புறம் அவமானம்தான் மிஞ்சும்” கொங்கு மண்டல விவசாயிகளை கடுப்படித்த எஸ்.எம்.எஸ்.களில் இதுவும் ஒன்று.
அந்தளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈமுவை நம்பி, கடனாளி ஆனார்கள். “ஆத்தா ஆடு வளர்க்க சொல்லி கொடுத்தா, கோழி வளர்க்க சொல்லி கொடுத்தா.. ஈமு கோழி வளக்க மட்டும் சொல்லிக் கொடுக்கவே இல்லையே...”னு ஈமு கோழியில் முதலீடு பண்ணி, முச்சந்தில நின்னு புலம்பற நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் கொங்கு விவசாயிகள். இப்படியெல்லாம் ஏமாற்ற அல்லது ஏமாற முடியுமா என்பதின் உச்சம்தான் இந்த ஈமு மோசடி..
எப்படி ஏமாத்துனாங்க... எப்படி ஏமாந்தாங்க.? அதைப்பத்திதான் இங்கே பார்க்கப்போறோம்.
கவர்ச்சிகரமான மோசடி!
விவசாயத்தில் இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயப் பொருட்களுக்கு சந்தை விலை இல்லாதது, பருவ மழை பொய்த்து போனது என தொடர் நஷ்டத்தால் நொந்து நொடிந்து போன விவசாயிகள், காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஈமு மோசடி.
"ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்யணும். அப்படி முதலீடு செஞ்சா, உங்கள் நிலத்தில் எங்க செலவுல ஈமு கோழிகளுக்கான கொட்டகை போட்டு தந்து, அதுல ஆறு ஈமு குஞ்சுகளை விடுவோம். அதற்கான தீவனத்தையும் நாங்களே தருவோம். அந்த ஈமு கோழிகளை நீங்கள் வளர்க்கணும். அதுக்கு மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000 வரை கொடுப்போம். கோழி பெரிசான உடன் முதலீடு பணத்தை திரும்ப கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்குவோம். ஈமுவை வளர்க்க எல்லாத்தையும் நாங்க தந்துடுவோம். நீங்கள் வளர்த்தா மட்டும் போதும்," என விவசாயிகள் மத்தியில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி.
ஆரம்பத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மோசடியாளர்களின் அடுத்தடுத்த அஸ்திரங்கள் விவசாயிகளை காலி செய்தது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த மோசடி செயல்வடிவம் பெற்றது. தினப்பத்திரிகைகளில் முதல்பக்கத்தில் சிரித்தன ஈமு கோழிகள். ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கும் மதிப்பு இருக்கு. புரட்சி செய்யலாம் வாங்க என்று கோடம்பாக்கத்துல இருந்து கொங்கு மண்டலத்துக்கு இடம்பெயர்ந்து நம் ஹீரோக்கள் விவசாயிகளை அழைச்சு ஆசை காட்ட... மழை இல்லை, 'கரன்ட் கட்'னு ஏகப்பட்ட பிரச்னைகளோட இருந்த விவசாயிகள், இதுலயாச்சும் லாபம் கிடைக்குமானு முதலீடு பண்ண ஆரம்பிச்சாங்க.
நீங்க வளர்த்தா மட்டும் போதும்?
லட்சம் லட்சமாக பணத்தை வாங்கிட்டு, கொஞ்சம் ஈமு கோழியை கொடுத்தவங்க, 'அதுக்கு சாப்பாட்டை நாங்க கொடுத்துடுவோம். நீங்க வளர்த்தா மட்டும் போதும், நீங்க வளத்தா மட்டும் போதும்’னு முதலில் சொன்னவங்க, பின்னர் சிவாஜி படத்துல ஸ்ரேயாகிட்ட ரஜினி சொன்ன மாதிரி, ‘வளத்துப்பாக்கலாம் வாங்க'ன்னு விவசாயிகள்கிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்புறம் என்ன..? ஸ்டார்ட் மியூசிக் தான்.
ஈமு கோழி என்னவோ நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளர்ந்து நின்னுச்சு. ஆனா ஈமு கோழி கொடுத்தவன்தான் ஆபீசை மூடீட்டு போயிட்டான். இது தான் ஈமு மோசடியின் சுருக்கம். கிட்டத்தட்ட சில மாதங்களில் இந்த மோசடியில் ஏமாந்த விவசாயிகளின் எண்ணிக்கை பல ஆயிரம். ஏமாந்த தொகை பல நூறு கோடிகள்.
'ஈமுவை வைத்து மோசடி; ஈமு இல்லாமலும் மோசடி'
எப்படி இத்தனை பேரை ஒரே நேரத்தில் ஏமாற்ற முடியும்? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், அதற்கு இவர்கள் பின்பற்றியது இரு முறைகள். முதல் முறை மற்ற மோசடிகளை போலத்தான். முதலில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி விட்டு, இறுதியில் ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது.
இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு, அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. "எனக்கு கரெக்டா பணம் வந்துடுச்சு. திரும்பவும் ஒரு ரெண்டு லட்சத்தை கடன் வாங்கி கட்டியிருக்கேன். ஒரே வருஷத்துல ரெண்டு லட்சமும் வந்துடும்” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் பேசியதுதான் ஆரம்ப கட்ட விளம்பரம்.
அதன் பின்னர் தான் பேப்பர் விளம்பரங்கள், சினிமா நடிகர்களின் புரட்சி விளம்பரங்கள் எல்லாம். முதலில் வந்த விவசாயிகள் கோழியை வளர்த்து முட்டையை கொடுக்க, அந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு மீண்டும் சில லட்சங்களுக்கு விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டது.
இறுதி கட்டத்தில் அதிகரித்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஈமு கோழிகள் இல்லாமல் போக, அப்போதும் கூட ஈமுவை கொடுக்காமல் 'பணத்தை கொடுத்தால் மட்டும் போதும். ஈமுவை வளர்க்காவிட்டாலும் மாத தவணை கொடுப்போம்' எனச்சொல்லியும் முதலீட்டை அள்ளிக்கொண்டது மோசடிக் கும்பல்.
அதாவது ஈமு வளர்ப்புக்கு நிலமும், நேரமுமில்லாதவர்களுக்கும் என தனித்திட்டத்தை துவக்கினர். அதாவது முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டம்தான் அது. முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். ஆனால் அது நீங்கள் முதலீடு செய்த பண்ணை தான் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. ஒரே பண்ணையை திரும்ப திரும்ப காட்டி, 'இது தான் உங்கள் பண்ணை' என பல நூறு பேரை கூட ஏமாற்ற முடியும். இப்படியும் பல கோடிகளை ஈமு நிறுவனங்கள் சுருட்டின.
விவசாயிகளை ஏமாற்ற மாஸ்டர் ப்ளான்
அடுத்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. 'நாம சொல்லுற பொய்யில கொஞ்சமும் உண்மையும் கலந்திருக்கணும்' - இது 'சதுரங்க வேட்டை' படத்தில் மோசடியில் ஈடுபடும் நாயகன் பேசும். ஈமு மோசடியிலும் இது பொருந்தும். 'பெரும்பான்மையான விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்கள் காலம் காலமாக செய்து வரும் தொழிலை ஒத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் பெரும்பான்மையான விவசாயிகளை ஆசை காட்டி, கவர்ந்திழுத்து ஏமாற்ற முடியும்.' இது தான் ஈமு மோசடியின் சுருக்கம்.
அப்படித்தான் விவசாயிகள் தாங்கள் காலம் காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை ஒத்து அமைக்கப்பட்டது ஈமு மோசடி. தங்களின் தொழில் சார்ந்து இது இருந்ததாலும், சில லட்சங்களை போட்டால் கூடுதலாய் வருவாய் கிடைக்கும் என்பதாலும் இந்த தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சில லட்சங்களை கொடுத்து ஏமாற, ஈமு கோழிப்பண்ணை வாசல்களில் கால்கட்ட வரிசையில் காத்திருந்து பணம் கட்டி ஏமாந்து போனதுதான் இதன் உச்சம்.
மருத்துவ குண நலன் கொண்டதாம் ஈமு இறைச்சி?
ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கு மதிப்பு இருக்குனு சொல்லியதும் விவசாயிகளை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் இந்த கோழி மருத்துவத்துக்கு உகந்தது என்பது.
"நல்லா வளர்ந்த ஈமு கோழி 5 ல இருந்து 6 அடி உயரத்துக்கு வரும். எடை 50 ல் இருந்து 60 கிலோ வரை இருக்கும். எப்படி பார்த்தாலும் 40 கிலோ கறி தேறும். ஒரு கிலோ ஈமு கோழி கறி 500 ரூபாய். ஒரு கோழியின் கறி மட்டும் 20 ஆயிரத்துக்கு போகும்.
இது தவிர இதோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாம் நல்ல விலைக்கு போகும். கோழி தோலை சாயம் போட பயன்படுத்தலாம். இறகுகளை வைச்சு பிரஷ் தயாரிக்கிறாங்க. இதோட முட்டை ஓடு அலங்கார வேலைக்கு பயன்படுத்துறாங்க. எண்ணெய் மருத்துவத்துக்கு பயன்படுது. ஈமு கோழிகள்ல கொலஸ்ட்ரால் சுத்தமா இல்லை. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவங்க தாராளமாக இதை சாப்பிடலாம். கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு எல்லாத்துக்கும் மேல இனி ஈமு கோழிக்கறி தான் இருக்கும்," என இஷ்டத்துக்கும் சொல்லிதான் இந்த மோசடி அரங்கேறியது. கிட்டத்தட்ட அதன் எச்சத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் தங்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டனர் மோசடிக்காரர்கள்.
உண்மையில் ஈமு வளர்ப்பு லாபமானது தானா?
ஈமுவை வைத்து மோசடி நடப்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் ஈமு வளர்ப்பது லாபமானது தானா? என நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். நிச்சயம் இல்லை என சொன்னவர்கள், ஈமுவின் பின்னணியை விளக்கினர்.
ஈமு கோழி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பறவை இனம். 1980களில் ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான ஈமு கோழி பண்ணைகள் இருந்தன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு மதிப்பிழந்த ஈமுக்கள் தான் இங்கு வந்துள்ளன. ஈமு கோழி வளர்ப்பு என்பதே மோசடிதான். கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி நடந்த இந்த மோசடியில், முட்டை கொள்முதல், குஞ்சு உற்பத்தி என இங்கே மட்டுமே இது நடந்து வருகிறது.
ஆனால் இங்கு ஈமு கோழிக்கு தேவையான தீவன நிறுவனங்கள் இல்லை. கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இங்கு துவக்கப்படவில்லை, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ கூட இங்கு இல்லை. அப்படியிருக்க இவை எல்லாம் சுத்தப்பொய். ஈமுவை வைத்து மோசடி மட்டுமே நடந்தது என்பதுதான் உண்மை. ஈமுவின் அனைத்து உடல் பாகங்களை விற்றால் கூட சில ஆயிரங்கள் கூட தேறாது என்பதுதான் உண்மை நிலை. ஆனால் அதை விவசாயிகள் உணரத்துவங்கும் முன்னர் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
கடைசி வரை பாம்பை காட்டாமல் மோடிவித்தை செய்யும் பாம்பாட்டி போலத்தான் இந்த மோசடியும். இந்த மோசடியில் ஈமு கோழி என்பது வெறும் கண்கட்டு வித்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை," என்றனர்.
இது விவசாயியின் புலம்பல்
விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம். நடந்தவற்றை நகைச்சுவையாய் நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஒரு விவசாயினுடைய பேட்டி அப்படியே இதோ...
"ஈமு மோசடியில் பணம் போனது ஒரு பக்கம் மன உளைச்சல்னா, போற இடத்துல எல்லாம் " ஏன் மாப்ளே... ஈமு கோழி வளர்த்தா லட்சமா பணம் சம்பாதிக்கலாம்னு சொன்னியே? யாரு சம்பாதிப்பானு சொல்லவே இல்லையே”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாமளே மறந்தாலும் விடாம ஞாபகப்படுத்துனாங்க. இழவு வீட்டுக்கு போனாலும் கட்டிப்பிடிச்சு அழற கேப்புல, "என்ன ஈமுல போனது, போனது தானா?'னு கேட்டு ரொம்ப அழ வைச்சாங்க. எப்படி ஏமாந்தேன்னு நினைச்சு பாத்தாத்தாங்க ரொம்ப கடுப்பாகுது.
சத்யராஜ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாக்கியராஜ்னு எல்லாரும் ஒரே அடியாய் கிளம்பி வந்து, ஈமுவுல அது இருக்கு. இது இருக்குனு எங்களை மூளைச்சலவை பண்ணிட்டு சூட்டிங் முடிஞ்சதும் பேக்கப் சொல்லிட்டு, பேமண்ட் வாங்கிட்டு போய்ட்டாங்க.
விவசாயத்துக்கு மழையும் இல்லை. கிணத்து தண்ணியை இறைக்க மோட்டார் போட்டா, கரண்ட்டும் இல்லை. ரியல் எஸ்டேட்காரன் வேற, கையில ஸ்டாம்ப் பேப்பரோட நிலத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தான். வயித்துப்பாட்டுக்கு வேற வழியில்லாமத்தானே ஈமுக்கோழியில இன்வெஸ்ட் பண்ணிட்டு, இருளடைஞ்சு போன எங்க வாழ்க்கையில வெளக்கு ஏத்தலாம்னு நினைச்சோம்.
ஆனா அப்புறம்தான் தெரிஞ்சது, அது விளக்கு இல்லை. கொள்ளினு. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிஞ்ச கதையாயிடுச்சு. எங்க சாப்பாட்டை குறைச்சிட்டு ஈமுவுக்கு நிறைய சத்தான உணவை கொடுத்து வளர்த்தோம். கடைசியில இப்படி பண்ணிட்டானுவ. நம்பி வளர்த்தோம். நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளந்து நின்னுச்சு. திடீர்னு ஒரு நாள் பாத்தா , ஈமு கோழியை கொடுத்தவன் ஆபிச இழுத்து மூடிட்டு போயிட்டானுங்க.
அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டாங்க. ஏதாவது விசேஷத்துக்கு போயிருப்பாங்க. வந்துடுவாங்கன்னு மனசை திடப்படுத்திகிட்டுதான் இருந்தோம். இதுக்கிடையில ஈமு சாப்பாடு இல்லாம செத்திர கூடாதேன்னு வூட்டுல இருக்கற அரிசி, பருப்பு எல்லாம் போட்டோம். ஆனா அதை எங்கே அது சாப்பிடுச்சு. சாப்பிட்டா சாப்பிடு, இல்லைனா போன்னு போலாம்னுதான் யோசிச்சோம். அப்ப தான் ஞாபகம் வந்துச்சு. சோத்துக்கு வழியில்லாம ஈமு கண்ணை மூடிக்கிட்டா…நாம தலையில துண்டைப் போட்டுக்கிட்டு தலைமறைவா திரிய வேண்டியதுதான்.. அதை நினைச்சு அது என்ன சாப்பிடும், அதை வாங்கலாம்னு போனா நாங்க வாங்குற அரிசி விலையை விட அது அதிகம்.
ஆபிசை மூடிட்டு போனவங்க. திரும்ப வரவே இல்லை...!
போலீஸ் ஸ்டேஷன் போய் ஈமுல மோசடி பண்ணீட்டாங்கன்னு சொன்னதும், " போ... போய் லைன்ல நில்லு!"ன்னு சொன்னது போலீஸ். லைன்ல நின்னா, எனக்கு முன்னாடி இருந்தவங்க “உங்களுக்கு எவ்வளவு போச்சு. அவ்வளவா? "னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. ஸ்டேஷன்ல தந்த மரியாதையை பார்த்தா, முதலீடு பண்ணது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், 'போனால் போகட்டும் போடானு' பாட்டுப்பாடிட்டே (வேற வழி?) வீட்டுக்கு வந்தேன்.
ஈமுக்கோழிகளை என்னதான் பண்றது யோசிச்சா வழியே தெரியலை. ஆடு கோழின்னா அய்யானாருக்கு பலி கொடுத்து செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தமாவது பண்ணிக்கலாம். ஆனா ஆஸ்திரேலியாவுல இருந்து கொண்டாந்த இந்த ஈமு கோழிய என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சோம்.
கிலோவுக்கு 2 ஆயிரம் கிடைக்கும், 3 ஆயிரம் கிடைக்கும்னு ஆசை காட்டுனாங்க பாவி பயலுக. இப்ப என்னடான்னா விவசாயத்தையும் விட்டுட்டு வீதிக்கு வந்தது தான் மிச்சம்.
பல லட்சம் முதலீடு... கிடைச்சது சில ஆயிரம்... இதுவா புரட்சி?
இந்த நிலைமையில தான், ஈமு வாங்க, விற்க நாங்க இருக்கறோம்னு அந்த கர்நாடகா பார்ட்டியும், ஆந்திரா பார்ட்டியும் வந்தாங்க. ஒரு கோழி 500 ரூபாய், 600 ரூபாய்னா எடுத்துக்கறேன்னு சொன்னாங்க. பாத்து போட்டு கொடுங்க னு சொன்னோம். அதெல்லாம் முடியாதுனு கட்அன்ட் ரைட்டா சொல்லி அடிமாட்டு விலைக்கு, சாரி அடிஈமு விலைக்கு வாங்கிட்டு போயிட்டாங்க. பல லட்சம் முதலீடு பண்ணி சில ஆயிரங்களை மட்டும் சம்பாதிச்ச பின்னாடிதான் ஆரம்பத்துல அவங்க விளம்பரத்துல சொன்ன 'புரட்சி' க்கு அர்த்தம் புரிஞ்சது” என்றார் பரிதாபமாக.
ஆனால் சினிமா மாதிரி க்ளைமேக்ஸில் எல்லோரும் திருந்தி, இனி ஏமாறுவதில்லை என முடிவு செய்துவிடவில்லை என்பதுதான் வருத்தம். இந்த க்ளைமேக்ஸ் சற்று வித்தியாசம். ஈமு மோசடி பரபரப்பாய் இருந்த நேரம், பணத்தை இழந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமாய் நடந்து கொண்டிருந்த நேரம்... மற்றொரு புறம் சத்தமே இல்லாமல் இன்னொரு மோசடி. அங்கும் கேள்வியே இல்லாமல் முதலீடு செய்து கொண்டிருந்தனர் விவசாயிகள்.
அதில் ஈமுவில் பணத்தை இழந்தவர்களும் கூட இருந்தார்கள். அது என்ன மோசடி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் -21.08.2015)

குர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை!

குர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை!
சாமியோ... ஆசாமியோ தனி மனித துதி எவ்வளவு ஆபத்தானது என அரியானாவில் ரத்தச் சிதறல்களுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராம் ரஹீம்
அஹிம்சையும், அமைதியும் நிலவவேண்டிய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய ஒரு மதத் தலைவரின் கைது சம்பவத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆற்றிய எதிர்வினை எதிர்பாராத திசையிலிருந்து
வந்த எமனைப் போன்று, இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
மத தத்துவங்களை, கலாசாரங்களை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்ல மத குருமார்கள் காலம்காலமாக இயங்கிவருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் சாமியார்களின் கொள்கைகள்தான் மக்களிடையே உரை நிகழ்த்தின. பக்தர்களின் ஆன்மாவுடன் அவை அந்தரங்கமாக உரையாடின. தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு, பக்தர்கள் அந்த எல்லையைத் தாண்டாமல் சாமியார்களை விட்டு ஒதுங்கி நின்றார்கள். பக்தர்களிடம் சாமியார்களும் அந்த எல்லையை மீறாமல் இருந்தனர். ஒருவேளை உணவு, துாய்மையான மனம், எளிமையான வாழ்க்கை இதுதான் அன்றைய மத பிரசாரகர்களின் வாழ்க்கை.
தமிழகத்தின் புகழ்பெற்ற மடத்தின் மூத்த மதத்தலைவர் 90 வயதிலும் ஒரு மாட்டுவண்டியின் பின்னே கைகளை தாங்கியபடி நகரின் வீதிகளில் ஆசீர்வதித்தபடியே செல்வார். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் மடத்தில் நிறுத்தி ஆசி வழங்குவார். எதிரில் நிற்பவர் பிரச்னையைச் சொல்லும் முன்னே அவனுக்குத் தீர்வைச் சொல்லி அனுப்பி வைப்பார். மடம் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானபோதும் அந்த மதத்தலைவர் மாற்றுக்கருத்துக்கு ஆளானதில்லை.
ராம் ரஹீம்
மக்களுக்கு தத்துவங்களையும் இன்னபிற மதக்கோட்டுபாடுகளையும் போதித்துவந்த மடங்கள் கார்ப்பரேட் அலுவலகங்களைப் போல் கட்டி எழுப்பப்பட்டபின் சாமியார்கள் அரசியல்வாதிகளைப்போல் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். இறைவனின் புகழை மக்களிடம் பேசியவர்கள், பின்னாளில் தாங்களே அந்த இறைவனின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ள
ஆரம்பித்தனர். இந்த போலிகளுக்கு ஆன்மீக அந்தஸ்து ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியது. ஆள்பவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக மாற விரும்பினர். இறைவனைத் தேடிப்போய் வணங்கிய அரசியல்வாதிகளின் இல்லத்திற்கே இவர்கள் நேரில் சென்று ஆசி வழங்கினார்கள். பகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கியவர்களேகூட இந்த மாயையில் சிக்கினர். அரசியல்வாதிகளுடன் உறவாடத்தொடங்கி அவர்களால் பாத பூஜைகளுக்கு ஆளானபின் இந்த கார்ப்பரேட்டுகள் தங்களை ஆண்டவர்களாக கருதத் துவங்கினர்.
இந்திய அரசியலில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அதன் பின்னணியில் ஒளிந்து கிடப்பது தனிமனித ஆராதனை. அரசியல்வாதிகளுடனான நெருக்கத்தினால் ஆன்மீகவாதிகள் தங்களை மனிதர்களால் கொண்டாடப்பட வேண்டியவர்களாக கருதிக் கொண்டனர். டெல்லி அரசியலில் கடந்த காலத்தில் சந்திரா சாமியாரில் தொடங்கி.. திருவண்ணாமலையில் இட ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியிருக்கும் இன்றைய நித்தியானந்தா வரை இந்தப் பட்டியல் நீளும். திரும்பத் திரும்ப ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவனே அந்தப் பொய்யை முதலில் நம்புபவனாக ஆகிறான். தான் கடவுள் என மக்களை நம்பவைக்க முயலும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள், கொஞ்ச காலத்தில் தங்களையே கடவுளாக பாவிக்கத் தொடங்கி கடவுளுக்கு டஃப் கொடுக்கத் தொடங்குகிறார்கள். மறைந்த தனது அரசியல் குருவின் படத்தை சிறியதாகப்
போட்டு, தன் படத்தை பேனரில் வியாபிக்கச்செய்யும் நடப்பு அரசியல்வாதிகளைப்போல இவர்களும் பேனரில் 32 பற்களும் தெரிய படபடக்கிறார்கள். மோடியில் தொடங்கி எடப்பாடி வரை தொடரும் இந்த கலாசாரத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுகிறார்கள் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள்.
அரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பதால் சாமியார்கள் என்ற போர்வையில் இவர்கள் நிகழ்த்தும் குற்றச்செயல்கள் மன்னிக்கப்படுகின்றன. அரிதாகவே வழக்குகள் பதிவாகின்றன. அதுவும் நீதிமன்றத் தலையீட்டினால் இருக்கலாம்.
ராம் ரஹீம்
குர்மீத் ராம் ரஹீம் சிங் இந்தப் பின்னணியில் வளர்ந்த ஒரு சாமியார்தான். இந்திய தண்டனைச் சட்டத்திற்கு விதிவிலக்காக இங்கு யாரும் கிடையாது. அது தெரிந்தும் பாலியல் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒரு சாமியாருக்காக, ராணுவத்தை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவியிருக்கின்றனர் இவரது பக்தர்கள். வளமான காலத்தில் தாங்கள் செய்கிற
தவறுகளை எதிர்காலத்தில் மறைத்து சட்டத்தின் சந்துபொந்துகளில் ஒளிந்துகொள்ள வசதியாகவே தங்கள் பக்தர்களை மனிதக் கேடயங்களாகத் தயார்படுத்துகின்றனர் இதுபோன்ற கார்ப்பரேட் சாமியார்கள். 'தங்களின் இறைவன் யாரோ அல்ல; இவர்தான்' என மக்களை நம்பவைப்பதில் இவர்கள் அடைந்த வெற்றிக்குக் கிடைத்த பரிசுதான் அரியானாவில் இன்று உயிரைவிட்ட 30 பேர்.
தண்டனைக் கைதியாக குர்மீத் ராம்
ரஹீம் சிங் இப்போது சிறையிலடைக்கப்பட்ட பின்னரும், பஞ்சாப் மாநிலமும், அரியானாவும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் பயம் குறையாத பதற்றத்திலேயே உள்ளன. இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வருகிற ஒரு குற்றத்திற்காக பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில் கைதாகும் ஓர் சட்டப்படியான செயலை எதிர்த்து, மாநில அரசின் சட்டம்- ஒழுங்கை கேள்விக்குறியாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....?
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு
பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு.
திராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழைஎன்ற மூன்று முழக்கங்கள்தான். ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது.
தன் அமைப்பின் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம்.
ரஹீம்சிங் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை.
தனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார். என்கிறார்கள். மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம்
நீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப்பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம். சாமியார்கள் மக்களிடையே அதீத புகழ்பெறத் துவங்குகிறபோது, சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கைதான்.
நம்மூரில் சில 'கடவுளர்கள்' திரைப்படங்களில் நடித்ததுண்டு. தெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு. மாநிலத்தில் 2012-ல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன.
ராம் ரஹீம்
இந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் போன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும்
அளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார்.
கடந்த 2002-ம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
ஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார்.
உச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது.
இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளிஎன அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை.
ரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார். சட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இப்படித்தான். ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார். ஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.
ரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர்.
இவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன.
பிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர்.
இப்போது பதற்றம் குறையாத நிலையிலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் ரோதக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனிடையே சாமியாரின் பலத்தை அறிந்தும் மெத்தனமாக இருந்து மாநிலத்தில் பெரிய வன்முறை நிகழ அரசு காரணமாகி விட்டதாக, இவ்விவகாரம் குறித்து, அரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருமாநிலங்களிலும் நிகழ்ந்த வன்முறை குறித்த விவரங்களை இருமாநில முதல்வர்களிடமும் கேட்டுப்பெற்றுள்ள உள்துறை அமைச்சகம் அதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தண்டனை குறித்த விவரம், வரும் 28-ம் தேதி வர இருப்பதால், இப்போது நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை பகுதி-ஒன்றாகத்தான் கணக்கிட்டுள்ளது. மாநில காவல்துறை. அதனால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கள் சுயநலத்துக்காக ஒரு ஆபத்தான மனிதரை வளர விட்டதற்காகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராமல் அதில் மெத்தனம் காட்டியதற்குமான விலையை மொத்தமாக தந்திருக்கின்றன இரு மாநிலங்களும். தர இருக்கின்றன இனியும்!
நன்றி : விகடன் செய்திகள் - 27.08.2017
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.
இதன்மூலம் அவருக்கு மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வழக்குகளுக்கும் தலா ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், தலா ரூ.14 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : விகடன் செய்திகள் - 28.08.2017