disalbe Right click

Showing posts with label மாதவிடாய். Show all posts
Showing posts with label மாதவிடாய். Show all posts

Sunday, October 22, 2017

ஒழுங்கற்ற மாதவிடாய்...

ஒழுங்கற்ற மாதவிடாய்... ஆரோக்கியமின்மையின் அறிகுறி
கவனக் குறிப்புகள்
எனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது... இது சரிதானா?''
"எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ?''
"ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... எனக்குக் கண்டபடி மாறுதே...’’
- இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன.
வலியுடன் கூடிய மாதவிடாய்
இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `அசுத்தம்என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.
ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், `மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்என்கிறார்கள் மருத்துவர்கள். இவற்றையெல்லாம் குறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மீனா விரிவாகப் பேசுகிறார்.டாக்டர். மீனா
டாக்டர். மீனா
"சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வர வேண்டும்?''
"பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்என்று குறிப்பிடப்படுகின்றன.’
  13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”
ஒழுங்கற்ற மாதவிடாய்
"ஒழுங்கற்ற மாதவிடாய், எதன் அறிகுறியாக இருக்கும்
அவை என்னென்னப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?''
 பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome - PCOS): 
ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி..எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில்கூட பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், இந்தப் பிரச்னை உருவாகும். உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்துவிடலாம்.
  தைராய்டு பிரச்னைகள் (Thyroid Problems): 
தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும். இதில், ஹைப்போதைராய்டிஸ்ம் (Hypothyroidism) முக்கியமான ஒரு பிரச்னை. வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hypercholesterolemia) ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்னைகளையும் இது ஏற்படுத்தும்.
உடல் சோர்வு
  ஹார்மோன் - இம்பேலன்ஸ் (Hormone imbalance)
புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் அதை வெளிக்காட்டும்.
  பெரிமெனோபாஸ் (Perimenopause): 
பெண்களுக்கு `மெனோபாஸ்எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.''
எதனால் ஏற்படுகிறது?”
  அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்னையை ஏற்படுத்தும்.
  அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். அலுவல்ரீதியான அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்னை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.
மன அழுத்தம்
  புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை ஏற்படும். இவர்கள், சரியான உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது.
திடீரென்று உடல் எடை குறைப்பது, உடல் எடை அதிகரிப்பது, உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, மாதவிடாய்ப் பிரச்னையை ஏற்படுத்தும்.''
ஜெ.நிவேதா
நன்றி : விகடன் செய்திகள் - 14.10.201

Friday, August 25, 2017

பீரியட்ஸ் எது நார்மல்?

பீரியட்ஸ் எது நார்மல்?
டி.வெண்ணிலா, மகப்பேறு மருத்துவர்
``பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டி.வெண்ணிலா. அப்படிச் சில அறிகுறிகளை அறிவோமா?
அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)
மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறு கின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)
சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை செகண்டரி அமனோரியாஎன்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்னை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை பிரைமரி அமனோரியாஎன அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.
பயமுறுத்தும் பிசிஓடி (PCOD - PolyCystic Ovarian Syndrome)
சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.
வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)
சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.
கருக்கலைதல் (Miscarriage) கவலை
சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.
துர்நாற்றமா? கவனம் தேவை!
மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.
உறவுக்குப் பின் உதிரம்
சிலருக்குத் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.
மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரப்போக்கு
மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
- ஆர்.ஜெயலெட்சுமி
நன்றி : டாக்டர் விகடன் - 01.09.2017