disalbe Right click

Showing posts with label பெயர் மாற்றம். Show all posts
Showing posts with label பெயர் மாற்றம். Show all posts

Saturday, December 30, 2017

அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்ய


தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யும் வழிமுறைகள்
வீட்டில் நமக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள், நாம் விரும்புவது வேறு பெயராக இருக்கும். இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு போவோரும் உண்டு. பெற்றோர் வைத்த பெயரை சிலர் மாற்ற நினைப்பதும் உண்டு. மேலும், ஒருவர் தன் பெயரை எண்கணித முறையிலோ, ஜாதகப்படியோ அல்லது பிடித்த ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்கு என்ன வழிமுறைகள், தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள் என்ன?
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்ர்க்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், பதிவுபெற்ற ஒரு மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் நகல் ஒன்று இணைக்க வேண்டும். பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் வயதுச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, அதில் தமிழக அல்லது மத்திய அரசின் மற்றும் பிரிவு அலுவலர்கள் அல்லது சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலங்களில் பிறந்து, தமிழ்நாட்டில் தற்போது வசித்து வருபவர்கள், அவர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருவதற்கு ஆதாரமாக அல்லது கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது வட்டாட்சியர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
ஏதேனும் குழந்தை தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்பவர்கள் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
திருமணமாகி விவாகரத்துச் செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்பவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் கடந்த 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
எப்படிச் செலுத்த வேண்டும்?
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையும் பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலமாகவும் செலுத்தலாம்
உதவி இயக்குநர் (வெளியீடுகள்) அவர்கள்
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்
சென்னை-600 002 
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்..
மணியார்டர் மற்றும் போஸ்டல் ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அந்த இதழ் வெளியான நாளில் இருந்து அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோருபவர்களின் எந்தவிதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை விண்ணப்பதாரர்கள் உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெஜட்டெடு அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
முக்கிய நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட மாட்டாது.
மிக முக்கியமாக இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அரசு இதழை எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பதாரர் முகவரிக்கு அனுப்பப்படுகின்ற அரசிதழ்கள்,  ஏதோ ஒரு காரணத்தினால், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு ம்றுபடியும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், விண்ணப்பதாரர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன் கீழ்கண்டவற்றை மனதில் கொள்க.
சுவீகாரம் தொடர்பாக சுவீகாரம் எடுக்கப்பட்ட குழந்தையின் பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை அல்லது தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். ஒருவேளை விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால் தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), அவர்கள்,
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002.
தொலைபேசி எண்கள் :
044-2852 0038,
044-2854 4412 மற்றும்
044-2854 4413
இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://www.stationeryprinting.tn.gov.in/forms.htmஎன்ற இணையதளத்திற்குச் சென்று  விண்ணப்பப்   படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை அல்லது தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன் அல்லது மகளின் சுவீகாரத் தந்தை அல்லது தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை  நகல் இணைக்கப்பட வேண்டும்.
**************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி