disalbe Right click

Wednesday, January 31, 2018

காசோலையைப் பற்றி

காசோலை என்றால் என்ன?
காசோலை என்பதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காசோலை என்றால் என்ன? என்பதைத் தெரியாத பாமர மக்கள்கூட இன்று காசோலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களிடம் காசோலையை செக் என்று சொன்னால்தான்  அவர்களுக்குத் தெரியும். 
ஒரு வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கமாக அதே நேரத்தில் பாதுகாப்பாக பணத்தைச் செலுத்துவதற்கு, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படுவது காசோலை ஆகும். இன்றைய சூழலில் ஆன்லைன் மூலமாகவும், கிரடிட் கார்டு மூலமாகவும் பணப்பரிமாற்றம் நடந்து வந்தாலும் காசோலைகளின் பயன்பாடு குறையவில்லை. அந்த காசோலை பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
மாற்றத்தக்க ஆவணச் சட்டம் (Negotiable Instruments Act)
காசோலை பற்றி  மாற்றத்தக்க ஆவணச் சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.  காசோலையை பொறுத்த வரையில் அது  (1) (Drawer) காசோலை எழுதிக் கொடுப்பவர், (2) (Payee) காசோலையை பெற்றவர், (3)  (Drawee) காசோலைக்கு பணம் அளிப்பவர் என்ற மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டதாகும். மேற்கண்ட மூவருக்குமே இதில் முக்கிய பொறுப்புகள் உண்டு.
காசோலை அளிப்பவருக்குள்ள (Drawer) பொறுப்புகள் என்ன?
1 ஒருவருக்கு காசோலை அளிப்பதற்கு முன், வங்கியில் உள்ள தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
2. காசோலையில் நிரப்புகின்ற தொகை இருப்புத் தொகையைவிட குறைவாக இருக்க வேண்டும்.
3.  காசோலையில் தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
4. பணம் பெறுகின்றவரது பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர்,  ஊர் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும். 
5. தனி நபர் ஒருவருக்கு காசோலை மூலமாக பணம் அளிப்பதாக இருந்தால் அந்தக் காசோலையின் இடது பக்க மேல் மூலையில் மறக்காமல் குறுக்குக் கோடு (crossed cheque) இட வேண்டும்.
6. அளிக்க இருக்கின்ற தொகையினை அதற்குரிய இடத்தில் எண்ணாலும் எழுத்தாலும் எழுத வேண்டும்.
7. கண்டிப்பாக காசோலையில் மறக்காமல் கையெழுத்து இட வேண்டும். 
8. காசோலைகளின் எந்த இடத்திலும் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது.
9. காசோலைகளில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.
10. ஒரு காசோலையில் வேறு வேறு பேனாக்களின் மூலமாகவோ, வேறு வேறு வண்ண மைகளைக் கொண்டோ எழுதக்கூடாது.
11. நீங்கள் கொடுத்த காசோலை தொலைந்துவிட்ட தகவல் உங்களுக்கு கிடைத்தவுடன் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு எழுத்து மூலமாகவும் அறிவிக்க வேண்டும்.
காசோலை பெற்றவருக்குள்ள (Payee) பொறுப்புகள் என்ன?
1.  காசோலை பெற்றவுடன் அதனைப் பெற்ற நாள், அதனை வழங்கிய நபர், காசோலையின் எண், வங்கியின் பெயர்,  அதில் எழுதப்பட்டுள்ள தொகை ஆகியவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். 
2. பெற்ற காசோலையில் உள்ள தேதியை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தத் தேதிக்குப் பின்னரே அதனை அந்த வங்கியில் அளித்து தொகையைப் பெற முடியும்.
3. காசோலையில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் அதனை பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது செல்லாதது ஆகிவிடும்.
4. காசோலையின் பின்புறம் கையெழுத்து இட வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலையாக இருந்தால் அந்தக் காசோலையின் பின்புறத்தில் அந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணையும் எழுத வேண்டும். 
5. காசோலை அளிக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கணக்கு இல்லை என்றால், உங்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் அந்தக் காசோலையை செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நாட்கள் கழித்தே பணம் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேரும். 
6. பெற்ற காசோலை தொலைந்துவிட்டால், அதனை உடனடியாக காசோலை வழங்கியவருக்கும், வங்கிக்கும் தெரியப்படுத்த வேண்டும்
காசோலைக்கு பணம் அளிப்பவருக்குள்ள (Drawee) பொறுப்புகள் என்ன?  
1. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்குக் குறைவாக அதனை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இருந்தால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
2. பெறப்பட்ட காசோலை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
3. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
4. வங்கியின் நேரம் முடிந்த பிறகு கொடுக்கப்படுகின்ற காசோலைக்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
5. காசோலையில் அடித்தல், திருத்தல் இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
6. காசோலையினை வழங்கிய நபர் இறந்திருந்து அந்த செய்தி வங்கி ஊழியருக்கு தெரிந்திருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
7. காசோலையினை வழங்கிய நபர் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு அறிவித்து இருந்தாலும் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
8. காசோலையினை வழங்கிய நபர் கணக்கிலிருந்து யாருக்கும் பணம் அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தாலும், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
9. காசோலையினை வழங்கிய நபர் வங்கிக்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டியது இருந்தால், அந்த பற்றுத்தொகைக்கு மட்டுமே அவரது அக்கவுண்டில் பணம் இருந்தால்,  
அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
10. குறுக்குக் கோடு (crossed cheque) இடப்பட்ட காசோலையை கொண்டு வருபவருக்கு அந்த வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்றால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
11. கையெழுத்து இல்லாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.  
12. வேறு வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
13. முழுமையாக நிரப்பப்படாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
14. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மூன்று மாதங்களுக்கு முந்தியது என்றால்,   அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.02.2018 

Tuesday, January 30, 2018

உடந்தை குற்றவாளி

Indian Penal Code - Sec 107 & 306
தற்கொலை செய்துகொண்ட நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணம் என்று, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரால் எழுதப்பட்ட கடிதத்தை மட்டும் (Suicide Note) அடிப்படையாக கொண்டு "தற்கொலைக்கு உடந்தையாயிருந்தார்" (Abetment to Suicide) என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை வழங்க முடியாது.
இ. த. ச பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது.
அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு
  • (1)- ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்.
  • (2)- தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் உடந்தையாக இருந்தவருக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்ற மனம் இருக்க வேண்டும். மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள் நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக ஒருவர் இருக்க வேண்டும். பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும் உடந்தையாக இருந்ததாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்கிற நபர் அதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில், ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற காரணத்தினால், அந்த நபர் இ. த. ச பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக்கூடாது.
  • உடந்தையாக இருத்தல் என்பதற்கு பிரிவு 306ல் எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
  • ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாது இருக்கும்படியோ தூண்டி விடுவது என்பதுதான் உடந்தை என்பதற்கு பொருளாகும்.
  • அவ்வாறு தூண்டிவிடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் அல்லது செய்கைகள் மூலமாகவும் இருக்கலாம்.
  • மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்திய செயலாகவும் இருக்கலாம்.
  • எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியிருக்க வேண்டும்.
  • காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொள்வது, தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், ஆசிரியர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூற முடியாது.
  • ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால், அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது.
  • தற்கொலை செய்து கொள்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் கிடையாது.
  • ஆனால் தற்கொலைக்கு தூண்டும் செயல் குற்றமாகும்.
  • தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும்.
  • ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும்.
  • அந்த செயல் வார்த்தைகளாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம்.
  • அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை ஒருவர் தூண்டிவிட்டதாக கருதுவது தவறு.
  • ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக்க முடியாது.
  • எனவே ஒரு பெண் முட்டாள்தனமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலனை தண்டிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
  • எனவே பெண்கள் காதலனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டால் அந்த காதலனுக்கு தண்டனை கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளவும்.
CRL. OP. NO - 142/2016, DT - 16.06.2016,
Manikandan Vs Inspector of police, Tiruneelakkudi Police Station, Thanjavur District
(2016-4-MLJ-CRL-240)
Thanks to: https://m.facebook.com/adpdhandapani/

இறந்தவர்களின் சொத்துகளை மீட்க


இறந்தவர்களின் சொத்துகளை மீட்க என்ன செய்ய வேண்டும்?
இறப்பு என்பது யாருக்கு எந்த நேரத்தில் வரும் என்று சொல்லமுடியாது. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? என்பதை அவரது குடும்பத்தினர்கூட தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கணவர், மனைவி மற்றும் பிள்ளைகள், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் சொத்து வாங்குவது இது போன்ற நேரங்களில் மற்றவர்களுக்கு நஷ்டத்தையும், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம், வாருங்கள்.
உயில் இருந்தால்.....!

இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை. எங்கு, எவ்வளவு சொத்து இருக்கிறது? எந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்ற விபரம் உயிலில் கண்டிப்பாக இறந்தவரால் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இறப்புச் சான்றிதழ் & வாரிசுச் சான்றிதழ் அவசியம்
பதிவுத் துறையில் அல்லது எந்த ஒரு நிதி நிறுவனத்தில் இறந்து போனவருடைய சொத்து அல்லது சேமிப்பு சம்பந்தமாக தகவல்கள் பெற நீங்கள் அணுக வேண்டும் என்றால் அவருடைய இறப்புச் சான்றிதழ் மிக அவசியம் ஆகும். 
ஒருவருடைய இறப்புச் சான்றிதழ் மட்டும் இருந்தால் போதுமா? நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் தந்துவிடுவார்களா? 
யார் நீங்கள்? எதற்காக இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்ற கேள்வியை அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். அவற்றை தர மறுப்பார்கள். 
வாரிசுச் சான்றிதழ் உங்களிடம் இருந்தால் மேற்கண்ட கேள்விகளை உங்களிடம் அவர்கள் கேட்க முடியாது. நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் கண்டிப்பாக கொடுத்துத்தான் ஆகவேண்டும். 
மேற்கண்ட இரண்டு சான்றிதழ்களையும் பெற்ற பிறகு, அவற்றை வைத்து இறந்தவரின் பெயரிலுள்ள சொத்துக்கள் முதலீடுகள் மற்றும் கடன்கள் எங்கு உள்ளது? என்ற விவரங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். 
ஒருவரின் பெயரில்தான்.........!
வங்கி கணக்குகள், முதலீடுகள், பி.எஃப். தொகை, இன்சூரன்ஸ் ஆகியவற்றைப் பெறுவதற்கு இறந்தவருடைய வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு முதலீடுகள் பெருகின்ற அதிகாரத்தை மற்ற வாரிசுகள் அளிக்க வேண்டும். முதலீடு செய்யப்பட்டத் தொகையை நிதி நிறுவனம் அவரது பெயருக்கு அளிக்கும். அதன்பிறகு மற்றவர்களுடன் அவர் அந்த தொகையை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதுவே இலகுவான முறையாகும்.
உடன்பாடு இல்லையென்றால்.........?
இறந்தவருடைய வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள உடன்பாடு ஏற்படவில்லை என்றால், நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
************************************************** செல்வம் பழனிச்சாமி -31.01.2018 

தொழிலாளர் நலவாரியத்தில்

Unorganised Workers Welfare Board
நமது தமிழ்நாடு அரசு உடலுழைப்பு தொழிலாளர்களுக்காக நலவாரியம் ஒன்றை அமைத்து அவர்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதற்குரிய அலுவலகங்கள் உள்ளது. கீழ்க்கண்ட வாரியங்களில் அதற்குரிய தொழிலாளர்கள் இணைந்து பயன் பெறலாம்.
1.    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், 
2.    தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், 
3.    தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம், 
4.    தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியம், 
5.    தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலவாரியம், 
6.    தமிழ்நாடு சலவைத்  தொழிலாளர் நலவாரியம், 
7.    தமிழ்நாடு பனைமரத்  தொழிலாளர் நலவாரியம், 
8.    தமிழ்நாடு  கைவினைத் தொழிலாளர் நலவாரியம், 
9.    தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம், 
10. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம், 
11.  தமிழ்நாடு ஓவியர்  நலவாரியம், 
12.  தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், 
13.  தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம், 
14.  தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நலவாரியம், 
15.  தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம்,  
16.  தமிழநாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில்   பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம், 
17.  தமிழ்நாடு சமையல் தொழிலாளர் நல வாரியம் 
நலத்திட்ட உதவிகள் என்னென்ன?
விபத்தினால் மரணம் மற்றும் ஈமச்சடங்கு செய்ய உதவி, விபத்தினால் ஊனம், இயற்கையான மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவி, கல்வி உதவித் தொகை, திருமணத்திற்கு உதவி, மகப்பேறு உதவி, கண்களுக்கு கண்ணாடி வாங்க உதவி,  ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் இந்நலத்திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் அலுவலர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாரியங்கள் மூலம் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நேரடியாக சென்றடைகிறது.
உங்கள் பெயரை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய, அரசு பதிவு பெற்ற கட்டிட காண்ட்ராக்டர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகின்ற அரசு அமைப்புகள் அல்லது பதிவு பெற்ற  கட்டுமானத் தொழிற்சங்கத்தினர் ஆகிய யாராவது ஒருவரிடம் விண்ணப்பிக்கும்  விண்ணப்பத்தில் சான்று பெறவேண்டும்
சென்னையை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்று பெறவேண்டும்
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட இதர 15 நல வாரியங்களில் உங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என்றால், உங்கள் பகுதியிலுள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநரிடம் உங்கள் விண்னப்பத்தில் சான்று பெறவேண்டும். தொழிற்சங்கத்தினர் உங்களுக்கு   பணிச்சான்று வழங்கினால், அந்த சங்கத்தின் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய (ரப்பர் ஸ்டாம்ப்) முத்திரை அவசியம்.
விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும்?
பள்ளி அல்லது கல்லூரிச் சான்று நகல்
வாகன ஓட்டுநர் உரிம நகல்
குடும்ப அட்டை நகல்
அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட வயதுச் சான்று நகல்
உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் பெற்று இணைக்கவேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள உங்கள் சேமிப்புக் கணக்கு எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவற்றை உங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்டத் தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்கினால், பரிசீலனை செய்து உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
எத்தனை ஆண்டுகள் கழித்து அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும்?
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். இதற்கென்று உள்ள  புதுப்பித்தல் விண்ணப்பத்தை, மாவட்ட  தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதனை சரிபார்த்து, உறுப்பினரிடம் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை அவர்கள் வழங்குவார்கள். இதற்கு  கட்டணம் எதுவும் கிடையாது.
எத்தனை வயது வரை பதிவை புதுப்பிக்கலாம்?
நலவாரியத்தில் செய்த பதிவை உங்களது 60 வயது வரை நீங்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். 60 வயதுக்கு மேல் , பதிவைப் புதுப்பிக்க இயலாது.
அடையாள அட்டை தொலைந்துபோனால் ......?
நலவாரிய அடையாள அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்துவிட்டால் மாற்று (Duplicate) அட்டை வழங்கப்படும். இதற்கு ரூ.20 கட்டணத்துடன் அந்தந்த மாவட்டத் தொழிலாளர் அலுவலத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) உள்ள அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தொழிலாளர் அலுவலர் அவர்கள் விசாரணை நடத்தி உங்களுக்கு மாற்று அடையாள அட்டை வழங்குவார்.
இதன் தலைமை அலுவலக முகவரி:
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம்
ஜி-133, சிந்தாமணி வளாகம், 
அண்ணா நகர் கிழக்கு,
சென்னை- 600 102
தொலைபேசி எண்: 044- 26632776  & 044- 26631149
சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணை





********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.01.2018  

Monday, January 29, 2018

போக்குவரத்து காவலர்கள் பணி

தமிழ்நாடு காவல் ஆணையர் .கே.விஸ்வநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை அழைத்து தானே நேரடியாக ஆலோசனை வழங்கி, போக்குவரத்து  காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை நேற்று வழங்கியுள்ளார்.
போக்குவரத்து  காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயிண்டில் நியமிக்கப்பட்ட இடத்தில் நின்று பணி  முடியும் நேரம் வரை அலுவல் புரிய வேண்டும். நியமிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் அனுமதி பெற்று வேறு ஒருவரை அந்த இடத்தில் நிற்க வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பாயிண்டில் நிற்பவரை தவிர வேறு இடத்தில் உள்ள காவலர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து நின்று கொண்டு அலுவல் புரிய கூடாது. சுத்தமான சீருடையில் பணிக்கு வரவேண்டும்.
2. பாயிண்ட் அலுவலின் போது செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருக்ககூடாது. தவிர்க்க முடியாத முக்கியமான அழைப்பாக இருந்தால் மட்டும் சிறிது நேரத்தில் பேசி முடித்து விட்டு பணியாற்ற வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க கூடாது.
3. காவலர்கள் சாதாரண  உடையிலோ, சீருடையிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். இதை மீறிச்சென்றால் உயர் அதிகாரிகள் தணிக்கையின் போது கடும் நடவடிக்கை இருக்கும்.
4. காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை தணிக்கை செய்யக்கூடாது.  போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பி-டயரி (B,diary) வழக்குகள் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் விதி மீறும் வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது.
5. J,walk- ஜெ.வால்க் பணியாற்றும் காவலர்கள் பாதசாரிகளை விசில் ஊதித்தான் சைகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பாதசாரிகள் சுரங்கப்பாதையை உபயோகிக்காமல் சாலையை கடக்கும் போது விசில் ஊதி அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
6. காவல் ஆணையர் உத்தரவுப்படி மாலை 6 மணிக்கு மேல் பாயிண்ட் அலுவலில் உள்ள காவலர்கள் ரிஃப்லக்ட் ஜாக்கெட், மற்றும் மிளிரும் விளக்கு கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு : J,walk என்றால் என்ன? Jay walk என்ற வார்த்தையையே சுருக்கி J,walk என்று குறிப்பிடுகிறார்கள். J,walk என்றால் பாதசாரிகள் நடக்க தடைசெய்யப்பட்ட சாலையில் பொதுமக்களை வழிநடத்துகின்ற போக்குவரத்து காவலர்கள் பார்க்கின்ற பணியாகும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.01.2018