disalbe Right click

Monday, April 6, 2015

குடும்ப அட்டை சம்பந்தமான முழு விபரங்கள்


குடும்ப அட்டை சம்பந்தமான முழு விபரங்கள்

குடும்ப அட்டை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. இது ஒரு முக்கிய இருப்பிடச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் இருக்கிறது. பொது விநியோகத்திட்டத்தில் பொருள்கள் வாங்கவும் பயன்படக் கூடியது. எனவே எப்போதும் பயன்படக்கூடிய குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா? குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து மாதங்கள் பலவாகியும் தராமல் இழுத்தடித்தால் எங்கே புகாரளிப்பது? போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

குடும்ப அட்டை என்பது என்ன?
*********************************************

குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் அடங்கிய குடும்பத்தலைவரின் புகைப்பட நகல் தாங்கிய ஒரு அடையாள அட்டை.

குடும்ப அட்டையின் அவசியம்:
*********************************************

பொதுவிநியோகத்திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.

குடும்ப அட்டைப் பெறுவதற்கான தகுதிகள்:
***************************************************************

தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
************************************************

அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdfஆங்கிலத்திலும் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf தமிழிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கே / யரிடம் விண்ணப்பிப்பது?
**************************************************

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினைப் பதிவு தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கட்டணம்:
***************

புதிய குடும்ப அட்டைப் பெறும் போது ரூ 10 கட்டணமாகப் பெறப்படும்.

தேவையான ஆவணங்கள்:
***************************************

விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதத்திற்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று 

அல்லது 

வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானவை. 

ஒரு வேளை இந்த சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “குடும்ப அட்டை இல்லை“ என்ற சான்று.

எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.


குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
******************************************************************************************************************************
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
 அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.

குடும்ப அட்டை தொலைந்து போனால் என்ன செய்வது?
********************************************************************************

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். 

சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது? 
******************************************************************

வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா? விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா? என மனுதாரரின் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

விண்ணப்பித்த முப்பது நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கபடாததற்கு காரணம் சொல்லவேண்டும். 
அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும். 

அல்லது

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும். அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை, 
044 – 2859 2858
என்ற எண்ணில் தொலைபேசியிலோ,
consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com 
என்ற மின்னஞ்சல் முகவரியிலோ,

மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
4வது தளம், எழிலகம், 
சேப்பாக்கம், சென்னை – 5 

என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு:
**************************************

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய http://cscp.tn.nic.in/allotment_ver2/rep_allotment_shopwise.jsp இத்தளத்திற்கு செல்லவும்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் http://egov-civilmis.pon.nic.in/ 

SearchCard_Pondy_AppNo.aspx இத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttp://www.consumer.tn.gov.in/fairprice.htmஇத்தளத்திற்க்குச் செல்லவும். 

சான்றுகள் பெற கால அவகாசம்?
************************************************

பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் சான்றுப் பெற 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

முகவரி மாற்றம் கடை மாற்றத்துடன் 7 நாட்களில் கொடுக்க வேண்டும்.

குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்று வேறு மாநிலம், இதர நகரங்களுக்கு 2 நாட்களில் கொடுக்க வேண்டும்.

மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுக்கா முகவரி மாற்றம் 7 நாட்களில் கொடுக்க வேண்டும்.

புதிய குடும்ப அட்டை 60 நாட்களிலும்,
நகல் குடும்ப அட்டை பெற 45 நாட்களிலும்,
குடும்ப அட்டை இல்லா சான்று 7 நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட சான்றுகள் பெற உதவி ஆணையாளரிடம் அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில்)
*************************************************************************************************
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.

எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.


ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
********************************************************************************************************************************
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment