disalbe Right click

Friday, April 10, 2015

ஆதார் அட்டை பெறுவது எப்படி?


ஆதார் அட்டை பெறுவது எப்படி?
***************************************************

ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கைகளிலும் உள்ள  விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:
இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?
தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:
https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLinkஇந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும். 


ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:
ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:
புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: இது 2013ம் வருடம் அக்டோபர் மாதத்தில் புதியதலைமுறை வார இதழில் வெளி வந்த தகவல். 
இது குறித்து தெரியாதவர்களுக்காக மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. 
அன்புடன் செல்வம்பழனிச்சாமி

No comments:

Post a Comment