disalbe Right click

Thursday, April 16, 2015

தேசிய தகுதித் தேர்வு (NET)


தேசிய தகுதித் தேர்வு (NET)
நமது நாட்டில். எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “நெட்” (National Eligibility Test) எனப்படும் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
சிபிஎஸ்இ
தேசிய அளவிலான இந்த “நெட்” தகுதித்தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை அதாவது ஜூன் மற்றும்  டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் நெட் தேர்வினை,  University Grants Commission எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது நடத்தி வந்தது. கடந்த 2014ம் டிசம்பர் மாதத்தில் இருந்து Central Board Of Secondary Commission எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது  இத்தேர்வை நடத்தி வருகிறது.
தகுதிகள்
இத்தேர்வினை எழுத தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கான நெட் தகுதித்தேர்வானது CSIR எனப்படும் Council of Scientific & Industrial Research மூலம் தனியே நடத்தப்படுகிறது.
முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.  எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நெட் தேர்வில் உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், JRF எனப்படும் Junior Research Fellowship தகுதிக்கு வயது வரம்பு 28 ஆகும். இதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது.
மூன்று தேர்வுகள்
நெட் தேர்வானது, மொத்தம் மூன்று துணைத் தேர்வுகளை உள்ளடக்கியது ஆகும். மூன்றுமே அப்ஜெக்டிவ் முறையிலானதுதான். முதல் தேர்வில் உங்களின் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தைச் சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான ஏதேனும் 50 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இரண்டாவது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 50 கேள்விகள் கேட்டிருப்பார்கள். மூன்றாவது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 75 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரண்டு தேர்வுகளுக்கும் தலா ஒன்றே கால் மணி நேரமும், தலா 100 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மூன்றாவது தேர்வுக்கு இரண்டரை மணி நேரமும் 150 மதிப்பெண்களும் வழங்கப்படும். ஒவ்வொரு தேர்விலும்  குறைந்தபட்ச மதிப்பெண்களை நீங்கள் எடுக்க வேண்டியது முக்கியமானதாகும்.
கடைசி நாள்
இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித்தேர்வு ஜூன்மாதம் 28-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினை Central Board Of Secondary Commission எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது வெளியிட்டிருக்கிறது. தகுதியுடைய முதுகலை பட்டதாரிகள் www.cbsenet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் 16-ம் தேதிம் முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 16-ம் தேதியாகும்  ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் அல்லது வங்கிச் செலான் மூலம் குறிப்பிட்ட வங்கியில் செலுத்த வேண்டும். அதன் பின்பு பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தாங்கள் தேர்வுசெய்யும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டணம்
இதுவரை ரூ. 500-ஆக இருந்த தேர்வுக் கட்டணத்தை  ரூ. 600-ஆக CBSE உயர்த்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தகுதித் தேர்வு-தேர்வில் தேர்ச்சி முறைகள்:

நன்றி : எழுத்து.காம்,  29.03.2014-பதிவு 
தேசிய தகுதித் தேர்வு-தேர்வில் தேர்ச்சி  முறைகள்
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் தேசிய தகுதித் தேர்வு- மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுவாமிநாதன்.

#நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை முறையாக எழுதும் முறை. 

#நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆகையால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். 

#உங்களுடைய நெட்தேர்வுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும், தேர்வுக்குப் போதுமான நல்ல புத்தகங்களை வாங்கி விடலாம். 

#தற்போது, கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் யு.ஜி.சி. இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து பயிற்சி பெறலாம். 

#தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் நன்கு ஆழமான முறையில் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யாரால் கண்டறியப்பட்டது, எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் என அனைத்தையும் ஆழமாகப் படித்து, குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தயார் செய்துகொள்ள வேண்டும். 

# ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள், குழுவாகச் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும்போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் போது காலம் மிச்சமாகும். மேலும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும் அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்றுக்கொள்வது நல்லது. 

# முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா- விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்கி, அதில் வெளியிட்டு உள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதிப் பார்த்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்யும் போது பலரும் ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எது சரியானது என்பதைத் தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் தேர்வின்போது தடுமாற வேண்டி இருக்கும். இதற்கு மாற்றாக ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை எது என்பதை படித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுபோல் பயிற்சி செய்யும்போது தேர்வில் விடைகளின் வரிசையினை மாற்றிக்கொடுத்து இருந்தால் எளிதாக தடுமாறாமல் விடையளிக்க முடியும். 

# ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். அதன் பின்பு அதற்கான விடைகளோடு ஓப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவித வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன. இந்தப் பயிற்சி உங்களின் மதிப்பெண்ணைக் கூட்டும். அத்துடன், உங்களது நேர மேலாண்மைக்கு உதவும். அத்துடன், தொடர் பயிற்சி மேற்கொள்ளும்போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். தேர்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை கூடும். 

# யூஜிசி நெட் தேர்வானது மூன்று தாள்களைக் கொண்டது. முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது. இந்தத் தாளில் Research aptitude, Teaching aptitude போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களைக் கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும். அத்துடன், இந்தியாவில் உயர் கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானியக்குழு குறித்த விஷயங்களும் கேட்கப்படுகின்றன. முதல் தாளில் சுற்றுச்சூழல் கல்வி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகின்றன. இந்தப் பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்வது அவசியம். 

# பெரும்பாலான மாணவர்கள் முதல் தாளில் கோட்டைவிட்டு விடுவார்கள். இதனால் முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள். முதல் தாளில் கணிதத் தர்க்க அறிவு குறித்து சோதிக்கிறார்கள். இதை மிகவும் எளிதாக கேட்பார்கள். பலருக்கும் கணக்கு கடினமாக இருக்கும் என்று விட்டுவிடுவார்கள். இனி அதுபோல் கணக்குக் கேள்விகளை ஒதுக்கி தள்ளாமல் விடையளிக்க முயற்சி செய்யுங்கள். பத்து ஆண்டுகளுக்கான விளைச்சலின் விவரங்களை கொடுத்து எந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தது, எந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தது என்பது போன்ற கேள்விகளை data interpretation பகுதியில் கேட்கிறார்கள். இத்தகைய கணித தர்க்கக் கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சி பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

# இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் ஐந்தில் இருந்து பத்து கேள்விகள் தர்க்க வாதம் சார்ந்தவையாக இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். பழைய கேள்வித்தாள்களில் தர்க்க வாதக் கேள்விகளை எப்படிக் கேட்டு இருக்கிறார்கள், அதற்கான விடைகள் எவை என்பதை பார்த்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் வெவ்வேறு கேள்வித்தாள்களில் இருந்து தர்க்க வாத கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையினை பயிற்சி எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையளித்து விட முடியும். 

# யூஜிசி நெட் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, முதலில் தெரிந்த கேள்விகளுக்கும், பின்னர் தெரியாத கேள்விகளுக்கும் யோசித்து தவறாமல் விடையளிக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் தெரியாது என்று நினைத்த கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்கி இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மதிப்பெண் கூடவே செய்யும். தகுதித் தேர்வில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல. அண்மைக் காலங்களில் மதிப்பெண் அதிகம் பெற்றவர்களின் தரப்பட்டியலில் இருந்து தான் தேர்ச்சி விவரம் வெளியிடப்படுவதால் அதிகமாக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும். 

# இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்லுங்கள். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கப் பாருங்கள். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. இத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கி நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்.
புனைவுப் படம்.
புனைவுப் படம்.
உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி (2015)வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலக்கியம், வரலாறு, புவியியல், சமூகவியல், பொது நிர்வாகம், உளவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் “நெட்” தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதலாவது ‘நெட்’ தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி (2015) நடைபெற உள்ளது.
முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் கிடையாது. எனினும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் எனப்படும் ஜெஆர்எப் உதவித்தொகை தகுதிக்கு மட்டுமே வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுள்ளவர்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cbsenet.nic.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

1 comment: