disalbe Right click

Thursday, June 11, 2015

இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?


எளிதாகும் நடைமுறைகள்…இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?

By vayal on 
ருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது என்றாலே பெரும் சவாலான விஷயம் என்கிற நிலைதான் நேற்று வரை இருந்து வந்தது. ஏறக்குறைய 15 பக்கங்களை நிரப்பி, வரி கணக்குத் தாக்கலை சரியாக பின்பற்றி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதற்கு பேசாமல் வரியே கட்டிவிடலாம் போலிருக்கிறது என்று புலம்பித் தீர்த்தவர்கள்தான் அதிகம்.
இனி இந்த கஷ்டம் இல்லை. கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்து இருக்கிறது. மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று நிதி அமைச்சகம், வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தது. இதுபோல, வரி கணக்குத் தாக்கல் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
 வெளிநாட்டு பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமா? 
வரி கணக்குத் தாக்கல் செய்யும் வரிதாரர் வெளிநாடுகளுக்குச் சென்ற விவரங்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும் என  ஒரு மாதத்துக்குமுன் மத்திய அரசு சொன்னது. இதற்கு வரிதாரர்கள் மற்றும் அனைத்துத் தரப்பில் இருந்தும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், வெளிநாட்டு பயண விவரங்களை ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு தற்போது தெளிவுப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பதிலாக பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டால் போதும் என்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் சொத்து விவரம்!
இதற்குமுன் (2011-12-ம் ஆண்டு முதல்) வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருக்கும்பட்சத்தில் அதன்மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடுவது அவசியம்.
வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில் அதிக நிவாரணம் அளிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்களுக்கு என புதிய படிவம் ஐடிஆர்2ஏ (ITR2A ) கொண்டு வரப்படுகிறது. இதில், மூலதன ஆதாயங்கள் குறித்துக் கேள்விகள் எதுவும் கேட்கப்பட்டிருக்காது.
இது தவிர, ஐடிஆர்2 (ITR2), ஐடிஆர்2ஏ(ITR2A) படிவங்கள் மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களும் வரிதாரர் தாமாகவே எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இதற்குமுன் இந்தப் படிவங்கள் 14 பக்கங்களைக் கொண்டிருந்தது.
ஐடிஆர்2 படிவத்தில் இதற்குமுன் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது, எத்தனை முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது, வெளிநாட்டில் சொந்தப் பணம் எவ்வளவு செலவிடப்பட்டது என்கிற விவரத்தை குறிப்பிட வேண்டியிருந்தது. இப்போது ஐடிஆர்2 மற்றும் ஐடிஆர்2 ஏ-ல் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும்.
 வெளிநாட்டில் உள்ள சொத்து மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்தால் 3 முதல் 7 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மேலும், வெளிநாட்டிலுள்ள சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வரி கணக்கு விவரத்தில் தெரிவிக்கவில்லை என்றால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரையில் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பாஸ்போர்ட் எண் மூலம் ஒருவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், எத்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்கிற விவரத்தை மத்திய அரசு எளிதில் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், உண்மையில் வரி ஏய்ப்பு செய்பவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனவேதான், அது வெளிநாட்டு பயண விவரங்களை விரிவாகத் தெரிவிக்க வேண்டாம். பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்று சொல்லி உள்ளது. இதில், வரி தாரருக்கும் ஒரு லாபம் இருக்கிறது. அவர் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவராக இருந்தால், பயண விவரங்கள் மற்றும் செலவு விவரங்களை முழுமையாக நினைவில் வைத்து, அதனை வருமான வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, இந்த மாற்றம் வரவேற்கக் கூடியதாக இருக்கிறது.
 வங்கிக் கணக்கு விவரம்!
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட வருமான வரிப் படிவத்தில் நிதி ஆண்டு இறுதியில் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப் பட்டிருந்தது. அதற்குப் பதில், வங்கிக் கணக்கு எண் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத (dormant) கணக்குகள் பற்றிய விவரங்களையும் வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என இதற்குமுன் சொல்லப்பட்டிருந்தது.
இப்போது இந்த விவரத்தை குறிப்பிடத் தேவையில்லை. வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை   மட்டும் குறிப்பிட்டால்  போதும்.
மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்4எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கால அவகாசம் அதிகரிக்க வேண்டும்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள், சாதகமா அல்லது பாதகமா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சதீஷ்குமார் விளக்கிச் சொன்னார்.
‘‘வரி கணக்குப் படிவம் மூன்று பக்கங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் அதிக விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒருவருக்கு ஐந்து வங்கிகளில் கணக்கு இருந்தால், அவை அனைத்தின் விவரமும் ரிட்டர்ன் படிவத்தில் கணக்கு எண், கிளையின் விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேலும், ஜாயின்ட் அக்கவுன்ட் இருந்தாலும் அந்த விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அது வரிதாரருக்கு அதிக வேலை வைக்கும்.
ஐடிஆர் படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்கிற ஸ்கிமா (schema) இன்னும் தயாரிப்பு நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் எப்படி ஐடிஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப முடியும்? பொதுவாக, ஜூலை 31, வரி கணக்குத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி. அந்த வகையில் ஏப்ரல் 1 தொடங்கி, ஜூலை 31 வரைக்கும் நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய வரிதாரருக்கு அவகாசம் கொடுக்கப்படும். ஆனால், இப்போது ஏறக்குறைய இரண்டரை மாதத்தை மத்திய அரசு ஐடிஆர் படிவம் தயாரிப்புக்கே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வரி கணக்குத் தாக்கலுக்கான காலம் ஒரு மாதம் மட்டுமே நீடிக்கப்பட்டிருப்பது நிச்சயம் வரிதாரர்களுக்கு கஷ்டத்தையே தரும். எனவே, என்றைக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறதோ, அதிலிருந்து நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய அனுமதிப்பது சரியாக இருக்கும்.
இப்போது செய்யப் பட்டிருக்கும் ஆகஸ்ட் 31 வரைக்குமான நீடிப்பு மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் ரூ.1 கோடிக்கு கீழே டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்குதான். ரூ.1 கோடிக்கு மேல் டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள். இப்போது இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்களை அரசு மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை.
அரசு ஒவ்வொரு ஆண்டும் இப்படி நிதி ஆண்டு முடிந்தபிறகு வரி கணக்குத் தாக்கல் செய்யப் போகிற நிலையில்தான் வரி கணக்குப் படிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது அல்லது கூடுதல் விவரங்களைப் படிவத்தில் நிரப்ப வேண்டும் என்று சொல்கிறது. இது வரிதாரர்களுக்கு சிரமத்தையே தரும். முன்னரே குறிப்பிட்டிருந்தால், அந்த விஷயங்கள் தொடர்பான விவரங்களை முன்பே குறித்து வைத்துக்கொள்வார்கள்.
இது ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது உதவியாக இருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலாவது இப்படி வரிதாரர்களை வதைப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
எது எப்படியோ ஐடிஆர் படிவங்கள், வரி கணக்குத் தாக்கல் சாஃப்ட்வேர் வெளியானால்தான் வருமான வரி கணக்கு தாக்கல் சுகமாக அமையுமா அல்லது சோகமாக இருக்குமா என்பது தெரியும்!
ரியல் எஸ்டேட்டை பாதிக்கும் அரசு நடவடிக்கை!
 மனை, சொத்து வாங்கும்போது ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தரக்கூடாது. அப்படித் தந்தால் 100% அபராதம் விதிக்கப்படும். ரூ.20,000-க்கு மேல் தொகை செல்லும்போது, காசோலை அல்லது கேட்பு காசோலையாகதான் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் நிபந்தனை இருக்கிறது. விவசாயிகளுக்கு விவசாயம் தவிர வட்டி, வாடகை, சம்பளம் என எந்த வருமானமும் இருக்கக்கூடாது. இவை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே மந்தநிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் மந்தமாக்கிவிடும் என ஆடிட்டர் சதீஷ்குமார் தெரிவித்தார். ‘‘ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க, புரமோட்டருக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக முன்பணம் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது புதிய சட்டப்படி புரமோட்டர் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். வீடு பிடிக்காமல் பணமாக இந்த ஒரு லட்சத்தைத் திரும்ப வாங்கினால், அதற்கும் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் வழக்கமாக ரூ.5 லட்சம் வரைக்கும் ரொக்கமாகக் கையாளப்படும். இந்த நிலையில் இது ரூ.20,000-ஆகக் குறைக்கப்படும்போது, ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் மந்தமாக வாய்ப்புள்ளது” என்றார்.

No comments:

Post a Comment