disalbe Right click

Monday, July 25, 2016

கருவில் உள்ள குழந்தை குறைபாட்டுடன் இருந்தால்


கருவில் உள்ள குழந்தை குறைபாட்டுடன் இருந்தால்- 
என்ன செய்ய வேண்டும்?
கருவில் உள்ள சிசு, குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவருடன் பழகிவந்த நபர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கருவுற்ற அந்த பெண், 24 வாரங்களுக்குப் பிறகு அந்தக் கருவைக் கலைக்க முயன்றபோது கருக்கலைப்பு தொடர்பான சட்டம் தடையாக இருந்தது.' 20 வாரங்களுக்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது' என்று 1971 ம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருக்கலைப்பு மட்டும் செய்ய மறுத்துவிட்டனர்"  என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த, மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மருத்துவ அறிக்கை கடந்த 23 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கருவில் உள்ள சிசு குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும், குறைபாடு பற்றி மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் சிசுவைக் கலைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நன்றி : விகடன் செய்திகள் - 25.07.2016

No comments:

Post a Comment