disalbe Right click

Sunday, November 27, 2016

குழந்தை வளர்ப்பு - பாட்டி வைத்தியம்


குழந்தை வளர்ப்பு - பாட்டி வைத்தியம் - என்ன செய்ய வேண்டும்?

குழந்தை வளர்ப்பு என்பது, மிகப்பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், இளம் தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு தீர்வாக, 

நாட்டு மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன், சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து, குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, பின் சிறிது தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி, அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தொப்புள் மேல் போட்டால், அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும். 

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும். 

சில குழந்தைகள், அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை, அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டு பிழிந்து, வடிகட்டி ஊற்றினால், வாந்தி சட்டென்று நின்றுவிடும். 

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை, மலம் கழிக்க வேண்டும். கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால், ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை, வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால், ஒரு மணி நேரத்தில் மலம் போய்விடும். 

மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ கொடுக்க வேண்டாம். ஆசனவாயில், வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப்பு துண்டோ வைத்தாலே வெளியே வந்து விடும். 

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது. சளி பிடித்திருந்தாலும் அகன்று விடும். 

குழந்தைகளுக்கு பேதிக்கு மாத்திரை கொடுப்பது, எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதிலும் மூக்கிலும் எண்ணெய் விடுவது ஆகியவற்றை தவிர்த்து விடவும். 

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்து நெஞ்சில் தடவினால், சளி இளகிக் கரைந்து விடும்.

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு, வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு, சும்மா கலகலவென்று இருக்கும். தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி, சிகிச்சையை மேற்கொள்ளவும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.11.2015



No comments:

Post a Comment