disalbe Right click

Thursday, January 19, 2017

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்


நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்னைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும். 

மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்னைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

முக்கிய விதிகள்:-

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது. 

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் பண வகையிலான அதிகார வரம்பு :-

* மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் 

* மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 20 இலட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை.

* தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு கோடிக்கு மேல்.

* மேல் முறையீடு  :- உச்சநீதிமன்றம் 

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 

பிரிவு 2(b):- 

புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?

* நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.

* ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.

* நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.

* மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.

* நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.

* மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நஷ்ட ஈடு தொகை பெறமுடியும்.

நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-

பிரிவு.2(d)(i):- 

பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது  (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது (அ) தள்ளி பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து ‘நுகர்வோர்’ என்ற விளக்கத்திற்கு வருகிறார். ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை ‘மறுவிற்பனைக்கு வாங்குபவரும், (அ) ’வியாபார நோக்கத்திற்கு  வாங்குபவரும், ‘நுகர்வோர்’ பிரிவில் வருவதில்லை.

பிரிவு.2.(d)(ii):-  

பணம் செலுத்தி, ‘சேவையை’ வாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது)  (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும்  பணம் செலுத்தி ‘சேவை’ பெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) ’சேவைகளின்’ பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பிரிவு.2(e) - நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?:-

நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்னை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’ என்று கூறுவது அல்லது ‘உண்மை’ என்று கூறுவதாகும். 

‘நுகர்வோர்’ பிரச்னையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல்லது ‘அசையா சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்னைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்னை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்னை பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).

பிரிவு.2(f) குறைபாடு (பொருட்கள்):- 

குறைபாடு என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பது’ அல்லது ‘தரத்தில்’ குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவையாக’ இல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபாரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

நுகர்வோர் சட்டத்தில் நஷ்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-

மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். 

மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது. இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 18.01.2017



No comments:

Post a Comment