disalbe Right click

Monday, January 23, 2017

நான் கூவம் பேசுகிறேன்

No automatic alt text available.

நான் கூவம் பேசுகிறேன்

கண்நீர் கதைகள்…நீரின் வேர் தேடும் பயணம்!
‘‘இக்கோலம் காண்பதற்கோ தக்கோலம் தனிலிருந்து யான், தப்பாக பிறப்பெடுத்தேன்?’’ என்ற கேள்வியுடன்தான் என் கதையைத் தொடங்க வேண்டும். ‘‘இப்போது என் பெயர் கூவம். பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்கப் பதிவேடுகளிலும் அதுவே என் பெயர். ஆனால், எனக்கு ‘கூகம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.
பிறப்பு
சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவூறல் என்றும், தக்கோலம் என்றும் வரலாற்றுக் குறிப்புகளில் பெருமையாகச் சொல்லப்படும் இடத்தில்தான் சிறு மலையும், பூமிப் பாறையும் இணைகிற இடத்தில் பிறப்பெடுத்தேன்… இதற்கு மேல் என் அடிமுடி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாமே!
பெருமை
திருவள்ளூர் மாவட்டத்தின் பேரம்பாக்கம் வழியாகச் சென்றால், கூவம் கிராமத்தை அடையலாம். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இங்கே அருள்மிகு திரிபுராந்தக சுவாமி திருக்கோயில் உருவானபோது, இரண்டாம் ராஜேந்திரன், மூன்றாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் என்று பல அரசர்கள் என்னைக்கொண்டாடினர்.
கோயிலைக் கட்டியதற்கும், என்னைக் கொண்டாடியதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். சம்பந்தம் இருக்கிறது. என்னை அவர்கள் ‘சிவாம்சம்’ நிறைந்த நதியாகவே பார்த்தனர்; என்னைச் சிறப்பித்துக் கூறும் பொருட்டே இங்கே திருக்கோயிலையும் நிறுவினர்.
என்னை ‘இறை சக்தி’ என, நான் சொல்ல வரவில்லை. நான் மிகவும் அற்புத மூலிகை நீரைக்கொண்ட நதி… பல நோய்களைத் தீர்க்கும் இயற்கையின் சொத்து… என்னை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் குறைவின்றி வாழுங்கள் என்றுதான் சொல்ல வந்தேன். ‘கூவத்தில் குளித்தால் குஷ்டம் போகும்’ என்ற வழக்குச் சொல்லே இந்தப் பகுதியில் இருந்து வந்தது. குஷ்டம் போனதோ, இல்லையோ அது வேறு விஷயம்… என்னில் இன்னும் என்னென்ன சக்திகள் இருக்கின்றன என்று அறிய என் நீரோட்டத்தைச் சேகரித்து நீங்கள் ஆய்வுக்கு அல்லவா அனுப்பி இருக்க வேண்டும். சாக்கடை நீர் செல்லும் பாதையாக அல்லவா என்னை ஆக்கிக்கொண்டீர்கள்.
‘முந்தினான் மூவருள் முதல்வனாயினான் கொந்துலா மலர்ப்பொழிற் ‘கூகம்’ மேவினான் அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே!’
இப்படி என்னைப் பற்றி மூன்றாம் திருமுறையில் திருஞான சம்பந்தர், தேவாரத்தில் ஏராளமான எண்சீர், அறுசீர் விருத்தங்களில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
என்னில் வளர்ந்த பறவைகளும், கால்நடைகளும்!
சீரும் சிறப்புமாக என்பார்களே, அதுபோல் ஆனந்தப் பிரவாகமாய் ஊற்றெடுத்து எனக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து என் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்கினேன். என் கரைப் பகுதிகளில் செழுமையுடன் ஓங்கி வளர்ந்த புல்வெளிகளையும், பசுந்தழைகளையும் கால்நடைகள் உண்டு கொழுத்தன. என் மடிமீது துள்ளிய விதவிதமான மீன் இனங்களை உண்டு பசியாற சிறகினங்கள் கண்டம் விட்டு கண்டம் வந்தன.
அரசியலில் சிக்கினேன்!
ஒருநாள், திடீரென தமிழ்நாட்டு அரசியலில் என்னைத் திரும்பிப் பார்த்தனர். என்னைச் சுத்தப்படுத்தி, படகுவிட்டு, கரைகளில் செடி, கொடிகள் நட்டு லண்டனின் ‘தேம்ஸ்’ நதிபோல ஆக்கிக் காட்டுவதாக என் கரையில் நின்றபடி ஆளாளுக்குச் சூளுரைத்தனர். நான் அவர்கள் சொல்வதை ‘தேமே’ என ஆர்ப்பரிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால அரசியலில் சிக்கி, நான் பட்ட அடி இப்போதிருக்கும் நிலையைவிட அதிகமான நாற்றம் என்றே சொல்லலாம். இதில் எனக்கென்ன தயக்கம்? இனிமேல் இழக்க என்ன இருக்கிறது?
என் எல்லையின் தூரம் இது!
கொசஸ்தலை ஆறு என்று கேள்விப்பட்டிருப் பீர்கள்… இதே திருவள்ளூர் மாவட்டத்தில் என்னோடு லேசாக கலந்து அது ஓடுவதைப் பார்க்கலாம். அதன் பூர்வீகம் வேலூர் மாவட்டத்தின் தொடக்க எல்லை. அதே எல்லைக்கோட்டில் இருக்கும் ஊரின் பெயர் கேசாவரம். இடது பக்கம் எட்டிப் பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புத்தூர் வந்துவிடும். இதில் நான் எங்கிருந்து புறப்படுகிறேன் தெரியுமா? கேசாவரத்தின் மேலிருக்கும் ‘தக்கோல’த்திலிருந்து… ஆக, காஞ்சிபுரமும், திருவள்ளூரும், வேலூரும் என்னின் ஓட்டத்தில் இடது, வலது, மத்திமம் ஆக இருக்கிறது.
நான் இழந்த இடங்கள்!
புறப்படும் இடத்திலேயே நான்கு திசைகளிலும் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீரை நிரப்பி வைத்துக்கொண்டு அங்கிருந்து பல கிளைகளாகப் பிரிந்து, ஆறுகளுக்கே நீர் பாய்ச்சும் ஒரு நதி வட தமிழகத்தில் உண்டென்றால், அது நான்தான். கடந்த சில ஆண்டுகளாக என்னில் எதையெதையோ கொட்டி நீர் வழிப்பாதையைத் திருப்பிவிட்டார்கள். என் பாதையைத் தொலைத்து நீங்கள் வகுத்த பாதையில் எங்கெங்கோ போனேன்; முட்டிக்கொண்டேன்; மோதிச் சிதறி நின்றேன். கசாப்புக் கடைகளின் கழிவுகளை சிலர் கொட்டினர். சிலர், சின்னதாய் ‘தறி’ மேடை அமைத்து என் நீர்நிலையைப் பயன்படுத்தி அந்த ஊருக்கே கவுரவமாக ‘சின்ன தறிப்பேட்டை’ என்று பெயரிட்டனர். பின்னாளில் அதுதான், ‘சிந்தாதரிப்பேட்டை’ என்றானது. இதுதான் பொன் விளையும் பூமி என்று என்னில் விதை விதைத்து எதையெதையோ நட்டார்கள், அறுவடை செய்தார்கள்…
ஒருநாள் அந்த விவசாயிகளையும் சிலர் விரட்டினார்கள். அங்கே கட்டடங்களை எழுப்பி அதனை ‘அபார்ட்மென்ட்’ என்றார்கள்.
இப்போது நீங்கள் சொல்லும் இயற்கைப் பேரிடரில் (பேரிடரா அது? திமிறி வெளி வந்த எங்கள் கோபத்தின் வெளிபாடு அல்லவா அது…) எல்லாம் தொலைத்தார்கள். மீண்டும் என் நீர்பரப்பையும் நிலப்பரப்பையும் இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இது இன்னும் எத்தனை நாட்களோ, மாதங்களோ தெரியவில்லை. அதோ தூரத்தில் மு.மேத்தாவின் கவிதைத் தலைப்புபோல ‘அவர்கள் வந்துகொண்டிருக் கிறார்கள்’. அந்தக் கவிதைப் புத்தகத்தின் உள்ளடக்கத்திலோ அவர்கள் வேலை தேடி வந்துகொண்டிருக்கும் பட்டதாரிகள். இவர்களோ, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் என்னில் பட்டா போடுகிறவர்கள். நான் போகுமிடம் எல்லாம் எனக்கே சொந்தம் என்று கொண்டாடிச் சொல்லிக்கொள்ள நான் ஆறோ, ஏரியோ அல்ல… ஒரு ஜீவநதி. ஆனால், பிறக்கிற பகுதியின் சுற்றுப்புறத்தைக்கூட சொந்தமில்லை என்று ஆக்கிவிட்டார்களே.
இங்குதான் முடிகிறது!
திருவள்ளூரிலிருந்து இப்படி தட்டுத் தடுமாறி தப்பித்து, ‘போதும்யா, மூச்சு முட்டுது’ என்று சென்னை மெரினாவின் காமராஜர் சாலையைக் கடந்து நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடாவின் முகத்துவாரத்தில் என் பயணத்தை முடிக்கிறேன்.
பல ஆறுகள், என் பிள்ளைகள்!
திருவள்ளூர் ஆறு, சத்திரம் ஆறு, நரசிங்கபுரம் ஆறு, பேரம்பாக்கம் ஆறு என்று 25 சிற்றாறுகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் அந்தந்த ஊர்ப் பெயரோடு ஓடினாலும் அவற்றுக்கான சுவையான நீர் ஆதாரம் நானே என்பதால், அவை அத்தனையும் இந்தக் கூவத்தின் பிள்ளைகளே.
பாலாறு, கொசஸ்தலை என்று பெரிய பெரிய ஆறுகளும் வெயில் காலங்களில் என் இருப்பு நீரை உள்வாங்கி வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது, காலத்தால் அழிக்க முடியாத தண்ணீர் வரலாறு. இருளஞ்சேரி, எட்டிக் குட்டிமேடு, குமாரஞ்சேரி இப்படி ஒன்பது கிராமங்களைச் சேர்த்த மொத்த பெரிய கிராமத்தின் பெயர்தான் என் பெயர், ஆமாம்… கூவம் கிராமம்.
‘ரத்தக்கண்ணீர்’ என்ற சினிமாவில் எம்.ஆர்.ராதா, ‘அந்த ஆப்பிள் அழகிகளின் அருகாமையிலே, ‘தேம்ஸ்’ நதியின் தீரத்திலே…’ என்ற திருவாரூர் தங்கராசுவின் வசனத்தைப் பேசுவார். வட தமிழ்நாட்டில் ஓடுகிற ஒரே ஜீவநதி நான்தானே, ஏன் அவர் தேம்ஸை சொல்ல வேண்டும்? பெரிதாய் காரணம் ஒன்றுமில்லை. என் இயற்கையான அழகின் மீது கொட்டி மூடப்பட்ட அசிங்கங்கள்தான் அவர்களை தேம்ஸ் பக்கம் திரும்ப வைத்ததே.
1967 – 72-ல் அண்ணா, ஐந்தாண்டுத் திட்ட வடிவைக் கொண்டுவந்தார். அப்புறம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைதி. 2001-ல் மத்திய அரசின் உதவியோடு சீர்படுத்துவதாக ஜெயலலிதா திட்டம் போட்டார். 2009-ல் துணை முதல்வர் பொறுப்பிலிருந்த மு.க.ஸ்டாலின் கூவத்தைச் சீரமைப்பது தொடர்பாகத் திட்டமிட வெளிநாடு போனார். அதற்கு முன்னதாக, 2008-ல் என்னைச் சீரமைக்க அறக்கட்டளை ஒன்றையே நிறுவினார். மீண்டும் 2012-ல் ஜெயலலிதாவே ‘என்னை’ பாதுகாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து பின், அவர் முடிவை அவரே 2013-ல் மாற்றிக்கொண்டார். என் ஓட்டப் பாதையில் 105 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடையில்லா ஓட்டமாக்க 300 கோடி ரூபாயில் திட்டம் போட்டிருக்கிறார்… இன்னும் ஏதேதோ திட்டங்கள் போட்டு கோடிகளை ஒதுக்கியிருப் பதாகச் சொல்கிறார்கள். யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள்ளத்தானே முடியும்.
பல சினிமாக்களில், ஊட்டாண்டே வந்தாக்கா மூஞ்சிமேல அட்சிப்புடுவேன், பேமானி, சோமாறி… ன்னு ஒருத்தன் பேசுறான். இன்னொருத்தனோ, ‘இன்னாடா கஸ்மாலம், கூவம் கணக்கா கூவுறே’ங்கறான்… சினிமாவில் எதையெதையோ இப்படித்தான் புரியாமல் காமெடி என்கிற பெயரில் கொட்டித் தீர்க்கிறார்கள். கூவம் என்ன அத்தனை அவலமா… அத்தனை நாற்றமா? என்னைச் சீரழித்தவர்கள்தானே நாற்றத்தின் பிறப்பிடம்?
ஒரே புலம்பலாக இருக்கிறதே என்கிறீர்களா? புலம்பல்தான்… எஞ்சியிருக்கும் கொஞ்ச நீரையாவது நஞ்சு கலக்காமல் காப்பாற்ற முடியாதா என்ற புலம்பல்தான். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள். கடலில் போய் ஆக்கிரமிப்பு செய்து பாருங்கள்; கடலில் போய் மண்ணெடுத்து வீடு கட்டிப் பாருங்கள்; ஏன் முடியவில்லை? அது உங்களை விழுங்கும் வாயுள்ள கடல். உங்கள் ஜம்பம் அங்கே எடுபடாது.’’ என்று தன் கதையைக் கூறி முடித்தது அந்தப் பாவப்பட்ட கூவம்!
நன்றி : ஜூனியர் விகடன் - 24.01.2016

No comments:

Post a Comment