disalbe Right click

Monday, May 1, 2017

போலி ஆவணங்கள் மூலம் உயில் பதிவு

போலி ஆவணங்கள் மூலம் உயில் பதிவு

திருப்பத்தூர்: போலி ஆவணங்கள் கொடுத்து உயிலை பதிவு செய்ய உடந்தையாக இருந்த சார் பதிவாளரை, திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ராஜ்கண்ணு. இவர் மனைவி பச்சையம்மாள். இவர்களது மகன் முரளி. இவருக்கு, இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் தன் மகனுக்கு சொத்துக்களை எழுதி வைக்க, ராஜ்கண்ணு மறுத்து விட்டார். இந்நிலையில், கடந்தாண்டு செப்., 24ல், உடல் நிலை சரியில்லாமல் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜ்கண்ணு சேர்க்கப்பட்டார். அப்போது சுய நினைவு இல்லாமல் இருந்த ராஜ்கண்ணுவிடம், சொத்துகள் அனைத்தையும், தன் பெயருக்கு தான செட்டில்மெண்ட் வழங்குவதாக முரளி உயில் எழுதி, அதில் கையொப்பம் வாங்கிக் கொண்டார். பின் இந்த உயிலுடன் சில போலி ஆவணங்களை கொடுத்து, திருப்பத்தூர் சப்-ரிஜிஸ்டர் ஆபிசில் அப்போதிருந்த சார் பதிவாளர் கருணாகரன் என்பவர் உதவியோடு, முரளி பதிவு செய்து கொண்டார்.
இந்நிலையில், ராஜ்கண்ணு இறந்து விட்டார். அதன் பிறகு தான் ராஜ்கண்ணுவின் சொத்துகளை, போலி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்து, முரளி அபகரித்துக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருப்பத்தூர் போலீசில் பச்சையம்மாள் புகார் செய்தார். 
போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி ஆவணங்கள் கொடுத்த முரளி, 45, திருப்பத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்த உதவியாளர் சரவணன், 51, பத்திர எழுத்தர் சங்கர், 34, துணை சார் பதிவாளர் லட்சுமணன், 44, சார் பதிவாளர் கருணாகரன், 56, ஆகியோர் மீது, கடந்தாண்டு நவ., 5 ல், வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த சார்-பதிவாளர் கருணாகரன் தலைமறைவானார். 
மற்ற, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கருணாகரனை தேடி வந்தனர். இந்நிலையில் அரக்கோணத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர்.

நன்றி : தினமலர்  நாளிதழ் -29.03.2017


No comments:

Post a Comment