disalbe Right click

Saturday, June 24, 2017

07: மனோ நிலைதான் முக்கிய மூலதனம்

07: மனோ நிலைதான் முக்கிய மூலதனம்

பலர் பிஸினஸில் ஜெயிக்காததற்கு முக்கிய காரணம், பணம் பற்றிய தவறான அல்லது குழப்பமான எண்ணங்கள்தான். தொழில் செய்யப் பணம் வேண்டும். பணம் செய்யத் தொழில் வேண்டும். அதனால் இவ்விரண்டைப் பற்றிய ஆதார எண்ணங்கள் உங்கள் ஒவ்வொரு முடிவையும் பாதிக்கும்.
நம் பிரச்சினை பணம் பற்றிய எண்ணங்கள். ‘பணம் என்ன மரத்திலா காய்க்கிறது வாரி இறைக்கிறதுக்கு?’
இப்படி சொல்லி வளர்க்கப்பட்டிருந்தால் ஒரு பற்றாக்குறை மனோபாவம் சுலபமாக வந்துவிடும். பணம் வந்தால் முடக்க வேண்டும். அடுத்து என்னாகும் என்று தெரியாது. இருப்பதை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். கொடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். இப்படி நினைத்தால் முதலீடு செய்யவோ, தொழிலில் செலவு செய்யவோ, கடன் வாங்கவோ தைரியம் வராது. இவர்கள் தொழிலுக்கு வரமாட்டார்கள். வந்தாலும் முதல் தேக்கத்தில் வெளியேறிவிடுவார்கள்.
மாஸ் ஹீரோவின் வசனம்!
“பணம் அளவா இருக்கற வரைக்கும் தான் நிம்மதி. அளவுக்கு மேல் வந்தால் பிரச்சினை.”
எல்லா மாஸ் ஹீரோவும் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு பேசும் வசனம் இது. மதங்களும் காசு மனிதனை பாவம் செய்யத் தூண்டும் என்று போதிக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆலயங்களில் உண்டியலில் வசூலிக்கிறார்கள். பணக்கார வழிபாட்டு தலங்களில்தான் அதிக கூட்டமே சேருகிறது. அதேபோல பணக்காரர் ஆனால் நோய்கள் பெருகுமாம். ஏழைகளின் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராதாம். சம்பாதித்தால் வரி கட்டணும். சம்பாதிக்காவிட்டால் சலுகைகள் கிடைக்கும். இப்படி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேக்க மனோபாவம் தொழில் செய்வதில் பெரிய தடையாக இருக்கும்.
“பணக்காரன் அயோக்கியன். தவறு செய்யாமல் பெரிய தொழிலதிபர் ஆக முடியாது!”
நம் ஏழை மாஸ் ஹீரோ பணக்கார வில்லனுடன் மோதுவதை எத்தனை ஆயிரம் முறை பார்த்திருக்கிறோம். (ஆனால், பணக்கார வில்லனின் மகள் ஓ.கே.!).
பலர் தோற்க சிலர் ஜெயிப்பது
பலரை ஏமாற்றிவிட்டுத்தான் சிலர் முன்னேற முடியும் என்ற கருத்து இங்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. அதனால்தான் பணம் வைத்திருப்பவர் மேல் ஒரு வன்மம் வருகிறது. ஆனால், நம்மிடமிருந்து பணத்தாசையும் விலகுவதில்லை. அதனால்தான் நாம் பணம் சம்பாதிக்கும்வரை சம்பாதிப்பவரை நமக்குப் பிடிப்பதில்லை. பலர் தோற்க சிலர் ஜெயிப்பது என்பது வாழ்வின் எல்லா துறையிலும் நிகழ்பவை. இருந்தும் தொழிலதிபர் என்றாலே மோசமாக சித்தரிக்கப்படுகிறது. இதனால் நல்ல முறையில் தொழில் செய்து பணம் சேர்க்க முடியும் என்ற அடிப்படை எண்ணம் அடிபட்டுப் போய்விடுகிறது.
“பணம் வரும் போகும். பிஸினஸ் எல்லாம் சூதாட்டம் மாதிரிதான்!”
தொழிலின் நிலையில்லாத் தன்மை பற்றி கூறுவது போலத் தெரிந்தாலும் அடிப்படையில் சொல்லப்படும் செய்தி இதுதான்: “ நீ என்ன செய்தாலும் வந்தா வரும். போனால் போகும்!” இது ஒரு நம்பிக்கையில்லா மனநிலையை உருவாக்கும். இதற்கு நூறு உதாரணங்கள் கண்ணில் தென்படும். நமக்கு இதெல்லாம் அவசியமா என்ற கேள்வி வரும். அதீத பாதுகாப்பு உணர்வுதான் மிஞ்சி நிற்கும். நமக்கு சரிப்படாது என்று விலகி நிற்க வைக்கும்.
மனசு போல வாழ்க்கை!
“நம்ம ராசி, உப்பு விக்க போனா மழை வரும். உமி விக்கப் போனா காத்தடிக்கும்!”
நான் பல முறை எழுதிய விஷயம்தான். மனசு போல வாழ்க்கை! எந்த எண்ணம் வலுவாக உள்ளதோ, அது நிஜம் என்று நிரூபிப்பது போன்ற காரியங்கள் நிகழும். ராசி என்பார்களே அது இப்படித்தான் நிகழும். வெற்றிகள் வெற்றியை கவர்வதும் தோல்விகள் தோல்விகளை கவர்வதும் இதனால்தான். ஒருவர் தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்கிறார் என்றால் நிச்சயம் அவர் எண்ணங்கள் தோல்விகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக பயம், சந்தேகம், குரோதம், நம்பிக்கையின்மை என்று எதிர்மறை எண்ணங்கள் வலுவாக உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது கடினம்.
தொழில் பற்றி ஆலோசனைக்கு வருவோர் பலருக்கு நிஜமான தேவை தொழிலதிபருக்கான உளவியல் ஆலோசனைதான். முதலாளி எடுக்கும் ஒரு முடிவு அவரை, அவர் சம்பந்தப்பட்டோரை, சம்பந்தப்பட்ட தொழிலை முழுமையாக பாதிக்கும். அதனால் தொழில்முனைவோரின் மனோ நிலைதான் ஒரு தொழிலின் முக்கிய மூலதனம்!
பணத்தை மதிக்க வேண்டும்
பணம் பற்றி நேர்மறையான எண்ணங்கள் தொழில் புரிய அவசியம். பொருள் ஈட்டுவதும், லாபமடைவதும், பிறரை வளர்ப்பதிலும் மகிழ்வு கொள்பவர்களுக்கு தொழில் சிறக்கும். செல்வம் ஈட்ட, கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடன் சேர்ந்து பணம் போடவும், பணம் பெருக்கவும், பணத்தைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணம் தரும் தொழில் சார்ந்த செயல்கள் மட்டும் செய்ய கவனக்குவிப்பு வேண்டும்.
முக்கியமாக பணத்தை மதிக்க வேண்டும்.தொழில் கூடத்தில் கடவுள் உருவப்படம் எதற்கு? செல்வம் தெய்வீகமானது என்று உணர்த்தத்தான். பணம் பலரின் வாழ்க்கை பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது. பல வளர்ச்சித் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடியது.
எந்த இனம் செல்வத்தை தெய்வமாக மதித்து, அதை சரியான வழியில் பராமரித்து, அதன் பலனை மொத்த சமுதாயத்துக்கு பங்கிட்டுத் தருகிறதோ அதுவே செழிக்கும் என்பது உலக வரலாறு. பிறரை சுரண்டிச் சேர்க்கும் காசு காலப்போக்கில் புரட்சி மூலம் சமநிலைப்படும். ஆனால் நல்ல வழியில், கடின உழைப்பில், சமூக நோக்கில் செய்யப்படும் தொழில்கள் காலம் காலமாக தழைத்து நிற்கும். அனைவரின் கடின உழைப்பால், தியாகத்தால், சிறப்பான நிர்வாகத்தால், மக்களின் திறனால், அனைவரின் ஒத்துழைப்புடன் மட்டுமே லாபமான தொழிலை நிலைக்கச் செய்ய முடியும். இதற்கு குறுக்கு வழிகள் இல்லை. இதை நிரூபிக்க ஆயிரம் தொழில் கதைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தையும் அண்ணாந்து பார்க்கத் தேவை நம்பிக்கை.
பணம் பற்றிய நம்பிக்கை. தொழில் பற்றிய நம்பிக்கை. வாழ்க்கை பற்றிய நம்பிக்கை. தன்னம்பிக்கை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 21.03.2017

No comments:

Post a Comment