disalbe Right click

Friday, June 23, 2017

அரசு நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுரை

அரசு நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை: 'ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்' என, அரசு நிறுவனங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

சென்னையை சேர்ந்த, 15 வயதான மணிகண்டன், அரசு போக்குவரத்துக் கழக பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தான். ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மணிகண்டனின் தாயார் விசாலாட்சி வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், 10.48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 'அதிகபட்சமாக, இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி விமலா பிறப்பித்த உத்தரவு:
விபத்தில், மணிகண்டனின் இடுப்பு எலும்பு முறிந்தது. மேலும், சிறுநீர் பையிலும் பாதிப்பு ஏற்பட்டதால், சிறுநீர் வருவதை அடக்க முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீர் கழிக்க பொருத்தப்பட்ட குழாயை, மாதம் இரு முறை மாற்ற வேண்டி உள்ளது. இந்த பாதிப்பினால், மணிகண்டன் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்கும் திறனை முழுமையாக இழந்துள்ளான்.
எனவே, மணிகண்டனுக்கு, இழப்பீட்டு தொகையை, 25 லட்சமாக வழங்க வேண்டும். அந்த தொகையை, வட்டியுடன் சேர்த்து, 'டிபாசிட்' செய்ய வேண்டும். மாநில போக்குவரத்து கழகம், அரசின் வழக்காடும் கொள்கையை பின்பற்றி இருந்தால், இந்த மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்காது. மனுதாரர் கோரிய தொகையை விட, கூடுதலாக தீர்ப்பாயம் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலையை, போக்குவரத்து கழகம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
இனி மேலாவது, மாநில அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், ஒரு வழக்கை, குறிப்பாக மேல் முறையீட்டு வழக்கை தொடர்வதற்கு முன், இரண்டு முறை யோசிக்க வேண்டும். 
இந்த மேல் முறையீட்டு வழக்கில், போக்குவரத்து கழகம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், மேலும் கூடுதலாக இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகளின் பெருக்கத்திற்கு வழி வகுக்காமல், அரசு துறைகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

No comments:

Post a Comment