disalbe Right click

Thursday, June 8, 2017

கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு, நில வழிகாட்டி மதிப்பு குறைப்பு!

கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு, நில வழிகாட்டி மதிப்பு குறைப்பு!
சென்னை: வீடு, காலி மனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்படுகிறது; அதே சமயம், பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது; இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்து வந்தது. அதாவது 2010-2011ம் ஆண்டு அதிகப்பட்சமாக 8 ஆயிரம் கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியது. இந்நிலையில், 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதை தொடர்ந்து, பத்திரப்பதிவு துறையில் நில வழிகாட்டி மதிப்பு கட்டணத்தை அதிகரித்து ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்ட திட்டமிட்டார்.
அதன்படி, 2012ம் ஆண்டு தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனால் பல இடங்களில் 100 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கட்டணம் உயர்ந்தது. இதனால், புதிதாக வீடு வாங்க நினைத்தவர்கள், நிலம் மற்றும் வீட்டை விற்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
மேலும் பத்திரப்பதிவு துறையில் பல குளறுபடிகளும் ஏற்பட்டது. 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பல மடங்கு கூட்டினாலும் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. 2012-13ம் ஆண்டு 7,455 கோடியும், 2013-14ம் ஆண்டு 8,055 கோடியும், 2014-15ம் ஆண்டு 8,562 கோடியும், 2016-17ம் ஆண்டு 7,002 கோடி மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைத்தது. வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு முன்பாக தமிழக அரசுக்கு பதிவுத்துறை மூலம் ஆண்டுக்கு 35 லட்சம் பத்திரங்களின் பதிவு நடைபெற்று வந்தது. அரசு திடீரென 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தியதால் பத்திரப்பதிவு ஆண்டுக்கு 25 லட்சமாக குறைந்தது. இதனால் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், நில தரகர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வழியுறுத்தி வந்தனர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது; இதை சரி செய்ய தமிழக அரசு தீவிரமாக யோசித்து சில முடிவுகளை எடுக்க முன்வந்தது.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் 30 நிமிடம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கோவை சென்று இருந்தார். நேற்று மதியம் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். விமானம் தாமதமாக சென்னை வந்ததால் அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவு குறித்து தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு பரிந்துரை படி, தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 (இன்று) முதல் 33 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியினை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை ஈடுசெய்ய விற்பனை, பரிமாற்றம், தானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தினை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு லாபம்: 
நில வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு குறைத்தாலும், பத்திர பதிவு கட்டணத்தை 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் நில தரகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் அறிவிப்பால் பெரிய அளவில் நன்மை கிடைக்காது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிசங்கர் கூறியதாவது: 
கடந்த 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதை குறைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்று அரசு 33 சதவீதம் வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கிறது. ஆனால் ஸ்டாம்ப் டியூட்டி(பதிவுக் கட்டணம்) 7+1 சதவீதமாக இருந்தது. இதை 7+4 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். ஒருபக்கம் மதிப்பை குறைப்பதாக காட்டிவிட்டு, மறுபக்கம் ஸ்டாம்ப் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாம்ப் டியூட்டி கட்டணம் 14 சதவீதமாக இருந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்படி 7+1 சதவீதமாக குறைத்தார்கள். தற்போது மீண்டும் 7+4 சதவீத கட்டணத்தை உயர்த்திவிட்டனர். 2012ம் ஆண்டுக்கு முன்னர் ஒரு சதுர அடி நிலம் 400 ஆக இருந்தது, வழிகாட்டி மதிப்பீடு குளறுபடியால் 1,200க்கு உயர்ந்தது. 8 சதவீத கட்டணம் சேர்த்து ஒரு சதுர அடி நிலத்தின் விலை 1,296 ஆக இருந்தது. தற்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 33 சதவீதம் குறைத்ததால் ஒரு சதுர அடி 804 ஆக இருந்தாலும், அதற்கான கட்டணம் 11 சதவீத சேர்த்து 892 ஆக இருக்கும். வழிகாட்டி மதிப்பீடு தாறுமாறாக இருக்கும் நிலையில், இது பொதுமக்களுக்கு பயன்தராது. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படப்போவதில்லை. இதன்மூலம் அரசாங்கத்துக்கு வேண்டுமானால், கூடுதல் வருமானம் வரும். ஒரு கையில் கொடுப்பதை போன்று கொடுத்துவிட்டு மறுபக்கம் தட்டி பறித்துவிட்டனர்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 09.06.2017
Image may contain: text
Image may contain: text

Image may contain: text
நன்றி : முகநூல் நண்பர் 
தொழிலாளர்களின் தோழன் 


No comments:

Post a Comment