disalbe Right click

Friday, July 14, 2017

காமராஜருடன் ஒருநாள் - எழுத்தாளர் சாவி

காமராஜருடன் ஒருநாள் - எழுத்தாளர் சாவி
இரண்டு மாதங்களுக்கு முன் காமராஜ் அவர்களை  சந்திக்க நான் டெல்லிக்குப் போயிருந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராக வந்திருந்தார்.

அன்று மாலை காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸிற்கு வந்திருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. வாசலில் நின்று கொண்டிருந்த ரிசப்ஷன் ஆபிஸர் தீனதயாளைக் கண்டதும் அவர்,”காமராஜரை பழையபடி கவனித்துக் கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறைதானே? உபசரிப்பில் ஒன்றும் குறையில்லையே? என்று கேட்டுக்கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார்.

காமராஜர் பதவியில் இருந்து விலகிவிட்டதால் எங்கே அவரை சரியாக கவனிக்காமல் இருந்துவிடுவார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால், உண்மையில் காமராஜூக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபச்சாரம்.

மறுநாள் காலை. நான் மெதுவாக காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும், “என்..ன? வாங்க..” என்று புன்முறுவலோடு அழைத்தார்.

விசிட்டர்கள் அதிகம் இல்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்பஹு பற்றி, பத்திரிக்கைகளில் ஏதேதோ செய்திகள் வெளியாகி இருந்தன. காமராஜரும் அதுபற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

“லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டுவிடலாமே.....” என்று மெதுவாக பேச்சைத் தொடங்கினேன்.

ஆமாம். போட்டுவிடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். (நாங்கள் என்பது சஞ்சீவ ரெட்டியையும், அதுல்யா கோஷையும் சேர்த்து சொன்னது) சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியை சந்தித்து கன்வின்ஸ் பண்ண வேண்டும்.” என்றார்.  

ஆனால், மறுநாள் காலைப் பத்திரிக்கைகளைப் புரட்டியபோது தலைமைப் பதவிக்கு காமராஜரையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்டபோது எனக்கு வியப்பு.

”என்ன இப்படி ஆகிவிட்டது”? என்று காமராஜிடம் கேட்டேன்.

எனக்கு ஒன்றும் தெரியாது; காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதுல்யா கோஷும் சஞ்சீவரெட்டியும் காதைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்”  என்றார்.

“எப்படி இருந்தாலும் நல்ல முடிவு” என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, விடை பெற்றேன். “பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால், பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவி தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்துவிட்டன. ஆனாலும், அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்தபோது, பதவியை விட்டபோது, பதவி அவரை தேடி வந்துள்ளபோது ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்” என்றார் தீனதயாள்.

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களை சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டு, வலது கையை முதுகுப் பக்கமாக செலுத்தி இடது தோளைத் தேய்த்த படியே பத்திரிக்கை படிப்பதில் சுவாரஸ்யமாக இருந்தார். 

மேஜ மீது அன்றைய இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் இவ்வளவு பத்திரிக்கைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

”பத்திரிக்கைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது...”  

”எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்சனை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால் அதையும்தான் பார்ப்பேன், தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின்விசிறியை நிறுத்திவிட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படிக்கை அறை. படுக்கை அறையை ஒட்டினாற்போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. அந்த சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, கோட் ஸ்டாண்ட், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கண்ணோட்டமிட்டேன்.

”என்ன... என்ன பாக்கறீங்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 

“ஒன்றுமில்லை; தங்களை கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன், இது என்னுடைய நீண்டநாள் ஆசை” என்றேன்.

“ஓ, தாராளமா இருங்களேன், இப்படி வந்து உட்காருங்க” என்று கூறிக்கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே வைத்தார்.

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும்  ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.

INSIDE AFRICA - by John Gunther.

ENDS AND MEANS - by Aldous Huxley

TIME MAGAZINE.

NEWS WEEK

சிந்தனைச் செல்வம் - வி.ச.காண்டேகர்

இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காததுபோல் கவனித்துக் கொண்டேன். நான் கவனிக்காததிபோல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்தாற்போல் பெட்டியில் இருந்து ஷேவிங் செட்டை எடுத்து கண்ணாடி முன் வைத்துக் கொண்டார். அந்த நித்திய கடமை முடிந்ததும், தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைத்தார். அங்கு ஏற்கனவே பல சட்டைகள் இந்த மாதிரி மடித்து வைக்கப்பட்டிருந்தன.

“ ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?”

“இரண்டு முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்வொரு முறை குளித்து முடிந்ததும் சலவைச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

“இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே! இதனால் உடல் நலம் பாதிக்கப் படுவதில்லையா?”

“கிடையாது, நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்துவிடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாக இருந்தால், 11 மணிக்குள் சாப்பிட்டு விடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காபி, இரவு இட்லியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.

கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நாட்களில் சிலசமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக மோர் சாதம் சாப்பிட்டால் போதும் என்று தோணும். ஆனால், எனக்கு சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர்சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டு கஷ்டப் படுத்திடுவாங்க. என் நிலையை புரிந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாக சாப்பாடே வேண்டாமென்று சொல்லி பட்டினி போட்டுவிடுவேன்.” 

“தாங்கள் கைக் கடியாரம் கட்டிக் கொள்வதில்லையே, ஏன்?”

“அதெல்லாம் எதுக்கு! அவசியமில்லை. யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும்போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன பைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்” என்றார்.

“தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு  வாசலில் காத்திருக்கிறார்களே, அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?”

“சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவிகள் எல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாக இருக்கும். முடிந்ததை நானும் செய்து விடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கல் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து “இப்படிச்செய்யலாமே! என்று எனக்கு ஆலோசணை சொல்வாங்க. நான், “ஆகட்டும், பார்க்கலாம்” என்பேன். யாருக்காவது ஒரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லை என்றால்தானே கோபம் வருகிறது? ஆகையால் எல்லஓருக்கும் சமமாக இருந்துவிடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். “ நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல்” என்பேன். அப்படி இருக்காது. ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், “ஆமாம், நீ சொன்னது உண்மைதான்” என்று ஒப்புக் கொள்வேன். அவன் அதிலேயே திருப்தியடைந்து போய்விடுவான்!”

தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது ரொம்ப கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!” 

”எனக்கு அலுப்பே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால், இதில் எனக்குள்ள சங்கடம் பத்திரிக்கை படிக்க நேரமில்லாமல் போய்விடுவதுதான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது. பத்திரிக்கை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். விசிட்டர்களால் அது தடைபட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்கத் தயார்” என்றார்.

அன்றிரவு மணி 12 இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிக சுவாரஸ்யமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் அது என்று எட்டிப் பார்த்தேன்.

கம்ப இராமாயணம்!

நன்றி : ஆனந்தவிகடன் - 11.12.2013

No comments:

Post a Comment