disalbe Right click

Thursday, September 28, 2017

ஏற்கனவே வாங்கியுள்ள வீட்டுமனையை வரன்முறைப்படுத்த....

ஏற்கனவே வாங்கியுள்ள வீட்டுமனையை வரன்முறைப்படுத்த....
தமிழ்நாடு முழுவதும் விளை நிலங்களை உரிய அனுமதியின்றி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி இருக்கின்றனர் என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் திரு யானை ராஜேந்திரன் அவர்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கீகாரம் இல்லாத எந்த ஒரு நிலத்திற்கும் பத்திர பதிவு செய்யக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்வதாக அளித்த உறுதியின்படி புதிய விதிகளை கடந்த 04.05.2017 அன்று தாக்கல் செய்தது.
அந்த அரசாணையில் தமிழ்நாடு வீட்டு வசதிநகர்ப்புற வளர்ச்சித்துறை கூறியுள்ளது என்னவென்றால்,
தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (1971) கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறை விதிகள் 2017 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் படி,
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களும், டவுன் பஞ்சாயத்துகளில் செயல் அதிகாரியும், கிராம பஞ்சாயத்துகளில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் இந்த நிலங்களை வரையறை செய்யும் தகுதியான அதிகாரிகள் ஆவார்கள்.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தை வாங்கியவர்களும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை உரிய கட்டணங்களை அரசுக்கு செலுத்தி வரையறை செய்து கொள்ளலாம்.
ஆனால், இந்த நிலங்கள் கடந்த 20.10.2016-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100/- வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60/- என்றும் கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.30/- வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டு மனைகளில், மேம்படுத்துவதற்கு என்று தனியாக ஒரு கட்டணமும் அரசுக்கு செலுத்த வேண்டும்.
மேம்பாட்டு கட்டணங்கள்:
மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 600/- ரூபாய்
சிறப்பு & தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 350/- ரூபாய்
முதல் & இரண்டாம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 250/-ரூபாய்
டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 150/-ரூபாய்
கிராமபஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 100/-ரூபாய்
இதுதவிர வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மாநகராட்சி என்றால்
குறைந்தது 4.8 மீட்டர் ( 15 அடி) அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நகராட்சி மற்றும் கிராமபஞ்சாயத்து பகுதிகளில் குறைந்தது 3.6 மீட்டர் ( 12 அடி)
அகலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில், திறந்தவெளி பொது நிலத்தை விட
வேண்டும்.
இந்த திறந்தவெளி பொது நிலம் விடாமல், வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால்,
அந்த ஒட்டுமொத்த வீட்டு மனைகளின் மதிப்பில் 10 % கட்டணமாக
வசூலிக்கப்படும்.
இந்த வீட்டு மனைகளை வரையறை செய்வது குறித்து ஆய்வு செய்ய, வீட்டு மனை
ஒன்றுக்கு 500/- ரூபாய் என்ற வீதம் கட்டணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
முதலில் வசூலிக்க வேண்டும். அதன் பின்னரே ஆய்வுகளை செய்ய வேண்டும்.
இது போன்ற அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை இந்த புதிய விதிகளின் படி
கட்டணம் வசூலித்து அதிகாரிகள் வரையறை செய்வதால், அந்த வீட்டு மனையில்
அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களையும் வரையறை செய்து விட்டதாக
அர்த்தம் கொள்ளக்கூடாது.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள்
மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள உரிமை உள்ளது.
எதிர்வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும்?
இனி வரும் காலங்களில் வீட்டு மனைகளை அமைக்கும் போது மாவட்ட கலெக்டர்
உள்ளிட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெறவேண்டும்.
அந்த அதிகாரிகள் விவசாய நிலம், நீர்நிலைகள் உள்ள நிலங்கள், அல்லது அந்த
நீர்நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள்
ஆகியவற்றில் வீட்டு மனைகளை உருவாக்க கண்டிப்பாக அனுமதி வழங்கக்கூடாது.
வீட்டு மனைகளை உருவாக்கும் நபர்கள், இது குறித்து மாவட்ட கலெக்டர்,
மாவட்டத்தில் உள்ள விவசாயத் துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம்
விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த அதிகாரிகள் , விண்ணப்பத்தின் பேரில் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு
செய்து, அதன்பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளை அமைக்க
அனுமதி வழங்கலாம்.
ஆறு, குளம் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீடுகள் கட்டுவதற்கு
மாற்றக்கூடாது.
அரசு நிலங்கள், கோவில் நிலங்கள், வக்ப்போடு நிலங்கள் ஆகியவற்றிலும் வீடு
மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை.
உரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி
கிடையாது.
20.10.2016-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளை வரன்முறை செய்ய கடைசி நாள்: 03.11.2017
தவிர்க்க முடியாத சூழ்நிலையில், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு வேளாண் இணை இயக்குநரிடம் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
******************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment