சொத்து மதிப்பீட்டாளருக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடு
புதுடில்லி : தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், சொத்துமதிப்பீட்டாளராக பதிவு செய்து, அங்கீகாரத்துடன் தொழில் செய்வதற்கான அரசாணையை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
Insolvency and Bankruptcy Board of India
இதன்படி, ஐ.பி.பி.ஐ., எனப்படும், இந்திய திவால் ஒழுங்குமுறை வாரியத்தில், மதிப்பீட்டாளராக பதிவு செய்து, ஒரு நிறுவனத்தின் சொத்துகள், பங்குகள், கடன் பத்திரங்கள், கடன்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யும் தொழிலில் ஈடுபடலாம். இவ்வாறு பதிவு செய்வோர், அங்கீகாரம் பெற்ற, மதிப்பீட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பிலும், உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.
மதிப்பீட்டாளர் பணிக்கான தகுதிகள், சொத்து மதிப்பீட்டு கல்வி திட்டம், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகள், 2017ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. தற்போது, சொத்து மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் ஆகியவை, 2018 மார்ச், 31க்குள், ஐ.பி.பி.ஐ.,யில் பதிவு செய்து, அங்கீகாரத்துடன் தொழில் செய்யலாம்.
இந்த புதிய நடைமுறை, 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இருந்த போதிலும், ஏற்கனவே மதிப்பீட்டு சேவையில் ஈடுபட்டுள்ளோர், பதிவு செய்யாமலே, தொடர்ந்து தொழில் புரியலாம். அவர்கள், பதிவு செய்து கொள்வதற்கு, 2018 மார்ச் இறுதி வரை அவகாசம் உள்ளது. ‘மதிப்பீட்டாளர் துறைக்கான கண்காணிப்பு மையமாக, ஐ.பி.பி.ஐ., அமைப்பை நியமிக்கும் அரசாணை, தனியே வெளியிடப்படும்’ என, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 22.1.2017
சொத்து மதிப்பீட்டாளரின் வேலை என்ன?
ஒரு காலி மனையையோ அல்லது ஒரு வீட்டையோ வாங்கும்போது அதனை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. ஒரு சொத்தின் மதிப்பீடு என்பது, அந்த சொத்தினை வாங்க இருப்பவரும், அந்த சொத்தை விற்க இருப்பவரும் சேர்ந்து அதனைப் பற்றி விவாதித்து ஒரு தொகைக்கு வாங்கவோ, விற்கவோ ஒப்புக் கொள்வது ஆகும். இந்த சூழ்நிலையில் அந்த சொத்தின் மதிப்பு வாங்குபவருக்கோ அல்லது விற்பவருக்கோ தெரியவில்லை என்றால், இருவரும் சேர்ந்து ஒரு சொத்து மதிப்பீட்டாளரை அணுகலாம்.
எதனை வைத்து கணக்கிடுவார்கள்?
சொத்து மதிப்பீட்டாளர் அந்த சொத்து அமைந்துள்ள மனையின் மதிப்பு, கட்டிடம் இருந்தால் அதன் மதிப்பு, அதில் உள்ள வசதிகள் மற்றும் இதர அம்சங்கள் ஆகிய நான்கு விஷயங்களைக் கொண்டு அந்த சொத்தின் மதிப்பைக் கணக்கிட்டுக் கூறுவார்.
காலி மனையின் மதிப்பு அப்போதுள்ள சந்தை மதிப்பைக் கொண்டு அவர் கணக்கிடுவார். கட்டிடத்தைப் பொறுத்தவரை, அது எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது?,
எந்த ஆண்டு கட்டப்பட்டது?, சுவர்களின் அகலம், அதன் உறுதித் தன்மை, இன்னும் எத்தனை வருடங்களுக்கு அந்தக் கட்டிடம் உறுதியாக இருக்கும், அந்த கட்டிடத்தைக் கட்டிய கட்டுநர் போன்றவற்றை வைத்து அவர் அதன் மதிப்பைக் கணக்கிடுவார்.
தேய்மானச் செலவு எவ்வளவு தெரியுமா?
பொதுவாக ஒரு கட்டிடத்தின் மதிப்பானது, அது கட்டப்பட்ட வருடத்திலிருந்து
ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் ஒன்றரை சதவீதம் அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டிடம் கட்டி 10 வருடங்கள் ஆகி இருந்தால், அதன் மதிப்பிலிருந்து 15 சதவீதம் தேய்மான மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.. குறிப்பாக 10 வருடத்திற்கு முன் ஒரு கட்டிடம் கட்ட ரூ.50 லட்சம் செலவாகி இருந்தால், தற்போது அந்த கட்டிடத்தின் உத்தேச மதிப்பு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் எனக் கணக்கிடலாம்.
அதற்கு அடுத்தது, அந்த கட்டிடம் வீடாக இருந்தால், அதில் உள்ள வசதிகள். உள் அறைகளில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள், சமையலறை , மர சாமான்கள், இரும்பு ஜன்னல்கள், பூஜை அறை, வாசல் கதவுகள், மின் மோட்டார்கள், காம்பவுண்டு சுவர் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும். இவைகளுக்கும் மேற்கண்ட 15 சதவீத தேய்மானம் உண்டு. இதனையே Present Worth என்கிறோம்.
இதைத் தவிர, அந்த மனை அமைந்துள்ள இடமானது கோவில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றிற்கு அருகில் இருந்தால் -Present Worth ஐவிடச் சற்று அதிகமாகவும், தெருவுற்கு நேராக இருந்தாலோ அல்லது கிணறு மற்றும் பள்ளத்திற்கு எதிரில் இருந்தாலோ, பொதுக் கழிப்பிடம், மீன் மார்க்கெட், மதுபானக்கடை, பம்பிங் ஸ்டேஷன், பெரும் சப்தம் வரக்கூடிய தொழிற்சாலை, தூசிகள் பரப்பும் தொழிற்சாலை ஆகியவற்றின் அருகிலேயோ, தாழ்வான பகுதியிலேயோ இருந்தாலோ Present Worth-ஐ விடச் சற்றுக் குறைவாகவே மதிப்பீடு செய்யப்படும். கையில் ரொக்கமாக பணம் வைத்துக் கொண்டு வீடு வாங்குவதாக இருந்தால் இத்தனை அம்சங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏதாவது ஒரு வங்கியின் மூலம் கடன் பெற்று வீடு வாங்குவதாக இருந்தால், மேற்கண்ட அனைத்து நடைமுறைகளையும் அந்த வங்கி நிர்வாகமே மேற்கொள்ளும். ஒவ்வொரு வங்கியிலும் இதற்கெனவே மதிப்பீட்டாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
எவ்வளவு கட்டணம்?
சொத்து மதிப்பீட்டாளர்கள், ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை மதிப்பிட சுமார் ரூபாய் பத்தாயிரமும், சுமார் ரூபாய் ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை மதிப்பீடு செய்வதற்கு சுமார் ரூபாய் ஏழு ஆயிரமும் கட்டணமாக பெறுகிறார்கள் என்றும், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மதிப்பீடு செய்ய முதல் கோடி ரூபாய்க்கு பத்தாயிரமும், அதன் பின் வருகின்ற ஒவ்வொரு கோடிக்கும் ஐந்து ஆயிரம் வீதம், மொத்தம் ரூபாய் முப்பத்து ஐந்து ஆயிரம் வசூலிக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது..
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment