disalbe Right click

Saturday, November 18, 2017

பஞ்சமி நிலத்தை வாங்கலாமா?

பஞ்சமி நிலம் என்றால் என்ன?
ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த திரு ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களான பறையர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரித்து, 1891ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார்
அந்த அறிக்கையில் பறையர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை அரசாங்கம் மேம்படுத்த முடியும் என்ற கருத்தை அதில் வலியுறுத்தி இருந்தார். இந்த அறிக்கையானது ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892ம் ஆண்டு, மே மாதம் 16ஆம் தேதி விவாதத்துக்கு வந்தது
பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம்
இதனால், பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம் ஒன்று, 1892ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்தியா முழுவதும் 12.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களை தலித் மக்களுக்கு இலவசமாக அன்றைய ஆங்கிலேய அரசு வழங்கியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு, இலவசமாக  2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்  ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டது.  இந்த நிலத்தை சுருக்கமாக D.C.Land (Depressed Class Land) என்றும் சொல்கிறார்கள்.
சட்டத்திலுள்ள முக்கிய நிபந்தனைகள்
இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில், ஷை தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அதனை அனுபவிக்கலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறருக்கு விற்க முடியும். அதுவும், அவர்கள் வகுப்பைச் (Depressed Class) சார்ந்தவர்களிடம் தான் விற்க முடியும். வேறு எந்த வகுப்பினரிடம் விறறாலும் அந்த விற்பனை செல்லாது.
தெரிந்தோ அல்லது தெரியாமலோ யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முயன்றால், பத்திரத்தை பதிவு அதிகாரி, அதனை பதிவு செய்யக்கூடாது. மீறி இந்த பஞ்சமி நிலங்களை வேறு ஒருவர் வாங்கினால், எந்த நேரத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசாங்கம் பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது.
தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இந்த சட்டத்தை, ஆங்கிலேய அரசு உருவாக்கியது.
பூமி தான இயக்கம்
1950ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூமி தான இயக்கத்தின் வழியாக பொதுமக்களிடம் இருந்து பெற்று, பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கினார். 1960ம் ஆண்டிலும் இந்த முறையில் நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டன. ஆங்கில அரசாங்கத்தால் Depressed Class என்று குறிப்பிடப்பட்ட பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste - பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று பிற்பாடு மாற்றம் செய்யப்பட்டது. D.C.Lan (Depressed Class Land)
எச்சரிக்கை
நிலம் வாங்குகின்ற வேறு வகுப்பினர், பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்கக்கூடாது. நிலத்தை விற்பனை செய்பவர் வேறு வகுப்பினராகக்கூட இருக்கலாம். அவர் அந்த நிலத்தை ஒரு தலித்திடம் இருந்து அவர் பெற்று அதனை உங்களிடம் விற்றாலும் நீங்கள்தான் நஷ்டப்பட வேண்டியதிருக்கும். ஆகையால், ஒரு நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை விற்பவர் யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்பதை பார்ப்பது அவசியம் ஆகின்றது.
***************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment