disalbe Right click

Monday, December 18, 2017

வழக்கை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம்

குற்றவாளிகளுக்குள்ள உரிமை 
சென்னை எழும்பூர் 2 வது பெருநகர நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341,352, 294(b), 323 மற்றும் 506( ii) ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு நடைபெற்று வந்தது.
அந்த வழக்கு சம்பவம் 23.1.2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் வேப்பேரி காவல் நிலையத்தில் 10.2.2001 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 23.4.2001 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு சாட்சி கூட விசாரிக்கப்படவில்லை.
அதனால் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, நீண்ட காலமாக விசாரிக்காமல் இருக்கும் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர்.
எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மேற்படி வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும், அதில் அரசு தரப்பில் இன்றுவரை சாட்சியாக யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும், எதிரிகள் பல ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகி வருவதாகவும், எதிரிகள் வழக்கை நடத்த தயாராக இருந்தபோதிலும் அரசு தரப்பில் வழக்கை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ன்படி அளிக்கப்பட்டுள்ள விரைவாக வழக்கை நடத்துவதற்குள்ள உரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், 2வது எதிரி 1.10.2007 முதல் 31.3.2009 வரை நீதிமன்றம் ஆஜராகததால் அவர்மீது நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை நிலுவையில் இருப்பதால் வழக்கை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(ii) தவிர மற்ற அனைத்து பிரிவுகளும் பிணையில் விடக்கூடிய சட்டப் பிரிவுகளாகும். 2வது எதிரி 1.10.2007 முதல் 31.1.2009 வரை நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவர்மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாலும் அதற்கு முன்னர் இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பலமுறை அரசு சாட்சி 1க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் எதிரிகளால் தான் காலதாமதம் ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் " அப்துல் ரஹ்மான் அந்துலே Vs R. S. நாயக் (1992-SCC-CRI-93) மற்றும் ராஜ் டியோ ஷர்மா Vs பீகார் மாநிலம் (1998-7-SCC-507) ஆகிய வழக்குகளில் வழக்கை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டால் அந்த வழக்கு சம்மந்தப்பட்ட எதிரிகளை வழக்கிலிருந்து விடுவிக்கலாமென்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே வழக்கை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்ள உரிமையை பறிப்பதாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 15896/2011
D. பாஸ்கரன் மற்றும் பலர் Vs மாநில அரசுக்காக
ஆய்வாளர், வேப்பேரி காவல் நிலையம், சென்னை
2010-3-LW-CRL-315 
நன்றி : முகநூல் நண்பர், வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan 

No comments:

Post a Comment