disalbe Right click

Thursday, February 8, 2018

கால தாமதமாக வழக்கு தொடுக்கலாமா?

இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்ற சந்தேகம் என்ன? குற்றம் நடைபெற்று பல ஆண்டு கழித்து மிகவும் தாமதமாக புகார் அளித்தால் வழக்கு பதிய முடியுமா? என்பதுதான். இதற்குப் பதில், சில நேரங்களில் முடியும். சில நேரங்களில் முடியாது. அது எப்படி?  இதைப் பற்றி கீழே காண்போம். 
Indian Limitation Act  கால வரையறைச் சட்டம் என்ன சொல்கிறது?
ஒருவர் குற்றம் நடந்ததாகப் புகார் தெரிவிக்கவோ அல்லது வழக்கு பதிவு செய்யவோ காலவரையறை இவ்வளவு நாட்கள் என்று எதுவும் கால வரையறைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
சம்பவம் நடைபெற்று பல நாட்களோ அல்லது பல வருடங்களோ ஆனபிறகும் ஒருவர் தமக்குக் குற்றமிழைத்தவர் மீது புகார் கூறவில்லை என்றால், அவர் அந்த குற்றச்செயலை மன்னித்து விட்டதாகவே சட்டம் கருதுகிறது.
காலதாமதம் ஆனதற்குக் காரணம் தெரிவிப்பது முக்கியம்!
ஒருவர் குற்றம் சம்பந்தமான புகார் தெரிவிக்க கால தாமதமானால், நடைபெற்ற செயலானது, சட்டப்படி குற்றம் என்பது இவ்வளவு நாட்களாக அவருக்குத் தெரியாது என்பதையோ அல்லது என்ன காரணத்தினால் தாமதமானது என்பதையோ குற்றம் சாட்டுபவர் தனது புகாரில் தெளிவுபடுத்துவது நல்லது. அவ்வாறு தெளிவுபடுத்தாவிட்டால், அந்த வழக்கு கோப்புக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 468
நீதிமன்றமானது ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான காலவரம்பு பற்றி  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.   
அபராதம் மட்டும் விதிக்கப்படக்கூடிய குற்றங்கள்,  ஆறு மாதம், ஓராண்டுக்கும் குறைவான தண்டனைக் காலம் உடைய குற்றங்கள் மற்றும்  ஓர் ஆண்டு மற்றும் ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் தண்டனைக் காலம் உடைய குற்றங்கள் ஆகிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூன்று ஆண்டுகள் வரை  காலவரையறை செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 469
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 ல் குற்றம் நடைபெற்ற நாள் அல்லது குற்றம் நடந்தது என்று அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரி அவர்களுக்கோ   எந்த நாளில் தெரிந்ததோ அந்த நாள் முதல் அந்த நாள்முதல் காலவரம்பு கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்தக் குற்றம் செய்தது யார் என்று ஒரு வேளை     பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாவிட்டால் அது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ தெரிந்த நாள் முதல் அந்த காலவரம்பு கணக்கிடப்படும் என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 கூறுகிறது.
தண்டனைக் காலம் மூன்றாண்டாக இருந்தால் .................?
மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் உள்ள குற்றங்களுக்கு, தாமதமாக புகார் கொடுத்தாலும், பெரும்பாலும் அந்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்படுகிறது, இருந்த போதிலும் அந்த இடைப்பட்ட காலத்தில் புகார் பதிவு செய்வதற்கு எதிர்தரப்பினரிடம் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் புகார்தாரருக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை புகார்தாரர் நிரூபிக்க வேண்டும்.
பொதுவாக மிகவும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் மீது நீதிமன்றத்திலோ அல்லது காவல்துறையிலோ உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. என்ன காரணம்  என்றால் அந்தப் புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கலாம்.  தீய நோக்கங்கள் இருக்கலாம்.. ஆகையால், இத்தகைய நேரங்களில், காலம் கடந்து குற்றம் சாட்டப்பட்டவர்க்கு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21ல் வழங்கப்பட்டுள்ள தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகளும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு தீர்மானிக்கப்படும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.2018.  

No comments:

Post a Comment