disalbe Right click

Thursday, April 12, 2018

இந்துக்கள் திருமணம் - பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை

இந்துக்கள் தங்களது திருமணத்தை பதிவுத்துறையில் பதிவு செய்து கொள்ளும் போது, அதனை பதிவு செய்கின்ற பதிவுத்துறை அலுவலர்கள் என்னென்னெ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அவர்களுக்கு பதிவுத்துறை தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.  
அவ்வாறு வழங்கப்பட்ட சுற்றறிக்கைகள் பற்றிய தெளிவுரை, கடந்த 14.03.2018 அன்று பதிவுத்துறை தலைவர் அவர்களால், திருமணப் பதிவு அலுவலர்களுக்கு தற்போது  வழங்கப்பட்டுள்ளது. 
அவுங்க தப்பு செஞ்சாலும் நாமதான் அலையணும்!  
  1. இதன்படி மனுதாரர்கள் சரியாக மனுவை பூர்த்தி செய்திருந்து சமர்ப்பித்திருந்தாலும், அரசு அலுவலர்களால் அந்த விபரத்தை டைப் செய்யும்போது தவறு ஏற்பட்டாலும்,  மனுதாரர்கள் தவறாக மனுவை பூர்த்தி செய்து விண்ணப்பத்திருந்தாலும்,  வழங்கப்படுகின்ற திருமணச் சான்றுகளில்  அதனால் ஏற்படுகின்ற  தவறுகளை திருத்தம் செய்ய சென்னையிலுள்ள பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  2. ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆதார் அட்டை திருமணப் பதிவிற்கு கட்டாயம் இல்லை.
  3. மணமக்கள் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை திருமணப் பதிவு அலுவலர் நன்கு சரிபார்த்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
  4. மணமக்களின் பெற்றோர்கள் இறந்துவிட்டிருந்தால், அவர்களது பெயருக்குப் பின் (லேட்) என்று குறிப்பிட்டால் போதுமானது. இறப்புச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டியதில்லை.
  5. மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவரை இழந்தவர் அல்லது மனைவியை இழந்தவர் என்று குறிப்பிட நேர்ந்தால், இறந்த மனைவி அல்லது கணவரின் இறப்புச் சான்றிதழை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். அதனை பதிவு அலுவலர் சரிபார்க்க வேண்டும்.
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் சுற்றறிக்கை நகல்கள் பெற https://tnreginet.gov.in/
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.04.2018 

No comments:

Post a Comment