disalbe Right click

Friday, August 10, 2018

மனைப் பிரிவு ஆவணங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை


மனைப் பிரிவு ஆவணங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை
அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளின் ஆவணங்களைப் பதிவு செய்யும் போது என்ன செய்ய வேண்டும்? என்பது  தொடர்பான புதிய நடைமுறை வரும் 13.08.2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது சம்பந்தமாக பதிவுத் துறைத் தலைவர் திரு ஜெ.குமரகுருபரன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை என்னவென்றால்,
கடந்த 20.10.2016-ம் தேதிக்கு முன்பாக வீட்டு மனையாகப் பதிவு செய்யப்பட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மனைகளாகப் பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறையால் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சார்பதிவகத்தின் பதிவு அலுவலர்கள் சரியாகச் செயல்பட்டுள்ளார்களா என்பதைச் சரிபார்த்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் (தணிக்கை) அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த புதிய நடைமுறை எதற்காக?
மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது இரண்டாவது பதிவு போன்ற விவரங்களைச் சரிபார்த்து அனுப்புவது ஒவ்வொரு மாவட்டப் பதிவாளர்களின் கடமை ஆகும். இவ்வாறு சரிபார்ப்பதற்கு மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவின் நகலை ஒவ்வொரு சார்பதிவக பதிவு அலுவலரிடம் இருந்தும் மாவட்டப் பதிவாளர்கள் (தணிக்கை) கேட்டுதான் பெற வேண்டியுள்ளது. அந்த நகலை சார்பதிவக பதிவு அலுவலர் அளிக்காமல் போனாலோ அல்லது அவர் வேறு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாலோ போதிய தகவல்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட மனையையும் அங்கீகரிக்கப்படாத மனையாகக் கருதும் நிலை உருவாகிறது.
இனிமேல் என்ன செய்ய வேண்டும்?
இதனைத் தவிர்ப்பதற்கு மனைகள் குறித்த ஆவணங்களை இனிமேல் பதிவுக்காகத் தாக்கல் செய்யும் போது அங்கீகார உத்தரவு நகல் ஒன்றை ஆவணத்துடன் இணைக்க வேண்டும். இந்த உத்தரவு நகல் பதிவு ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால், அந்த நகலில் சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்திட வேண்டும். அதேசமயம், அசல் உத்தரவினை ஆவணத்துடன் இணைக்கக் கோரி பதிவு அலுவலர் கட்டாயப்படுத்தக் கூடாது.
இதனால் யாருக்கு என்ன பயன் ஏற்படும்?
உத்தரவின் நகல் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட சொத்தினை வாங்குபவர்களுக்கும், பதிவு அலுவலர்களுக்கும் அது பயனுடையதாக இருக்கும். இப்புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை 13.08.2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.08.2018 

No comments:

Post a Comment