disalbe Right click

Thursday, September 27, 2018

விபத்துக் காப்பீடு பதினைந்து மடங்கு உயர்வு!

விபத்துக் காப்பீடு பதினைந்து மடங்கு உயர்வு!
தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை பதினைந்து மடங்கு உயர்வு!
தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தி அறிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையை, ஒரு லட்சத்திலிருந்து பதினைந்து லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தி அறிவித்துள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, ஒரு வாகன உரிமையாளர் விபத்தில் இறந்தால், இரு சக்கர வாகன விபத்து என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகன விபத்து என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, இறந்தவருடைய வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் கடந்த 2002 ஆகஸ்ட் மாதத்தில் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னால், எந்த இழப்பீட்டு தொகையும் விபத்தில் இறந்தவருக்கு கிடையாது.
ஆண்டு பிரிமியம் எவ்வளவு இனி கட்ட வேண்டும்?
ஆண்டு பிரிமியம் முன்னர் இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது.தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் விபத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாகும்.
அதிக காப்பீட்டுத் தொகை
15 லட்சம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டுத் தொகையை விரும்புபவர்கள், அதிக தொகையிலான பிரீமியத்தை வாங்கிக்கொள்ளலாம் என்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (The Insurance Regulatory and Development Authority of India - IRDAI) அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கருத்து என்ன?
இது முக்கியமான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும், பாலிசிதாரர்கள் ஒருவேளை விபத்தில் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, அவருக்கு அல்லது அவரின் குடும்பத்தினருக்கு ஒரு சிறந்த நிதி ஆதாரமாக இது அமையும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தல்
சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அது தனது தீர்ப்பில், தானாக யாரும் காயத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை; "கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால்தான், விபத்து ஏற்படுகிறது. இறப்பதற்கும் முன்வருவதில்லை. வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநர் மற்றும் எதிர்தரப்பினர்களின் சிறிய தவறுகள், தடுமாற்றம் காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன உரிமையாளருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயங்களால், அவர்களுடைய வாரிசுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தனி நபர் விபத்து காப்பீட்டுத் திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால், தற்போது, மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாகிவிட்டது. வாகன விபத்துகளால் உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது, வாகன ஓட்டிகளும் அவர்களின் வாரிசுகளும்தான். அவர்களின் குடும்பம் மொத்தமும் முடங்கிப் போய்விடுகிறது.
வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ, படுகாயம் ஏற்பட்டாலோ, அவரின் குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். அதுவே, வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தாலோ, காயம் அடைந்தாலோ, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு அவர்களுக்கு கிடைக்காது; இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
எனவே, அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையினை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்த வேண்டும்" எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.09.2018 

No comments:

Post a Comment