disalbe Right click

Friday, February 1, 2019

இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி? - 2

இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி?-2

இந்த உலகில் பிறந்தவர் அனைவருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது ஆகும்சிலரது  மரணங்கள் நம்மை அழவைக்கும் சிலரது மரணங்கள் ஒருவிதமான பயத்தை  நமக்கு ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்தினால் நடக்கும் மரணங்கள் நமக்கு எதிர்கால பயத்தை ஏற்படுத்தும். 
எதனால் பயம் ஏற்படுகிறது?
இந்த உலகில் யாராவது ஒருவரை சார்ந்து வாழ பழகிக் கொள்கிறோம். திடீரென அவர் ஒரு நாள் எதிர்பாராமல் இறந்து போனால் ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்வி குறியாகிவிடும். இறந்தவருடைய சொத்துகள், வங்கிக்கணக்கு விபரங்கள், கடன்கள், இன்ஷூரன்ஸ் திட்டங்கள்  பற்றி தெரிந்தவர்கள்  கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம்
ஆனால் இது பற்றிய விவரங்கள் தெரியாத இறந்தவரின் வாரிசுகளுக்கு மிக கஷ்டமாக இருக்கும். எங்கு, என்ன இருக்கிறது என்பதே தெரியாமல், இதையெல்லாம் எப்படி மீட்கப் போகிறோம் என்ற கவலை அதிகம் இருக்கும். இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து  கொண்டால் அந்த கடினமான சூழ்நிலையை கடந்து வரலாம்.
இறப்பு சான்றிதழ் / சட்ட வாரிசு சான்றிதழ்
இறந்தவர்களுடைய சொத்துகளை மீட்பதற்கு வங்கி, இன்ஷுரன்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்ட், அரசாங்க நிறுவனங்கள் என்று எதை அணுக வேண்டும் என்றாலும் நீங்கள் இறந்தவரது இறப்புச்சான்றிதழையும், வாரிசுச் சான்றிதழையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட அலுவலக அலுவலர்கள் அதைப் பற்றி உங்களுடன் பேசவே சம்மதிப்பார்கள். மேலும் இறந்தவருடைய கணக்கு விவரங்கள் பற்றியும்  அறிந்து வைத்துக்கொள்ள  வேண்டும்தனியான கணக்காக உள்ளதா? அல்லது இணைந்த கணக்காக உள்ளதா என்பதைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்து அதனை நீங்கள் வைத்திருந்தால், எளிமையாக சொத்துகளை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். உயில் எதுவும் அவர் எழுதி வைக்கவில்லை என்றால் நீங்கள் முதலில் நீதிமன்றத்தை அணுகி சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழ்கள் பெற்றபிறகு .....
இந்த சான்றிதழ்கள் பெற்ற பிறகு சொத்துகளின் விவரங்கள், முதலீட்டு விவரங்கள் பற்றி முதலில் ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். சொத்துகள், வங்கி கணக்குகள், டிமேட் கணக்கு விவரங்கள், மியூச்சுவல் பண்ட், பிஎப் முதலீட்டு விவரங்கள், வங்கி லாக்கர் விவரங்கள், கடன் விவரங்கள், இன்ஷூரன்ஸ் விவரங்கள் என அனைத்திற்கும் ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு அது சம்பந்தமான அலுலகங்களை அணுகுங்கள்.
இறந்தவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பதையும், இந்த கடன்களைப் பெறுவத்ற்கு சொத்துக்கள் ஏதாவது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? அதனை   திருப்புவதற்கு இன்னும்  எவ்வளவு காலம்  இருக்கிறது?  போன்ற விபரங்களைத் தெரிந்து கொண்டு கடன் வழங்கிய நிறுவனங்களை அணுக வேண்டும். அவர்களிடம் இறந்தவர் வாங்கிய கடன் பற்றிய விவரங்களை அறிந்த பிறகுதான் எதையும் முடிவு செய்ய இயலும்.
எடுத்துக்காட்டாக இறந்தவர் பெயரில் உள்ள சில இன்ஷுரன்ஸ் பாலிசிகளை வைத்துக் கொண்டே வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்திவிட முடியும்
முதலீடுகளை எப்படிக் கையாளுவது?
இறந்தவருடைய பெயரில் மியூச்சுவல் பண்ட், வங்கி கணக்குகளில் செய்துள்ள முதலீடுகளை  குறிப்பிட்ட நாட்களுக்குள் வேறொரு கணக்குக்கு மாற்றிக் கொள்ளவோ அல்லது முடித்துக் கொள்ளவோ வேண்டும். இதற்கான நடைமுறைகள் பெரும்பாலான நிறுவனங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதனை அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
இறந்தவருடைய வங்கிக் கணக்கானது வேறு ஒருவருடன் இணைப்பு கணக்காக இருக்கும் பட்சத்தில் இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் உடனடியாக கணக்கை அவர் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு இறந்தவருடைய இறப்புச் சான்றிதழ் மற்றும்  மருத்துவ விவரங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும்.
வங்கி கணக்குகள்
வங்கி கணக்குகளுக்கும் மற்ற முதலீடுகளுக்கு அளித்த விவரங்களைதான்  அளித்து விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவருடைய வங்கிக் கணக்கில் மிகப் பெரிய அளவுக்கு தொகை இல்லையெனில் (15) நாட்களுக்குள்ளேயே பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்அபராதங்களைத் தவிர்க்க எந்தெந்த சேவைகள் இந்த வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 
நீண்ட கால டெபாசிட்
பிக்ஸட் டெபாசிட் அல்லது நீண்ட கால பத்திரங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவது உங்களுக்கு மிக நல்லது.

************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 30.01.2017

No comments:

Post a Comment