பிரச்சனைகளுக்கும், வழக்குகளுக்கும் பஞ்சமே இல்லாத நம் நாட்டில், அதற்கு பெருந்துணை புரிவதற்காக, 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும், திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்து இருந்தது.
அதனடிப்படையில் கேரள மாநிலத்தில், 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும், திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழ்வதற்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
(நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2018)
இது போன்ற வேளைகளில் தீர்ப்பளிக்கும் போது, நீதிபதிகள் நம் நாட்டு கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மனதில் நிறுத்திவைத்து தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
ஆனால், அளிக்கப்பட்ட மேற்கண்ட தீர்ப்பானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்களுக்கும், தங்களது துறைக்கும் வேலை வாய்ப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டது போல் இருக்கிறது.
மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் யாராவது ஒருவர், தங்களது வீட்டில் உள்ள ஆணையோ அல்லது பெண்ணையோ வேறு ஒரு பெண்ணுடணோ அல்லது வேறு ஒரு ஆணுடணோ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதிப்பார்களா? அல்லது அப்படி வாழ்ந்த ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ அவர்கள் வீட்டின் மருமகனாகவோ, மருமகளாகவோ ஏற்றுக் கொள்வார்களா?
மற்ற நாட்டு மக்களும் விரும்புகின்ற நமது கலாச்சாரத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் ஆழமான குழி தோண்டிய பெருமை நமது நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளையேச் சாரும். அந்தக் குழியில் மக்கள் விழுவதற்கு , நமது நாட்டின் மாண்பை கெடுப்பதற்கு மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தயாராகி விட்டார்கள்.
---------------------------------------------------- வருத்தத்துடன் செல்வம் பழனிச்சாமி, 02.06.2018