disalbe Right click

Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Thursday, August 23, 2018

வீட்டு வாடகை மசோதா என்ன சொல்கிறது?

வீட்டு வாடகை மசோதா என்ன சொல்கிறது?
பல்வேறு மாநில அரசுகள் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில் வீட்டு வாடகை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, மாதிரி சட்டத்தை பின்பற்றி, நமது தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறைதமிழ்நாடு, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்2017என்ற சட்டத்தை இயற்றி  கடந்த 15.07.2018 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து இருக்கிறது.
அந்த சட்டத்தின்படி, குத்தகைதாரர், வாடகைதாரர் இடையில் எற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுவதோடு, இரு தரப்பினரின் உரிமைகள், பொறுப்புகள் ஆகியவையும் சீர் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.  
அந்த சட்டத்திலுள்ள பல்வேறு அம்சங்கள்
குத்தகை உரிமை ஒப்பந்தம், கால அளவு, வாரிசு உரிமை, உள்வாடகைக்கான கட்டுப்பாடுகள், செலுத்தப்பட வேண்டிய வாடகையை மாற்றி அமைப்பது, அதற்கான வாடகை அதிகாரி, பிணைத்தொகை வைப்பீடு, வாடகை ஒப்பந்தம், வாடகை ரசீது, சொத்து பழுது பார்ப்பு, பராமரிப்பு, காலி செய்யாத பட்சத்தில் நஷ்டஈடு ஆகியவை இந்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
⧭ உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்  ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்யப்படாமல் கண்டிப்பாக வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ  விடக்கூடாது.
⧭ மேற்கண்ட இருவரின் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால்  மாவட்ட கலெக்டர் நிலையில் நியமிக்கப்பட்ட வாடகை அதிகாரிகள் அதனை விசாரிப்பார்கள். வாடகை குறித்த சிக்கல்களை நீதிமன்றம் மற்றும் அதற்கான தீர்ப்பாயம் ஆகியவை விசாரிக்கும்.
⧭ அரசு நிறுவனங்கள் மற்றும் மத நெறி சார்ந்த வழிபாட்டு ஸ்தலங்களுக்குச் சொந்தமான  சொத்துகள் மேற்கண்ட  சட்ட வரம்புக்குள் வராது.
⧭ வீட்டு வாடகைக்குச் செல்பவர்கள், அந்த வீட்டின் உரிமையாளரிடம் முதலில் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தை வாடகை அதிகாரியின் ஒப்புதல் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்குரிய பதிவு எண் அதிகாரியால் வழங்கப்படும்.
⧭ வாடகை ஒப்பந்தம் முடிவதற்குள் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பினால் இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒரு வேளை ஒப்பந்தம் புதுப்பிக்காவிட்டால் அல்லது ஒப்பந்த காலத்துக்கு பின்னரும் வீட்டை காலி செய்யாவிட்டால் ஒப்பந்தம் முடிந்த ஆறு மாதங்கள் வரை மட்டும் வீட்டில் இருக்க முடியும். அதன்பின் வாடகைதாரர் கண்டிப்பாக காலி செய்ய வேண்டும்.
⧭ ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள வாடகை தொகையை மட்டுமே வீட்டு உரிமையாளர் பெற வேண்டும். மேலும், வாடகையை அதிகரிப்பதாக இருந்தால் மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வ அறிவிப்பை பதிவுத்தபால் மூலம் வாடகைதாரருக்கு வழங்க வேண்டும்.
⧭ வாடகைக்கு வந்ததும், கட்டிடத்தின் இடவசதியை அதன் உரிமையாளர்  குறைத்தாலோ அல்லது ஏதாவது இடர்களை ஏற்படுத்தினாலோ வாடகையை குறைக்கும்படி, தனி அதிகாரியிடம் வாடகைதாரர் கோரிக்கை அளிக்கலாம்.
⧭ வீட்டின் உரிமையாளர் முன்பணமாக மூன்று மாத வாடகை மட்டுமே வாங்க வேண்டும். அதற்கு அதிகமாக பெறுவது சட்ட விரோதமாகும். வாடகைதாரர் காலி செய்த ஒரு மாதத்திற்குள் அந்த முன்பணத்தை வீட்டு உரிமையாளர் திருப்பிக் கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு மாதமும் வாடகையை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை வீட்டு உரிமையாளர்  வாடகைதாரருக்கு வழங்க வேண்டும்.
⧭ வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்ட வீட்டில் எல்லா நேரமும் நுழைய இயலாது. ஒரு நாளுக்கு முன் தகவல் அளித்த பின்பே வீட்டுக்குள் நுழையலாம்.
இது சம்பந்தமாக தந்தி டி.வி.யில் வெளியான செய்தியைக் காண கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.08.2018 

Friday, December 29, 2017

முத்தலாக் பற்றிய சட்டம்

உடனடி முத்தலாக் என்றால் என்ன?
முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் மனைவியிடம் "உடனடி முத்தலாக்" அல்லது "தலாக்-அல்-பித்தத்" என்றால் தொடர்ந்து மூன்று முறை 'தலாக்' என்ற வார்த்தையைச் சொல்லி விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் இஸ்லாமிய வழக்கமாகும்.
இதை நேரடியாகவும் சொல்லலாம். குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பவது என எப்படியும் செய்யலாம்.
இது பற்றி திருக்குரான் என்ன சொல்கிறது ?
"தலாக்-அல்-அசான்" மூலம் ஒரு ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதானால், ஒரு முறை தலாக் சொல்வதற்கும் மறுமுறை சொல்வதற்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இது அந்தத் தம்பதிகளின் மன மாற்றத்திற்கு வழங்கப்படும் கால அவகாசம் ஆகும்.
மிகவும் குறைவு
இந்தியாவில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமியர்களே இதனை தற்போது பின்பற்றுவதாக ஒரு இணையதள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
முத்தலாக் வழக்கு
முஸ்லீம் மக்களிடையே வழக்கத்தில் இருக்கும் மேற்கண்ட முத்தலாக் விவாகரத்து மற்றும் பலதார மணம் ஆகியவை உள்ளிட்ட நடைமுறைகள் இந்திய சட்டப்படி செல்லுபடி ஆகுமா? என்ற கேள்வியினை கேட்டு பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் பலரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர்களுள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஷாய்ரா பானு என்ற பெண்ணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது.
அதன்படி, மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் முத்தலாக் மற்றும் பலதார மணம் ஆகிய நடைமுறைகளை எதிர்ப்பதாகவும், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முத்தலாக் விஷயத்தில் திருத்தம் செய்வது, புனித குரானில் திருத்தம் செய்வதற்கு சமம் என்று கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த நிலையில் இதனை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே பொருத்தமானது என்றும், 2017 மே மாதம் 11ம் தேதியிலிருந்து விசாரனை தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அவர்களின் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு மேற்கண்ட வழக்குகள் அனைத்தையும் விசாரித்து வந்தது.
மாறுபட்ட தீர்ப்பு
மேற்கண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் ஜே.எஸ்.கேஹார், அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் தடை விதிக்க வேண்டும் என்றும் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.
மீதமுள்ள நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யு.யு.லலித் ஆகிய இருவரும் முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கருத்து தெரிவித்ததால், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், "அரசியல் சாசன அமர்வில் ஐந்து நீதிபதிகளில் மூவர் முத்தலாக் முறையை சட்ட அங்கீகாரமற்றது எனக் கூறியுள்ளதால் பெரும்பான்மை அடிப்படையில் இந்த நீதிமன்றம் முத்தலாக் முறையை சட்ட விரோதமானது" என அறிவிக்கிறது என்றார். இந்த தீர்ப்பு 2017 ஆகஸ்ட் 22 அன்று காலை 10.30க்கு வழங்கப்பட்டது.
உடனடி முத்தலாக் தடை மசோதாவுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?
முஸ்லீம் பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) சட்டம், போதுமான கால இடைவெளி இன்றி ஒரு இஸ்லாமிய கணவர் உடனடியாக முத்தலாக் சொன்னால், அவரை மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதற்குக் கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, இந்திய அரசியல் சட்டவிரோதமானது என்று அறிவித்து இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் 8 முக்கிய விஷயங்கள் இவை.
புனித குரானின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக முத்தலாக் இருப்பதால் அது ஷரியத்தை மீறும் வகையில் உள்ளது.
ஆதாரப்பூர்வமான திருமண ஒப்பந்தத்தை முத்தலாக் எனக் கூறி தன்னிச்சையான முறையில் வெளிப்படையாக முஸ்லிம் நபர் முறித்துக் கொள்ள உதவுகிறது இந்த வழக்கம்.
முத்தலாக்கை மத ஒழுக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருத வேண்டும். அந்த வழக்கத்தை முஸ்லிம் மத சட்டத்தின் அங்கமாகக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்வது முற்றிலும் கடினமானது என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதி குரியன் ஜோசஃப் கருத்து. இதே கருத்தை நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோரும் ஏற்றுக் கொண்டு தங்களின் தீர்ப்பில் ஆமோதித்துள்ளனர்.
முத்தலாக் என்பது உடனடியாகவும் மாற்றிக் கொள்ள முடியாததுமாக இருப்பதால், பிரிந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பே எழாமல் போகிறது.
அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கும் அரசியலமைப்பின் 14-ஆவது விதியை மீறும் வகையில் முத்தலாக் உள்ளது.
முஸ்லிம் மதத்தின் முதலாவது சட்ட ஆதாரமாக புனித குரான் கருதப்படுவதால் அதற்கு மட்டுமே மதிப்பு அளிக்க வேண்டும் - நீதிபதி ஜோசஃப் குரியன்.
சட்டம் அனுமதிக்கும் தலாக் முறையின் ஒரு வடிவமே முத்தலாக். அதேவளை, அதை சகித்துக் கொள்ளும் ஹனாஃபி பள்ளி கூட முத்தலாக்கை பாவத்துக்குரிய செயலாகக் குறிப்பிட்டுள்ளது - நீதிபதி ஆர்.எஃப். நாரிமன்.
நீண்ட காலமாக ஒரு வழக்கம் சுயமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்காக அதை வெளிப்படையாக அனுமதிக்கக்கூடிய நடவடிக்கையாக அறிவித்து செல்லத்தக்கதாக ஆக்க முடியாது - நீதிபதி ஜோசஃப் குரியன்.
முஸ்லீம் பெண்களின் கருத்து என்ன?
வழக்குத் தொடுக்கும் மனைவிக்கு, சிறையில் இருக்கும் காலகட்டத்தில் பராமரிப்பும் வழங்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் சொல்கிறது.
ஆனால், இந்தப்பிரிவு தங்களுக்கு உதவாது என்றும், தங்கள் திருமண வாழ்வு நீடிப்பதற்கு ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் என்றும் சில இஸ்லாமிய பெண்கள் உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
ஒரு கணவனை சிறையில் அடைத்தால், அந்த மனைவியின் திருமண வாழ்வு நீடிக்காது என்றும், சிறையில் இருக்கும்போது அந்தக் கணவரால் பராமரிப்பு செலவுக்கு பணம் தர முடியாது என்பதால் மனைவியும் குழந்தைகளும் இன்னலுக்கு ஆளாகவே நேரிடும் என்பதால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.12.201