disalbe Right click

Showing posts with label பல்கலைக்கழகம். Show all posts
Showing posts with label பல்கலைக்கழகம். Show all posts

Wednesday, August 16, 2017

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு!
       பல்கலை மானியக்குழு தடை, ஐகோர்ட் உத்தரவு என எதையுமே மதிக்காமல்,  பாரதியார் பல்கலை சார்பில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்தப்பட்டு, விதவிதமான பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது; ஆனால், எந்த நடவடிக்கையுமே எடுக்காமல், தமிழக உயர் கல்வித்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
நம் நாட்டில், நான்கு விதமான கல்வி நிறுவனங்கள் நடத்துவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அரசு சார்பிலும், அரசின் நிதியுதவியுடனும், முழுக்க முழுக்க சுயநிதியில் தனியாராலும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, அரசியலமைப்பு உரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் சார்பில், பல்கலைகள் நடத்தவும் அனுமதிக்கப் படுகிறது.
விதிமுறைகளுக்கு பஞ்சமில்லை!
அரசால் நடத்தப்படும் பல்கலைகளுக்கு,மத்திய அரசின் பல்கலை மானியக்குழு (U.G.C.,)சார்பில், நிதி வழங்கப்படுகிறது. இந்த பல்கலை நிர்வாகங்களின் கீழ், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்படுகின்றன. பல்கலை மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளின்படி மட்டுமே, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள், பட்டப்படிப்புகள் நடத்தப்பட வேண்டும்; கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றுக்கும் ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன.
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்றவையும் பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுவது அவசியம். இக்கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அவரவர் பெற்றுள்ள பிளஸ் 2 மதிப்பெண் அல்லது இளங்கலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம் அடிபடையிலேயே, முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்களின் செமஸ்டர் வருகைப்பதிவு, படித்து தேர்வை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை மதிப்பிட்டே, ஒரு மாணவர் பட்டம் பெற முடியும். ஆனால், சமீபகாலமாக, தமிழகத்தில் பெட்டிக்கடை போன்ற கட்டிடங்களில், தொலைதுாரக் கல்வி மையம் என்ற பெயரில், பட்டப்படிப்புகள், தெருவோரக்கடையில் விற்கப்படும் காய்கறிக் கூறு போல கூவிக்கூவி விற்கும் அவலம் உருவாகியுள்ளது.
இந்த முறைகேட்டில், முதலிடம் பிடித்துள்ளது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம். ஏழை, எளிய மாணவர்கள், பணிக்குச் செல்வோர் ஆகியோர், மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்பதற்காகவே, தொலை துார கல்வி மையங்களை நடத்திக்கொள்ளலாம் என்று பல்கலை மானியக்குழு அனுமதி அளிக்கிறது. இவற்றை கண்காணிக்க, தொலைதுாரக் கல்வி அமைப்பு (Distance Education Bereau) என்ற அமைப்பும், யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு, தொலைதுாரக் கல்வி மையங்களுக்கு, பல்வேறு வரன்முறைகளையும் உருவாக்கியுள்ளது.
எல்லை தாண்டிய 'சேவை'
இந்த விதிகளின்படி, ஒவ்வொரு பல்கலையும் அதனதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இந்த மையங்களை நடத்திக் கொள்ள வேண்டும்; அவற்றையும் பல்கலை நிர்வாகமே நடத்த வேண்டும். பல்கலை அனுமதித்துள்ள பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே, இந்த மையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இவை எதையுமே பாரதியார் பல்கலை நிர்வாகம் மதிப்பதே இல்லை.
சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), 
சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), 
சி.பி.பி., (Centre for Participatory Programme) 
என பல்வேறு பெயர்களில், தொலைதுார கல்வி மையங்களை உருவாக்க அனுமதியை   வாரி   வழங்கியுள்ளது.   கடந்த 2007 ம் ஆண்டில்,     ஒன்றிரண்டாக துவங்கிய இந்த மையங்கள், இப்போது வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் என உலகம் முழுவதும் 360க்கும் அதிகமாகவுள்ளன.
வெறும் பத்துக்குப் பத்து சதுரடி பரப்பிலான கட்டிடங்களில், ஏதாவது ஒரு பெயரில் இந்த மையத்தைத் துவக்கி, பாரதியார் பல்கலை சான்று தருவதாகக் கூறி, மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்
பல்கலை எல்லையைத் தாண்டி நடத்தப்படும் இந்த மையங்களில், எந்த கலை, அறிவியல் கல்லுாரியிலும் நடத்தப்படாத புதுப்புது பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று விளம்பரம் தரப்படுகிறது.
               பாரதியார் பல்கலையே அனுமதி தர முடியாத மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்றும் துணிச்சலோடு இந்த மையங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அதற்கான தேர்வையும் நடத்தி, பல்கலை சான்றையும் தருகின்றன. இதுபோன்ற எந்த பட்டப்படிப்புக்கான சான்றும் செல்லாது என்று, பல்கலை மானியக்குழு பகிரங்கமாகவே அறிவித்து விட்டது. ஆனால், இன்று வரையிலும் இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு, பாரதியார் பல்கலை சான்று, தாராளமயமாக வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது, விடை தாள் திருத்துவது எல்லாமே, சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது என்று கல்வியாளர்கள் பகிரங்க குற்றம்சாட்டி வருகின்றனர். எதைப்பற்றியும், பல்கலை நிர்வாகம் கவலைப்படுவதே இல்லை. நான்கு ஆண்டுகளில், இந்த மையங்களின் விதி மீறல், உச்சத்துக்குச் சென்று விட்டது. இதனால், கல்லுாரிக்குச் சென்று, கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கும் மாணவர்கள், கடும் விரக்திக்கு உள்ளாகியுள்ளனர்.
தரமான மாணவர்களை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகளை நடத்தும் சுயநிதிக் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எல்லோரும் பெரும் கொதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாரதியார் பல்கலையின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாலும் முடியவில்லை; மாறாக, பெரும்பாலானோர், இதற்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதில் பெரிய அளவில் காசு வருவது தெரிந்து, மதுரை காமராஜர், அழகப்பா பல்கலைகளும் இதே பாணியில் செல்வதை அறிந்த பின்பே நிலைமை மோசமாவதை உணர்ந்து, தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம், இப்பிரச்னையைக் கையில் எடுத்தது. இந்த சங்கம்,  தாக்கல் செய்துள்ள வழக்கின் அடிப்படையில், இந்த மையங்களை மூடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சங்கத்தின் புகாரை ஏற்று, தொலைதுார கல்வி மையம் நடத்தும் அனுமதியும் யு.ஜி.சி.,யால் மறுக்கப்பட்டுள்ளது.
               இவ்வழக்கு தொடர்பாக, பல்கலை நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 'நடப்பு கல்வியாண்டில், இந்த மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாக' உறுதி தந்தது. ஆனால், இப்போது வரை எந்த மையமும் மூடப்படவில்லை; மாணவர் சேர்க்கையும் நிற்கவில்லை. இதனால், கொதித்துப்போன சுயநிதி கல்லுாரிகள் சங்கத்தினர், கடந்த ஜூலை 19 அன்று, பல்கலை துணைவேந்தர் கணபதியை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சொன்னது என்னாச்சு?
அவர்களுக்கு பதிலளித்த துணைவேந்தர் கணபதி, 'இந்த மையங்களை மூடுவது தொடர்பாக, விரைவில் சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி, முடிவு எடுக்கப்படும்; அதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்' என்றார். அந்த அவகாசமும் முடிந்து விட்டது; சிண்டிகேட் கூட்டப்படவில்லை; எந்த மையத்தை மூடவும், பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இதற்காக, உயர் கல்வித்துறையும் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், இந்த சங்கத்தின் புகார்குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலருக்கும் பல்கலை மானியக்குழு, கடந்த ஆக.,4ல் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், பாரதியார் பல்கலை மீது, உயர் கல்வித் துறையோ, தமிழக கவர்னரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தமிழகத்தில் பெறப்படும் பட்டங்களுக்கு, எந்த ஊரிலும் மதிப்பே இல்லாமல் போய் விடும் என்பது நிச்சயம்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகள் நடத்துவதும், மூன்று ஆண்டுகள் கல்லுாரிக்குச் சென்று படித்து பட்டம் வாங்குவதும் அர்த்தமற்றதாகி விடும். ஐகோர்ட் உத்தரவு, பல்கலை மானியக்குழு தடை அனைத்தையும் மீறி, இந்த மையங்களை நடத்த பல்கலை ஆதரிக்கிறது என்றால், அதில் பணம் விளையாடுகிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; இருந்தும், இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பி லுள்ள உயர் கல்வித் துறை, எப்போது உறக்கம் கலைக்குமோ தெரியவில்லை.
எழுதினாலே 'பாஸ்' தான்!
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர் களின் விடைத்தாள்கள், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் (சென்ட்ரல் வேல்யேஷன்) திருத்தப்படுகின்றன. ஒரு நாளில், அதிகபட்சம் 40 விடைத்தாள்கள் மட்டுமே, ஒருவர் திருத்துவதற்குத் தரப்படுகிறது. ஆனால், சி.பி.ஓ.பி., உள்ளிட்ட தொலைதுாரக்கல்வி மையங்களில் தேர்வு எழுதுவோரின் விடைதாள்கள், மாலை 5:00 மணிக்கு மேல், திருத்தப்படுகின்றன.
அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள், நுாற்றுக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படுவதாகவும், அதற்கு ஆயிரம் ரூபாய் வீதம், ஆசிரியர்களுக்குக் கட்டணம் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எதையும் பார்க்காமல், 'பாஸ் மார்க்' போட வேண்டும் என்பதே, இவர்களுக்குத் தரப்படும் ஒற்றைக் கட்டளை. இது பற்றி துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''நேரம் இல்லாததால், மாலைக்கு மேல் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
5 பல்கலைகளுக்கே அனுமதி!
நடப்பு கல்வியாண்டில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்துவதற்கு, அனுமதிக்கபட்டு உள்ள பல்கலைகளின் பட்டியலை, பல்கலை மானியக்குழு, கடந்த மே 2 அன்று வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலை கழகம், தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா, அன்னை தெரசா மகளிர் பல்கலை மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது போன மாசம்...இது இந்த மாசம்!
தொலைதுாரக் கல்வி மையங்களின் அத்து மீறலைக் கண்டித்து, முற்றுகையிட்ட சுயநிதி கல்லுாரிகள் சங்க நிர்வாகிகளிடம், 'இன்னும் 15 நாட்களில் தீர்வு காண்பதாக' கூறியது பற்றியும், ஐகோர்ட்டில் 'இந்த மையங்களின் அனுமதியை இந்த கல்வியாண்டிலேயே திருப்பிக் கொள்வதாக' பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது குறித்தும் துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டப்பட்டு, இந்த மையங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாகவே, ஐகோர்ட்டில் 'அபிடவிட்' தாக்கல் செய்துள்ளோம்,'' என்றார்.
எங்களிடம் சொன்ன கால அவகாசத்துக்குள், பாரதியார் பல்கலை துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. உயர் கல்வித்துறை செயலரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளோம்; அடுத்த கட்டமாக, கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்து, நேரில் விளக்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். அது கை கூடினால், நல்ல தீர்வு வருமென்று நம்புகிறோம்.
ஏ.எம்.எம்.கலீல்தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.08.2017 

Thursday, July 27, 2017

அண்ணா பல்கலைக் கழகம் - புதிய உத்தரவு

அண்ணா பல்கலைக் கழகம் - புதிய உத்தரவு
மூன்று வருடத்திற்குள் தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்
படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவை அறிவிக்க உள்ளது.
பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதாவது, 2011 ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தையும் பெறமுடியாது.
மேலும், கிரேட் சிஸ்டத்தில் 6.5 சதவிகிதம் எடுத்தால் முதல் வகுப்பு என முன்பு இருந்த நிலை இனி 7 சதவிகிதமாகவும், 8.5 சதவிகிதம் எடுத்தால் முதல் சிறப்பு வகுப்பு என்றும் மாற்றப்படவுள்ளது.
நன்றி : புதிய தலைமுறை 27.07.2017 இதழ்


Monday, May 4, 2015

தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகம்
*************************************************
தமிழ்நாட்டிலும் இருக்கிறது மத்திய பல்கலைகழகம்..!
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும், சுற்றத்தாரையும் நாடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
“இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்...இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும்  கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...' என விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் அதிகம் பேரின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது - தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu ).

அப்படின்னா என்ன...அதுல என்ன ஸ்பெஷல் ? 

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர்.

விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்திய பல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ) . திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது சியுடிஎன். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன். சுற்றுப்புற பகுதிகளுக்கு ஒத்துவராத, உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள், சியுடிஎன் என காட்டுகின்றன.
சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு வடிவமைப்பு எங்கும் காணப்படவில்லை. செக் போஸ்ட் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பறந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?
ஹாஸ்டல் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ள உதவினர் இதன் துணைவேந்தர் (பொ) முனைவர் பேராசிரியர் செங்கதிர் மற்றும் ஊடகம் & தகவல் தொடர்பியல் துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜமும் வந்தார்.

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், வெந்நீர் குளிர் நீர் என வகைபடுத்தி தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. மற்றபடி செலவு இங்கு குறைவாக இருக்கிறது. பிஹெச்டி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைகளுடன் இருந்தும் படிக்கலாம் என்ற ஒரு முறையும் பின்பற்றப்படுகிறது.

சியுடிஎன் கேம்பஸ்ஸில் வைபை இணைய வசதி  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் வெளிச்சமான காற்றோட்டமான அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் முறை பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் முழு வசதிகளுடான் தரப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி நூலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு உள்ளன. இரவு பகல் என வித்தியாசம் பாராது ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'அல்லைட்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு மாணவர்களுக்கு தரப்பட இருக்கிறது. இன்னும் பல்கலைகழகத்தில் பொறியியல் கொண்டு வரவில்லையே என கேட்டதற்கு, அதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே என பதில் வருகிறது. இந்த வருடத்திலிருந்து எம்.டெக் கோர்ஸ்கள் கூட ஆரம்பமாகிறது.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜம் தெரிவித்தார்.

தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் பிஎஹ்டி க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.  எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.

இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. சியுடிஎன் பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: Madras School of Economics (MSE) , Central Institute of Classial Tamil   (CICT) National Law School of India (NLSIU) and Tamil Nadu Agricultrual University (TNAU).

 
என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? 


Five Years M.Sc  Integrated Courses (after 10+2)

                Integrated MSc. Chemistry

                Integrated MSc. Economics *

                Integrated MSc. Life Sciences

                Integrated MSc. Mathematics

                Integrated MSc. Physics


Two Year M.Sc Couses (after graduation)

               MSc. Chemistry

               MSc General Economics**

               MSc Financial Economics**

              MSc Acturarial Economics**

              MSc Environmental Economics**

              MSc Aplied Quantitative Finance **



Two Year M.Tech Courses *** ( after graduation)

M.Tech Material Science & Nano Technology

M.Tech Energy & Environmental Technology



Two Year M. A Courses ( after graduation)


M.A English Studies

M.A HIndhi

M.A Media & Communication

M.A Social Work

M.A Tamil



Ph D ( after post graduation)

Ph D in Chemistry

Ph D in Economics

Ph D in English

Ph D in Lifescience

Ph D in Mathematics

Ph D in Physics

Ph D in Tamil

    

*Academic Mentoring by Madras School of Economics, Chennai

**  Conducted at Madras School of Ecoonomics (MSE) Chennai

*** Programmes provisionallu proposed from the academic year 2015-2016



 இங்கு படிக்கும் அனுபவம் எப்படி என சில மாணவர்களிடம் கேட்டபோது...

பிந்துஜா ( எம்.ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் இரண்டாமாண்டு, கேரளா)

கேரள மத்திய பல்கலை கழகத்தில் படிக்க முயற்சி செய்தேன்.  ஆனால், சியுடிஎன் சீட் கிடைச்சது. கிட்டத்தட்ட மலையாளம் தமிழ் போல, ஆகவே, இங்கே எனக்கு ஒத்து வரும் என்று தோன்றியது. எல்லாரும் நல்லா பழகுவாங்க. நாமேளே எல்லா பொருட்களையும் இலகுவாக உபயோகப்படுத்தலாம். இங்கே படிக்கறது கொஞ்சம் ஜாலிதான் என கொஞ்சும் குரலில் முடித்தார்.


அருண் குமார் ( எம்.ஏ தமிழ் இரண்டாமாண்டு, திருவண்ணாமலை)

நான் சென்னையில் ஜர்னலிசம் படித்தேன். பின் அச்சு ஊடகம் மீது ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழ் படிக்க ஆசை. அதனால் இங்க தமிழ் தேர்ந்தெடுத்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முடிச்சிட்டு தில்லியில் எம்.பில் பண்ணப் போறேன்.  இங்க படிப்பதால் நிறைய அறிஞர்களின் தொடர்புகள் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்டைபன்ட் வேற உண்டு. நல்ல காற்றோட்டமான வகுப்பு, ஹாஸ்டல் ரூம் இதை தவிர வேற என்ன வேணும் பாஸ்.


ஜெய்கரன் ( கணிதம் மூன்றாமாண்டு, உ.பி.)

நான் நாலைந்து இடங்களில் விண்ணப்பம் போட்டிருந்தேன். இங்க வந்து மூன்று வருடம் முடியப் போகுது. ஹாஸ்டல் வசதி எல்லாம் பரவாயில்லை. நல்ல செமினாரெல்லாம் கண்டக்ட் பண்ணுவாங்க.பயனுள்ளதாக இருக்கும். இப்போதுதான் வளர்ந்து வரதால சியுடிஎன்-க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இங்க இருக்க உபகரணங்கள் உதவும்.

வெங்கடேஸ்வரி (வேதியியல் இரண்டாமாண்டு, தஞ்சாவூர்)

நான் ப்ளஸ் டூவில் 75%க்கு மேல  மார்க் எடுத்தேன். இங்க படிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னங்க. இருந்தாலும், 'ஹாஸ்டல் ஒத்துக்குமா? அஞ்சு வருடம் தொடர்ந்து படிக்கணுமே...?'ன்னு  கேள்வி வந்துச்சு. சேர்ந்ததுக்கு அப்புறம் அந்த கவலை இல்லை. நான் சேர்ந்தப்ப 3௦ சீட் ஒரு கிளாசுக்கு.  Sc/St 15 பேர்,  Obc 8 பேர்,  General Quota 7 பேர் என்ற முறையில்தான் சேர்த்தாங்க. இப்பவும் அந்த சிஸ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் மூணு வருசத்துக்கு படிப்பு சம்பந்தமா கவலை இல்லை.

நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார்.

ஏப்ரல் ஆறாம் தேதி துவங்குகிற ஆன்லைன் விண்ணப்பம் மே ஐந்தாம் தேதியோடு முடிவடைகிறது.  நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு 21.௦5.2௦15 முதல் தரப்படுகிறது. மத்திய பல்கலை கழகத்துக்கான நுழைவுத் தேர்வு ஜூன் ௦6 & ௦7 தேதி. ஜூன் 2௦ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இந்த தேர்வு முறை  பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வாகவே இருக்கும்.

 மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வளாகத்தை விட்டு வெளி ஏறினோம். சவாலை சந்தியுங்கள்.

 மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம் :http://www.cucet2015.co.in/ 


-த.க.தமிழ் பாரதன் (மாணவ பத்திரிகையாளர்)

நன்றி : விகடன் செய்திகள் - 04.05.2015