disalbe Right click

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, April 10, 2017

எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம்!


எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம்! 

ஒரு கிளீன் ரிப்போர்ட்
ஹெல்த்வான்மதி, பொதுநல மருத்துவர் - உலகநாதன், சித்த மருத்துவர்
வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது என நம் முன்னோர் சில ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு, விளக்கெண்ணெய் - வேப்பெண்ணெய் கலந்து குடிப்பது, எனிமா எடுத்துக்கொள்வது எனப் பல வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். இதில், எனிமா இன்றுவரை மருத்துவ ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒன்று. அந்தக் காலத்தில் இப்படி உடலைச் சுத்தம் செய்வதற்கு என்றே ஒரு நாளை ஒதுக்கினார்கள். இன்றோ வீட்டைச் சுத்தம் செய்யக்கூட நேரம் இன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வயிற்றைச் சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படிச் செய்வது, யார் யாருக்கு எனிமா தேவை என்று பார்ப்போம்.

எனிமா என்றால் என்ன

உணவு செரிமானத்துக்குப் பிறகு, கழிவுகளாக வெளியேறும்போது, சில நேரத்தில் பெருங்குடலிலேயே தங்கிவிடுகின்றன. இப்படித் தங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், தொடர் தலைவலி, முதுகுவலி, மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெருங்குடலைத் திரவம்கொண்டு அலசிச் சுத்தப்படுத்தும் மருத்துவமுறைக்குத்தான் எனிமாஎன்று பெயர். 

பேதி மாத்திரையும் எனிமாவும் ஒன்றா

எனிமா என்பது உடல் கழிவுகளை வெளியேற்றச் செய்யப்படும் ஒரு செயல்முறை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரை எடுத்து வாந்தி, பேதியுடன் வயிற்றைச் சுத்தப்படுத்துவது ஒரு வகை டீடாக்ஸ் முறை. மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை இது. நீண்டகாலம் பயன்படும் முறை. ஆனால், எனிமா ஆசனவாய்க்கு மேல் உள்ள மலக்குடல் மற்றும் பெருங்குடலின் ஒரு பாகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிறது. இது, தற்காலிகப் பலனைத் தரும். 

எனிமா யாருக்குக் கொடுக்கப்படும்

* தொடர்ந்து அதிகமாக மலச்சிக்கல் ஏற்படுபவர்கள். 

* ஏதேனும் அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படுபவர்கள். 

* முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள். 

* பெருங்குடலில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டியவர்கள். 

* மலம் கழிக்கச் சிரமப்படும் வயதானவர்கள். 

* ஹைட்ரேஷன் தெரப்பி (உடலில் நீர் இழப்பு ஏற்பட்டவருக்கு ஆற்றலை அதிகரிப்பதற்காக தரப்படும் சிகிச்சை) செய்ய உள்ளவர்கள். 

எனிமா வகைகள் 

எனிமாவில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று கிளென்ஸிங் எனிமா’ (Cleansing enema). இது, சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கோலனோஸ்கோப்பி (Colonoscopy) போன்ற பரிசோதனைகளுக்கு முன்பு  இது செய்யப்படுகிறது. மலச்சிக்கல், அதனால் ஏற்படும் தலைவலி போன்ற பிரச்னைகள் இந்த முறையால் குணமாகின்றன. இந்த எனிமா, தண்ணீருடன் ஏதாவது ஒரு மலமிளக்கி மருந்தைக் கலந்து, ஆசனவாயின் உள்ளே செலுத்தப்படும். இந்த எனிமா கொடுக்கப்பட்டதும், நீருடன் மற்ற கழிவுகளும் வெளியேறிவிடும். 

இரண்டாவது வகை ரெட்டென்ஷன் எனிமா’ (Retention enema) எனப்படும். இந்த எனிமாவும் கழிவுகளை வெளியேற்றுவதற்காகத் தான். ஆனால், இந்தத் திரவம் உள்ளே செலுத்தப்பட்டுச் சிறிது நேரம் உள்ளே நிறுத்தப்படும். இதன்மூலம், அந்தத் திரவத்தில் உள்ள தாதுஉப்புகள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆனால், தொடர்ந்து இப்படிச் செய்வதால் ஆசனவாயில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. 

மூன்றாவது வகை பேரியம் எனிமா’ (Barium enema). எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் எடுத்து, குடலின் உட்புறம் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்கும் முன்பு குடலைச் சுத்தம் செய்வதற்காக இந்த எனிமா கொடுக்கப்படுகிறது.

எனிமாவுக்கான மருத்துவப் பொருள்கள் 

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் வெந்நீர் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. சமயங்களில், மூலிகை எண்ணெய்யோ நெய்யோ உபயோகிக்கலாம். 

எனிமாவுக்கு முன்... 

எனிமா கொடுப்பதற்கு முந்தைய தினம் மருத்துவர் கூறும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முடிந்தால், ஏதேனும் பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிட்டு ஒரு நாள் இருக்கலாம். வீட்டில் எடுத்துக்கொள்வதாக இருந்தால், முதலில் வயிற்றில் ஏதேனும் இயக்கம் இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும். நம் உடலில் வாயு பிரிந்தால், இந்த இயக்கம் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். 

அடிக்கடி எனிமா எடுத்துக்கொள்வது சரியா

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் குடலைச் சுத்தம் செய்வதற்காக எனிமா எடுத்துக்கொள்வது தவறு அல்ல. ஆனால், அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆசனவாயிலும், உள்ளே இருக்கும் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தச் செயற்கையான சுத்திகரிப்பு முறையை முழுமையாகச் சார்ந்து இருப்பதும் தவறான பழக்கம். நமது ஆசனவாய் சுருங்கி விரியும் தன்மை உடையது. அடிக்கடி எனிமா எடுக்கும்போது இந்தத் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், எனிமா இல்லாமல் தானாகவே மலத்தை முழுமையாக வெளியேற்றும் திறன் பாதிக்கப்படுகிறது. முதலில் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்கள் கடைப்பிடித்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது. 

யாருக்கு எனிமா கொடுக்கக்கூடாது

* மூலம் பிரச்னை உள்ளவர்கள் 

* இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் 

* சிறுநீரகச் செயல் இழப்பு உள்ளவர்கள். 

* மலக்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள். 

இயற்கையான முறையில் உடல் கழிவுகளைச் சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்

மருத்துவர் ஆலோசனைப்படி, முதல் நாள் இரவு அல்லது காலை, ஐந்து முதல் ஏழு மணி நேரத்துக்குள் விளக்கெண்ணெய், கடுக்காய்ச் சூரணம், திரிபலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

- ந.ஆசிபா பாத்திமா பாவா
நன்றி : டாக்டர் விகடன் - 16.04.2017


Thursday, March 23, 2017

கண் நலம் காப்போம்!


கண் நலம் காப்போம்!
கண்கள், நம் உடலின் ஜன்னல்கள். நாம் இந்த உலகைக் காணவும், இயற்கையின் அழகை, அற்புதத்தை அனுபவமாக்கிக்கொள்ளவும் உதவும் கண்களை, பஞ்சபூதங்களில் நெருப்புக்கு இணையாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில், நீண்டநேரம் கணிப்பொறி மற்றும் டி.வியைப் பார்ப்பது, விளக்கை அணைத்துவிட்டு நள்ளிரவு வரை மொபைல் பார்ப்பது என்று கண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். மறுபுறம் ஆரோக்கியமற்ற உணவுகள் நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் பாதிக்கும்போது, கண்களும் பாதிப்பு அடைகின்றன. இயற்கையான முறையில் கண்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் எப்படி எனக் காண்போம்.
கண்ணும் சித்தாவும்… 

நமது உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். பித்தம் சிறிது அதிகரித்தாலும் கண்பார்வையைப் பாதிக்கும். உதாரணமாக, பித்தம் அதிகரிப்பதால் காமாலை வருகிறது. இதனால், பார்வை பாதிப்படைகிறது. நாம் அன்றாடம் பருகும் காபி, தேநீரில் உள்ள காஃபின் ரசாயனம் முதல் சமைக்கப் பயன்படுத்தும் புளி வரை பல உணவுகளில் பித்தம் உள்ளது. சிலருக்கு, சைனஸ் பிரச்னையால் முன் நெற்றியிலும் கண்களுக்குக் கீழேயும் நீர் கோத்து, பார்வைக் கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நெடுங்கால மலச்சிக்கலால் ஏற்படும் உடல் அழுத்தத்தால் சிலருக்குப் பார்வைக் கோளாறு ஏற்படலாம். அதீத உடல் சூட்டினால் கண் சிவப்பாகுதல், ஒவ்வாமை ஏற்படும்.
பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்

கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இளநீர், நுங்கு, நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ள பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.
கண்ணில் ஏற்படும் புரை மற்றும் இதர கண் நோய்களுக்கு பொன்னாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து.
கண்ணைக் காக்கும் திரிபலா
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் கலவையே திரிபலா சூரணம். இந்தச் சூரணம் ‘கர்ப்ப மாத்திரை’ என்ற பெயரில் சித்த மருந்துக் கடைகளில் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்கூட இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை, தினமும் தேன் அல்லது நெய்யில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவருவதால் கண் நரம்புகள் வலுவடைகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் நீங்கும். குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சிய நெய்யில் திரிபலா சூரணத்தைக் குழைத்துக் கொடுப்பது நல்லது. இதனால், தசைகளுக்குள் மருந்து சுலபமாக ஊடுருவிச்செல்கிறது.
எண்ணெய்க் குளியல்தட்பவெப்பம் மற்றும் காலநிலை மாறும்போது மெட்ராஸ் ஐ போன்ற காற்று மூலம் பரவும் நோய்தொற்றுகள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் கண்ணில் உள்ள நீர் வற்றிப்போகிறது. ஆடிமாதக் காற்றில் பல கிருமிகள் கண்களைப் பாதிக்கின்றன. குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு, அடுக்குத்தும்மல், கண்களைச் சுற்றி நீர்கோத்தலால் கண்கள் கன்ஜங்ட்டிவிடிஸ் (Conjunctivitis) பாதிப்புக்கு உள்ளாகின்றன. சனிக்கிழமை நல்லெண்ணைக் குளியல் இதற்கு நல்ல தீர்வு. கடுக்காய்த்தூள், நெல்லிக்காய், மிளகு, வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சளை நன்கு பொடியாக அரைத்து, பாலில் கலந்தால் கிடைப்பதுதான் பஞ்சகல்பம். இதை, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளித்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
சித்தா சிகிச்சைகள்
மரமஞ்சள், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலவையை ‘இளநீர்க்குழம்பு’ என்பார்கள். இது, கண்புரையைத் தடுக்கிறது. `அதிமதுரம்’ என்ற பசைபோன்ற சித்த மருந்தை வெயில் காலங்களில் கண்ணுக்கு மையிட்டுக்கொள்வதைப்போல கீழ் இமைகளின் அடியில் பூசிக்கொள்வதன் மூலம், கண் சூட்டைத் தணிக்கலாம். இந்த முறைகளை சித்தமருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.
கண்களுக்கான பயிற்சிகள்
தினமும் காலை எழுந்தவுடன் ஆறு முதல் எட்டு மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இளம் சூரியக் கதிர்களை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பார்ப்பதன் மூலம், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
அலுவலகக் கணினி முன் நெடுநேரம் அமர்ந்து வேலைசெய்பவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.
இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் ஒற்றி எடுத்தால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டம் அதிகமாகும்.
அவ்வப்போது தொலைவில் உள்ளவற்றைப் பார்ப்பதன் மூலம், கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
அவ்வப்போது இடம், வலம், மேல், கீழ் எனக் கருவிழியை உருட்டிப் பார்ப்பது நல்லது.
வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்திரிபலா சூரணத்தை சுத்தமான நீரில் கலந்துகொள்ள வேண்டும். இந்த நீரை பஞ்சில் நனைத்து, கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது பேக் போல் கண்களைச் சுற்றித் தடவலாம்.
இதே நீரை வடிகட்டி, தினமும் இரண்டு சொட்டுகள் கண்ணில் விடுவதன் மூலம், கண் சோர்வு நீங்கும்.
வெயில் காலத்தில் கண்ணில் ஏற்படும் எரிச்சல், பாக்டீரியா தொற்று, அரிப்பு , நீர்வற்றுதல், கண் தசை வீக்கத்தைத் தவிர்க்க இது ஓர் எளிய வழி.
தோல் சீவிய சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை வைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
நந்தியாவட்டைப் பூக்களின் இலைகளைக் கண்களை மூடி, அதன் மேல்பரப்பில் வைத்து, அதன் மேல் துணியால் கட்டிக்கொண்டு அரை மணி நேரம் ஓய்வெடுக்கலாம்.
கண் குளிர்ச்சிக்காக வெள்ளரிக்காயை நறுக்கி, காலை, மாலை இருவேளையும் கண்களில் வைக்கலாம்.
நன்றி : டாக்டர் விகடன் - 01.04.2016

Sunday, February 26, 2017

மூல நோய்க்கு முடிவு கட்டுவோம்!


மூல நோய்க்கு முடிவு கட்டுவோம்!

தமிழகத்தில், நகரங்களில் மட்டுமல்லாமல், பட்டி தொட்டியெங்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஒரு நோய் விளம்பரம் செய்யப்படுகிறது என்றால், அது ‘மூல’நோய்தான். ஆனாலும் இந்த நோய் வந்தவர்களில் அநேகம் பேர் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு, ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் ஆசனவாயில் வலி, வீக்கம், ரத்தப்போக்கு ஏற்பட்டு, சர்ஜரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். 

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் புறப்படுகின்றன. ஒன்று, மூலம் (Piles). அடுத்தது, ஆசனவாய் வெடிப்பு(Fissure). மூன்றாவது, பௌத்திரம் (Fistula). மூன்றில் முக்கியமானது மூலநோய். சாதாரணமாக, உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இவை சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதைத் தடுக்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையப்பெறவில்லை. 

இதனால் அவற்றில் சாதாரணமாகவே புவி ஈர்ப்பு விசை காரணமாக அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சமே அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இப்படியான ரத்தக் குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’ என்கிறோம். இந்த வீக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல்தான் முக்கியமான காரணம். 

மலச்சிக்கலின்போது கழிவை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். ஆண்களிடம் காணப் படும் சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூலநோய் உண்டாகிறது. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும். 

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் பரம்பரை காரணமாக  இந்த ரத்தக் குழாய்கள் துணி தைக்கும் பருத்தி நூல்போல மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். 

உடல் பருமனாக இருப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காலில் சிரை வீக்கம் (Varicose veins) உள்ளவர்கள், டிரைவர் போன்று உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், கண்டக்டர் போன்று அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள்... மூலத்தை எதிர்கொள்வோர் பட்டியலில்  முன்னணியில் இருக்கிறார்கள். மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகை உண்டு. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்திருப்பது ‘உள் மூலம்’; வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இரண்டாவதாகச் சொன்னதைக் கையால் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உள் மூலம் அப்படியில்லை. 

இது ஏற்பட்டால் என்ன நடக்கும்? 

மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் சொட்டுவது அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படுவது இதன் ஆரம்ப அறிகுறி.  சில வாரங்களில் அல்லது மாதங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பிறகு, ஆசன வாயில் லேசான வீக்கம் தெரியும். ஆசனவாயில் வீக்கமுற்ற ரத்தக் குழாய்கள் அங்குள்ள சதையோடு வெளியே தள்ளப்படுவதால் இந்த வீக்கம் தோன்றுகிறது. மலம் கழித்த பிறகு, இதை உள்ளே தள்ளிவிட்டால், மறைந்துவிடும். 

சிலருக்கு இந்த வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பும், வலியும் தினமும் தொல்லை தரும். இதனால் மலம் கழிக்க ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி என்று சொல்வது இதற்கு ஏகப்பொருத்தம். 

சிலருக்கு ஆசனவாயில் கண்ணாடியை வைத்துக் கீறியது போல் வெடிப்புகள் (Anal fissure) இருக்கும். அல்லது அந்த இடம் சுண்டுவிரல்கூட நுழைய முடியாதபடி சுருங்கி இருக்கும். அப்போதும் இந்த மாதிரி ஒரு கொடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும். இவர்கள் நம்பர் டூ போவதற்கே பயப்படுவார்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

சாதாரணமாக, 40 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அந்த வயதுக்காரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குடும்ப டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் பலரும் இதை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். எந்த ஒரு நோய்க்கும்  பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், மூலத்துக்கு மட்டும் எந்த டெஸ்ட்டும் தேவையில்லை! நோயாளியின் ஆசனவாயில் டாக்டர் விரலால் பரிசோதித்துப் பார்த்துத்தான் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியும். 

மூலம் இருக்கும் இடம், அளவு, நிலைமை இந்த மூன்றும் துல்லியமாகத் தெரிந்தால்தான் இதற்கு சரியான சிகிச்சையைக் கொடுக்க முடியும். அதற்கு ‘பிராக்டாஸ்கோப்’ என்ற கருவியை ஆசனவாய்க்குள் நுழைத்து மூலத்தை டாக்டர் நேரில் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சிகிச்சை!

உள் மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். மலம் கழிக்கும்போது ரத்தம் வருவது முதல் நிலை. ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றுவதும் உள்ளே மறைந்துகொள்வதும் இரண்டாம் நிலை. வீக்கம் நிரந்தரமாகிவிடுவது மூன்றாம் நிலை. வீக்கத்தில் புண், சீழ் ஏற்படுவது நான்காம் நிலை.

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் மருந்து, மாத்திரை, களிம்பு மூலமே சரி செய்துவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டால், மூலநோயும் டாட்டா சொல்லிவிடும். அடுத்தகட்ட பாதிப்பு இருந்தால் மட்டுமே பாண்டிங் (Banding), ஸ்டேப்ளர், சர்ஜரி என மற்ற சிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.

இந்த இடத்தில் நோயாளிகள் பலரும் செய்யும் தவறு ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். மலத்தில் ரத்தம் வந்தால், உடனே ‘மூலம்’ என்று சுயமாக முடிவு கட்டாதீர்கள். இதற்குப் பெருங்குடலில் ஏற்படும் புண், கேன்சர் என ஆபத்தான காரணங்களும் இருக்கலாம். சமீபத்தில் என்னிடம் ஒரு நோயாளி வந்திருந்தார். 

“எனக்கு மூலம் முத்திப்போச்சி, டாக்டர்! உள்ளூர் வைத்தியரிடம் மூணு மாசமா மருந்து சாப்பிட்டும் ரத்தம் நிக்கலே!” என்றார். அந்த ‘டாக்டர்’ அவரைப் பரிசோதிக்காமல், மலத்தில் ரத்தம் போகும் அறிகுறியை மட்டும் வைத்துக் கொண்டு ‘மூலம்’ என்று முடிவு செய்து மருந்து கொடுத்திருக்கிறார். நான் பரிசோதித்தபோது, அவருக்கு மலக்குடலில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும்தான் பார்க்கக் கூடாது. ஆசனவாய் மூலத்தை நேரில் பார்த்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும்!

ரௌத்திரம்

ஆசனவாயின் வெளிப்புறத்துக்கும் மலக்குடலுக்கும் இடையில் ஏற்படும் குகைப் பாதைக்கு பௌத்திரம் (Fistula) என்று பெயர். ஆசனவாய்க்கு அருகில் சிறிய வீக்கம் தோன்றி, அதிலிருந்து சளி போன்ற திரவம் வருடக்கணக்கில் வடிவது இதன் முக்கிய அறிகுறி. மலக்குடலுக்கும் ஆசனவாய்த் தோலுக்கும் இடையில் வெளிப்பக்கமாகச் சீழ்க்கட்டி ஏற்பட்டு, உடைவதால் இந்தப் பிரச்னை உண்டாகிறது. திரவம்/சீழ் வடியும் வரை வலி இருக்காது. 

இதன் வாய்ப்பகுதி தானாகவே மூடிக் கொள்ளும்போது, சீழ் வடிய வழியில்லாமல் வலிக்கத் தொடங்கும். பின்னொரு நாளில் மறுபடியும் சீழ் வடியும். இதில் பலரும் செய்கிற தவறு, சீழ் ஏற்படும்போது மட்டும் அதைக் கீறி எடுத்துவிட்டு, குகையைக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான். ஓபன் சர்ஜரி மூலம் இந்தக் குகையை உள்ளிருந்து மூடும்படி செய்தால்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

சிகிச்சை முறைகள்

1. சுருங்க வைத்தல்: 

ரத்தம் உறைய வைக்கும் மருந்தை மூலநோய் உள்ள இடத்தில் செலுத்தி, வீங்கியுள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இதன் செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவுகிறது.

2. வளையம் இடுதல்: 

இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக் குழாய்க்கு ரத்தம் வருவது தடைபட்டு, வீக்கம் சுருங்கி விடுகிறது. இரண்டாம்நிலை மூலநோய்க்கான சிகிச்சை இது.

3. உறைய வைத்தல்: 

திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால் அதில் உள்ள ரத்தக் குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இதுவும்  இரண்டாம் நிலை மூலத்துக்கு உதவுகிறது.

4. அறுவை சிகிச்சை: 

நாட்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் மற்றும் 3,4ம் நிலை உள் மூலத்துக்கு இது நல்ல பலன் தருகிறது.

5. கதிர்வீச்சு சிகிச்சை:  

ஐ.ஆர்.சி. (IRC Infra Red Coagulation) என்ற கருவி மூலம் இது செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிர்களை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிடுவதால் வீக்கம் சுருங்கிவிடும். முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க முடியாதநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவுகிறது.

6. லேசர் சிகிச்சை: 

லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது இந்த சிகிச்சையின் செயல்முறை. ஆனால் இதற்கு ஆகும் பணச்செலவு அதிகம்.

7. ஸ்டேப்ளர் சிகிச்சை: 

ஸ்டேப்ளர் கருவி கொண்டு மூலநோயின் மேல்பகுதியை இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப் பகுதியையும் வெட்டி எடுத்து தையல் போட்டுவிடுகிறார்கள். மூலநோய் முற்றியநிலையில் உள்ளவர்களுக்கும், முதியோருக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. இதற்கான செலவும் அதிகம்தான்

8. ஆசனவாய் வெடிப்புக்குச் சிகிச்சை: 

நோய் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், ஆசனவாயை விரித்து விட்டாலே போதும். பாதிப்பு அதிகம் என்றால், சர்ஜரிதான் தீர்வு.

-டாக்டர்  கு.கணேசன்

நன்றி : குங்குமம் 25.11.2016 இதழ்

Friday, February 10, 2017

மஞ்சள்காமாலை நோயல்ல… அறிகுறி!


மஞ்சள்காமாலை நோயல்ல… அறிகுறி!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், இந்த இதழில் மஞ்சள்காமாலை பற்றி விரிவான மருத்துவத் தகவல்கள் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அரசு பொதுநல மருத்துவர் நாராயணன்…
‘‘மஞ்சள்காமாலை ரொம்ப கடுமையான வியாதி… அவ்வளவு சுலபத்தில் குணப்படுத்த முடியாது என்றெல்லாம் பலரும் பேசக் கேட்டிருப்போம். உண்மையில், மஞ்சள்காமாலை என்பது ஒரு நோயே இல்லை. சில வியாதிகளின் அறிகுறி.
இந்த அறிகுறியைக்கொண்டு அந்த வியாதியைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுத்து குணம் பெறுவது… இன்றைய மருத்துவத்தில் மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. தேவை… அதைப் பற்றிய தெளிவே!’’ என்று பயம் அகற்றி அறிமுகம் தந்த டாக்டர், விரிவாகப் பேசத் தொடங்கினார்…
‘‘ரத்தத்தில் பிளிருபின் (Bilirubin) அளவு அதிகமாவதே, மஞ்சள்காமாலை எனலாம்.
பிளிருபின்… ஒரு விளக்கம்!பிளிருபின் என்பது, கொழுப்பைக் கரைக்கக்கூடிய ரத்தத்தில் உள்ள மஞ்சள் நிறமி. நம் உடலில் உள்ள ரத்தத்தில் பிளிருபின் அளவானது 1.2 மில்லி கிராமுக்குள் (சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 மில்லிகிராம் பிளிருபின் உற்பத்தியாகும்) இருக்க வேண்டும். அதைவிட அதிகரிக்கும்பட்சத்தில் அது மஞ்சள்காமாலையாக மாறிவிடும்.
அதாவது, பிளிருபின் என்பது ஒரு கழிவு என்பதால், அது மலம் வழியாகவும், சிறுநீர் வழியாகவும் வெளியேறும். பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, அது நம் உடலில் தேங்கிவிடக்கூடும். பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், அது உடலில் மஞ்சள்காமாலையாக வெளிப்படுகிறது.
மஞ்சள்காமாலை மூன்று வகை!மஞ்சள்காமாலை என்பது பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடியது. இந்நோயின் பாதிப்பை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. சிறுவயதில் வருவது 2. கல்லீரல் பாதிப்பால் வருவது 3. பித்தப்பைக் கல்லால் வரக்கூடியது.
சிறு வயதில் வருவது: பிறந்த குழந்தைக்கு, அதாவது குழந்தை பிறந்த 3 முதல் 8 நாட்களில் வரக்கூடிய மஞ்சள் காமாலை இது. சிவப்பணுச் சிதைவினாலும், பிறவிக் குறைபாட்டாலும் ஏற்படக்கூடிய பாதிப்பு. இதில் குழந்தையின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும். அந்தக் குழந்தைகளை `அல்ட்ரா லைட்’டில் வைத்து சிகிச்சை கொடுக்க, குணம் பெறுவார்கள்.
கல்லீரல் பாதிப்பால் வருவது : வைரஸ் (ஹெபடைட்டிஸ் A, B, C, D, E, F, G), பாதிப்பு, புற்றுநோய், சிரோசிஸ் (Cirrhosis) என்னும் ஈரல் சுருங்கிப்போவது, ரத்தத்தில் பிளிருபின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகமாவது, ஈரல் சரியாக வேலை செய்யாதது போன்றவை கல்லீரல் பாதிப்புக்குக் காரணமாகலாம். இவற்றில் வைரஸ் B மற்றும் C-யால் வரக்கூடிய மஞ்சள்காமாலை, தீவிரமாக இருக்கும்.
பித்தப்பைக் கல்லால் வரக்கூடியது: கணையத்தில் பித்தப்பைக் கல்லால் அடைப்பு ஏற்பட்டு பித்தம் உள்ளேயே தங்கிவிடுவது மற்றும் கணையத்தில் ஏதேனும் வியாதி ஏற்படுவது இந்த வகை மஞ்சள்காமாலையைத் தோற்றுவிக்கும்.
அறிவோம்… அறிகுறிகள்!
# கண்கள், உடல் மஞ்சள் நிறமாவது
# வாந்தி
# மலம் வெள்ளையாகப்போவது
# சோர்வு
# தலைவலி
# குமட்டல்
# எடை குறைவு
# காய்ச்சல்
# பசியின்மை
# உடல் அரிப்பு
# சிறுநீரில் இயல்புக்கு மீறிய மஞ்சள் நிறம்
# நாக்கு, உள் உதடு மற்றும் கைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள்
மேற்சொன்னவை எல்லாம், மஞ்சள்காமாலையை வெளிப்படுத்தும் அறி குறிகள்.
பொதுவாக, தினமும் கண்ணாடியில் முகம் பார்த்தாலும், 90 சதவிகிதம் பேர் கண்களைக் கவனிப்பதில்லை. வழக்கமாகவே, முகம்போல கண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்க வேண்டும். கண்ணின் வெள்ளைப் பகுதியில் மஞ்சள் நிறமாகத் தெரிந்தால், அடுத்த இரண்டு தினங்களுக்கு எச்சரிக்கையோடு அதைக் கண்காணிக்க வேண்டும். அது மாறாத அல்லது அதிகரிக்கும்பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிறுநீர், ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தச் சோதனைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் செய்துகொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாகவும், மற்ற இடங்களில் குறைந்த கட்டணத்திலும் செய்துகொள்ளலாம். பரிசோதனையின் முடிவில் அது மஞ்சள்காமாலை என்று கண்டறியப்பட்டால் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் உடனடியான அதற்குரிய சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.
என்னென்ன பாதிப்புகள் வரும்?கல்லீரல் சரியாக வேலை செய்யாமல், மூளை பாதிப்புவரை உண்டாகி, உரிய சிகிச்சையளிக்காவிட்டால் மரணம்வரை ஏற்படலாம்.
கோமா நிலை அடைய வாய்ப்புள்ளது.
HBsAg வைரஸால் (ஹெபடைட்டிஸ் பி-வைரஸில் ஒரு வகை)பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது சிரமம். இவர்களால் மற்றவர்களுக்கும் தொந்தரவுகள் ஏற்படும். ரத்தம் கொடுக்கமுடியாது. இவர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதியில்லை.
மேற்சொன்ன பாதிப்புகள் எல்லாம், நோயைக் கண்டறியாமல், கண்டறிந்தும் உரிய சிகிச்சையளிக்காமல் விடுவதால் நேரும் பாதிப்புகளே. எனவே, மஞ்சள் காமாலை ஏற்பட்டாலே இந்த பாதிப்புகள் எல்லாம் நேரும் என்பதில்லை. மஞ்சள்காமாலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சையை அளிக்கும்போது, இந்நோயை எளிமையாகக் குணப்படுத்த முடியும்.
சிகிச்சை முறைகள்!மஞ்சள்காமாலையைப் பொறுத்தவரையில் போதிய மாத்திரை, மருந்துகளும், தேவையான ஓய்வுமே அதைக் குணப்படுத்திவிடும். இயற்கை மருத்துவத்தில் கீழாநெல்லி இந்நோய்க்கு மிகச்சிறந்த மருந்து என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கல்லீரல் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஈரல் மாற்று சிகிச்சைகள்கூட இன்றைக்குப் பரவலாக எல்லா இடங்களிலும் சாத்தியமாகியுள்ளது. HBsAg, மது அருந்து வதால் வரக்கூடிய சிரோசிஸ் என்னும் ஈரல் சுருங்கல் போன்ற பாதிப்புகளை மட்டும் குணப்படுத்துவது கஷ்டம். மற்றபடி மஞ்சள்காமாலை குறித்த அச்சத்தை தூரவைக்கும் மருத்துவ முன்னேற்றங்கள் வந்துவிட்டன.
மொத்தத்தில்,
முன்னெச் சரிக்கை நடவடிக்கை,
முறையான பரிசோதனை,
முழுமையான சிகிச்சை…
இவை மூன்றும் இருந்தால் மஞ்சள்காமாலையை எதிர்த்து வெல்லலாம்!’’
– விழிப்பு உணர்வோடு நம்பிக்கையும் தந்து முடித்தார் டாக்டர் நாராயணன்.
நோய் வராமல் தடுக்க!>>>கொதிக்கவைத்த தண்ணீர் குடிப்பது நல்லது.
>>>மலம் கழித்துவிட்டு கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக வைரஸ் பரவக்கூடும் என்பதால் ஒவ்வொரு முறை மலம் கழித்தபின்னும் சோப்பால் கைகளைத் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
>>>ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டியது கட்டாயம்.
>>>வெளியிடங்களில் மலம் கழிப்பது, மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தும் போது அதன் சுகாதாரத்தை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.
>>>கழிவறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்கள், பாத்திரங்களை வைக்கக் கூடாது.
>>>காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.
>>>அதிகமாக நகம் வளர்ப்பது, நகம் கடிப்பது கூடாது.
>>>அடுத்தவர்கள் பயன்படுத்திய பிரஷ், ஷேவிங் செட், சீப்பு, கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
>>>பிறந்த 18 மாதக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மஞ்சள்காமாலைக் கான தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இந்த ஊசியை 0 மாதம், 1 மாதம், 6 மாதங்கள் என மூன்று இடைவெளிகளில் மூன்று டோஸ்களாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
>>>மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்குப் பால் கொடுப்பதால் குழந்தைக்கும் பாதிப்பு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுவே தடுப்பூசி போட்டுக்கொண்ட தாய் எனில், குழந்தைக்கு பாதிப்பு வராது. அப்படியே வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>>கொழுப்பு சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மிக மிக நல்லது.
>>> சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது, வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீ ரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் என்பதால் ரோட்டோர மற்றும் வெளியிட உணவுகளைத் தவிர்க்கவும்.
>>>மதுப்பழக்கம் கூடவே கூடாது.
>>>டிஸ்போசபிள் ஊசியையே பயன்படுத்த வேண்டும்.
நன்றி : அவள்விகடன் - 09.02.2016

Thursday, February 9, 2017

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.

-கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் -  04.10.2014