disalbe Right click

Showing posts with label மூலிகை. Show all posts
Showing posts with label மூலிகை. Show all posts

Thursday, November 2, 2017

ஆவாரை

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.
ஆவாரை பூக்களை பசைபோல அரைத்து , புளித்த மோரில் கலக்கி. தொடர்ந்து 2 மாதங்கள் வரை குடித்து வர நீரழிவு நோய் கட்டுப்படும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு,காய்ச்சி 200 மி. ஆக சுண்டக் காய்ச்சி, 50மி.லி . அளவில் காலை, மாலை குடித்துவர சரியாகும். பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் . தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாகும்.
ஆவாரையின் வேர், இலை, பட்டை, பூ, காய் இவற்றைச் சம அளவு எடுத்து , காயவைத்து, இடித்துத் தூளாக்கி, 10 கிராம் வீதம், காலை, மதியம், மாலை வெந்நீருடன் குடித்து வர . உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் போக்கக்கூடிய அருமருந்தாகும். இம்மருந்தால்
சர்க்க்கரைவியாதி ,அதிக சிறுநீர் போதல் ,மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு, பலக்குறைவு ஆகியவை தீரும். உடல் பலம் பெறும். 90 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும். இதற்க்கு ஆவரையின் பஞ்சாக சூரணம் என்ற பெயராகும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மறைய ஆவாரம் இலையை அரைத்து இதன் விழுதை சிறிது நல்லெண்ணை விட்டு சட்டியில் இட்டு வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநால் விட்டு ஒருநால் கட்டிவரகுழிபுங்கள் ஆறும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் ,பற்கள் கெட்டிப்படும். காய்ச்சிய நீரை குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும்.
ஆவாரை விதையைக் காய வைத்து பொடி செய்து , நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றிட கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.
ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும். ஆவாரம் இலையைக் காய வைத்து மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவில் வரும் பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.

ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.
ஆவாரையின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் 10 கிராம் அளவுக்கு நீரில் கலந்து குடிக்க எவ்வகையாக காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும். ஆவாரம் பூவின் சூரணத்தை இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும்.
ஆவாரையைத் 500 மி.லி தண்ணீரில் காய்ச்சி குடித்து வர இரண்டாம் நிலைச் சர்க்கரை அளவு கட்டுப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் கட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சரியாகும்..

கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ - 100 கிராம், பூலான்கிழங்கு - 100 கிராம் ஆகியவற்றை அரைத்துக். தினமும் இந்தப் பவுடரை தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும். (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.) ஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு - அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்து. இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, முடி நன்றாக கருப்பாக வளரும்.
ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் ஒரு கப் , வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளித்து வர . உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று முடி வளரத் தொடங்கும்.
ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் தடவி வந்தால் உடம்பு பொன்நிறமாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொண்டு . இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும். ஆவாரம் பட்டையை நீர் விட்டு காய்ச்சி, கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
சிலருக்குப் பரம்பரையாக வழுக்கை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள், தலையில் முடி கொட்ட ஆரம்பித்ததுமே.. 100 கிராம் ஆவாரம் பூவை அரைத்து. இதை அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை காய்ச்சி . இதனுடன் கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து இதை முன் நெற்றியில் தினமும் நன்றாகத் தடவி வந்தால், முடி உதிர்வது ஒரே மாதத்தில் நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.

ஒரு கைப்பிடி அளவு ஆவரம்பூவை எடுத்து, அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதை 100 மில்லியாக சுண்டகாய்சி , இதனை தினமும் குடித்து வர சர்க்கரைவியாதி,அடிக்கடி சிறுநீர் கழிப்பது,பாத எரிச்சல்,உடல் வறட்சி,உடலில் உண்டாகும் வேர்வை நாற்றம், உடல் உஷ்ணம் ஆகியவை குணமாகும்.
ஆவாரை பூஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டாஎன்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகம்.
வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும்.
ஆவாரம் காய கற்ப மூலிகையாகும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகை

மேலும் தெரிந்துகொள்ள: 94420 60556,80988 17833
நன்றி : முகநூல் - கொல்லிமலை மூலிகைகள் 

Tuesday, March 7, 2017

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!


வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!

தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். 
இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது  நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.  இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்

என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.

வில்வத்தின் விஞ்ஞான குணம்:
ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos. ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான்,  தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை. வில்வ இலைகளை,  குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.

வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம். செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.

நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன. காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.

மருத்துவ குணம்:

வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. 
வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கின்போது  அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால்..வில்வ இலையை அரைத்து சிறிதளவு உண்ணக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். 

வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்க வைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

 நன்றி : விகடன் செய்திகள் -19/04/2016

Monday, March 6, 2017

விதவிதமான மருந்தாகும் விளக்கெண்ணெய்!


விதவிதமான மருந்தாகும் விளக்கெண்ணெய்!

ஆமணக்கு… வறண்ட நிலத்திலும் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்காகத்தான் இது பயிரிடப்படுகிறது. 
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ அகராதி தந்த மாமேதை த.வி.சாம்பசிவம் பிள்ளை, 16 ஆமணக்கு வகைகளைக் குறிப்பிட்டிருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, வ்வாமணக்கு,காட்டாமணக்கு ஆகிய நான்கு ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. 
இவைதான், மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் உள்ளன. இவற்றில் ஆமணக்கு, சிற்றாமணக்கு, செவ்வாமணக்கு ஆகிய மூன்றும் ஒரே வகைத் தாவரங்கள். காட்டாமணக்கு, வேறு வகை. சிற்றாமணக்கின் விதைகள் சிறியதாக இருக்கும். அவற்றைவிட சற்றுப் பெரிதாக இருக்கும், ஆமணக்கின் விதைகள். சிவப்பு நிறத் தண்டுகளைக் கொண்டது, செவ்வாமணக்கு. மற்றவகையில் இது ஆமணக்கை ஒத்தே இருக்கும். உள் மருந்துகளுக்குச் சிற்றாமணக்கு எண்ணெய், வெளிப்பூச்சு மருந்துகளுக்கு ஆமணக்கு எண்ணெய் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நல்லெண்ணெயும் (எள் எண்ணெய்), ஆமணக்கு எண்ணெயும் (விளக்கெண்ணெய்) மட்டும்தான் பெருவாரியான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. மேல்தட்டு மக்கள் மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்துள்ளனர். உடலுழைப்பாளிகள் பயன்படுத்தி வந்தது, ஆமணக்கு எண்ணெய் மட்டுமே. வயல்வெளி, ஆறு, வாய்க்கால் மற்றும் ஏரிக்கரைகளிலும் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்குச் செடிகளிலிருந்து விதைகளை மக்களே சேகரித்து, அவர்களின் வீட்டு அடுப்பங்கரையிலேயே எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், வலிகள் தீர்க்கும் தைலமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். 
தவிர வயிறு, குடல், கர்ப்பப்பை முதலான அனைத்து நோய்களுக்கும் ஆரம்பக்கட்ட மருந்தாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த எண்ணெய் புகையின்றி எரியக்கூடியது. 
அதனால், இரவு நேரங்களில் விளக்கெரிக்க இந்த எண்ணெயைத்தான் பயன் படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான், ஆமணக்கெண்ணெய், ‘விளக்கெண்ணெய்’ என ஆனது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள், இன்றும் இதை ‘கொட்டைமுத்து எண்ணெய்’ என்றே சொல்கிறார்கள்.

சிற்றாமணக்கு விதைகளே சிறந்த மருத்துவக் குணம் கொண்டுள்ளன. ஆமணக்கிலிருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம். ஆமணக்கு விதைகளை இயந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த இரண்டாவது முறை, ‘ஊற்றின எண்ணெய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நம் மூதாதையர்கள், எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். 
பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளிகள் ஊற்றின எண்ணெயை விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. ஊற்றின எண்ணெயில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது. இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. ஊற்றின எண்ணெயுடன் கால் பங்கு  எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும். இதற்கு ‘மூலகுடோரி தைலம்’ என்று பெயர். இது எல்லாச் சித்த மருத்துவக் கடைகளிலும் கிடைக்கும். 
‘தேரையர் தைல வருக்கச் சுருக்கம்’ எனும் அரிய நூல், சுகப்பிரசவம் ஏற்படுவதற்குக் கூறும் ‘பாவனப் பஞ்சாங்குலத் தைலம்’ எனும் அற்புதத் தைலம், சிற்றாமணக்கு விதைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.


சுகப்பிரசவம், அரிய நிகழ்வாகிவிட்ட இக்காலங்களில், கர்ப்பிணிகளின் கருவுக்குப் பாதுகாப்பாகவும், சுகப்பிரசவத்தையும் ஏற்படுத்தும் அற்புத மருந்துதான் இந்தப் பாவன பஞ்சாங்குலத் தைலம். கர்ப்ப காலத்தின் முதல் மாதம் தொடங்கி 10 மாதங்களும் தொடர்ந்து இத்தைலத்தைத் தினமும் சூரிய உதயத்துக்கு முன்னும், இரவு உணவுக்குப் பிறகும், 5 முதல் 10 துளிகளைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடித்து வர கர்ப்பக் காலத்தில் இடைஞ்சல் செய்யும் தொந்தரவுகள் எதுவும் வராது. கர்ப்பக் காலத்தின் கடைசி மாதத்தில் இத்தைலத்தை இரவு மட்டும் 5 மில்லி அளவு உண்டு வர மிகுந்த நன்மையைத் தரும். கடைசி மூன்று நாட்களில் 10 மில்லி வரை இரவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு உண்டு வருவதால் பிரசவ வலியின் தாக்கமும் பிரசவ காலமும் குறைந்து நிச்சயமாக சுகப் பிரசவம் ஏற்படும்.
2015-ம் ஆண்டு முதல், தமிழக அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வரும், கர்ப்பிணிக்களுக்கான இலவச மருத்துவப் பெட்டகத்தில், பாவன பஞ்சாங்குலத் தைலமும் இடம்பெற்றுள்ளது.  வாந்தி, பேதி மற்றும் வியர்வை உண்டாக்கும் மருந்துகளை வழங்கி, உடலை இயக்கும் உயிர்ச் சக்தியான நாடியில் உணரப்படும் குற்றங்களை நீக்கி, நமது பாரம்பர்ய சித்த மருத்துவம் முற்றிலுமாக குணமாக்கி விடுகிறது. எளிதான முறையில் செய்யப்படும் வாந்தி, பேதி மருந்துகள் சித்த மருத்துவத்தில் நிறைய உள்ளன. அவற்றில் முதன்மையானது ‘சித்தாதி எண்ணெய்’. இது ஊற்றின எண்ணெய்  கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. குணமாகாது என்று கைவிடப்பட்ட பல நோய்களில் இம்மருந்தைத் தொடர்ந்து வழங்கி வர நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். மற்ற தைலங்களுக்கெல்லாம் காய்ச்சும்போது, அடியில் படியும் வண்டல், மெழுகு பதமாக இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், சித்தாதி தைலத்துக்குச் சூடான எண்ணெயில் கைவிட்டால் கை கொப்பளிக்காத அளவுக்குத்தான் சூடு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


கொடிய வாத நோயான ‘ரொமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ என்று சொல்லப்படும் கை, கால், மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் பலர் உண்டு. சித்த மருத்துவத்தில் ‘உதிரவாத சுரோணிதம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வாத வலிகளுக்கு, ஆமணக்கு விதை கொண்டு ஒற்றடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கிறது. 
ஆமணக்கு விதைகளைத் தட்டி, ஓடு நீக்கி உள்ளிருக்கும் வெண்மை நிற பருப்புகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை மண் அகலில் வறுத்து சூடாக்கி பருத்தித் துணியில் முடிந்து ஒற்றடமிட வேண்டும். வாத வலி, வீக்கமுள்ள இடங்களில் ஆமணக்கெண்ணெய் அல்லது பிற தைலங்களைத் தடவி 30 நிமிடங்கள் கழித்து, ஒற்றடம் கொடுக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம். 
ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கு இலைகளில் பசு நெய் தடவி, அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வந்தால் இளம் தாய்மார்்களுக்குப் பால் சுரப்பு அதிகரிக்கும். ஆமணக்கு இலையை இடித்துச் சாறு பிழிந்து, தினமும் 15 மில்லி அளவு குடித்து வந்தாலும் பால் சுரப்பு அதிகரிக்கும்.


மார்பகக் காம்புகளில் ஏற்படும் புண்கள் மற்றும் வெடிப்புகளில் ஆமணக்கு எண்ணெய் பூசி வந்தால், விரைவில் குணமாகும். இதைப் பசுமாடுகளுக்கும் பயன்படுத்தலாம். ஆசன வாயில் ஏற்படும் கடுப்பு, புண், புழுக்கடி போன்றவற்றையும் ஆமணக்கு எண்ணெய் பூசி குணப்படுத்தலாம். கண்வலி மற்றும் கண்ணில் தூசி, மண் போன்றவற்றால் ஏற்படும் கண் சிவப்புக்கு கண்ணில் ஒரு துளி ஆமணக்கெண்ணெய் விட்டால், சரியாகிவிடும்.  மஞ்சள் காமாலை நோயையும் ஆமணக்கு இலை குணப்படுத்தும். ஒரு கைப்பிடி ஆமணக்கு கொழுந்து இலை, அரைத் தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பச்சைகற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காயளவு எடுத்து காலை ஓர் உருண்டை, மாலை ஓர் உருண்டை எனத் தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

இந்நோய் கண்ட சமயத்தில் உப்பு, புளிப்பு, கொழுப்பு நீங்கிய உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும். ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கி பொறுக்கக்கூடிய சூட்டில் அடிவயிற்றில் வைத்து, ஒரு பட்டைத்துணியால் தளர்வாகக் கட்டி வைத்தால், கடுமையான சூதக வலியும் (மாதவிடாயினால் வரும் வயிற்றுவலி) 15 நிமிடங்களில் குறைந்துவிடும். 
சூட்டினால், உடம்பில் எந்தப் பகுதியில் கட்டிகள் ஏற்பட்டாலும் இதேபோல ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். கட்டி உடைந்தவுடன் சீழை வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடி கலந்து பூசி வந்தால், புண்கள் விரைவில் ஆறும். ஆமணக்கு வேர்களைச் சேகரித்துச் சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு துணியில் 10 கிராம் பொடியை இட்டு முடிந்து கட்டி, புழுங்கல் அரிசியுடன் சேர்த்து வேகவைத்து நொய்கஞ்சியாகச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும். 

இவ்வளவு மருத்துவத்தன்மை வாய்ந்த ஆமணக்கெண்ணெயை நாம் விளக்கெரிக்க மட்டுமே பயன்படுத்துவது, காலத்தின் கோலம். இதை தலையிலோ, உடம்பிலோ பூசுவதற்குத் தயங்குகிறோம். இன்னும் மோசமாக மடமையின் குறியீடாக ஆகிவிட்டது, விளக்கெண்ணெய். வெளிநாட்டு நிறுவனங்கள், இதே எண்ணெயை வேறு பெயரில் சந்தைப்படுத்தி, நம் முன்னோர் பயன்படுத்தியது என்று சொன்னால், அப்படியே நம்பி வாங்கிப் பயன்படுத்துவோம். இதுதான் இன்றைய நிலைமை.

By vayal on