disalbe Right click

Friday, April 10, 2015

ஏழைப் பெண்களுக்கு அரசு - திருமண நிதியுதவி


ஏழைப் பெண்களுக்கு அரசு தருகின்ற திருமண நிதியுதவி
*********************************************************************
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
நிதியுதவித் திட்டம்
வழங்கப்படும் உதவி:
*********************************

திட்டம் 1: 
25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2:
50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இதனைப் பெறுவதற்கு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
****************************************************************************************

திட்டம் 1:

1) மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம்.
2) தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்
திட்டம் 2:

1) பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2) பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்
திட்டம் 1க்கு தேவையான சான்றுகள்:
***********************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
திட்டம் 2க்கு தேவையான சான்றுகள்:
**********************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று
யாரை அணுகுவது?
*******************************

*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், 
நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், 
ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுக வேண்டும்.
*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

பத்திரப்பதிவு - கவனிக்க வேண்டியவை

பத்திரப்பதிவு - கவனிக்க வேண்டியவை
நாம் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், முதலில் அந்த நிலம் அல்லது வீட்டின் மூலப்பத்திரம், பட்டா, சிட்டா போன்றவற்றை நன்றாக படித்து பார்க்க வேண்டும்.
பத்திரம் பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை என்ன?
முத்திரைதாள்களில் கிரயப்பத்திர விவரங்களை டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்ப்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும்.
சார்பதிவாளரிடம் இந்த கிரயப்பத்திரத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும். அவர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைபடம், அடையாள அட்டை ஆகியவற்றையும் மற்ற விவரங்களையும் சரிபார்த்து, பதிவு இலக்கம் அளிப்பார்.
பதிவுக்கட்டணம் செலுத்திய பின், முதல் முத்திரைத்தாளின் பின்புறம் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும்.
புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர்.
இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீதில், சார் பதிவாளரும், சொத்து வாங்குபவரும் கையொப்பம் இட வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு, ரசீது காட்டி, சொத்து வாங்குபவர் பெற்றுக் கொள்ளலாம்.
வேறு யாரேனும் வாங்க வேண்டியிருப்பின், அந்த நபரும் ரசீதில் கையொப்பமிடவேண்டும்.நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்(சர்வே எண்) அமைந்திருக்கலாம்.
பத்திரம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவது?
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) என்று பெயர். பத்திரப்பதிவின் போது இந்த மதிப்பீட்டில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.
சொத்து மதிப்பை நாம் நிர்ணயம் செய்யலாமா?
47- பிரிவு என்றால் என்ன?
அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகம். என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்து மதிப்பு நிர்ணயம் செய்து, அதில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கலாம்.
சார்பதிவாளர் இப்பத்திரத்தை பதிவு செய்து விட்டு பெண்டிங் டாக்குமென்ட் என முத்திரை இட்டுவிடுவார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஒரு பிரிவு இருக்கிறது. அங்குள்ள அலுவலர் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றியுள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து, வழிகாட்டி மதிப்பு சரியானதா என்பதை முடிவு செய்வார்அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார். வழிகாட்டி மதிப்பு சரியாகவே உள்ளது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அல்லது அவர் நிர்ணயித்த மதிப்புக்கும் நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகே பதிவு செய்த பத்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இம்முறைக்கு 47 பிரிவு என்று பெயர்.
குறிப்பிட்ட காலத்துக்குள் மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். இல்லையெனில், அது மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அங்கு சென்று வித்தியாசத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ள கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்.
41 படிவம் பற்றி தெரியுமா?
வழிகாட்டி மதிப்பின் 8 சதவீத அளவுக்கும் முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலை, அல்லது கிடைக்க வில்லை எனில் அதற்கும் வழி உண்டு.குறிப்பிட்ட அளவுக்கு முத்திரைத்தாள் வாங்கி, மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். இதற்கு 41 என்ற படிவம் உள்ளது.
வாங்க வேண்டிய முத்திரைத்தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்பத்திரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டியது ஆயிரம் ரூபாய் வரை எனில் பணமாகவே செலுத்தலாம்.
அதற்கு மேல் இருந்தால் வரைவேலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தவேண்டும்.
எந்த பெயரில் டி.டி எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த அலுவலக தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவுக்கட்டணமாகவும், ரூ. 100யை கணினி கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இதையும் ரூ. 1000 வரை பணமாகவும், அதற்கு மேல் எனில் காசோலையாகவும் அளிக்க வேண்டும்.

வாடகை வீடு - சட்டம் என்ன சொல்கிறது?


வாடகை வீடு - சட்டம் என்ன சொல்கிறது?
*********************************************************

"ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.

அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.

இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.

தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.

வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.

வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.

வீட்டைக் காலி செய்ய வைக்க
குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.

பெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம்!
**********************************************************

வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு வழக்கறிஞர் தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்...

ஒப்பந்தம்
***************

முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம்.

ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.

முன்பணம்
*******************

வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வாடகை
***************

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்


தேசிய ஓய்வூதியத் திட்டம் NATIONAL PENSION SYSTEM
***************************************************************
            இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System)  என்னும் திட்டம் பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

        அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதாரப் பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும் இது ஏற்படுத்தும்! என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

                 அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக ‘பிரான்’ (PRAN- Permanent Retirement Account Number) எண் தரப் படும். இது வாழ்நாளுக்கான எண் ஆகும்.
        18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். மத்தியஅரசு ஊழியர்கள், மாநிலஅரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன்பெறலாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் (N.R.I.)மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (P.P.F) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென்இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
       இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். 
              நீங்கள் 100 ரூபாய்செலுத்தினா ல், உங்கள் கணக்கில் ஆண்டு க்கு 100ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்க ளுக்குமட்டும்). 
              அதிகபட்சமாக 12ஆயிரம் ரூபாய்வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரைதான் மத்திய அரசின் 1000ரூபாய் கிடைக்கும். அதற்குமேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை. சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம். மீதி தொகையிலி ருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8%  முதல் 12% கூட்டுவட்டியுடன்  கிடைக்கும்.
         மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேரவேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் முகவர்களாக சேர்ந்து வருமானமும் ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு http:// pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Thursday, April 9, 2015

தெரிந்து கொள்வோம் படிவம் 16


தெரிந்து கொள்வோம் படிவம் 16
****************************************
 இந்த இயந்திர வாழ்க்கை முறையில், இன்றைய இளைஞர்கள் பலரும் சிறந்த வாய்ப்புகளை நோக்கியும், சிறப்பான ஊக்கத் தொகை, ஊதியத்தை எதிர்பார்த்து சென்னை, பெங்களுர் போன்ற நகரங்களை நோக்கி வேகமாக ஒடி வருகின்றனர். அதிக ஊதித்தை தேடி இவர்கள் அடிக்கடி தான் பணிபுரியம் நிறுவனங்களை மாற்றி வருகின்றனர். மாத ஊதியத்தில் வேலைக்குச் செல்பவர்கள் தங்களுடைய வரியை செலுத்தும் போது பயன்படுத்தும் முக்கியமான படிவம் தான் படிவம் 16 (Form 16). வருமான வரி செலுத்தும் போது சில நேரங்களில், அவர்கள் தங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இந்தக் கட்டுரையின் மூலம் பார்ம் 16-ஐ பற்றிய 10 விஷயங்களை காண்போம்.

1.பார்ம் 16 என்றால் என்ன? 
ஒரு நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் படிவம் தான் பார்ம் 16. இந்தச் சான்றிதழில் அந்தப் பணியாளர் சம்பாதித்த ஊதியம் மற்றும் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி ஆகியவை பற்றிய அனைத்து விபரங்களும் இருக்கும்.   

2.நிறுவன மாற்றம் 
ஒருவர் தன்னுடைய வேலையை வேறு நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டால், அவர் தன்னுடைய முந்தைய நிறுவனம் மற்றும் தற்போதைய நிறுவனம் ஆகிய இரண்டிடம் இருந்தும் படிவம் 16-ஐ ஆண்டின் முடிவில் பெற வேண்டும்.

3.ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்கள் 
ஒரு தனிநபர் வேறு வேலைக்குச் சென்றாலோ அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் வேலை செய்து வந்தாலோ அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ பெற முடியும்.

4.வருமான வரி 
உங்களுடைய ஊதியம் குறைந்தபட்ச வரி செலுத்தும் அளவை விடக் குறைவாக இருந்தால், ஊதியத்திலிருந்து வரி நேரடியாகப் பிடித்தம் செய்யப்படாத காரணத்தால் சான்றிதழ் எதுவும் தரப்படாது.

5.வருமான படிவம் 
உங்களுடைய நிறுவனத்தினர் படிவம் 16-ஐ கொடுக்காத பட்சத்தில், அவர்கள் கொடுக்கும் சேலரி ஸ்லிப்பில் இருக்கும் விபரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

6.பல தகவல்கள் 
மொத்த வருமானம், மேல் வருமானம், பல்வேறு சலுகைகள் மற்றும் பிடித்தங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் படிவம் 16 கொண்டிருக்கும்.

7.வரி கணக்கீடு 
நீங்கள் ஒரே நிதியாண்டில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், அந்த இரண்டு நிறுவனங்களிலிருந்தும் நீங்கள் பெற்ற வருமானத்தை மொத்தமாகக் கூட்டி கணக்கிட்டு, உங்களுக்கான வரியை செலுத்த வேண்டும்.

8.இப்படியும் செய்யலாம்..
 வரிப் பிடித்தம் எதுவும் இல்லை என்பது போன்று, ஏதாவதொரு காரணத்திற்காக முந்தைய நிறுவனம் படிவம் 16-ஐ கொடுக்க இயலாத போது, உங்களுடைய சேலரி ஸ்லிப்-ஐயும் மற்றும் புதிய நிறுவனத்திலிருந்து பெற்ற படிவம் 16-ம் கொண்டு வரிச் செலுத்தலாம்.

9.வருமான வரி செலுத்துதல்
 உங்களுடைய முந்தைய நிறுவனத்தினரின் படிவம் 16-ஐ தற்போதைய நிறுவனத்தினரிடம் நீங்கள் கொடுக்க விரும்பாவிட்டால், இரு நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற படிவம் 16 குறிப்பைப் பயன்படுத்தி வரிச் செலுத்தலாம்.

10.பான் எண் 
படிவம் 16-ல் வேலை கொடுத்த நிறுவனத்தின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.