disalbe Right click

Wednesday, October 21, 2015

மாயன்கள் மாயமான வரலாறு - 3


மாயன்கள் மாயமான வரலாறு
பாகம் : 3

மாயன்களிடம் மொத்தமாக மூன்று நாட்காட்டிகள் இருந்தன என்று கடந்த பதிவில் பார்த்தோம். மாயன்களிடம் இருந்த மூன்று நாட்காட்டிகளில், ஒன்று 365 நாட்களைக் கொண்டது. இரண்டாவது 260 நாட்களைக் கொண்டது. ஆனால் இவை இரண்டுமே குறுகிய காலக் 
கணக்கைக் கொண்ட நாட்காட்டிகள்.


 மாயன்கள் மிகப் பெரிய சுற்றைக் கொண்ட ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவைக் கொண்டு உருவாக்கபட்டது அது. அதை ‘நீண்ட கால அளவு நாட்காட்டி’ (Long Count Periods) என்றைழைக்கின்றனர் தற்கால ஆராய்ச்சியாளர்கள். இது ஷோல்டுன் (Choltun) என்று மாயன்களால் பெயரிடப்பட்டது.


 படத்தில் காணப்படுவதுதான் மாயன்களின் 260 நாட்களைக் கொண்ட ‘ஷோல்க் இஜ்’ (Cholq ij) என்னும் பெயருடைய நாட்காட்டி. ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20 பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது, 13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும்.

 இதே போல, 365 நாட்களைக் கொண்ட, பெரிய சக்கரமுள்ள இன்னுமொரு ‘ஷோல் அப்’ (Chol’ab’) என்னும் இரண்டாவது நாட்காட்டியும் மாயனிடம் உண்டு. ஆனால் மாயன்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. இந்த மூன்று சக்கரங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாகச் சுற்றிவரக் கூடிய இன்னுமொரு நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். மாயனின் அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு தெரியப்படுத்தியது ‘ஷோல்டுன்’ (Choltun) என்னும் இந்த நாட்காட்டிதான்.


 இந்தப் படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள் மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம் மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச் சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களை குறிக்கும். அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும் 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது. 

அதாவது ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0 நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படி, கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. அது போல, முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி11:11: 11 மணிக்கு முடிவடைகிறது. 

மாயன் பற்றிய பல விசயங்களை, மிகவும் விளக்கமாக சொல்லாமல், நான் மேலோட்டமாகத்தான் சொல்லி வருகிறேன். காரணம் அதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு அயர்ச்சியை அது தோற்றுவிக்கலாம். அதனால், மாயன்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் ஆகியவற்றை தவிர்த்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி விட்டுவிட்டுப் போய்விட முடியாது. சில தெளிவான விளக்கம்தான் இனி வர வேண்டியவற்றிற்கு முழுமையான அறிவைக் கொண்டு வரும் என்பதால், சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும். இப்போ, கொஞ்சம் கவனத்தை அங்கே இங்கே பாய விடாமல் கூர்மைப்படுத்தி இதை வாசியுங்கள். 


மாயன் நாட்காட்டியின் 0, 0, 0, 0, 0 ஆரம்பநாள் 0, 0, 0, 0, 0 4 Ahau என்றுதான் இருக்கும். இதில் வரும் ‘ஆகவ்’ (Ahau) என்பதன் அர்த்தம் கடவுள் என்பதாகும். அத்துடன், 4 Ahau என்பதில் கடவுள் பூமியை உருவாக்கினார் என்பதே மாயன் முடிவு. இதன்படி, மாயன் நாட்காட்டியின் அச்சுக்கள் சுற்றும் போது, வரிசையாக கீழே தந்தபடி 1,0,0,0,0 பின்னர் 2,0,0,0,0 பின்னர் 3,0,0,0,0 …….. இப்படி நாட்காட்டி மாறிக் கொண்டே வரும். பதின்மூன்றாவது சுற்றின் பின்னர் 13,0,0,0,0 என்பதில் நாட்காட்டி வரும் போது சரியாக 4 Ahau மீண்டும் வருகிறது. இந்த நாள்தான் 22.12.2012. 

என்ன புரிகிறதா……….? சரி, புரியாவிட்டால் அப்படியே கீழே இந்த அட்டவணையைப் பாருங்கள்………! 

0.0.0.0.0. 4 Ahau 8 Cumku 
1.0.0.0.0. 3 Ahau 13 Ch´en 
2.0.0.0.0. 2 Ahau 
3 Uayeb 3.0.0.0.0. 1 Ahau 8 Yax 
4.0.0.0.0. 13 Ahau 13 Pop 
5.0.0.0.0. 12 Ahau 3 Zac 
6.0.0.0.0. 11 Ahau 8 Uo 
7.0.0.0.0. 10 Ahau 18 Sac 
8.0.0.0.0. 9 Ahau 3 Zip 
9.0.0.0.0. 8 Ahau 13 Ceh
10.0.0.0.0. 7 Ahau 18 Zip 
11.0.0.0.0. 6 Ahau 8 Mac 
12.0.0.0.0. 5 Ahau 
13 Zotz´ 13.0.0.0.0. 4 Ahau 3 Kankin 

இதுவும் புரியவில்லையா……….? பரவாயில்லை இதை அப்படியே சிறிது விட்டுவிட்டு, ஒரு தேனீர் அருந்திவிட்டு, இந்த அட்டவணையைக் கவனியுங்கள். மாயனின் மொழியின் படி நாட்கள், மாதங்கள், வருடங்களுக்கான பெயர்களுடன் சில விளக்கங்கள் தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.

1 நாள் = 1 கின் (Kin) (1×1) 1 day 
20 கின் = 1 வினால் (Winal) (20×1) 20 days 
18 வினால் = 1 டுன் (Tun) (18×1) 360 days 
20 டுன் = 1 காடுன் (Katun) (20×1) 7200 days 
20 காடுன் = 1 பக்டுன் (baktun) (20×1) 144,000 days 
13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( great Cycle) (13×1) 1,872,000 days 

இங்கு ‘கின்’ என்பது நாளையும், ‘வினால்’ என்பது மாதத்தையும், ‘டுன்’ என்பது வருடத்தையும் குறிக்கும் சொற்கள். ‘காடுன்’, ‘பாக்டுன்’ என்பன அதற்கும் மேலே! 

1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள். 

இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர். இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5×5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும் (Doomsday). 

இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிறதாகவும் மாயன்கள் சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது). இதை இன்னும் ஆழமாகச் சொல்வதானால், ஐந்தாவது சுற்றின் முதல் நாள், கி.மு. 3114ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி (11.08.3114 கி.மு) அன்று ஆரம்பித்து, 5125 வருடங்கள் கழித்து 21ம் திகதி மார்கழி மாதம் 2012ம் ஆண்டு (21.12.2012) அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப் சுற்றிப் பூர்த்தி செய்கிறது பூமி. அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப் பலர் நம்பும் இறுதி நாளாகும். 

இதுவரை மாயன் சொல்லியவற்றைப் பார்த்தோம். இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்? எங்கோ, எப்போதோ பிறந்த, யாரோ சொன்னதை நம்பி உலகம் அழியும் எனப் பயம் கொள்ள, பகுத்தறிவு அற்றவர்களா நாம்? எனவே நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம். 

இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….! 

சில காலங்களின் முன் ‘ஹபிள்’ (Hubble) என்னும் தொலை நோக்கிக் கருவியை ‘நாசா’ (NASA) வின்வெளிக்கு அனுப்பியது. அது வான்வெளியில் ஒரு ‘செயற்கைக் கோள்’ (Satellite) போல, பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வின்வெளியை அவதானித்ததில் எங்கள் நவீன வானவியல் அறிவு பன்மடங்கு அதிகரித்தது. 


இந்த ‘ஹபிள்’ மூலம் பலப் பல வானியல் உண்மைகளை நாம் கண்டறிந்தோம். அப்படிக் கண்டு பிடித்த விசயங்களில் சிலவற்றை, மாயனுடன் சரி பார்த்ததில்தான், ஆராய்ச்சியாளர்களை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கே இவர்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுமோ என்ற பயமும் கூடவே தொற்றிக் கொண்டது. 

நாங்கள் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி (Fan) போன்ற அமைப்பில் இருக்கிறது. அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் (Wings) உண்டு. அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே எமது சூரியக் குடும்பம் இருக்கிறது. 


பால்வெளி மண்டலம் கோடிக் கணக்கான நட்சத்திரங்களைத் தன்னுள் உள்ளடக்கி வெண்மையாக, ஒரு பாய் போல, தட்டையாகக் கிடையாகப் பரவியிருக்கிறது. 


எங்கள் சூரியன், தனது கோள்களுடன், இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் அசைந்து கொண்டு இருக்கிறது. அந்த அசைவு பால்வெளி மண்டலத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்திருக்கிறது. தயவு செய்து நான் இப்போ சொல்லி வருவதை மிக நிதானமாகக் கவனியுங்கள். இது கொஞ்சம் வானியல் கலந்ததாக இருப்பதால், விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். இது விளங்காத பட்சத்தில், யாரிடமாவது கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். . 

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச் சுற்றுகிறது. எங்கள் பால் வெளி மண்டலமும் அப்படித்தான் சுற்றுகிறது. ஆனால் எங்கள் சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே, மேசையில் இருக்கும் மின்விசிறி (Table fan) போல, பால்வெளி மண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது. என்னால் முடிந்த அளவுக்கு இதை படமாக வரைந்திருக்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள். 


எங்கள் பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள். 


எங்கள் சூரியன் தனது வட்டப் பாதையில் செங்குத்தாக சுற்றும் போது, பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் ஒரு குறித்த காலத்தின் பின்னர் சந்திக்கிறது. இனி நான் சொல்லப் போவதுதான் மிக முக்கியமான ஒன்று. எங்கள் சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் என்ன தெரியுமா……..? 26,000 வருடங்கள். 

அதாவது சூரியன், பால் வெளி மண்டலத்தில் தனது நகர்வின் போது, இருந்த இடத்திற்கு, ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் வருவதற்கு 26,000 வருடங்கள் எடுக்கிறது. 26,000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிச் சுற்றி, மத்திய ரேகையைச் சந்திக்கிறது. இம்முறை அந்த அச்சை நமது சூரியன் எப்போது சந்தித்தது  தெரியுமா?  2012ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் தேதி.


அதாவது மாயன்களின் நாட்களிகளின் மொத்தச் சுற்றுகளுக்கு எடுக்கும் 26000 வருடங்களும், பால்வெளி மண்டலத்தின் அச்சை அடையும் காலமான 21.12.2012 என்பதும் அச்சு அசலாக எப்படிப் பொருந்துகிறது? இத்துடன் ஆச்சரியம் தீர்ந்து விடவில்லை.

 இன்னும் ஒரு ஆச்சரியமும் இதில் உண்டு. 
சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக் குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 




ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின் ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம். ஒரு முறை நடக்காவிட்டாலும், ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படி நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். இப்படி ஒரு அறிவியல் சாத்தியங்களை சொல்லிவிடக் கூடிய ஒரு இனம் இருக்குமென்றால், நிச்சயம் அந்த இனத்தை மதித்தே தீர வேண்டும். 


சரி……! இது மட்டும்தான் மாயனின் 26000 வருசக் கணிப்புப் பற்றிய ஆச்சரியம் என்று நீங்கள் நினைத்தால், மாயன்கள் பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இது மட்டும் இல்லை……! இன்னுமொன்றும் உண்டு. அது, இதைவிட ஆச்சரியமானது. மாயனையே தலையில் வைத்துக் கொள்ளலாம் போல நினைக்க வைக்கும் ஒன்று. 



உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்த இந்தக் கணத்தில், உலக அழிவு பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். உலகம் அழியும் என்று நான் சொல்வதாக பலர் நினைக்கின்றனர். சிலர் நான் எழுதுவதில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து, உலகம் அழியும் என்று தீவிரமாக நம்பி, கொஞ்சம் பயம், கொஞ்சம் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன் உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

கடந்த தொடரில், 2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன், பால்வெளி மண்டலத்தின் (Milky way) மத்திய கோட்டை (Equator) அடைகிறது என்றும், கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐ அண்மிக்கிறது என்றும், இந்த நிகழ்வுகள் 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகள் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்லாமல் விட்டது ஒன்றும் உண்டு. அது என்ன தெரியுமா? பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும், எங்கள் பூமியும், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாக, ஒரே நேர்கோட்டில் (Alignment) வரிசையாக வருகின்றன. இந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெற்றது.

இது மட்டுமல்ல 26000 வருடங்களின் ஆச்சரியங்கள். இன்னுமொன்றும் உண்டு. அதுபற்றி இப்போது பார்க்கலாம். 

சின்ன வயதில் நீங்கள் பம்பரம் சுற்றி விளையாடியிருக்கிறீர்களா? அநேகமாக அந்தப் பாக்கியத்தைத் தவறவிட்டவர்கள் சினிமாவிலாவது பம்பரத்தின் பயன்களைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் ஒன்றைச் சுழல விட்டால், அது தன்னைத் தானே மிகவும் வேகமாகச் சுற்றும் அல்லவா? அப்போது பம்பரத்தில் நடைபெறும் வேறு ஒரு செயலையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள். அதாவது பம்பரம் சுற்றும் போது, பூமியில் தொட்டுக் கொண்டிருக்கும் கூரான பகுதி ஓரிடத்தில் நிற்க, மேற்பகுதி தலையை ஆட்டியபடியே சுற்றும். அப்படித் தலையாட்டும் பம்பரத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அதைச் சரியாகக் கவனித்திருப்பீர்கள் என்றால், அந்தத் தலையாட்டல், ஒரு கிடையான வட்டப் பாதையிலேயே இருக்கும். 


நாம் வாழும் பூமியும் 23.5 பாகையில் (degrees) சாய்ந்திருக்கும் விதமாக, ஒரு அச்சில் பம்பரம் போலச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும் பூமியும் ஒரு தலையாட்டலுடன்தான் சுற்றுகிறது. இந்தத் தலையாட்டலை ‘பிரிசெஸன்’ (Precession) என்கிறார்கள். 



எங்கள் பூமி, பம்பரம் போல மிக வேகமாகத் தலையாட்டாமல், மிக மிக மெதுவாக அந்தத் தலையாட்டலைச் செய்கிறது. பூமியின் வடபகுதி, தனது அச்சில் ஒரு இடத்தில் ஆரம்பித்து, வட்டப் பாதையில் இந்தத் தலையாட்டலைச் செய்து, மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வருகிறது. அந்தத் தலையாட்டும் வட்டத்துக்கு எடுக்கும் காலம் எவ்வளவு தெரியுமா? 26000 வருடங்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? 



இந்த ‘பிரிசெஸன்’ (Precession) பூச்சியப் புள்ளியில் ஆரம்பித்து, 360 பாகையினூடாகச் சுற்றி மீண்டும் பூச்சியப் புள்ளியை அடைய, 26000 வருடங்கள் எடுக்கிறது. அதாவது ஒரு பாகை நகர, 72 வருடங்கள் எடுக்கிறது. அவ்வளவு மெதுவான தலையாட்டல். 

“இந்தப் பிரிசெஸனில் அப்படி என்னதான் முக்கியம் இருக்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம். மிகச் சரியாக 21.12.2012 அன்று, பூமி தனது பிரிசெஸனின் முழுச் சுற்றை முடித்துப் பூச்சியத்துக்கு வருகிறது என்பதுதான் இங்கு விசேசம். இந்த பூச்சிய நிலையை ‘போலாரிஸ்’ (Polaris) அல்லது ‘போல் ஸ்டார்’ (Pole Star) என்கிறார்கள். 


சரியாகக் கவனியுங்கள்……! 21.12.2012 அன்று, காலக்டிக் ஈக்வேட்டர் (Galactic Equvator) என்னும் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சூரியன் அடைகிறது. அதனால், பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும் ‘மத்தியரேகை’ என்னும் நேர் கோட்டில் வருகின்றன. அத்துடன் எங்கள் பூமியும் அதே நேர் கோட்டில் வருகிறது. அத்தோடு நிற்காமல், இந்தப் பிரிசெஸன் என்னும் தலையாட்டலின் பூச்சியப் புள்ளியான போலாரிஸையும், பூமி 26000 வருடங்களின் பின்னர் மிகச்சரியாக அடைகின்றது. அத்தோடு டார்க் ரிஃப்டையும் மிக அண்மிக்கிறது. 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிக அற்புதமான ஒரு வானிலை வரிசையாக இதைக் கொள்ளலாம். இப்படி எல்லாமே சேர்ந்த ஒரு நிகழ்வு, அதுவும் மாயன் சொல்லிய 26000 வருடங்களில் நடைபெறுவது, ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருக்கவே முடியாது. அப்படி இருக்க முடியாது என்னும் ஆச்சரியம்தான், எல்லோரும் இந்த விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்குக் காரணமாகிறது. 

இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது, உலகம் அழியும் என்று நாம் ஏன் பயப்பட வேண்டும்? அப்படி உலகம் அழியும் அளவிற்கு என்ன விளைவுகள் ஏற்படும்? என்பது போன்ற கேள்விகளுக்கு, பதில்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதைத் தெரிந்து கொள்வதற்கு, ‘உலகம் அழியும்’ ‘உலகம் அழியும்’ என்கிறோமே, அப்படி ஒரு அழிவு ஏற்பட்டால், அது எப்படி ஏற்படும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

 உலகம் அழிவது என்றால் அது இரண்டு விதத்தில்தான் அழிய முடியும்.

1. சூரியன் அழிவதால் ஒட்டுமொத்தமாக அதனுடன் சேர்ந்து உலகமும் அழிய வேண்டும்.
2. உலகம் மட்டுமே அழிய வேண்டும்.

 இந்த இரண்டு சம்பவங்களுமே உலக அழிவின் அடிப்படையாகின்றது. இங்கு இன்னுமொரு கேள்வியும் வருகிறது. உலகம் அழிவது என்றால், மொத்தமாக உலகமே வெடித்துச் சிதறி இல்லாமல் போகுமா? அல்லது உலகம் அப்படியே இருக்க, அதில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகுமா? 

மேலே உள்ள கேள்விகளுக்கான பதில்களை, பலவிதங்களில் ஆதாரபூர்வத்தோடு விளக்கி எம்மைத் தூங்கவே விடாமல் ஒரு சாரார் செய்து கொண்டிருக்க, இல்லை, இவையெல்லாம் பொய். அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று இன்னுமொரு சாரார் சொல்லிவருகின்றனர். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இதுவரை உலகம் அழியும் என பலமுறைகள், பல விதங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. அந்த நேரங்களிலும் அழியும், அழியாது என இரு நிலைப்பாடு இருந்தது. ஆனால் அப்போது, அவையெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், நம்பிக்கைவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்குமான விவாதங்களாக அவை அமைந்தன. ஆனால் 2012 இல் உலகம் அழியும் என்பதில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கும் இருவருமே அறிவியலாளர்கள்தான். அழியும் என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான். அழியாது என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான். உண்மை இவர்கள் இருவருக்கும் இடையில் நின்று ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. 


முதலில் மேலே சொன்ன அந்த அற்புதமான நிகழ்வு நடை பெற்றால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று பார்க்கலாம். 

பால்வெளி மண்டல மத்தியும், சூரியனும், பூமியும் இருக்கும் நேர் கோட்டுத் தன்மையினால், சூரியனுக்கு ஏற்படும் ‘காஸ்மிக்’ (Cosmic) கவர்ச்சி விளைவுகளால் உருவாகும் ஈர்ப்பு விசை மாற்றங்களால், பூமியின் அச்சுத் தடம் மாற வாய்ப்புண்டு. அதாவது இப்போது 23.5 பாகை சாய்வில், வடக்குத் தெற்காக இருக்கும் பூமியின் அச்சு, இடம்மாறி பூமியின் வடதுருவம், தென்துருவம் என வேறு ஒரு இடத்துக்கு மாறிவிடும். அதனால் இப்போது உள்ள துருவங்களின் பனி (Ice) உருகி, பூமியே தண்ணீரில் மூழ்கிவிடும். இந்த விளைவுக்கு இந்தப் பிரிசெஸன் சுற்றுப் பூர்த்தியாகி போலாரிஸுக்கு வருவதுதான் காரணமாகவும் அமையலாம். அப்படி பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படால், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றக் கோள்களுக்கோ, அல்லது சூரியனுக்கோ எந்த அழிவும் வராது. பூமியில் உள்ளவை மட்டுமே தங்கள் அழிவுகளைச் சந்திக்கும். 

மேலும், பூமியின் அச்சுக்கு எதுவும் நடக்காவிட்டாலும், காஸ்மிக் கதிர்களின் அதிகபட்ச வீச்சுக்களால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும். அத்துடன் மின்காந்த விளைவுகள் உடைய கதிர்களின் தாக்கத்தால் பூமியின் உள்ள மின்சாரங்களும், சாதனங்களும் தடைப்பட்டு பூமியில் எதுவுமே இயங்காமல் நின்றுவிடும். இதற்குமேலும் உலகம் எப்படி அழியும் என்று சொன்னால் இன்று நித்திரை கொள்ள முடியாமல் போய்விடும்.எனவே சிறிது சிறிதாக அதை பற்றி பார்க்கலாம் 

எது எப்படி இருப்பினும், ஆச்சரியகரமாக மாயன்கள் சூரியனின் அழிவு, பூமியின் அழிவு என இரண்டைப் பற்றியுமே மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். பூமி அழியும் என்னும் நம்பிக்கையை ஊட்டி, உங்களைப் பயமுறுத்துவது என் நோக்கமல்ல. மாயன்கள் பூமியின் அழிவு பற்றி, என்ன சொல்லி இருக்கிறார்கள்? ஏன் சொல்லி இருக்கிறார்கள்? என்பதை மாயன்கள் சார்பாக விளக்குவது மட்டுமே என் நோக்கம். அழிவு வரலாம். வராமலும் போகலாம். ஆனால் மாயன்கள், உலக அழிவு பற்றிச் சொல்லி இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. 

ஆனால் இவ்வளவு காலமும் அனைவரும், உலகம் அழியப் போகிறது என்று அலறிக்கொண்டிருக்க, தேமே என்று இருந்து கொண்ட நாஸா (NASA) ஏனோ திடீரென விழித்துக் கொண்டது. தனது இணையத் தளம் மூலமாக உலகம் அழியாது என்பதற்கு தன்சார்பாக பல விளக்கங்களையும் அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாஸாவின் நம்பகத்தன்மையில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று பார்க்கும் போது, அங்கே தவறாக ஏதோ நெருடுவது போல இருப்பது என்னவோ உண்மை. 


சமீபத்தில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட விக்கிலீக்ஸ் (Wikileaks) இன் யூலியன் அஸ்ஸாஞ்சை (Julian Assange) உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் முடக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி முடக்கப்பட்டதற்கு காரணமே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமல்ல, வேறு மிக முக்கியமான ஒன்றுதான் அதற்குக் காரணம் என தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதற்கும் உலக அழிவுக்கும் சம்மந்தம் இருக்குமோ என இப்போது பலர் நம்புகின்றனர். 


‘கேபிள்கேட்’ (Cablegate) என்னும் பெயரால், 250000 அமெரிக்காவின் ராஜதந்திர அறிக்கைகளை அஸ்ஸாஞ் கணணி மூலம் கடத்தி வெளியிட்டார். அந்த அறிக்கைகளில் முக்கியமானதாக கருதப்பட்டது என்ன தெரியுமா? அயல் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுகள் (Unidentified Flying Object) பூமிக்கு வந்திறங்கியது என்ற செய்திகள்தான். அத்துடன் இதவற்றை நாஸாவின் மூலம் ஆதாரத்துடன் அறிந்து கொண்ட அமெரிக்க அரசாங்கம், திட்டமிட்டு அனைத்தையும் மறைத்திருக்கிறது. கடந்த வருடங்களில் மட்டுமே 400க்கும் அதிகமான சம்பவங்கள் பறக்கும் தட்டுகள் பூமியில் வந்திறங்கியது சம்மந்தமான ஆதாரங்கள் அஸ்ஸாஞ் வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கின்றது. அதுவும் குறிப்பாக பிரித்தானியாவில் பறக்கும் தட்டுகள் வந்திறங்கியது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களை அமெரிக்க ‘கார்டியன்’ (The Guardian) பத்திரிக்கைக்கு சாட் (Chat) மூலம் அஸ்ஸாஞ் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகளை ஐரோப்பாவின் மிகமுக்கிய பத்திரிக்கைகள் எல்லாமே தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன.



 பறக்கும் தட்டுகள் பற்றி எப்போது அஸ்ஸாஞ் சொல்ல ஆரம்பித்தாரோ, அப்போதே அவரை நோக்கி பாலியல் குற்றச்சாட்டுகளும் பறக்கும் தட்டுகள் போல பறந்துவரத் தொடங்கின. அரசுகள் அனைத்தும் அவருக்கு எதிராகின. அரசுகள் அனைத்துக்கும் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று அடைவதில் தயக்கம் இருக்கின்றது. அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மக்களுக்கு அதியுயர் ஸ்தானத்தில் இருப்பவை அரசுகள்தான். அவற்றையும் விட சக்தி வாய்ந்த மனிதர்கள் வேற்று உலகில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அரசுகளை மதிக்கமாட்டார்கள், கட்டுப்பட மாட்டார்கள். இதனால் நாடுகளின் சமநிலைகள் குளம்பிவிடலாம். எனவே அரசுகள் இப்படிப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு சென்றடையாமல் இரகசியமாகவே பாதுகாக்கின்றன. அப்படிப் பாதுகாப்பதில் மிக முக்கியமாக இந்த இருக்கும் ஸ்தாபனங்களில் ஒன்றுதான் நாஸா. 

நாஸா மறைத்த மிக முக்கியமான வேறு ஒன்றும் உண்டு. அது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள வேண்டியது அவசியமாகிறது. அதுகூட உலக அழிவோடு சம்மந்தப்பட்டதுதான். 


அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்ட ஸ்தாபனம்தான் ‘நாஸா’ (NASA-The National Aeronautics and Space Administration) என்பதாகும். இந்த நாஸா மூலம்தான் விண்வெளி வரலாற்றுக்குரிய ‘மிகை அறிவை’, மனித இனம் அதிக பட்சம் பெற்றுக் கொண்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. விண்வெளியை ஆராய நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவியுடன் கூடிய, செயற்கைக் கோள்தான் ‘ஹபிள்’ (Hubble) ஆகும். இந்த ஹபிள் தொலை நோக்கியால் பிரபஞ்சத்தின் பல உண்மைகளையும், இரகசியங்களையும் மனிதன் அறிந்து கொண்டான். 

ஆனாலும், விண்ணில் உள்ள அனைத்தையும் அறிந்து கொண்ட மனிதனுக்கு, ஒரு தவிர்க்க முடியாத சந்தேகம் தோன்றியது. மனிதனின் சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடிய கோடானு கோடி நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் மனிதன் பார்க்கும் அதே வேளையில், மனிதக் கண்ணால் பார்க்க முடியாத ஏதாவது, விண்வெளியில் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம். 



விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், தமக்கென சுயமான ஒளியைக் கொண்டிருப்பதால், தொலை நோக்கிக் கருவிகள் மூலம் அவற்றைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒளியே இல்லாத கோள்கள் அப்படி அல்ல. அவை இருட்டில் இருப்பதால், மனிதனால் கண்டு பிடிக்கப்படாமலே கோடிக் கணக்கில் விண்வெளியில் சுற்றித் திரிகின்றன. இப்படிப் பட்டவற்றைக் கண்டு பிடிப்பதற்கென்றே மிகுந்த செலவில், நாஸா ஒரு தொளைநோக்கிக் கருவியை கண்டுபிடித்தது. IRAS (Infrared Astronomical Satellite) என்று பெயரிடப்பட்ட அந்தத் தொலைநோக்கிக் கருவியைச் செயற்கைக் கோள் மூலம்,1983 ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி விண்வெளிக்கு அனுப்பியது. இந்தத் தொலைநோக்கிக் கருவி ‘இன்பிரா ரெட்’ (Infra Red) என்னும் கதிர்களைச் செலுத்தி, விண்ணில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அனைத்தையும் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது. நமது உடலில் ‘எக்ஸ் கதிர்கள்’ (X Rays) செலுத்தப்பட்டு, அது உடம்பை ஊடுருவி எலும்புகளைப் படம் பிடிப்பது போல, இந்தத் தொலைநோக்கிக் கருவியும், இன்பிரா சிவப்புக் கதிர்களைச் செலுத்தி விண்வெளியை ஆராய்ந்து படமெடுக்கிறது. 



‘IRAS’ விண்வெளியை ஆராய்ந்த போது, தற்செயலாக கோள் ஒன்றைக் கண்டு பிடித்தது. எமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால், சிவப்பு நிறத்தில் ஒரு வட்ட வடிவமான கோள் போன்ற ஒன்றை அது படம் பிடித்தது. அந்தக் கோளை மேலும் ஆராய்ந்த போதுதான் நாஸாவுக்கு அந்தப் பயங்கரம் உறைத்தது. அதாவது அந்தக் கோள், மிகச் சரியாக எமது பூமியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்தப் பயங்கரம்.


 ‘இது என்ன புதுக் கதை’ என்று அதை மேலும் மேலும் ஆராய்ந்த நாஸா, திடீரென அந்தத் தொலை நோக்கிக் கருவியை விண்ணிலிருந்து கீழே இறக்கியது. தனது ஒட்டு மொத்தத் திட்டத்தையே இடை நிறுத்தி மண்ணுக்கு வந்தது IRAS. காரணம் கேட்டால், அந்தத் தொலை நோக்கிக் கருவி பழுதடைந்து விட்டதாக ஒரு காரணத்தையும் நாஸா சொன்னது. 

இந்த விசயம் பல அறிவியலாளர்களளுக்கும், மக்களுக்கும் நாஸாவின் மேல் சந்தேகம் ஏற்படக் காரணமாக அமைந்தது. நாஸா சொன்ன காரணங்களைப் பலர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நாஸா எதையோ மறைக்கிறது என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச் சென்றது அந்தச் சந்தேகம். ஆனால் நாஸாவோ அந்தத் தொலை நோக்கிக் கருவியைப் பாதுகாக்கும் குளிர்பதன வசதி கெட்டு விட்டதாகவும், அதனால்தான் அந்த தொலை நோக்கிக் கருவி மண்ணுக்கு இறக்க வேண்டி வந்தது என்றும் சளைக்காமல் சொன்னது. 

உண்மையில் ‘IRAS’ கண்ட அந்தக் கோள்தான் என்ன? அந்தக் கோளைக் கண்டவுடன் ஏன் நாஸா தனது ஆராய்ச்சியையே இடை நிறுத்தியது? அப்படி என்னதான் அந்தக் கோளில் நாஸாவே பயப்படும்படியான பிரச்சனை உண்டு? இப்படிப்பட்ட பல கேள்விகளை பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கேட்கத் தொடங்கினர். 

முடிவில் அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்தது. அந்த விடை ‘சுமேரியர்’ (Sumerian) என்னும் மிகப் பழமை வாய்ந்த ஒரு இனத்தின் கல்வெட்டுகளிலும் கிடைத்தது. விடை கிடைத்தாலும் அது பயங்கரமானதாகவே இருந்தது. 

அந்தக் கோள்தான் நவீன விஞ்ஞானிகளால் ‘ப்ளானெட் எக்ஸ்’ (Planet X) என்று பெயரிடப்பட்டதும், ஆதிகால மனிதர்களால் ‘நிபுரு’ (Niburu) என்று பெயரிட்டதுமான, பூமியில் வாழும் அனைவருக்கும் எமனாக வந்த கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இந்தக் கோள் பூமியை 21.12.2012 அன்று தாக்கும் என்பதுதான் மேலதிகமாக இதில் கிடைக்கப்பட்ட பயங்கரமான செய்தியுயாகும்.


 நாஸா அனுப்பிய IRAS தொலை நோக்கிக் கருவி, எமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அருகே, பூமியை விட மிகப் பெரிதாக ஒரு கோளைக் கண்டு பிடித்தது. இதுவரை இப்படிப் பல கோள்கள் விண்வெளியில் கண்டு விஞ்ஞானிகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், இந்தக் கோள் ஒரு விசேசமானதாகக் காணப்பட்டது. காரணம் இந்தக் கோள் நகர்ந்து வரும் பாதை சூரியக் குடும்பத்தை நோக்கியதாகவும், குறிப்பாக பூமியை நோக்கிய நகர்வாகவும் இருந்ததுதான். 

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் போது, IRAS என்னும் நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவி கண்டு பிடித்த அந்தக் கோள், எப்படிச் சூரியனை நோக்கி நகர முடியும் எனப் பார்த்த போது கிடைத்தது ஒரு ஆச்சரியமான பதில்.



 பிளானெட் X என்னும் அந்தக் கோள் சூரியனின் ஈர்ப்பு விசையில், சூரியனையே சுற்றி வருகின்றது என்பதும், சூரியனைச் சுற்றிவரும் ஒன்பதாவது கோளாக அது இருக்கிறது என்பதும்தான் ஆச்சரியப்படத் தக்க அந்த விசயம் (புளூட்டோவை கோள் என்று எடுத்துக் கொள்ளவில்லை). இப்படி ஒரு கோள் சூரியனைச் சுற்றுகிறது என்ற சந்தேகம் ஏற்கனவே விஞ்ஞானிகளுக்கு இருந்திருக்கிறது. ஆனாலும் அதற்கு ஆதாரம் இல்லாமலே இருந்தது. IRAS இன் வின்வெளிப் பயணத்தின் பின்னர் அந்தச் சந்தேகம் சற்றே விலகத் தொடங்கியது. பிளானெட் X என்பது சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுவது போல இல்லாமல், வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் சுற்றுவதை படத்திலிருந்து நீங்கள் அவதானிக்கலாம். இதற்கும் காரணம் உண்டு. 



எமது அண்ட வெளியில் இருக்கும் அநேகமான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாகவே (Binary Stars) இருக்கின்றன. இப்படி இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள், தம்மைச் சுற்றிக் கொள்ள தமகக்கெனக் கோள்களைத் தனித்தனியே கொண்டிருந்தாலும், அவை இரண்டையும் சேர்ந்து பொதுவாகச் சுற்றும் கோள்களையும் கொண்டிருக்கும். சில இரட்டை நட்சத்திரங்கள், தாமே ஒன்றை ஒன்றும் சுற்றிக் கொள்ளும். எமது சூரியனுக்கு அடுத்ததாக, அண்மையில் இருக்கும் நட்சத்திரமான ‘அல்பா சென்டாரி (Alpha Centauri) என்னும் நட்சத்திரம் கூட முன்னர் ஒரு நட்சத்திரம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் அது அல்பா சென்டாரி a, அல்பா சென்டாரி b (Alpha Centauri A, Alpha Centauri B) என்று இரட்டை நட்சத்திரங்கள் அருகருகே இருந்ததால் ஒரே நட்சத்திரம் போல இருந்தது.


 இந்த அல்பா சென்டாரி போல, எங்கள் சூரியனுக்கும் இன்னுமொரு இரட்டைச் சூரியன் உண்டு என்றும், அவை இரண்டையும் சுற்றும் ஒரு கோளாகத்தான் இந்த பிளானெட் X இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் (இங்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது). இதன்படி பிளானெட் X மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுகிறது. 




இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 12ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன், பிளானெட் X என்னும் கோள், பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AU தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் X இருக்கும். அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம். 

இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது எமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை. ஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. ஆனாலும் நாஸா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது. எவ்வளவு காரணம் கேட்டாலும், நாஸா “அப்படி ஒரு கோளை நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லை” என்றும், “குளிர்சாதனக் கருவி பழுதடைந்ததால்தான் IRAS ஐ கீழே இறக்கினோம்” என்றும் அடம் பிடிக்கும் குழந்தை போலச் சொல்லிக் கொண்டு வருகிறது. இந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்று, அமெரிக்கப் பத்திரிகைகளான ‘நியூயோர்க் டைம்ஸ்’ (New York Times), வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாகப் போட்டுடைத்தன. 




நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் ‘பிளானெட் எக்ஸ்’ (Planet X) என்று பெயர் கொடுத்தாலும், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பதேமியாவில் (Mesopotamia) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு ‘நிபிரு’ (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர். மொசப்பதேமியா என்பது ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே அமைந்திருந்த ஒரு பண்டைய நிலப்பகுதியாகும். அவர்கள் நிபிரு பற்றி என்ன சொன்னார்கள் என்று விளக்குவதற்கு, நான் எங்கள் மாயன்களின் கடவுளான ‘குக்கிள்கான்’ (Kukilcan) என்பவரிடம் அழைத்துச் சென்று உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இதுவரை மாயன்கள் இங்கு எங்குமே சம்மந்தப்படாமல் இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போ அமைகிறது. 

மாயன்களின் கடவுள்களில் ஒருவர்தான் குக்கிள்கான். இவர் மனித வளர்ச்சிக்கும், கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார். மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள ‘சிஷேன் இட்ஷா’ (Chichen Idza) என்னுமிடத்தில், குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிட் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லியிருந்தேன். 



குக்கிள்கானுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பிரமிட்டின் படிகளின் அமைப்பு 365 நாட்களைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளது. அத்துடன் வேறு ஒரு அதிசயத்தாலும் உலக உல்லாசப்பிரயாணிகள் எல்லாரையும் அது கவர்ந்துள்ளது. அந்த அதிசயம் என்னவென்று பின்னர் சொல்வதாக முன்னர் சொல்லியிருந்தேன். ஆனாலும் இப்போதும் கூட அதை சொல்ல முடியவில்லை. அதை நான் தனியாகவே ஒரு அத்தியாயத்தில் எழுத வேண்டும். எனவே அதை இனி வரும் அதியாயங்களில் தருகிறேன். 

தனது கையில் ஒரு பாம்பை வைத்திருக்கும் இந்தக் குக்கிள்கான், உண்மையில் மாயன்களின் கடவுளா? அல்லது அவர் ஒரு அரசரா? என்று ஆராய்ந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். குக்கிள்கானின் சிலை ஒன்று, அவருக்கு என்று அமைக்கப்பட்ட பிரமிட்டிலேயே செதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சிலையையும், மாயன்களின் சித்திர எழுத்துகளையும் ஆரய்ந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்தனர். 


குக்கிள்கான், வெள்ளை நிறத்தவராகவும், நீலக் கண்களை உடையவராகவும், வெள்ளைத் தலை முடியைக் கொண்டவருமாக இருந்திருக்கிறார் என்பதையே அவர்கள் கண்டு கொண்டனர். அத்துடன் அவரது தலை பின் பக்கம் நீண்டதாகவும் இருந்திருக்கிறது. இவை எவையும் மாயன்களின் அடிப்படைத் தன்மைக்கு சற்றும் ஒத்துவராத சாயலாக இருந்திருக்கிறது. மாயன்கள் கருத்த நிறமும், தலைமுடியும் கொண்டவர்கள். 


இதனடிப்படையில் மேலும் ஆராய்ந்து பார்த்த போது, குக்கிள்கான் கடவுளாக இருப்பதற்குப் பதிலாக அவர் ஒரு மனிதனாகவ, மாயன்களின் அரசராக இருந்ததற்குச் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர் மனிதனாக இருந்த பட்சத்தில், நிச்சயமாக அவர் மாயன் வம்சத்தில் உள்ள ஒருவராக இருந்திருக்க முடியாது. 



அப்படியானால் இந்தக் குக்கிள்கான் யார்? மாயன் அல்லாத வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்திருப்பார்? 

ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குக்கிள்கான் அயல் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஏலியனோ என்றும் சந்தேகித்தனர். ஆனால் அப்படி இல்லை என பின்னர் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் முடிவுக்கு வருவதற்குக் காரணமும் ஒன்று உண்டு. 

மாயன்களின் பதிவின்படி, குக்கிள்கான் மாயன்களுடன் இருந்து பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து விடைபெற்றுச் செல்கிறார். அப்படிச் செல்ல முடிவெடுத்த குக்கிள்கான் கடல் வழியாகவே கிழக்கு நோக்கிச் செல்கிறார். அத்துடன் அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியும் விடைபெறுகிறார். சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதன் பின்னரே மாயன்களின் அழிவும் ஆரம்பித்திருக்கிறது.

 அப்படியென்றால் குக்கிள்கான் கடல் வழியாக எங்கே சென்றிருப்பார் என்று ஆராய்ந்து பார்த்தால், குக்கிள்கான் சென்ற இடம் ‘சுமேரியா’ (Sumeria) எனத் தெரிய வந்தது. அவர் சொந்த இடம் செல்வதாகச் சொன்னபடியால் அவர் சென்ர இடம் சுமேரியாவாகவே இருந்திருக்க வேண்டும். இதுவரை மாயன்கள் பற்றி பெருமையுடன் சொல்லி வந்தாலும், அவர்கள் சரித்திரம் 4000 ஆண்டுகள் கொண்ட வரலாறாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் சுமேரியரின் வரலாறோ 10000 வருடங்களுக்கு முந்தயது. உலக நாகரீகங்களிலேயே மிகவும் தொன்மையான நாகரீகம் சுமேரிய நாகரீகமாகத்தான் இருந்திருக்கிறது. 


எம்மை வியக்க வைக்கும் அறிவுடன் ஆச்சரியப்படுத்திய மாயனுக்கே, அந்த அளவுக்கு அறிவைப் புகுத்தியது குக்கிள்கான் என்ற ஒரு சுமேரியர் என்றால், அந்தச் சுமேரியர்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்க வேண்டும்? 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல், தொழில் நுட்பம் ஆகிய அனைத்திலும் சுமேரியர் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு பல தொல்லியல் ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. மாயன்கள் வைத்திருந்த ‘கிறிஸ்டல் மண்டையோடுகள்’ கூட (Crystal Skulls) சுமேரியாவில் இருந்துதான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்றால், நீங்களே சுமேரியர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள். 


ஆனாலும், இப்போது சுமேரியரைப் பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம். அதனால் மிகவும் சுவாரஷ்யமான சுமேரியர் பற்றிய பல தகவல்களை உங்களுக்கு என்னால் சொல்ல முடியவில்லை. அது நிச்சயம் உங்களுக்கு ஒரு இழப்புத்தான். எனவே மாயனின் உலக அழிவுடன் சம்மந்தப்பட்ட சுமேரியரின் தகவலை மட்டும் தொட்டுச் செல்கிறேன். 

சுமேரியர்களின் அரசர், வேறு சிலருடன் உரையாடும் காட்சி உள்ள ஒரு சுவர் ஓவியம் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தச் சுவர் ஓவியம் மிகச் சாதாரணமாகவே முதலில் பார்க்கப்பட்டது. ஆனால் தற்செயலாக அதில் ஒரு இடத்தில் வடிவமைக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் படத்தைப் பார்த்த போதுதான் ஆச்சரியம் தோன்றியது. 



அந்த ஓவியத்தில், எமது சூரியன் மையத்தில் இருக்க, அதைச் சுற்றி சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும், அதன் அதன் வரிசையில் வரையப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், அந்தக் கோள்களின் அளவுகள் கூட கொஞ்சமும் பிசகாமல் வடிவமைக்கப் பட்டிருந்தன. 



மிகச் சமீபத்தில்தான், நவீனமான நாங்களே சூரியனைத்தான் மற்றக் கோள்கள் சுற்றுகின்றன எனக் கண்டு பிடித்தோம். அதுவரை பூமியைத்தான், சூரியன் உட்பட மற்றக் கோள்கள் சுற்றுகின்றன என நினைத்திருந்தோம். ஆனால் சுமேரியர்களோ, சூரியனை மையப் பகுதியில் வைத்ததுமில்லாமல், அனைத்துக் கோள்களையும் அதனதன் உருவ அளவுகளிலும் வடிவமைத்திருக்கிறார்கள். 



அத்துடன் நவீன விஞ்ஞானமே ‘நெப்டியூன்’ (Neptun), ‘புளூட்டோ’ (Pluto) ஆகியவற்றை சமீபமாகக் கண்டு பிடித்த வேளையில், சுமேரியர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அவற்றை மிகச் சரியாகக் கண்டு பிடித்திருந்தனர். இது எப்படிச் சாத்தியம்? நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இது? அதுவும் வெற்றுக் கண்களால் பார்த்துக் கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. 

சுமேரியர்களின் ஓவியத்தில் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இந்தப் பதிவுக்குக் காரணமே அந்த ஆச்சரியம்தான். அது என்ன தெரியுமா……? பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்று சொல்லப்பட்ட, நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளும் அதில் காணப்பட்டது. 





நுணுக்கமாக அமைந்த அவ்வோவியத்தில் சூரியனை மொத்தமாக பதினொரு கோள்கள் சுற்றுவதாக வரையப்பட்டிருந்தது. அது எப்படி பதினொரு கோள்கள் வரும் எனப் புரியாமல் தவித்தனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்வளவு நுணுக்கமாக, சூரியன், வியாழன், சனி, பூமி, செவ்வாய் என அனைத்துக் கிரகங்களையும் அளவு கணக்கில் மிகச் சரியாக கணித்த சுமேரியர்கள் இப்படி ஒரு மாபெரும் தவறை விட்டிருப்பார்களா…? 

பின்னர் சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும், கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்தது. அதன்படி அவர்கள் சுவரில் வரைந்திருக்கும் பதினோராவது கோளை ‘நிபிரு’ எனச் சொல்லியிருக்கிறார்கள். சுமேரியன் மொழியில் ‘நிபிரு’ என்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம். எப்படி, இப்படி ஒரு அர்த்தம் வரும் வகையில் அவர்கள் பெயரிட்டிருக்க முடியும்?

 இவ்வளவுக்கும் காரணமான நிபிருவால் பூமிக்கு 2012 மார்கழி மாதம் அழிவு உண்டுதானா? அல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், “ச்சே! அப்படி எதுவும் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை” என்றுதான் நானும் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் எம்மைச் சுற்றி சிலாரால் இரகசியமாகச் சுற்றப்பட்டு வரும் சதிவலை பற்றி அறிந்ததிலிருந்து அப்படிச் சொல்ல முடியவில்லை. அது உண்மையோ, பொய்யோ என்று கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் உறக்கமே வரமுடியாது. 

அது உண்மையாக இருந்தால் நீங்கள் கூட உறங்க மாட்டீர்கள். அப்படி என்னதான் எம்மைச் சுற்றிச் சதி நடக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்!



 “அறிவியல், அறிவியல் என்று இதுவரை காலமும் எமக்குப் படம் காட்டிவிட்டு, திடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்” என்று நீங்கள் என்னைப்பற்றி, கடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம். “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறது” என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான், உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, மாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை ‘ஆ’ எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறது. பல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன். 

ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி….,
1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ (Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.
2. பூமியின் வட, தென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம் மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.
3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid) ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.
4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.
5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.

 இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும், அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, அந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான். 



இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டு, எந்த அளவுக்குப் பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள, எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லை. நாட்டின் நலன்களும், நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம். அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றன? உண்டு, இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை? மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்? 

இவற்றைக் கூர்மையாகப் பார்த்தால், உலக மக்களைச் சுற்றி, அவர்களை அறியாமலேயே ஒரு மிகப் பெரிய சதிவலை பின்னப்பட்டு வருகிறதோ எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தச் சதிக்குக் காரணமாக இருப்பவர்கள் உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளே என்னும் சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. எனது தனிப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையை மட்டும் வைத்து, இந்தச் சதிகள் பற்றிச் சாதாரணமாக உங்களுக்கு நான் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் பாதுகாப்பு நிறைந்தவனோ, பெரியவனோ கிடையாது. இவற்றை வெளி உலகுக்கு வெளியிடத் துணிச்சலும், பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது. காரணம், இங்கு குற்றம் சாட்டப்படும் சக்திகளின் வீரியம் மிகப் பெரியது. 

நான் சொல்லப் போகும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே பலர் கருத்து வெளியிட்டிருந்தாலும், அதில் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒருவரைக் குறிப்பிட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர் பெயர் ஜெஸ்ஸி வென்டூரா (Jesse Ventura). அமெரிக்க மல்யுத்தம் (American Wrestling) என்னும் மிகப் பயங்கமாக மோதும் மல்யுத்தப் போட்டிகளை, நீங்கள் நிச்சயம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அந்த மல்யுத்தத்தில் ஒரு பிரபலமான வீரராக இருந்தவர்தான் இந்த ஜெஸ்ஸி வென்டூரா. இவரை நாம் ஒரு மல்யுத்த வீரர் என்னும் சிறிய கூட்டுக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி இவர் பன்முகத் தன்மை கொண்டவர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னொல்ட் ஸ்வார்ட்ஸநெகர் (Arnolt Schwarzenegger) போல, ஜெஸ்ஸி வென்டூராவும் அமெரிக்காவின் மினஸொட்டா (Minnesota) மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கிறார். அத்துடன் இவர் ஒரு சினிமா நட்சத்திரமும் கூட. பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில் விசேசம் என்னவென்றால் இவரும் ஸ்வார்ட்ஸநெகரும் சேர்ந்து ‘பிரெடேட்டர்’ (Predator) என்னும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளனர். 



தற்போது இந்த ஜெஸ்ஸி வென்டூரா, உலகில் நடக்கும் சதிகளைத் தொலைக்காட்சி மூலம், வெட்ட வெளிச்சத்துக்குத் துணிச்சலாக கொண்டுவருகிறார். நான் இனி தரும் விபரங்கள் இவரும், வேறு பலரும் வெளிக்கொண்டு வந்தவையாக இருக்கும். ஆனாலும் ஆதாரத்துக்காக, ஒருவரையாவது உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நிலையில் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 

இனி நான் தரும் எல்லாமே அதிர்ச்சி தரும் தகவல்களாகவே இருக்கும். எனது தொடரின் உச்சக்கட்டமாக அமைவதும் இவைகளாகத்தான் இருக்கும். இவற்றை நீங்கள் வாசிக்கும்போது, உங்களால் நம்பவே முடியாமல் போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே தயங்காமல், நான் தரும் தகவல்களையும், பெயர்களையும் கொண்டு கூகிள் (Google) மூலமாகவும், யூட்யூப் (Youtube) மூலமாகவும், வேறு இணையத் தளங்கள் மூலமாகவும் தேடினீர்களென்றால், தகவல்கள் அருவி போல கொட்டும். 

இதற்கு மேலும் இது பற்றி விளக்கிக் கொண்டிருக்காமல் விசயத்துக்குப் போகலாம் வாருங்கள்…….!

 உலக மக்கள் அனைவரையும் உண்மையை அறிய விடாமல் தடுக்கும் இந்த சக்திகள் யார்? ஏன் இவர்கள் தடுக்கிறார்கள்? என்பன மில்லியன் டாலர் கேள்விகள். இந்த மில்லியன் டாலர் கேள்விகளுக்குப் பதில், பல இடங்களிலிருந்து எமக்குக் கிடைக்கிறது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். முதலில் நாம் அமெரிக்காவில் உள்ள ‘கொலராடோ’ (Colorado) மாநிலத்தில் அமைந்த ‘டென்வெர் விமான நிலையத்தில்’ (Denver Airport) இருந்து எமது தேடலை ஆரம்பிக்கலாம். நீங்களும் ஒருதரம் ஆசுவாசமாக மூச்சை விட்டுக் கொண்டு வாசிப்பதற்குத் தயாராகுங்கள்……..! 



சாதாரணமாகப் பார்த்தால் பயணிகள் சுறுசுறுப்பாகப் பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம்தான் இது. ஆனால், அந்தப் பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விசயம் நடந்து கொண்டிருக்கிறது. பின்னர் எப்படியோ, இப்படி ஒன்று நடப்பது மெது மெதுவாக கசியத் தொடங்கியதும்தான் மீடியாக்களும் மக்களும் பயத்தில் விழித்துக் கொண்டனர். ஐக்கிய அமெரிக்கப் (USA) பெரு நிலத்தில், நட்ட நடுவே அமைந்தது இந்த டென்வெர் விமான நிலையம். விமான நிலையத்துக்குக் கீழே, மிக ஆழத்தில் பலர் தங்கியிருக்கக் கூடிய கட்டடங்கள், அமெரிக்க அரசினாலேயே அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கப்படும் சுரங்க கட்டடத்தின் நீள அகலம் எட்டுச் சதுரக் கிலோ மீட்டருக்கும் அதிகம். இவ்வளவு மிகப்பெரிய பிரமாண்டமான நிலக் கீழ் கட்டடங்கள், மிக ஆழத்தில் அதுவும் ஒரு விமான நிலையத்திற்கும் கீழே கட்டப்படுவதன் காரணம் என்ன? 





இந்த நிலக் கீழ் கட்டடங்கள் எந்த ஒரு அழிவுகளினாலும் பாதிக்கப்பட முடியாதவாறு மிகமிகப் பலம் வாய்ந்த முறையில், நவீனமாக அமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படுவது பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாமல் மிக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. பாதுகாப்பென்றால், எப்படிப்பட்ட பாதுகாப்பென்று நினைக்கிறீர்கள்? அமெரிக்க இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடம் அமைப்பவர்களிடம் இது பற்றிக் கேட்டால் கிடைக்கும் பதில் மௌனம் மட்டும்தான். 




மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால், பலமான பாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போது, பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. அதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்? எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன. 

கட்டடம் கட்டப்படும் இடத்தில், ‘New World Airport Commission’ என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால், அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாக, எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், ‘நியூ வேர்ல்ட் ஆர்டர்’ (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால், பல உண்மைகளையும், பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. 


“அட! அவர்களா நீங்கள்?” என்ற ஆச்சரியத்துடன் இதை ஆய்வுக்குட்படுத்தியபோது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாது. ஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில், சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர். யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவற்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உலகின் பணக்காரர்கள் எல்லோரும், ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல், மிகமிக இரகசியமாக. 

சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்? ஏன் விமான நிலையத்துக்குக் கீழே, நிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன? உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களா? அந்த ஒரு சிலரில் நானோ, நீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும், உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான் காப்பாற்றப்படுவார்களா? 

இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே, சமீபத்தில் வெளிவந்த ’2012′ என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம். ஆனால், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்தப் படம் எடுக்கப்பட்டதே, உலகம் அழியுமானால், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும், கோடீஸ்வரர்களும், அதியுயர் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள். 



உலக அழிவு பற்றிய பயத்தினால், நாம் இப்படி எல்லாம் அவர்களைப் பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான், டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான். பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும், மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா? விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாக, மிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்ல, உலக அழிவைப் பற்றித்தான். 

விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம். மேலே உலக அழிவைச் சொல்லும் சித்திரங்கள். கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில், குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள், சவப்பெட்டிகள், மனித அவலங்கள் எனச் சித்திரங்கள் வரைவார்களா……..? ஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள். அந்தச் சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்………! 








படங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு உங்களுக்குத் தர முடியவில்லை. 

அதிகம் எதற்கு? எந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களா? அதுவும் இருக்கிறது அங்கே! 



எல்லாம் சரி, உலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலக அழிவா…? அதுவும் அங்கே காணப்படுகிறது. மாயன் இனத்துச் சிறுமி ஒருத்தி, மாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது. இது மேலதிக பயத்தை எமக்கு ஏற்படுத்துகிறது. அதையும் பாருங்கள். 



இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா…? 

இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றன. ஒரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவை. ஆனால் ஏன்…..? 

இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போல, அமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாக, பல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எதற்கு? இவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றை அமைப்பார்களா..? 




மேலே படங்களில் உள்ளவை, அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள். வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை. 

அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால் வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றன. ஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்ல. அங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப் படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள். இதனாலேயே நான் முன்னர் சொன்ன ’2012′ என்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூட, உலக உயர் சக்திகள் சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள். 

இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவை. இதைவிட இன்னுமொன்றும் உண்டு. அதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவும் தெரிந்து விட்டால், உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில், அழியும் என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா, ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும். 

நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் மலைகளும், அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும். இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா…? சொல்கிறேன்……!


உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, மலைகளைக் குடைந்து, நிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. உலகம் அழிந்தாலும், இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன.


உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் உருவாகும் மாற்று உலகத்தில், அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போது, இல்லாத அழிவு ஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக?




இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்? பூமியின் வட, தென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள், குளிர்ப் பிரதேசங்களாகவும், குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா?



உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின், மரங்களைப் பாதுகாக்கும் இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம். அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால், வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா? 

மனிதர்கள் அங்கே! மரங்கள் இங்கே! என்ற இந்த புத்திசாலித்தனமான செயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார்? இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள்? உலகப் பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது? நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவா? அவர்கள் யார் என்பதையும், அவர்களால் இன்னும் என்ன என்ன சதிவலைகள் பின்னப்படுகின்றன?
                                                                                                                                                   -தொடரும்-