disalbe Right click

Monday, April 4, 2016

சிசேரியன்


சிசேரியன் - என்ன செய்ய வேண்டும்?

பிரசவம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு; ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பரபரப்பு. எல்லா பெண்களுக்கும் `சுகப் பிரசவம்சாத்தியமாவது இல்லை. பல்வேறு காரணங்களால் சில பிரசவங்களில் சிசேரியன் அவசியமாகிறது. உலகம் முழுதும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிசேரியன் அறுவைசிகிச்சை முறை இருக்கிறது. ரோமானியப் பேரரசர் சீசர் அப்படியான அறுவைசிகிச்சையில் பிறந்தவர்தான் என்கிறது வரலாறு.
நெருக்கிய உறவினருக்கு சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. நார்மல் டெலிவரி ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், எப்படி சிசேரியன் என்று கேட்டேன், “டாக்டர் குறிப்பிட்ட நாளில் நான் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கே, எனக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அலறினார். அந்த பயத்தில், எனக்கு சிசேரியன் செய்திடுங்க பிளீஸ் என்று நான் அலற ஆரம்பித்துவிட்டேன். கடைசியில், எனக்கும் சிசேரியன்என்றார்.
இன்று பல பெண்கள், `சிசேரியனே வலி இல்லாத பிரசவத்துக்குச் சிறந்த வழிஎன, சுகப் பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாக முன்வந்து சிசேரியன் செய்துகொள்கின்றனர். சிலர், ஜோதிடத்தை நம்பி சிசேரியன் செய்கின்றனர். பொதுவாக, சுகப் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன், சுகப் பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன் என இரண்டு வகைப்படும்.
கருவுற்று 38-வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தையை வெளியே எடுப்பது சுகப் பிரசவம். இதற்கு, பெல்விஸ், பேசேஜ், பவர், பாசஞ்சர் எனும் நான்கு ‘P’ முக்கியம்.
பெல்விஸ்என்பது இடுப்புக் குருத்தெலும்புப் பகுதி. `பாசேஜ்என்பது கர்ப்பப்பையில் இருந்து செர்விக்ஸ், வெஜைனா வழியாகக் குழந்தை பயணிக்கும் பாதை. `பவர்என்பது பிரசவத்தின்போது கர்ப்பப்பையில் இயற்கையாக உருவாகும் அழுத்தம். குழந்தையை `பாசஞ்சர்’ (பயணி) என்கிறோம்.
உயரம் குறைந்த பெண்களின் இடுப்பு எலும்பின் சுற்றளவு சிறிதாக இருக்கும். இது, செபலோபெல்விக் டிஸ்புரோபோர்ஷன் (Cephalopelvic disproportion (CPD) எனப்படும்.
உடலுறவின்போது விந்து கர்ப்பப்பைக்குள் செல்ல அனுமதிக்கும் பாதை, செர்விக்ஸ். விரிந்து சுருங்கும் தன்மை உடைய இதன் சராசரி குறுக்கு அளவு இரண்டு முதல் மூன்று செ.மீ. கரு உருவான உடன் இது இறுக மூடிக்கொள்ளும். பிறகு, பிரசவத்தின்போது குழந்தை இதன் மூலமாகவே வெளியே வரும். முதல் சுகப்பிரசவத்துக்குப் பிறகு இதன் சுருங்கி விரியும் தன்மை சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.
நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால், வெளியேற முடிவது இல்லை. குழந்தையின் மிருதுவான மண்டைஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும். இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதைத் தவிர்க்க, சிசேரியன் செய்யப்படுகிறது.
பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வர முற்சிக்கும்போது, தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். திரும்பத் திரும்ப அழுத்தும்போது, சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது, `பிஸ்டுலாஎனப்படுகிறது. இதைத் தவிர்க்க சிசேரியன் பயன்படும்.
கர்ப்பப்பையில் உள்ள நீரில் மிதக்கும் சிசுவானது கை, கால்களைக் குறுக்கிக்கொண்டு மடங்கி இருக்கும். இந்த நிலையில் இல்லாமல் குழந்தையின் எலும்பு, உடல் தசை வளர்ச்சி அதிகமாக இருந்தால் குழந்தை செர்விக்ஸ் வழியாக வெளியேறுவது கடினம்.
பிரீச் பொசிஷன் (Breech position)
பிரசவ வலி வந்ததும் குழந்தை, தானாகத் தலைகீழாகத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாமல் போனால், `பிரீச் பொசிஷன்எனப்படும். இந்த நிலையில், முதலில் குழந்தையின் தலை வெளிவருவதற்குப் பதிலாக, கால் மற்றும் புட்டம் வெளியே வரும். இந்த பொசிஷனில் பல குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. ஆனால், தலை கடைசியாக வெளிவருவதால், மூளைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இந்த நிலை இருந்தால், சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
ட்ரான்ஸ்வெர்ஸ் லெய்டு (Transverse laid)
37 வாரங்கள் முடிந்தும் குழந்தை மேலிருந்து தலைகீழாகத் திரும்புகையில், இடையே அகப்பட்டு திரும்ப முடியாமல் மாட்டிக் கொள்ளும். இந்த நிலையிலும் சிசேரியன் செய்யப்படும்.
பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia)
கரு உருவானதும் பிளசன்ட்டா எனப்படும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இது வட்டு வடிவில் கருஞ்சிவப்பாக இருக்கும். இது சராசரியாக 23 செ.மீ நீளமும், மூன்று செ.மீ உயரமும் இருக்கும். இது, தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்தும். தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யும். ஒன்பது மாதங்களாகக் கரு முழு வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும். இது, கர்ப்பப்பையின் மேல் சுவரில் உருவாகி இருந்தால் பிரச்னை இல்லை. கீழ் சுவரில் (லோயர் யூட்ரின் செக்மென்ட்) உருவானால், அதுவே குழந்தை வெளியேறத் தடையாக இருக்கும். பிரசவத்தின் போது பிளசன்டா இவ்வாறு பாதையை அடைத்துக்கொண்டால், தாய்க்கு அதிகமான ரத்தப்போக்கு உண்டாகும். ஆனால், வலி இருக்காது. இந்த நிலையே பிளசன்டா ப்ரேவியா எனப்படும். இந்த நிலையில் சிசேரியன்தான் குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி. இந்தக் கோளாறு நிறைய முறை கருக்கலைப்பு செய்பவர்கள், ஏற்கெனவே சிசேரியன் ஆனவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
ஜெனிடல் ஹெர்பீஸ் (Genital Herpies)
பிறப்புறுப்புப் பாதையில் வரும் தொற்றுதான், ஜெனிடல் ஹெர்பீஸ். குறிப்பாக, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்கள் தாக்கப்பட்ட தாய்க்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். சுகப்பிரசவத்தின்போது குழந்தைக்கும் இந்தத் தொற்று பரவும். எனவே, இவர்களுக்கும் சிசேரியன் அவசியம்.
ஃபீட்டல் டிஸ்ட்ரெஸ் (Fetal distress)
இது தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்ட நிலை. சில குழந்தைகளின் தொப்புள்கொடி மிக நீளமாக இருக்கும். கர்ப்பப்பையில் சிசு மிதக்கும்போது, கழுத்தில் சுற்றிக்கொள்ளும். ஒரு சுற்று சுற்றி இருந்தால், சுகப் பிரசவம் செய்ய முடியும். ஐந்தாறு சுற்று சுற்றி இருந்தால், குழந்தையின் சுவாசம் தடைப்படும். இதயத் துடிப்பு சிக்கலாகும்.
மல்ட்டிபிள் பர்த் (Multiple birth)
இரட்டைக்குழந்தைகளில், முதலில் வெளியே வர வேண்டிய குழந்தையின் தலை வெளியே வராமல் புட்டம் வந்தால், கண்டிப்பாக இரண்டு குழந்தைகளையும் சிசேரியன் மூலமாகவே வெளியே எடுக்க வேண்டும். பொதுவாகவே, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு பிளசன்ட்டா ப்ரேவியா இருக்க வாய்ப்புகள் அதிகம். ஓட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகளை வெளியே எடுக்க சிசேரியன்தான் ஒரே வழி.
சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?
பலருக்கும் உள்ள பொதுவான சந்தேகம், முதல் சிசேரியன் ஆன பிறகு, அடுத்து சுகப் பிரசவம் சாத்தியமா என்பதுதான். சிலருக்குச் செங்குத்தாகத் தோலைக் கிழித்து சிசேரியன் செய்தால், அடுத்து சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என முடிவுக்கு வந்துவிடுகின்றனர். சிசேரியனின்போது தோல் எவ்வாறு கிழிக்கப்படுகிறது என்பது முக்கியம் அல்ல. உள்ளே இருக்கும் கர்ப்பப்பை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். முதல் பிரசவத்தில் கர்ப்பப்பை குறுக்கே வெட்டி தையல் போடப்பட்டிருந்தால், அடுத்த சுகப் பிரசவம் செய்வது சுலபம். செங்குத்தாக வெட்டப்பட்டுத் தையல் போட்டிருந்தால், அடுத்த பிரசவத்தில், தையல் பிரிய வாய்ப்பு உள்ளது. சிசேரியனில் கர்ப்பப்பையை எவ்வாறு கிழிப்பது என்பது, குழந்தையின் தலை இருக்கும் திசை மற்றும் நிலையை ஸ்கேனில் பரிசோதித்த பிறகுதான் சொல்ல முடியும். எனவே, சிசேரியன் என்றாலே தவறான விஷயம் என்று எண்ண வேண்டாம். யாருக்கு சிசேரியன் தேவை என்று மருத்துவர் முடிவு செய்வார். மருத்துவர் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றி, டயட், உடற்பயிற்சி பின்பற்றினால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதையும் மீறி, குழந்தையின் பொசிஷன் மாறும்போது, சிசேரியன் செய்யத் தயங்க வேண்டாம். இதன் மூலம், தாய் - சேய் இருவரது உயிரையும் பாதுகாக்க முடியும்.
                                                                                                                                                   -
வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்
கர்ப்பிணிகள் கவனத்துக்கு!
ஒவ்வொரு கர்ப்பிணியும் கட்டாயம் ஃபோலிக் அமில மாத்திரையை, கர்ப்பமான நாளிலிருந்து 12 வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படும் பிறவித் தண்டுவடக் குறைபாடுகளைத் தவிர்க்கும். இந்த மாத்திரை எல்லா ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
சிசேரியனுக்கு பிறகு எவ்வளவு நாள் கழித்து உறவு வைத்துக்கொள்ளலாம்?
சிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எல்லா தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆனால், இதைச் செய்யாததால், சிசேரியன் ஆன நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர். பொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. பிளசன்டா ப்ரெவியா போன்ற அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கர்ப்பிணிகளுக்கு அதிகப் புரதம், வைட்டமின், நார்ச்சத்து தேவை. பிரெட் உள்ளிட்ட மைதா பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இது மலச்சிக்கல் உண்டாவதைத் தவிர்க்கும்.
நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். பழத்தைச் சாறாக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து இல்லாமல்போகிறது. எனவே, பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும்.
சுகப் பிரசவத்துக்கு 8 மாதம் வரை வீட்டில் இருந்தபடியே சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.
தினமும் காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் கடினமான வேலைகள், அதிக எடை தூக்காமல் இருப்பது நல்லது.
சிசேரியன் ஆன பிறகு, குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுப்பது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, வலிப்பு போன்ற கோளாறுகள் இருந்தால், அவசியம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக, கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின்போது வயிற்றைச் சுத்தம் செய்ய எனீமா கொடுத்தால், மலக்குடல் கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படும். வயிற்றில் உள்ள ஜீரணமாகாத உணவு வெளியேற்றப்படாது. பிரசவ நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கட்டாயத்தின் பேரில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இது தவறு. மருத்துவர்களின் அறிவுரையின் பேரிலேயே உணவு உட்கொள்ள வேண்டும்.



டிஜிட்டல் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க


டிஜிட்டல் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.
டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’ (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.
தேவைகள்!
இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.
பதிவு செய்வது அவசியம்!
இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in), உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.
ஆவணங்களின் சேமிப்பு!
நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.
எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.
அளவு!
தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.
பாதுகாப்பு!
இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.
ஆவணங்களின் பயன்பாடு!
இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.
கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப் படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.
கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை.
நன்றி : 

Thursday, March 31, 2016

மொபைல் போன் பேட்டரி தடித்தால்


மொபைல் போன் பேட்டரி தடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பலர் தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.

ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: 
தற்போது பயன்பாட்டில் இருக்கும், எடுத்துச் செல்லக் கூடிய, லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. இ புக் ரீடர், உடல்நலம் காட்டும் சிறிய கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. குறுக்கப்பட்ட சிறிய அளவில் ஆக்கப்பட்ட பேட்டரிகள் நமக்குக் கூடுதல் வசதிகளையே அளிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளைக் காட்டிலும், லித்தியம் அயன் பேட்டரிகள் சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இந்த வகை பேட்டரிகளில், அதில் உள்ளாக உள்ள செல்களுக்கும், மேல் உலோக கவசங்களுக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால், பேட்டரி எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே உள்ளது. 
லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக வெப்பம் பாதிக்கும் போது, அவை தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்படுகையில், அதிக நாட்கள் பயன்பாட்டில் இருந்ததனால், சில வேளைகளில், உள்ளே இருக்கும் செல்களிலிருந்து, எளிதில் நெருப்பு பிடிக்கக் கூடிய எலக்ட்ரோ லைட் மிக்சர் (electrolyte mixture) உருவாகலாம். 
அதிர்ஷ்டவசமாக, நெருப்பு பிடிக்காமல் இருக்க உள்ளாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்பு பிடித்து, கேஸ் வெளியேறாததால், பேட்டரியின் தடிமன் பெருகத் தொடங்குகிறது. இந்த தடிமன் குறைவாக இருக்கும் நிலையில், நாம் அதிகம் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், அது ஸ்மார்ட் போனின் உருவத்தைப் பாழடிக்கும் நிலைக்கு வரும்போது, நாம் இந்த பேட்டரியின் தடிமன் குறித்து கவலைப் படுகிறோம். சில வேளைகளில், நாம் போனுக்குள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் போன்றவற்றை இணைக்கையில், பின்புற மூடியைக் கழட்டி எடுக்கையில், இந்த தடிமன் அதிகமான லித்தியம் அயன் பேட்டரி, ஸ்பிரிங் விசையில் இருந்து விடுபட்டது போல, வெளியே துள்ளிக் குதிக்கிறது. அல்லது பின்புற போன் மூடியை வெளியே தள்ளுகிறது.

பேட்டரியை நீக்கும் வழிகள்: 
இதனால், லித்தியம் அயன் பேட்டரி பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வருவது தவறாகும். பேட்டரியின் உள்ளாக, பல நிலைகளில் பாதுகாப்பான வழி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டல், அதனை நிறுத்தும் வழிகள், உள்ளாக வெப்பம் பரவுவதை அளந்து, அறிந்து நிறுத்தும் வழிகள் போன்றவற்றைக் கூறலாம். இத்தகைய பேட்டரிகள், எந்த நிலையிலும், தீ பிடித்தது என்ற நிலை ஏற்பட்டதில்லை என்றே கூறலாம்.

வீணான பேட்டரியை என்ன செய்திடலாம்?: 
எனவே, பயன்படுத்த முடியாத நிலைக்கு, உங்கள் சாதனத்தின் லித்தியம் அயன் பேட்டரி சென்றுவிட்டால், அதனை எடுத்துவிட்டு, அதே அளவிலான, மின் திறன் கொண்ட பேட்டரியைப் புதியதாக வாங்கிப் பொருத்த வேண்டியதுதான் சரியான வழியாகும். 
இருப்பினும், அந்த பழைய பேட்டரியை திடீரென குப்பையில் எரிந்துவிடக் கூடாது. அதனை அழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை வெடித்து அல்லது நெருப்பினை உண்டாக்கும் என்ற அச்சத்துடன், சில வழிமுறைகளைப் பின்பற்றி அழிக்க வேண்டும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.

பேட்டரி தடிமன் அதிகமாகி விட்டது என்பதை உறுதி செய்தால், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது இணைக்கப்பட்டுள்ள சாதனத்தினையும் இயக்கக் கூடாது. சாதனத்தினை ‘பவர் ஆப்’ (power off) செய்து, பேட்டரியிலிருந்து மின் சக்தி செல்வதை நிறுத்த வேண்டும். 
குறிப்பாக அதனை சார்ஜ் செய்திடவே கூடாது. தடிமன் அதிகமாகிப் போன பேட்டரியில், பாதுகாப்பு வளையங்கள் வேலை செய்யாது. எனவே, அது எப்போதும் வெடிக்கக் கூடிய சிறிய பந்து என்று கருத வேண்டும். நம் அறையில், நெருப்பு பிடிக்கக் கூடிய வாயுவை வெளியிடும் சாதனம் ஒன்று உள்ளதாகவே கருத வேண்டும். 

பேட்டரியை உடனே நீக்குக:
 
பயனற்றுப் போன பேட்டரியை உடனே சாதனத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். அதை அழுத்தியோ, அதன் உருவினை மாற்றியோ, வெளியில் உள்ள பின்புற மூடியைச் சரி செய்தோ, பயன்படுத்த முயற்சிக்கவே கூடாது. 
பேட்டரியைத் துளையிட்டு, அதன் தடிமனைக் குறைக்க முயற்சிப்பது, முட்டாள்தனமான வேண்டாத முயற்சியாகும். 
உள்ளிருக்கும், உங்களுக்கு அழிவைத் தரக்கூடிய வாயுவினை நீங்களாகவே வலிந்து பெறும் வழி இது.

நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தினை நீங்களே திறந்து பார்க்க முடியும் என்றால், அதிலிருந்து பேட்டரியை உங்களால் எடுத்து நீக்க முடியும் என்றால், உடனே பேட்டரியை நீக்கவும். 

அல்லது அதற்கான தொழில் நுட்ப பணியாளரிடம் கொடுத்து பேட்டரியை எடுத்துவிடவும். அல்லது உங்கள் சாதனத்தினை இந்த பேட்டரி கெடுத்துவிடும் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. பேட்டரிக்குள்ளாக, கூர்மையான ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, இந்த வீக்கமுற்ற பேட்டரியின் தடிமனைக் குறைத்துவிடலாம் என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். 

உங்களால் பேட்டரியை நீக்க முடியாவிட்டால், அதனை ஒரு டெக்னீஷியனிடம் கொண்டு செல்ல நாளாகும் என்றால், அந்த சாதனத்தினை, குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும். பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். 

கெட்டுப் போன பேட்டரியை விட்டெரிய வேண்டாம்:
 
வீணாகிப் போன லித்தியம் அயன் பேட்டரியை, எந்த நிலையிலும், குப்பைகள் உள்ள இடத்தில் விட்டெறியும் பழக்கத்தினை விட்டுவிடுங்கள். கூர்மையான சாதனம் கொண்டு திறக்க முயற்சித்த பேட்டரியையும் பயன்படுத்த வேண்டாம். எடுத்து எறிந்துவிட வேண்டாம். அதுவரை சாதாரண பேட்டரியாய் இருந்தது, திறக்க வேண்டி முயற்சி எடுத்ததனால், எளிதில் நெருப்பினை வழங்கும் அபாயமான ஒரு பொருளாக மாறுகிறது. 
எனவே, வீட்டில் வைத்திருப்பதும் சரியல்ல. எனவே, சரியான முறையில் அதனை அழித்திட, இதனை விற்பனை செய்திடும் கடைகளை அணுகி அவர்களிடம் தந்துவிடலாம். வெளிநாடுகளில், இதற்கெனவே மறு சுழற்சி மையங்கள் இருக்கின்றன. இந்தியாவில், நம் நகரங்களில் அது போன்ற மையங்கள் இல்லை. 

பேட்டரியை நீக்கியவுடன், அதன் முனைகளை, மின் சாதனங்களை முடக்கப் பயன்படுத்தும் டேப்களைக் கொண்டு மூடவும். இதனால், எதிர்பாராத சூழ்நிலைகளில், இரு முனைகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, பெரும் விபத்து நேரும் அபாயம் தடுக்கப்படுகிறது. 
உங்களால் பேட்டரியை நீக்க முடியாத நிலையில், அது பயன்படுத்தப்படும் சாதனத்தையே பேட்டரி மற்றும் சாதனம் பழுது பார்க்கும் கடைகளுக்குச் சென்று, அவர்கள் உதவியுடன் பேட்டரியை நீக்கி அவர்களிடமே தந்துவிட்டு வந்துவிடலாம்.

பேட்டரிகள் தடிப்பதனை எப்படி தடுக்கலாம்?:
 மேலே தரப்பட்டுள்ள தகவல்களைப் படித்தவுடன், “என்னிடம் இது போல தடிமன் அதிகரித்த பேட்டரி எதுவும் என் சாதனங்களில் இல்லை. ஆனால், இது போல தடிமன் கூடுவதை எப்படி தடுப்பது?” என்ற வினா வரலாம். அதற்கான சில வழிமுறைகள் இதோ:

1. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வெப்பம் என்பதே ஆகாது. எனவே, அது பயன்படுத்தப்படும் சாதனங்களை, குளுமையான இடத்தில் வைத்துப் பயன்படுத்தவும். அல்லது, வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்திருப்பதனைத் தடுக்கவும். சிலர் காரில் டேஷ் போர்டில், இந்த வகை சாதனங்களை வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். நேரடியாக வெயிலில் சாதனமும், பேட்டரியும் வெப்பமடையத் தொடங்கும். இது பேட்டரியின் தடிமனை நிச்சயம் அதிகரிக்கச் செய்திடும்.

2. உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தப் போவதில்லையா? உள்ளிருக்கும் பேட்டரியை எடுத்து, குளுமையான இடத்தில் வைத்துவிடவும்.

3. சரியான சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும். லித்திய அயன் பேட்டரியைத் தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்வது அதில் பாதிப்பினை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்கள், சாதனத்துடன் தரப்பட்ட சார்ஜர் பழுதாகிப்போன பின்பு, குறைந்த விலைக்குக் கிடைக்கும் வேறு நிறுவன சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இந்த செயலினை மேற்கொள்வது, லித்தியம் அயன் பேட்டரியை, அதிகமாக சார்ஜ் செய்திடும் வழிக்குக் கொண்டு சென்று, விரைவில், அதன் தடிமனை அதிகரிக்கிறது.

4. பழைய பேட்டரிகளை உடனே மாற்ற வேண்டும். உங்கள் லேப் டாப் பேட்டரி, இதுவரை 5 மணி நேரம் வரை மின் சக்தியினைக் கொடுத்துவிட்டு, தற்போது 30 நிமிடங்களிலேயே தன் பணியை முடித்துக் கொள்கிறதா? பேட்டரியின் உள்ளிருக்கும் பொருட்கள் வீணாகிவிட்டன என்று இது காட்டுகிறது. உடனடியாக அதனை மாற்ற வேண்டும். 

5. தொடர்ந்து சார்ஜ் செய்திடும் நிலையில், உங்கள் சாதனத்தினை வைத்திருக்க வேண்டாம். பேட்டரி ஒன்றைக் கட்டாயமாக முழுமையாக 100% சார்ஜ் செய்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. சற்றுக் குறைவாக சார்ஜ் செய்வதே, லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு நல்லது. எனவே, மின் இணைப்பில் வைத்துவிட்டு 100% சார்ஜ் ஆன பின்னரும், அதனை இணைப்பில் வைத்திருப்பது நல்லதல்ல. வெகுநேரம் தொடர்ந்து பணியாற்றச் செல்வதால், தொடர் மின் இணைப்பில் சார்ஜ் செய்கிறேன் என்ற நிலையை ஏற்க வேண்டாம். இப்போதெல்லாம், இவற்றை சார்ஜ் செய்திட பவர் பேக் எனப்படும் பேட்டரிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.

லித்தியம் அயன் பேட்டரியில் நீங்கள் இதுவரை அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், இனி அடிக்கடி அதன் நிலையினைப் பார்த்து மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.03.2016

முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்?


முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்?

திக நடைமுறைச் சிக்கல் இல்லாத முதலீடு, உத்திரவாத வருமானம், அரசே நடத்தும் திட்டம், மாதாமாதம் சிறு சேமிப்பு என அனைத்து வகையிலும் இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களையும் தொட்டவை அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்.
இந்தத் திட்டங்கள் வந்தபிறகுதான் குடியிருக்கச் சொந்தமாய் ஒரு வீடு, பிள்ளைகளின் நல்ல படிப்பும் திருமணமும் என நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்களின் கனவுகள் நனவாகத் தொடங்கின.

ஆனால், இன்று அந்தக் கனவுக்கும் பங்கம் வந்துவிட்டது. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு இதுவரை கொடுத்துவந்த வட்டியைத் தற்போது குறைத்திருக்கிறது மத்திய அரசு. வருகிற 1-ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது. இப்படியொரு அதிர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை. 
இந்த வட்டி குறைப்பு பற்றிய விஷயம் தெரியாமலே பலரும் இந்த சேமிப்புத் திட்டங்களை இன்னும் மலை போல் நம்பியிருக்கிறார்கள்.
சேமிப்புத் திட்டங்களும் வட்டி குறைப்பும்!
நாட்டின் பெரும்பாலான நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வந்த அரசு சிறுசேமிப்புத் திட்டங்கள். இந்த சேமிப்புத் திட்டங்களில் இருப்பவர் களுக்குக் கணிசமான வருவாய் அதன் வட்டி மூலம் கிடைத்து வந்தது.

இதில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை பிபிஎஃப் என்று சொல்லப்படும் பொது சேமநல நிதி சேமிப்புத் திட்டம், செல்வ மகள் என்று அழைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சுகன்யா சம்ரிதி சேவிங்ஸ் திட்டம், கிஸான் விகாஸ் பத்ராஸ் திட்டம் ஆகியவை.
சமீபத்திய அரசு அறிக்கையின்படி, கிஸான் விகாஸ் பத்திராஸில் டிசம்பர் 2015 வரை ரூ.17,000 கோடிக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 80 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் டெபாசிட்டுகள் ரூ.3,400 கோடியைத் தாண்டியிருக்கிறது.

2014-15-ல், சிறுசேமிப்புத் திட்டங்களில் இருப்பு வைக்கப்பட்ட தொகை ரூ.40,080.15 கோடி. நவம்பர் 30, 2015 நிலவரப்படி, சேமிப்பு மற்றும் பத்திரங்களில் இருப்பு வைக்கப்பட்ட தொகை ரூ.22,364.73 கோடியாக உயர்ந்திருக்கிறது. அந்த ஆண்டில்  எதிர்பார்க்கப்பட்ட டெபாசிட் ரூ.13,025.17 கோடி. இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக டெபாசிட் ஆனது. பிபிஎஃப்-ம் 19% அதிகரித்து, ரூ.12,446.15 கோடி இருப்பு வைக்கப்பட்டது.
இப்படி பெரும்பாலான மக்களால் வரவேற்கப்பட்ட இந்த சேமிப்புத் திட்டங்களின் வட்டியைச் சில மாதங்களாகவே அரசு குறைக்க முயற்சி செய்து வந்தது. இறுதியாக தற்போது குறைத்தும்விட்டது (பார்க்க பக்கம் 26-ல் உள்ள அட்டவணை-1). 

அரசு சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டிகளைக் குறைத்தது கிராமப்புற மக்கள், குறிப்பாகப் பெண்களை அதிகம் பாதிக்கும். ஏனெனில் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள்தான் இந்தச் சிறு சேமிப்புத் திட்டங்களை அடையாளம் கண்டு மாதாமாதம் அஞ்சலகத்தில் சேமித்து வந்துள்ளனர்.
மேலும், வங்கிகளோ, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற மாற்று முதலீட்டு திட்டங்களோ இன்னும் நகரங்களைத் தாண்டி விழிப்பு உணர்வு அடையாத நிலையில், இந்த வட்டி குறைப்பு அவர்களுக்கு ஒரு இடி போலத்தான். இது குறித்து நிதி ஆலோசகர் அனிதாபட் சொல்கிறார்…

“இந்த வட்டி குறைப்புக்கு வங்கிகள் தந்த அழுத்தம்தான் காரணம். வங்கிகளில் இருப்பதைக் காட்டிலும், அஞ்சலகங்களில் டெபாசிட்டுகள் அதிகம் இருக்கின்றன. ஏனெனில் வங்கிகள் இல்லாத பட்டிதொட்டிகளிலெல்லாம் காலங்காலமாக அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், உத்தரவாத வருமானமும் அரசுத் திட்டம் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். ஆனால், அஞ்சலகங்கள் கூடுதல் வட்டி தருவதை வங்கிகள் விரும்பவில்லை. இதன் காரணமாகவே இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மற்ற சேமிப்புத் திட்டங்கள்கூட எதிர்காலத் தேவைகளுக்காகத் திட்டமிடுபவை என்பதால் பெரிய இழப்பு இல்லை என்று சொல்லலாம். ஆனால், மாத வருவாய் திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்திருப்பது சரியான முடிவல்ல. இன்று இருக்கிற விலைவாசியில் பலருக்கு இது போன்ற திட்டங்கள் கைகொடுப்பதாக இருந்து வருகின்றன. இதில் கணவன் – மனைவி சேர்ந்து ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மாதாமாதம் இதற்கு வட்டி வரும். இதில் சில வரையறைகள் உள்ளன. ஆனால், வங்கி நிரந்தர இருப்பில் வரையறைகளே இல்லை. மேலும், நிறைய நடைமுறைகள் இருப்பதால், கீழ்தட்டு மக்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் அஞ்சலகங்களையே நாடுகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான அரசின் திட்டங்கள் முதலில் மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரப் படுத்தப்படுகின்றன. அதை நம்பி மக்களும் முண்டியடித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து சேமிப்புக் கணக்கைத் தொடங்கி சேமித்தனர். ஆனால், முதிர்வுக் காலத்தின்போது அவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை என்னும்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, செல்வ மகள் திட்டத்தைச் சொல்லலாம். பிபிஎஃப் திட்டத்தையே வேறு வடிவத்தில் அறிமுகப்படுத்தி முதலீடுகளைத் திரட்டியது அரசு. ஆனால், இப்போது அதன் வட்டியையும் குறைத்திருக்கிறது.
அறியாமையால் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருவாயை மட்டுமே பார்த்து முதலீடு செய்கின்றனர். எந்தவொருத் திட்டமாக இருப்பினும் அதனை முழுதாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்பவர்கள் 10% பேர்தான்” என்று கூறினார்.
அரசு ஏன் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது, சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து வந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்களா, இதனால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, அரசின் மீதான நம்பிக்கையும் குறையும் என்று அரசுக்குத் தெரியாதா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இது குறித்து பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சீனுவாசனிடம் கேட்டோம்.

“சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி குறைப்பு, அதில் மட்டுமே முதலீடு செய்தவர்களுக்கு உண்மையாகவே இழப்புதான். ஆனால், அரசு வட்டியைக் குறைக்காமல் இருந்தால் அரசு தன் பையிலிருந்து பணத்தை கூடுதலாக எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் சந்தையின் வட்டியைவிட கூடுதல் வட்டியைப் பல ஆண்டுகளாக அரசு வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு செலவீனம் அதிகமாகி, நிதிப் பற்றாக்குறைக்கு ஆளாகிறது (பார்க்க மேலே உள்ள அட்டவணை). உதாரணமாக, 2015-16-ல் சேவிங் டெபாசிட்டுக்கு அரசு கொடுத்த வட்டி மட்டுமே ரூ.30,500 கோடி. இதனைத் தவிர்ப்பதற்காகவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

சிறு சேமிப்பு முதலீட்டாளர்களின் நலன் கருதி வட்டியைக் குறைக்காமல் இருந்தால், அரசு தன் செலவுகளைச் சமாளிக்கவும், நிதிப் பற்றாக்குறையைத் தடுக்கவும் வரிகளைக் கூட்ட வேண்டியிருக்கும். ஏற்கெனவே செஸ் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் விற்பனை வரி என்று இருப்பது எல்லோரும் அறிந்ததே. இந்த வரிகளைக் கூட்டுவதன் மூலமும், புதிய வரிகளை அமல்படுத்துவதன் மூலமும் அரசு தன் நிதிப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள வேண்டிய சூழல் வரும். இந்த வட்டி குறைப்பு நடக்காவிட்டால், அது வரியாக மக்கள் தலையில்தான் விழும். அரசு கொடுப்பது போல் கொடுத்து, வேறு வழியில் வாங்கிக் கொள்வதற்கு இது எவ்வளவோ மேல் என்பதை  மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இவர் கூறியது போலவே, அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதைப் பல்வேறு பொருளாதார அறிஞர்கள் வரவேற்றுள்ளனர். ஏனெனில் தற்போது இருக்கும் நிலையில் வட்டி குறைப்பு என்பது வங்கிக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த பிறகே வங்கிகளும் டெபாசிட்  மற்றும் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தன. 2015 ஜனவரியிலிருந்து தற்போது வரை ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 100  அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. ஆனால், வங்கிகள் தங்களது கடன் வட்டியில் 70 அடிப்படைப் புள்ளிகள் மட்டுமே குறைத்தன.

இந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி குறைப்பினால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள், பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் ராமலிங்கம் அவர்களிடம் கேட்டோம்.

“பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி ஸ்கீம், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்தவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த வட்டி குறைப்பு இப்போது சந்தையில் உள்ள அளவுக்கு மட்டுமே குறைத்து உள்ளதால், முதலீடுகளை வெளியே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அஞ்சலக மாதாந்திர வருவாய் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் டைம் டெபாசிட் போன்றவற்றுக்கான வட்டி அவற்றின் முந்தைய வட்டியாகவே முதிர்வுக் காலம் வரை கிடைக்கும்.
ஆனால், சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி நிர்ணயம் ஒவ்வொரு காலாண்டுக்கும் பரிசீலனை செய்யப்படும் என்பது சரியான யோசனை அல்ல. தொடர்ந்து வட்டிக் குறைப்பு நடக்குமானால் பெரிய அளவில் பாதிப்பு மக்களுக்கு இருக்கும். எனவே, தொடர் வருமானம் எதிர்பார்ப்பவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக முதலீட்டில் 10 சதவிகிதத்தை பங்குகளில் ஐந்து ஆண்டு கால அடிப்படையில் முதலீடு செய்து, மிச்சத்தை சிறுசேமிப்புத் திட்டங்களில் போடலாம். இதுபோன்ற வட்டி குறைப்பினால் இழக்கும் வருமானத்தை, பங்குகளில் முதலீடு செய்வதில் கிடைக்கும் வருவாய் மூலம் சமன் செய்துவிடலாம்.

மேலும், இந்த வட்டி குறைப்பினால் வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டியைக் குறைக்குமா என்றால் இல்லை. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தைப் பொருத்துதான் வங்கிகளின் வட்டி குறைப்பு இருக்கும். சேமிப்புத் திட்டங்களின் வட்டிக் குறைப்புக்காக எல்லாம் வங்கிகள் கடன்களின் வட்டியைக் குறைக்காது” என்றார்.

இனி என்ன செய்யலாம்?
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவற்றில் முதலீடு செய்துவந்த முதலீட்டாளர்கள் இனி என்ன செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிற கேள்வியை சர்ட்டிஃபைடு ஃபைனான்ஸியல் பிளானரும் ஃபார்ச்சூன் பிளானர்ஸ்.காம் நிறுவனத்தை நடத்தி வருபவருமான பத்மநாபனிடம் கேட்டோம்.

‘‘ஒரு கதவு மூடப்பட்டால், மறு கதவு திறக்கும். ஆனால், இப்போது பலரும் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணவீக்கம் என்பது தினசரி வாழ்க்கையில் 8% மேலே. தவிர, பலருக்கும் கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று பல ஆசைகளும் இருக்கின்றன. இந்தக் கனவுகளை நிஜமாக்க சிறுசேமிப்புத் திட்டங்கள் மட்டுமே கைதராது. இந்த சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை குறைத்து இருப்பதினால், வேறு முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது.
பிபி.எஃப்.-ன் வட்டி விகிதம் 8.7%-லிருந்து தற்போது 8.1%-ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைக்கப் பட்டதால் நமக்கு ஏற்படும் இழப்பினை எடுத்துச் சொல்ல ஒரே ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். 
உதாரணமாக, ஒருவர் ஒவ்வொரு வருடமும் 1.5 லட்சத்தை இந்தத் திட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பழைய வட்டியின்படி அவருக்குக் கிடைப்பது ரூ.43 லட்சம் எனில், புதிய வட்டியில் அவருக்கு ரூ.41 லட்சம் மட்டுமே கிடைக்கும். 0.6% வட்டிக் குறைப்பதால், 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் நமக்குக் கிடைக்காமல் போகும்.

பாதுகாப்பு என்கிற ஒரே காரணத்துக்காக நம்முடைய மக்கள் குறைந்த வருமானத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். சமீபத்தில் நபார்ட் நிறுவனம் வெளியிட்ட 10 வருட டாக்ஸ் ப்ரீ பாண்ட்-ன் வட்டி விகிதம் 7.29%. தொடங்கிய முதல் நாளிலே ரூ.14,000 கோடி முதலீடு வந்தது. அந்த பாண்டின் மொத்த வெளியீட்டு மதிப்பே வெறும் ரூ.3,500 கோடிதான். வரும் 10 வருடத்தில் நம்முடைய பணவீக்கம் என்னவென்று தெரி யாது; நம்முடைய பணத்தேவைகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. 10 வருடத்துக்கு உத்திரவாதம் என்கிற ஒரே காரணத்துக்காக அத்தனை பேரும் இதைத் தேர்வு செய்வது விநோதத்திலும் விநோதம்!
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஓரளவுக்கு ரிஸ்க் கொண்டவை என்றாலும் நல்ல லாபம் தரக்கூடியவை. தற்போது வட்டி குறைக்கப் பட்டிருக்கும் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எந்த அளவுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

ஒருவர் 1994 ஏப்ரல் முதல் ஹெச்.டி.எஃப்.சி. ப்ரூடென்ஸ் ஃபண்டில் மாதம் ரூ.1000 வீதம் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 2007-08 ஆகிய இரு ஆண்டுகளில் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய சந்தை கடுமையாக சரிவடைந்தது. மார்ச் 9, 2009 அன்று பி.எஸ்.இ. குறியீட்டு 8160 புள்ளிகளுக்கு இறங்கியது. 21000 புள்ளிகளிலிருந்து சரிந்து 8160 புள்ளிகளைத் தொட்டது. சீ, இனி பங்குச் சந்தையே வேண்டாம் என்று வெறுத்துப் போய், கடந்த 15 ஆண்டுகளாக அவர் செய்திருந்த முதலீட்டை (ரூ.1.80 லட்சத்தை) திரும்ப எடுத்திருந்தால், அவருக்கு திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.7,74,632-ஆக இருக்கும். இது கூட்டு வட்டியில் 16.47% லாபம். நீண்ட கால நோக்கில் செய்யப்படும் முதலீடு என்பது ரிஸ்க் இல்லாதவை. அதிக லாபத்தை தருபவை என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதைச் சொன்னேன்.

நமது இந்தியா வளர்ந்து வரும் நாடு. வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் 1%தான். இன்னும் 10 வருடங்களில் நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும்போது, இப்போது கிடைக்கும் வட்டி  குறையவே வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்பு கருதி, குறைவான வருமானம் தரும் திட்டங்களை நாடுவதைவிட, நம் ரிஸ்க் அறிந்து, நமக்கேற்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பொதுவாக, வயது குறைந்தவர்களுக்கு ரிஸ்க் எடுக்கும் காலம் அதிகமாக இருப்பதால், அவர்கள் மிட் அண்ட் ஸ்மால் கேப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அடுத்த நிலையில் இருப்பவர்கள், டைவர்சிஃபைடு திட்டமான மல்டி கேப் முதலீட்டை அணுகலாம். ஓரளவுக்கு வயதானவர்கள் லார்ஜ் கேப் திட்டத்தையும், ஓய்வு பெற்றவர்கள் பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்யலாம். (பார்க்க எதிர்பக்கத்தில் உள்ள அட்டவணை-2)

இந்த விதி எல்லோருக்கும் ஏற்றது என்றாலும் ஒருவருடைய குடும்ப நிதி நிலைமை, அடிப்படை ரிஸ்க் எடுக்கும் திறன் பொறுத்து இது மாறுபடும். ஒரு நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்து, உங்கள் முதலீட்டை மேற்கொள்வது நலம். எனவே, இந்த வட்டி விகிதக் குறைவை ஒரு பாரமாக கருதாமல் நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக நினைத்தால், நம்மால் கூடுதலாக வருமானம் பார்க்க முடியும்’’ என்றார்.

அரசாங்கம் தனது பொருளாதார சுமையைக் குறைத்துக் கொள்ள இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றாலும் பிபிஎஃப் போன்ற சில திட்டங்களுக்கான வட்டி குறைப்பு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதும், இதற்கு மேலும் வட்டி குறைக்காமல் இருந்தால் நல்லது என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.