disalbe Right click

Sunday, May 8, 2016

இன்ஜினீயரிங் கவுன்சலிங்… இம்பார்ட்டன்ட் தகவல்கள்!

இன்ஜினீயரிங் கவுன்சலிங்… இம்பார்ட்டன்ட் தகவல்கள்!

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் பொறியியல் படிப்பில் சேரவிருக்கிறார்களா? அதற்கான முதற்கட்ட நடைமுறையான கவுன்சலிங் பற்றிய குழப்பம், தயக்கத்தில் இருக்கிறீர்களா? இதோ… அது குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் விதமான தகவல்கள் தருகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
விண்ணப்பம்
வரும் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங்குக்கு,www.annauniv.edu என்ற ஆன்லைன் முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் (லிங்க்:https://www.annauniv.edu/tnea2016). விண்ணப்பிக்கத் தெரியாத சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ள சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாட்களுக்குள், ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தில் மதிப்பெண்களைக் குறிப்பிட்டு, அந்த ஆன்லைன் விண்ணப் பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்பத்துடன் கோரியுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, விண்ணப்ப எண்ணுடன் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.
செயலாளர்,
தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன்ஸ்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை – 600 025.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று
2. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று அல்லது அதற்கு இணையான படிப்புக்கான சான்று
3. மாற்றுச்சான்றிதழ் (Transfer cerificate)
4. சாதிச்சான்றிதழ்
5. 12-ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு
6. நேட்டிவிட்டி சான்று
7. முதல் தலைமுறை எனில் அதற்கான சான்று
8. விளையாட்டுத் துறையில் இருந்தால் அதற்கான சான்று
9. மாணவரின் பெற்றோர் முன்னாள் ராணுவ வீரர் எனில் அதற்கான சான்று
10. மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்று
இவை அனைத்திலும் விண்ணப்ப எண்ணைக் குறிக்க மறக்க வேண்டாம். விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது (தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ரூபாய் 250 மட்டும்). கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு இன் ஜினீயரிங் அட்மிஷன்ஸ், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து, அதனையும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அனுப்பவும்.
மதிப்பெண் தகுதி

பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்கான மதிப்பெண் அட்டவணை…
கட் ஆஃப் காணும் முறை

கணிதம் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/2
இயற்பியல் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/4
வேதியியல் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/4
இந்த மூன்று மதிப்பெண்களின் சராசரியைக் கூட்டவும். உதாரண மாக, கணிதத்தில் 200 எனில் 200/2 = 100; இயற்பியலில் 198 எனில் 198/4 = 49.50; வேதியியலில் 199 எனில் 199/4 = 49.75. ஆக, மொத்த கட் ஆஃப் = 199.25.

மறுமதிப்பீடு… கவலை வேண்டாம்!

தேர்வு முடிவுகள் வெளியானதும் சில மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். அது கவுன்சலிங் தேதியை பாதிக்குமா என்ற கவலை வேண்டாம். மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இருக்குமாயின் அதற்கான சான்றி தழைப் பெற்ற பின் அதன் நகலை தனியாக அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். அதன் அடிப்படையிலான கட் ஆஃப் மதிப்பெண்ணைப் பொறுத்து, அதற்கான தேதியில் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
முதல் பட்டதாரி சான்று

முதல் பட்டதாரி எனில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் அவர்களுக்குக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். எனவே, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் உறுதிபெற்று இணைக்க வேண்டும். பெற்றோரின் பெயரில் இருக்கும் நேட்டிவிட்டி சான்றிதழும் முக்கியம். விண்ணப்பிக்கும் மாணவரின் அண்ணன், அக்கா போன்றோர் இந்தச் சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தி இருந்தால், இப்போது விண்ணப்பிப்பவர்கள் இதைப் பெற இயலாது.
கவுன்சலிங்குக்கு செல்லும் முன்…

கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்து, எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை முன்னரே ஆலோசித்து, 5 கல்லூரிகளை ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளவும். கவுன்சலிங்கில் ஒரு கல்லூரி கிடைக்காமல் போனால், லிஸ்ட்டில் உள்ள மற்ற கல்லூரிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ஒரே பெயரில், எழுத்து வித்தியாசத்தில் பல கல்லூரிகள் உள்ளன என்பதால், குழப்பங்களைத் தவிர்க்க கல்லூரிக்கான குறியீட்டு எண்ணையும் தெளிவாக குறித்துச் செல்லவும். தேர்ந்தெடுக்க நினைக்கும் கல்லூரிகளைப் பற்றி நேரடியாக பார்வையிட்டும், அங்கு படித்த, படிக்கும் மாணவர்களிடம் விசாரித்தும் முடிவெடுக்கவும். தரகர்களை நம்ப வேண்டாம்.
மெயில் ஐ.டி முக்கியம்

எந்த மெயில் ஐ.டி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்தீர்களோ, அந்த மெயில் ஐ.டி-க்குதான் கவுன்சலிங்கில் கலந்துகொள்வது குறித்த கடிதம் அனுப்பப்படும். எனவே, அதை செக் செய்தவண்ணம் இருக்கவும். சேவை மையம் மூலம் விண்ணப்பிப்பவர்கள், பாஸ்வேர்டை அங்கு பகிர வேண்டாம். கவுன்சலிங் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு, `www.annauniv.edu’ எனும் இணையதள முகவரியைப் பார்வையிடவும்.
யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்…

கல்விக் கடன் பெற, ரிசல்ட் வரும் முன்பாகவே பெற்றோரின் வங்கி அக்கவுன்ட்டுடன் இணைந்து ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கவும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கவுன்சலிங் அறையில் மற்றவர்களின் விருப்பம் மற்றும் அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் கல்லூரிகள் பற்றி ஆலோசனையோ, விவாதமோ வேண்டாம்.
கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபெறும். வேறு இடத்தில் நடைபெறும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
தரகர்களை நம்பி ஏமாறுவதைத் தவிர்க்கவும்.
ஆன்லைனில் முதல் முறை விண்ணப்பிப்பதால், தவறு செய்துவிடுமோமோ போன்ற வீண்பயத்தைத் தவிர்க்கவும். ஒருவேளை விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் அது குறித்து மெயில் அனுப்பிவைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
நன்றி : அவள் விகடன் - 17.05.2016

கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?


கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா? என்ன செய்ய வேண்டும்? 

சர்க்கஸில் கயிறு மேல் நடப்பது, கண்ணைக் கட்டிக் கொண்டு கத்தி வீசுவது இவையெல்லாம் ஒரு காலத்தில் நம்மை வியப்பிலாழ்த்திய விஷயங்கள். ஆனால் இவையெல்லாம் இப்போது ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. ஏனென்றால் இதைவிட கடினமான விஷயமாக சிலருக்கு மாறிவிட்டது கிரெடிட் கார்டு எனும் கடனட்டை. ஆனால் சிலரோ இதை லாவகமாகக் கையாள்கின்றனர்.
முன்பெல்லாம் கிரெடிட் கார்டு வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளம். இப்போது கிரெடிட் கார்டு வாங்க யாராவது அகப்பட மாட்டார்களா? என்கிற ரீதியில் வங்கிகளே கூவிக் கூவி கடன் அட்டையை வழங்கத் தயாராக இருக்கின்றன.

செல்போன் வைத்திருப்பவர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது ஒரு முறையாவது கிரெடிட் கார்டுக்கான வலை வீசப்படுவது நிச்சயம். கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இது அநாவசியம், தேவையை மீறியது, அது செலவுக்கே வழிவகுக்கும் என்போர் சிலர். கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதைக் கொண்டு கண்டதையும் வாங்கிக்குவித்து பின்னர் கடனைக் கட்ட முடியாமல் அவதிப்படும் கூட்டம் மறுபக்கம்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு என்பது அத்துறை வல்லுநர்களின் அறிவுரையைக் கேட்ட பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும் என்கிற ரீதியில் சில நிதி ஆலோசகர்களிடம் பேசியதிலிருந்து அவர்கள் தந்த ஆலோசனைகள்…
நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும்.
ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.
எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுகொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?

வட்டியில்லா கடன் காலம்
கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
மினிமம் தொகை
மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.
பணமாக எடுத்தல்
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.
இஎம்ஐ வசதி
கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.
கடன் அளவு
நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.
ஆஃபர்கள்
பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்
கேஷ் பாயிண்ட்ஸ்
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.
சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.
அனுமதிகளில் கவனம்
தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம்.
ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்.
திரும்ப ஒப்படைப்பது
கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
சிபில் எச்சரிக்கை
நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.
வருமானத்தையே செலவு செய்கிறோம்
கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.

கிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்

1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.
3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.
4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.
7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.
8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.
9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.
10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.
நீரை. மகேந்திரன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் -22.12.2014

வெளிநாட்டில் வேலைசெய்பவர்கள் இந்தியாவில் வீட்டுக்கடன் வாங்க


வெளிநாட்டில் வேலைசெய்பவர்கள் இந்தியாவில் வீட்டுக்கடன் வாங்க
என்ன செய்ய வேண்டும்?

வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் என்.ஆர்.ஐ.கள் அனைவரின் முதல் ஆசையாக இருப்பது, சொந்த ஊரில் வசதியான அழகிய வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதற்காக அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அங்கே இருந்தபடியே இந்தியாவில் எளிதாக சொத்து வாங்க முடியும். 

யாரெல்லாம் என்.ஆர்.ஐ.?


1973-ம் ஆண்டின் அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டப்படி, வேலை வாய்ப்பு, வணிகம் அல்லது வேறு காரணங்களால் வெளிநாட்டில் நீண்ட காலமாக தங்கியிருப்பவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக (Non-Resident Indian -NRI) கருதப்படுகிறார்கள்

இவர்கள் தவிர, இந்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு அமைப்புகளில் வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவைகளில் பணியாற்றுபவர்கள், மத்திய - மாநில - பொதுத்துறை நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், இந்திய வம்சாவளியினரும் வீட்டுக் கடனை பெறலாம்!
எதுக்கெல்லாம் கடன் உதவி?

* மனை வாங்க..!
* அடுக்குமாடி குடியிருப்பு வாங்க..!
* வீடு கட்ட.. .! 
* வீட்டை அழகுபடுத்த .!
* வீட்டை விரிவாக்கம் செய்ய...!
* இன்னொரு மாடி (தளம்) கட்ட..!

இப்படி பல்வேறு விஷயங்களுக்காக கடன் வாங்கிக் கொள்ளலாம்.

தற்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தாரளமாக வீட்டுக் கடன் கொடுத்து வருகின்றன. எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், கனரா, ஐ.டி.பி..ஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை கடன் அளிக்கின்றன. 

வெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவிலுள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ளலாம். கடன் வழங்கும் நிறுவனத்தில் பொது அதிகார ஆவண (Authorised Power of Attorney) படிவம் ஒன்றை தருவார்கள். இது கடன் பெறுபவர் தனக்கு பதில், கடன் வாங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட, வேறு ஒரு நபருக்கு அதிகாரம் கொடுப்பதாகும். இதனை கடன் வாங்க உள்ள என்.ஆர்.ஐ. நிரப்பி, தான் பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் கொடுத்து அங்குள்ள அதிகாரியின் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை வாங்கி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் கடன் வாங்குபவர் இந்தியா வர வேண்டிய அவசிமியமில்லை. 'பவர்' பெறும் நபரே கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்ளலாம்.
எவ்வளவு கடன் கிடைக்கும்?

பொதுவாக மனை என்றால் அதன் மதிப்பில் சுமார் 60-70 சதவிகிதம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்கிறபட்சத்தில் அதன் மதிப்பில் 80-85% தொகை கடனாக கிடைக்கும். மீதியை கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து மார்ஜின் மணியாக போட வேண்டும். இது தவிர, கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். 

என்.ஆர்.ஐ.-ன் சம்பளம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக தொகை கடனாக  தேவைப்படுகிறது என்றால் வருமானம் ஈட்டும் இன்னொருவருடன் இணைந்தும் கடன் வாங்க முடியும். அந்த இன்னொருவர் என்.ஆர்.ஐ. ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவிலுள்ள துணைவராக (கணவன்/மனைவி) அல்லது மகனாக இருக்கலாம். சொத்துப் பத்திரத்தை அடமானம் வைப்பதன் பேரில்தான் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர, இரு தனி நபர்களின் உத்தரவாதம் (கேரண்டி) தேவைப்படும். 
கடன் வாங்குபவரின் மாத ஊதியம், வயது, கல்வித் தகுதி, பணி அனுபவம், துணைவரின் வருமானம், சொத்து, வேலை தொடரும் ஆண்டுகள், ரொக்க இருப்பு, இந்தியா திரும்பிய பின் வேலைவாய்ப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்துதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். 

ஒருவரின் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அவரின் மாதச் சேமிப்பு 18 ஆயிரம் ரூபாய். இதே சம்பளம் கொண்ட இன்னொருவரின் மாதச் சேமிப்பு பத்தாயிரம் ரூபாய் என்றால் யார் அதிகமாக சேமிக்கிறார்களோ அவருக்குதான் எளிதில் கடன் கிடைக்கும். 

வட்டி விகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு உள்ளதை விட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும். 
தேவையான ஆவணங்கள்:

* பணிக்கான ஒப்பந்தம்
* மாத சம்பள ரசீது
* வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி
* கடன் வாங்குபவருக்கு அவரின் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையின் நகல்
* விசா முத்திரைப் பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்
* கட்ட இருக்கும் மற்றும் வாங்க உள்ள வீட்டின் அப்ரூவல் பிளான்
* மனை கிரயப் பத்திரம் (அசல் மற்றும் நகல்)
* தாய் பத்திர நகல்
* வில்லங்கச் சான்றிதழ் - குறைந்தது 13 ஆண்டுகளுக்கு
* கட்டுமானச் செலவு மதிப்பீடு அறிக்கை
* வீட்டின் மதிப்பீடு அறிக்கை

கடனை எப்படி திரும்ப கட்டுவது?

கடன் பெற்ற வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களில் இந்தியாவிலுள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் நேரில் ரொக்கப்பணமாக அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். அல்லது என்.இ.ஆர். அல்லது எஃப்.சி.என்.ஆர், என்.ஆர்.ஓ.கணக்கு மூலம் கட்டலாம்.
வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்.ஆர்.ஐ-க்கு பதில் இந்தியாவிலுள்ள அவரின் மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டுமே கடனை அடைக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

முக்கிய அம்சங்கள்..!

கடன் வாங்குபவரின் வயது வரம்பு: 21-55 ஆண்டுகள்

கடன் தொகை: ரூ.25,000 முதல் ரூ. 3கோடி வரை 

மார்ஜின் மணி : 15-20%

கடன் தொகை: மாதச் சம்பளத்தைப் போல் சுமார் 20-30 மடங்கு கடனை திரும்பச் செலுத்தும் காலம்: 5-15 ஆண்டுகள் (சில வங்கிகள் 20 ஆண்டுகள் கூட அனுமதிக்கின்றன)

வட்டி விகிதம் : மாறுபடும் வட்டி சுமார் 11-14%, நிலையான வட்டி 14-16%
பரிசீலணை கட்டணம்: 1-2% (கடன் தொகையில்)
எக்ஸ்டிரா டிப்ஸ்
* ஆன்லைன் விளம்பரங்கள், புரோக்கர்கள் வார்த்தைகளை மட்டும் நம்ப்பி சொத்து வாங்கும் முடிவை எடுக்காதீர்கள். 


* முடிந்த வரையில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை மனை அல்லது சொத்தை நேரில் பார்த்து வரச் சொல்லுங்கள். 

- சி.சரவணன்


நன்றி : விகடன் செய்திகள் - 17/08/2011

மறந்துபோன டிவிடெண்ட்


மறந்துபோன டிவிடெண்ட்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் நீண்ட காலத்துக்கு நல்ல பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானமும் லாபமும் பார்க்கலாம் என்று சொல்வதுண்டு. ஆனால், நீண்ட காலம் என்பதற்காக, அந்த முதலீட்டையே மறந்துபோகிற அளவுக்கு இருந்துவிடக்கூடாது. ஆண்டுக்கு ஒரு முறையேனும் நமது முதலீடுகளை ஆராய்வது மிகவும் அவசியம். 

நாம் இப்படி சொல்வதற்கு காரணம், இந்தியாவில் பங்கு முதலீட்டின் வாயிலாக டிவிடெண்ட் வழங்கப்பட்டும் அதைப் பெறாமல் இருக்கும் (Unclaimed dividends) தொகை பல ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதனால் நஷ்டம்என்னவோ, முதலீட்டாளர்களுக்குத்தான்.  பங்குகளில் முதலீடு செய்து, அதன் பலனாகக் கிடைக்கும்  டிவிடெண்ட்டை அனுபவிக்க முடியாமல் இருப்பது துரதிஷ்டமே. 

எந்தெந்த காரணங்களுக்காக இது போன்று நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட் தொகையானது  முதலீட்டாளர் களுக்கு போய்ச் சேராமல் போகிறது? ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முகவரி மாற்றம்!
பல்வேறு காரணங்களுக்காக, குறிப்பாக தொழில் காரணங்களுக்காக பலர் தங்களது வீடுகளை மாற்றும் சூழல் ஏற்படும். அது போன்ற சமயத்தில் நிறுவனங்கள் முதலீட்டாளர் களுக்கு அனுப்பும் டிவி டெண்ட்டுக்கான காசோலை அந்த முகவரிக்கு அனுப்பி வைக்கபட்டும் முதலீட்டாளர் களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்காமல் போக  வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு அவைகளை எடுத்துப் பாதுகாத்து வைத்தாலும் அதை உரியவரிடம் சேர்ப்பது பல நேரங்களில் நடைமுறையில் சாத்தியப்படாத காரியம்.
இந்தியாவில் பெறப்படாத டிவிடெண்ட் கணக்கில் பெரும்பாலான பணம் இந்த வகையைச் சாரும். உதார ணத்துக்கு, ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்யும் போது ஒரு வீட்டில் வசித்திருப்பார். சில ஆண்டுகளில் அவர் அந்த வீட்டை மாற்றி னாலோ அல்லது ஊரை மாற்றினாலோ, அவர் அந்த விவரத்தை நிறுவனங் களுக்கோ அல்லது நிறுவனங்களின் பதிவாளருக்கோ தெரியப்படுத்தாமல் இருந்தால், அவர் முதலீட்டுக்கான டிவிடெண்ட் அவருடைய அந்த பழைய முகவரிக்கே சென்று கொண்டிருக்கும்.
வீட்டை மாற்றி அதே ஊரில் வேறு வீட்டுக்குச் சென்று இருந்தாலாவது ஒரளவுக்கு தபால் களை கண்காணிக்க முடியும். ஊரை விட்டோ அல்லது நாட்டை விட்டோ செல்ல நேரிட்டால், பழைய ஊரில் வரும் தபால்களை கண்காணிப்பது இயலாத காரியம்.
பெரும்பாலான பெறப்படாத டிவிடெண்ட் தொகை முகவரி மாற்றத்தினாலேயே ஏற்படுகிறது. இப்போது இசிஎஸ் முறை வந்து விட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருவாரியான டிவிடெண்ட்டுகள் வங்கிக் காசோலை மூலமாக மட்டுமே முதலீட்டாளர்களின் வீட்டு முகவரிக்குச் சென்றுள்ளன. இசிஎஸ் மூலமாக டிவிடெண்ட் வழங்கப்படும் வசதி துவங்கப் பட்டதும்தான் ஓரளவுக்கு இந்த வீடு மற்றும் ஊர் மாற்றப் பிரச்னை கட்டுக்குள் உள்ளது என்று சொல்லலாம்.
வங்கிக் கணக்கு மாற்றம்!
முதலீட்டாளர்களின் வங்ண்ட் தொகையும் நமது நாட்டில் அதிகமாகவே உள்ளன. முதலீடு செய்யும்போது கொடுத்த வங்கிக் கணக்கின் அடிப்படையில்தான் டிவிடெண்ட் காசோலையோ அல்லது நேரிடையாக இசிஎஸ் மூலமாகவோ டிவிடெண்ட் தொகை நிறுவனங்களால் அனுப்பப்படும். முதலீடு செய்யும் போது கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தெரிவிக்காத பட்சத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகும் அதே கணக்கில் தான் டிவிடெண்ட் தொகை சென்று திரும்பிக் கொண்டிருக்கும்.
அதுமட்டுமல்லாது, அநேகமாக நாம் அனைவருமே நமது வங்கிக் கணக்குகளை ஏதாவது ஒரு காலகட்டத்தில் மாற்றி இருப்போம். அந்த விவரத்தைத் தெரியப்படுத்தாத வரை டிவிடெண்ட் தொகை யானது பழைய வங்கிக் கணக்கின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். அதுமட்டு மல்லாது, பல வருடங்களுக்கு முன்பு இருந்த வங்கிக் கணக்கின் எண்கள் புதிய முறைக்கு மாறுதலாகும்போதும் அதை தெரியப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அதன் காரணமாகவும் டிவிடெண்ட் தொகை நிலுவையில் இருப்பதை நாம் காணலாம்.
முதலீட்டாளர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!
டிவிடெண்ட் வழங்கப்பட்டும் பெற்றுக் கொள்ளப்படாத டிவிடெண்ட் தொகை நமது சந்தையில் அதிகமாக இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், முதலீட்டாளர்களின் இறப்பும் அதனால் ஏற்படும் குழப்பமும் தான். ஒரு முதலீட்டாளர் மறைந்தால், அவரின் வாரிசுகளோ அல்லது குடும்பத்தினரோ அதை நிறுவனத்தின் பங்கு விஷயங்களை நிர்வகிக்கும் பதிவாளரிடம் (Registrar) தெரியப்படுத்தி, உரிமம் கோரவில்லை என்றால் அதன் காரணமாகவும் டிவிடெண்ட் தொகை உரிய நபரிடமோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட நபர்களிடமோ போய்ச் சேருவதில்லை.
மேலும், முதலீடுகள் பல வருடங்களுக்கு முன்பு செய்யப் பட்டிருப்பின், அந்த முதலீட்டாளர் அந்த முதலீட்டு விவரங்களை தனது குடும்பத் தாரிடம் முழுவதுமாகச் சொல்லத் தவறுவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். அதன் காரணங்களுக்காக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான டிவிடெண்ட் தொகை இன்னும் நேரடி வாரிசுகளாலேயோ அல்லது குடும்பத்தினாலேயோ பெறப்படாமலேயே உள்ளது.
திரும்பக் கோரப்படாத டிவிடெண்ட் தொகை!
இந்தியாவில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பல முதலீடுகளிலிருந்து வழங்கப்பட்டும் பெற்றுக் கொள்ளப்படாத டிவிடெண்ட் தொகை ஏறக்குறைய ரூ.65,000 கோடி என்ற அளவில் உள்ளது. இந்தக் கூட்டுத் தொகையானது கடந்த பல வருடங்களாக அறிவிக்கப்பட்ட டிவிடெண்ட், முதலீட்டாளர்களால் பெற்றுக் கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் தொகையே ஆகும்.
இந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவர சில ஆண்டுகளுக்கு முன்னால், அன்றைய மத்திய அரசு, இதற்கு ஒரு தீர்வை வகுத்தது. அதாவது, டிவிடெண்ட் கொடுக்கப்பெற்று ஏழு ஆண்டுகளுக்குள் அவற்றை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்கள் முயற்சி எடுக்கவில்லை எனில், அந்தத் தொகையானது “முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி” (Investor education and protection fund) என்ற அரசின் அமைப்பினுடன் சேர்க்கப்பட்டு விடும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
இதன் காரணமாக இது போன்ற நிலுவைத் தொகை வருடக்கணக்கில் கேட்பாரற்று இருப்பது என்ற நிலை மாறி, அது முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்ச்சி நிதிக்காகப் பயன் படுத்தப்படுகிறது என்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருந்தா லும், முதலீட்டாளர்களின் பணம் அவர்களுக்குப் போய்ச் சேராமல் விரையமாகி போகிறது என்பதே உண்மை.
அதுமட்டுமல்லாது, நிறுவனங்கள் தங்களிடம் உள்ள டிவிடெண்ட் பெற்றுக் கொள்ளாத முதலீட்டாளர் பட்டியலை தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு விதியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பெற்றுக்கொள்ள படாத டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் நிதியில் ஒப்படைக்கும்முன் அந்த முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு முக்கியக் கட்டளை.
என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டாளர்கள் தங்களுக்கு டிவிடெண்ட்டுகள் வழங்கப்பட்டு அவற்றை பெறவில்லை என்று அறிந்தால் மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில், நிறுவனத்தின் பங்குகளின் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் பதிவாளரிடம் ஒரு விரிவான, அனைத்து விவரங் களையும் உள்ளடக்கிய ஒரு கடிதத்தைக் கொடுக்க வேண்டும். அதில் முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தின் பங்கை வைத்திருக்கிறார், எவ்வளவு பங்குகள், எவ்வளவு காலம் டிவிடெண்ட் பெறவில்லை என்ற தகவல்களுடன் முதலீட்டாளரின் டீமேட் கணக்கின் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாது, அந்தப் பங்கில் உரிமம் எது போன்ற அமைப்பில் உள்ளதோ, அதாவது தனியாகவோ (single holding) அல்லது கூட்டாகவோ (Joint holding) இருப்பின், அதன் அடிப்படையில் முதலீட்டாளரின் அல்லது முதலீட்டாளர்களின் கையொப்பம் அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் இருக்கவேண்டும்.
அந்தக் கடிதத்துடன், டிவிடெண்ட் வாரண்ட் அல்லது பங்குகளின் பட்டியலை இணைத்து நிறுவனம் பரிந்துரைக்கிற வகையில் ஒரு இண்டம்னிடி பத்திரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்த பின், கொடுக்கப் பெற்ற தகவல்களை சரிபார்த்து உறுதி செய்தபின் நிறுவனத்தின் பதிவாளர் டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ வழங்குவார்கள். 
மேலும், முதலீட்டாளர் அல்லது முதலீட்டாளர்களின் அடிப்படை விஷயங்களான வீட்டு முகவரி, வங்கிக் கணக்கு மற்றும் முதலீட்டாளர்களின் தனி மனித விஷயங்கள் (அதாவது, முதலீட்டாளர் தவறி இருந்தால்) அதற்குண்டான சட்டப் பூர்வமான விஷயங்களையும் சேர்த்து இணைக்க வேண்டும். அப்படி முழுமையாக இணைத்து அனுப்பினால், நிலுவையில் உள்ள டிவிடெண்ட்டுகளைப் பெறுவது சுலபமாகும்.
வரும்முன் காப்பது எப்படி?
இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஐடியா இதோ:
டிவிடெண்ட் நிலுவைத் தொகையை சரியான ஆவணங்கள் கொண்டு பெற்று விடலாம் என்றாலும் முதலீட்டாளர்கள் தங்களின் உழைப்பால் உருவாக்கிய பணத்தை முதலீடுகளில் அதுவும் குறிப்பாக, பங்கு முதலீடுகளில் போடும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. அதுவும் பங்குகளில் டிவிடெண்ட் என்பது நாம் எதிர்பாராத நேரங்களில் வந்துகொண்டு இருக்கும் ஒரு வருமானம்.
அப்படி நாம் விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் இது போன்ற டிவிடெண்ட் விஷயங்களை நாம் கண்காணித்து வருவது நமது முதலீடுகளுக்கு மிகவும் அவசியமாகிறது. நமது வாழ்க்கை காலச் சூழலுக்கேற்ப மாறி வந்தாலும், நமது முதலீடுகளின் மேல் விழிப்புடன் இருந்தால் இது போன்ற டிவிடெண்ட் கிடைக்கப் பெறாத நிலையை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.
அதிலும் குறிப்பாக, வீடு மாற்றமோ, ஊர் மாற்றமோ அல்லது வங்கிக் கணக்கு மாற்றமோ ஏற்பட்டால், உடனடியாக உங்களின் பங்கு ஆலோசகரைத் தொடர்பு கொண்டு, அந்த மாற்றங்களை நிறுவனத்தின் பதிவாளர் மூலம் செய்ய சொல்லவேண்டும்.
அதுமட்டுமல்லாது, தாங்கள் செய்த முதலீடுகளை தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம். எதிர்காலத்தில் பங்குகளின் உரிமத்தை சரியான முறையில் மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும், இது போன்ற குழப்பங்கள் எழாமல் இருக்கவும் உதவும்.
ஏனென்றால், பல பிள்ளைகளுக்கும் குடும்பத்தி னருக்கும் தங்களது தகப்பனார் எந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்ற விஷயமே தெரியாமல் போய் விடும் சூழலை அனுபவத்தில் நாம் கண்டிருக்கிறோம். அப்படித் தெரியாமலே போய்விட்டால் அவர்களுக்கு  நியாயமாகச் சேர வேண்டிய பணம் அவர்களுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
மேலும், தக்க ஆலோசகரைக் கொண்டு செய்த முதலீடுகளை ஆண்டுக்கொருமுறை ஆய்வு செய்துவருவதும் அவசியம். அப்போதுதான் இது மாதிரி பிரச்னைகள் ஏற்படாது!

நன்றி : நாணயம் விகடன் - 10.04.2016

Friday, May 6, 2016

காசு இல்ல, காலிமனை இருக்கு வீடு கட்டணும்!


காசு இல்ல, காலிமனை இருக்கு வீடு கட்டணும்! என்ன செய்ய வேண்டும்?

எனது அந்தஸ்து உயர காரணமே பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி போட்டிருந்த சொத்துக்களின் விலையேற்றம்தான். அதனை இப்போது விற்றால் பின்பு இந்த சமூகம், என்னை தூக்கி வைத்திருந்த அதே உயரத்தில் வைத்துப் பார்க்குமா?
அதனால் அந்த சொத்தை நான் விற்க மாட்டேன், கட்டப்போகிறேன். ஆனால் கையில் கட்டுவதற்கான பணம் இல்லை. என்ன செய்யலாம்? சேமிப்பை காலி மனையாக (Vacant Land) வாங்கி போட்டிருந்த பலரின் மனக்கேள்வியும் இதுதான்.
சொத்தில் நான் இருக்க வேண்டும். ஆனால் கையில் பணம் புரள வேண்டும். அப்போது நம் முன்னே தெரிவது கூட்டு கட்டுமானப்பணி எனப்படும் “Joint Venture” புராஜெக்ட்.
நகரங்களில் இடப்பற்றாக்குறை, மக்களின் தேவைகள், அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி, இதனை கவனத்தில் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமான தொழில் புரிவோர் என பலரின் பார்வையும் இந்த JV எனப்படும் கூட்டு கட்டுமான முறை மீது தான்.
சொத்து உங்கள் சொத்து. கட்டுமானம் அவர்களது. கட்டிய பின்பு உங்களுக்கு வசிக்க ஒரு வீட்டினை கொடுத்து, இதர வீடுகளை விற்று அதில் வரும் பணத்தில் கட்டுமானச் செலவுகள் போக உள்ள லாபத்தில் உங்களுக்கும் பில்டருக்கும் 50-50. இது தான் அடிப்படை.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதலில் உங்கள் சொத்தினை தகுந்த முறையில் அபிவிருத்தி செய்ய தகுந்த பில்டரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு, அந்த பில்டர் தகுதியான நபர்தானா? பில்டிங் கட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்பு (infrastructure) கொண்ட நிறுவனமா? அவர்களின் முந்தைய புராஜெக்ட் எப்படி முடிக்கப்பட்டது?
அந்த இடத்தின் உரிமையாளருக்கு அந்த JV புராஜெக்ட் லாபகரமாக இருந்ததா? கட்டப்பட்ட கட்டடத்தின் ஸ்திரத்தன்மை எப்படி இருந்தது? பில்டரின் பேப்பர் ஒர்க்ஸ், அரசு வழி ஆவணங்களான பிளான், அப்ரூவல் போன்றவை அவரால் முறைப்படி பெறப்பட்டு சொத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டுவிட்டதா போன்ற எல்லா விஷயங்களையும் நுணுக்கமாகக் கேட்டு அறிந்த பின்னர் அந்த பில்டருடன் தக்க ஆவணங்கள் மூலமாக உடன்படிக்கை (Agreement for Joint Venture) எற்படுத்துவது முதல்படி.
நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையானது, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உங்களையும், உங்கள் சொத்தினையும் முழுமையாகப் பாதுகாப்பதாக இருத்தல் முக்கியம். சொத்தினை முதலீடு செய்யும் நீங்கள் தான் முழு கவனத்துடன் இருத்தல் வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உங்கள் சொத்தின் மூல ஆவணங்களை பில்டர் வசம் சமர்ப்பித்தல் கூடாது. அது போல பில்டருக்கு நீங்கள் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னியும் மிக கவனமாக கொடுத்தல் வேண்டும். அந்த பவர் அதிகாரத்தின் மூலம், பில்டர், புராஜெக்ட் லோன் எதுவும் வாங்கிவிடாதவாறு கவனமாக இருத்தல் மிக மிக அவசியம்.
என்னென்ன விஷயங்களுக்கு பவர் கொடுக்கலாம் என்பதை தெளிவாக பேசி, அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டுக்கொள்ளுதல் நல்லது. பிளான், அதன் அப்ரூவல், கார்ப்பரேசன் மற்றும் பெரு நகர வளர்ச்சி குழுமம் போன்ற அரசு அலுவலகங்களில் உங்களுக்காக ஆஜராகி அனுமதி பெறவும், கட்டுமானம் கட்ட, மின் இணைப்பு பெற, மற்றும் கட்டி முடித்தவுடன் அவர் பகுதியை மட்டும் விற்க என மிக தெளிவாக அதில் குறிப்பிட்டுக் கொண்டால் பிற்கால பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அது போல, கட்டடம் கட்டும்போது, என்னென்ன கட்டுமானப் பொருட்கள் உபயோகித்தல் வேண்டும்? செங்கல், மணல், மரம், இரும்பு போன்றவை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் குறிப்பிடலாம். இதர மின் ஒயர்கள், மின் சாதனங்கள், குளியலறை தேவைகள் என அனைத்தையும் தெளிவு படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. தேவைப்படும் பெயின்ட் கலர் முதற்கொண்டு குறிப்பிடலாம் .

கட்டுமானத்திற்கான கால அவகாசம் மிகவும் முக்கியம்.
தவிர்க்க முடியாத தாமதம் தவிர, இதர தாமதங்களுக்கு, பில்டர் பொறுப்பேற்று உங்களுக்கு தர ஒப்புக்கொண்டுள்ள மொத்த பரப்பளவுக்கு, சதுரடிக்கு, மாதம் ஒன்றுக்கு இவ்வளவு என, கால தாமத அபராத தொகையும் குறிப்பிட்டு, கட்டுமானத்தை, விரைந்து முடிக்க வழிவகை செய்யலாம் .
பில்டர் கட்டிக் கொடுத்துள்ள பகுதிக்கு ஈடாக நீங்கள் அவருக்கு வழங்கும் பிரிபடாத பாக நிலத்திற்கான தகுந்த ஆவணங்கள் என்ன தரப்போகிறீர்கள்? எப்பொழுது? எனவும் அதில் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
கட்டுமானம் முடித்து, கம்ப்லீசன் சர்டிபிகேட்டுடன், உங்களுக்கென ஒதுக்கப்படும் வீட்டின் சுவாதீனத்தை பில்டரிடம் இருந்து சுவாதீன ஒப்படைப்பு கடிதத்துடன் பெறுவது அவசியம். இப்போது உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, உங்கள் வசம்.
இப்போது பணமும் உங்கள் கைவசமாகும். வசிக்க ஒரு வீடும் புதிதாக உங்கள் வசம் வந்திருக்கும் .
கே. அழகு ராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம்.
நன்றி : விகடன் பைனான்ஸ் - 06.05.2016

Saturday, April 30, 2016

வீடு கட்ட வங்கியில் கடன் பெற


வீடு கட்ட வங்கியில் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?


எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது பழமொழி. ஆனால் அது இன்றும் நம் பெரும்பாலானவர்களின் மனங்களிலும் கனன்றுகொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரே படுக்கையறை கொண்ட வீடாக இருந்தாலும் பரவாயில்லை. அது நமக்குச் சொந்த வீடாக இருக்க வேண்டும்.

இந்தக் கனவு நிறைவேற முன்பைவிட இப்போது அதிக சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக் கடன், அதுவும் வீட்டுக் கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 9.6-ல் இருந்து 9.45 சதவீதம்வரைகூடச் சில வங்கிகள் கடன் தருகின்றன. 

வீட்டுக்கடனுக்குள்ள சலுகைகள் 
மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத் திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது.

வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. 

கடன் பெற தேவையான வயதுத் தகுதி
கடன் பெறத் தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும். சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன.

ஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதாரரோ எழுத்துபூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதாரர் அதனைச் செலுத்த நேரிடும்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?
வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முழுமையாகக் கடன் தராது. 80 சதவீதத்திலிருந்து 85 சதவீதம் வரை வங்கிகள் கடனாகத் தரும். மீதித் தொகை நம் பொறுப்புதான். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதைக் கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாகக் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்துக்கு தக்கபடிதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும் என்றும் 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும் என்றும் 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.

கூடுதல் கடன்
வீடு கட்டி முடித்த பின் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ‘டாப் அப் லோன்’ எனும் வசதி மூலம் கூடுதலாகக் கடனையும் பெற முடியும். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம் கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல்முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீதத்தை வங்கி எடுத்துக்கொள்ளும். வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் நம் கடனை மாறிக் கொள்ளலாம்.
நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாகப் படிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தை யும் பரிசீலித்துத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.
  •  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  •  விண்ணப்பதாரரின் புகைப்படம்
  •  புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று
  •  முகவரிச்சான்று
  •  வயதுச் சான்று (பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்)
  •  மனைப் பத்திரம் (சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது)
  •  தாய்ப்பத்திரம்
  •  வில்லங்கச் சான்றிதழ்
  •  விற்பனைப் பத்திரத்தின் நகல்
  •  சட்ட வல்லுநரின் கருத்து
  •  வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கீகாரம் நகல்
  •  வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை
  •  வருமானச் சான்றிதழ்
  •  கடந்த ஆறு மாதத்துக்கான வங்கி பாஸ்புக் நகல்
  •  வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்
  •  பான் அட்டையின் நகல்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.04.2016

பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட


பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதியிலோ அல்லது கிராமத்தையொட்டிய பகுதியிலோ மனை வாங்க உத்தேசித்துள்ளீர்களா? ஆம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.

நகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது. எனவே நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதிகள் அல்லது கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள். 

ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டுவிடுவதால், மனை வாங்கியவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

அனுமதி வழங்கும் அதிகாரம்
தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடீசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் இல்லை. இந்த விவரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.

சிக்கல்கள்
இப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை. வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளும் உள்ளன. இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம். 

அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன?
  • மனைகளைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள், பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.
  • வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.
  • மொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
  • சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடைலாம் அல்லவா? அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.

பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட என்னென்ன வழிமுறைகள் உள்ளன?
வழக்கமாக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகு அதை ஊராட்சியில் விண்ணப்பித்து இன்னொரு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுவிட்டால் வீடு கட்டத் தொடங்கலாம். 

ஒரு வேளை சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி அனுமதி பெற்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறாமல் இருந்தாலோ, ஏற்கெனவே சொன்னது போல லே-அவுட்டில் 10 சதவீத இடத்தை ஊராட்சிக்கு அமைப்புக்குத் தானமாக எழுதித் தரவில்லை என்றாலோ, அந்தக் குறிப்பிட்ட பகுதி புஞ்சை நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும். பின்னர் அந்த இடத்துக்கு பட்டா வாங்குவது, வீடு கட்ட அனுமதி வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவதும் கடினமாகிவிடும்.

புறநகர்ப் பகுதிகளிலோ அல்லது கிராமப் புறங்களிலோ புதிதாக வீட்டுமனை வாங்க உத்தேசித் துள்ளவர்கள் இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.


நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.04.2016