disalbe Right click

Monday, May 23, 2016

பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்


பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் - என்ன செய்ய வேண்டும்?

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் .
மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும்.
உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக் கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே, முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.
இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Counseling Tips :
மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்து விடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது.
இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.
நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.
உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.
உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.
அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று
சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).
நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.
கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.
பின்குறிப்புகள்:
ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள்.
என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.
முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.
கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
முறையான அங்கீகாரம்!
காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.
பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.
பொறியியல் கவுன்சிலிங் க்கான பட முடிவு
நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள்.
மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!
- பூ.கொ.சரவணன்
விகடன் செய்திகள் - 28.06.2014

அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராக

அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராக 
என்ன செய்ய வேண்டும்?

இப்போது எல்லாமே ஆப் மயம்தான். டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், கல்வி சார்ந்த ஆப்களும் கொட்டிக்கிடப்பதை நாம் அறிவோம். ஆனால், அதில் எந்த ஆப் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக அமையும், நம் வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்ள உதவும் என்பதில்தான் நம் திறமை வெளிப்படும்.
இந்திய வரலாறு தொடங்கி , கணிதம், அகராதி, செயல்திறன், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு... என துறைதோறும் குவிந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான ஆப்ஸில் சிறந்தது எது என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இங்கே...
TNPSC தமிழ்
இதில், டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் தேர்வுகள் , வி.ஏ.ஓ மற்றும் TET தேர்வுகளுக்கான தினசரி வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், தேர்வு வரைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள உதவும். எந்தெந்த துறையில் அரசு பணிகளுக்கான வாய்ப்பு இருக்கிறது , எத்தனை இடங்கள் இருக்கின்றன என பல்வேறு தகவல்களைத் தெரிவித்துக்கொண்டே இருக்கும். இதில் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், திறனாய்வு மற்றும் மனத்திறன் பயிற்சி, பாடத்திட்டம் என அரசு தேர்வுகளுக்கு படிக்கவும் பயிற்சி எடுத்துக்கொள்ளவும் உதவும் சூப்பர் ஆப்.
IAS
பெயரைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும். இது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது. நடப்பு நிகழ்வுகள், கேள்வி-பதில்கள், குறிப்புகள், தேர்வுமுறைக்கான பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் எனத் தேர்விலும் வாழ்விலும் தேர்ச்சி பெறுவதற்கான பெஸ்ட் ஆப்.
Indian History , Book & Quiz
இந்திய வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஆப். 9000 BC பீம்பெட்கா ராக் ஷெல்டர்ஸ் (BHIMBETKA ROCK SHELTERS) தொடங்கி, சிந்துசமவெளி நாகரிகம் முதல் இந்தியாவின் மன்னர்கள் ஆட்சி , சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் என இந்திய வரலாற்றை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். வரலாறு என்றவுடன் `ஐயய்யோ...அது பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்குமே!' என சோர்ந்து போக வேண்டாம். வரலாற்று நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளாத சுவாரஸ்ய தகவல்களையும் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். கலிங்கப் போர் என்றால், வருட ரீதியிலான முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ஆப்பில், அந்த முக்கிய நிகழ்வுகளுடன் அதற்கான பின்னணியை சொல்வதோடு நிகழ்வுகளுக்கான காரணங்களை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லும். ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஆப்களில் இதுவும் ஒன்று.
Math Tricks
பிரைன் ட்ரெய்னர் ஆப்பான இதன் மூலம் கூட்டல், வகுத்தல், பெருக்கலைத் தாண்டி, கணிதத்தின் வெவ்வேறுவிதமான செயல்முறைகளையும், அதை சுலபமாகக் கையாளும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மேலும், சட்டென பதிலைச் சொல்லி சடுதியில் அசத்த, இந்த ஆப் நிச்சயம் உதவும்.
World G.K
பொதுஅறிவுப் பிரியரா நீங்கள்? உலகத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுத் தருகிறது இந்த ஆப்.
Aptitude
போட்டித் தேர்வுகளிலேயே பொக்கிஷமாகத் திகழ்வது ஆப்டிட்யூட் கேள்விகள். காரணம், கேள்விகளுடன் பதில்களையும் கொடுத்து, கொள்குறியின் மூலம் பதில்களைத் தேர்வுசெய்தால் போதும் என்பதால் என்பதால், இந்த வகை தேர்வில் அநேகர் வெற்றி பெறுவர். இருப்பினும் அதில் சாதாரண வெற்றி பெறுவதைவிட மகத்தான வெற்றி பெற்று மதிப்பெண்கள் மூலம் நமக்கான பதவியைத் தேடித்தரக்கூடிய தோழமையான ஆப் இது.
English to Tamil
தமிழ் அகராதி ஆப். நாம் அன்றாடம் பழகக்கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து, தமிழின் சாரத்தை ஆழமாகப் பதியவைக்கக்கூடிய வார்த்தைகளுக்கான பொருள்கள் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பது போன்ற வார்த்தைகளுக்கான விளக்கங்களை தெரிந்துகொள்வதோடு, வார்த்தை விளையாட்டு விளையாடுவதற்கான தமிழ் வார்த்தைகளை சுலபமாகத் தெரிந்துகொள்ளவும், பொது அறிவு, தினசரி செய்தி சுருக்கம், திறனாய்வு என பல தரப்புகளில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கான பொருளை அறிந்துகொள்ளவும் இந்த ஆப் கைகொடுக்கும்.
- கே. அபிநயா
நன்றி : விகடன் செய்திகள் - 23.05.2016

Sunday, May 22, 2016

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்காமலிருக்க


குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்காமலிருக்க 
என்ன செய்ய வேண்டும்?

முதல் ஐந்து வயது வரை அதிக குளிரினால், அல்லது ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது நார்மலான விஷயம்தான். பத்துவயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகி அதற்கு உரிய தீர்வினை நீங்கள் காண வேண்டும். சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்னென்ன? முன்னமே சொன்னது போல் மிகச் சிறிய வயதில் கழித்தால் பெரியதாய் கவலைப்பட தேவையில்லை. வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
மூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர்பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை. வீட்டிலேயே அதனைக் குணப்படுத்தும் எண்ணற்ற மூலிகைகள் நம் சமையலறையில் கொட்டிக் கிடக்கின்றன. 

ஆலிவ் எண்ணெய் மசாஜ் : 
home remedies for bed wetting
இது எளிய வழி. ஆனால் அருமையான தீர்வினைத் தரும். ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் பாஸிடிவான ரிசல்ட் விரைவில் கிடைக்கும்.
பட்டை : 
home remedies for bed wetting
பட்டை எல்லாருக்கும் தெரிந்த மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப் பொருள். இது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த தீர்வு தரும். நம் பாட்டி காலத்திலிருந்து இந்த வழி எல்லோராலும் அறியப்பட்டதே. பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள். அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம். தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள். வீட்டில் முயன்று பாருங்கள்.
நெல்லிக்காய் : 
home remedies for bed wetting
பெரிய நெல்லிக்காய் அட்டகாசமான தீர்வை தரும். நெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.
களாக்காய் : 
களாக்காயில் ஜூஸ் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது கெளாக்காயையும் அப்படியே சாப்பிட வைக்கலாம். தூங்கப்போகும் முன் அவர்களை சாப்பிட சொல்லுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கும். கெளாக்காய், சிறுநீரகத்தில் தொற்று இருந்தாலும் அதனை சரி செய்யும்.
வெல்லம் : 
home remedies for bed wetting
அதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது. வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் தரலாம். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும் மறக்காதீர்கள்.

எல்லா வகையான உணவுகளிலும் வெல்லத்தை கலந்து கொடுப்பது உகந்த பலனைத் தரும். இந்த டிப்ஸ் தினமும் செய்தால் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள். 

வளர்ந்த பின் சிறு நீர் படுக்கையில் கழிப்பது, குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையை தரும். வெளியில் எங்கும் செல்ல வெட்கப்படுவார்கள். சொல்லவும் முடியாது. 

ஆகவே விரைவில் அதற்கு தீர்வு காண மேற்கூறிய எல்லா வழிகளுமே உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் தான் தரும். முயன்று பாருங்கள் பெற்றோர்களே!

By: Hemalatha 

நன்றி : போல்ட் ஸ்கை » தமிழ் » மகப்பேறு » Kids - 23.05.2016







மார்பக புற்றுநோய்


மார்பக புற்றுநோய் - என்ன செய்ய வேண்டும்?

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் செல்வி ராதா கிருஷ்ணா

மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கீமோ தெரபி: செல்லின் மாறுபாட்டினை கேன்சர் என்கிறோம். அந்த மாறுபட்ட ஆகாத செல்லினை அழிக்க ட்ரிப்ஸ் வழியாக மருந்து செலுத்தப்படும். அப்படி செலுத்தப்படும்போது மற்ற நல்ல செல்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால் முடி உதிர்வு, வாந்தி, பேதி, சோர்வு, எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற வெளிப்பாடுகள் தென்படும். ஆனாலும், அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த சிகிச்சையானது 21 நாளுக்கு ஒருமுறை என... 4, 6, 8 முறை என வியாதியைப் பொறுத்து வழங்கப்படும்.

ரேடியோ தெரபி: கதிர்வீச்சு வழியாக காமா, போட்டான் (மார்பகப் புற்றுநோயில் அதிகம் இதைத்தான் பயன்படுத்துவார்கள்) மற்றும் எலெக்ட்ரான் போன்ற கதிர்களை (தேவைக்கு ஏற்ப) செலுத்தி அதன் மூலமாக புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறையே ரேடியோ தெரபி சிகிச்சை முறையாகும்.  இந்த சிகிச்சையானது  5 வாரங்களுக்கு 25 முறை செய்யப்படும்.

ஹார்மோன் தெரபி: மாத்திரை மூலமாக ஹார்மோன் தூண்டுதலால் ஏற்படக்கூடிய புற்று செல்களைத் திரும்ப வராமல் தடுக்கும் முறையே ஹார்மோன் சிகிச்சை முறையாகும். 5 வருடங்களுக்கு தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.  கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்றவற்றை ஒப்பிடும்போது இதனால் வரக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவே.

டார்கெட்டட் தெரபி: ஊசி மூலமாக (சில நேரங்களில் மாத்திரை மூலமாக) குறிப்பிட்ட பாதிப்பு விளைவிக் கக்கூடிய செல்களை மட்டும் டார்கெட் வைத்து அழிக்கும் முறை டார்கெட்டட் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஒரு வருட காலத்துக்கு... 21 நாட்களுக்கு ஒருமுறை என 9 முதல் 17 ஊசிகள் வரை போடப்படும்.

மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை... சாத்தியமா?

மார்பகப்புற்றால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு, அதை அகற்றாமல் சிகிச்சை செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரு பெண்ணின் மார்பக அளவின் விகிதத்தைவிட கட்டி பெரியதாக இருந்தால், அங்கு விட்டுவைக்க மார்பகப் பகுதி எதுவும் மிஞ்சி இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில், நோயாளியின் மார்பகத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் சில வழிமுறைகள் உள்ளன. கீமோதெரபி கொடுத்து கட்டியின் அளவைக் குறைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம். சில சமயம் கட்டியின் அளவைக் குறைப்பதற்குக் கொடுக்கும் வைத்தியத்தால் கட்டி கரைந்தேபோகக்கூடும். அந்தச் சமயத்தில் கட்டிதான் கரைந்துவிட்டதே என்று விட்டுவிடக்கூடாது. அது போன வேகத்தில் மீண்டும் வந்துவிடக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். இதைத் தாண்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

மார்பக மறு உருவாக்கம்!

இழந்த மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், அந்தப் பெண்ணின் உடலின் பிற பகுதிகளிலிருந்து தசையை எடுத்து, அல்லது செயற்கை சிலிக்கான் மார்பகத்தைப் பொருத்தி சிகிச்சை செய்ய முடியும். இப்படிப் புதிதாக உருவாக்கப்படும் மார்பகம், மற்றொரு மார்பகத்தைவிட வித்தியாசமாக இருக்கலாம். அதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடம்பின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுத்துச் செய்தாலும் உணர்ச்சி இருக்காது. சிலருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க அறுவை சிகிச்சையையும் செய்யமுடியும். ஒரு சிலருக்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த மறு உருவாக்கத்தைச் செய்ய வேண்டிவரும். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய், இதுவரை என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இனி என்ன விதமான சிகிச்சை தேவைப்படும் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த சிகிச்சையின் விளைவுகள் பின்வருமாறு...


அறுவை சிகிச்சைத் தழும்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப, கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.

புதிதாக உருவாக்கிய மார்பகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம்.

கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.

புண் ஆறுவதற்கு சற்று அதிக காலம் ஆனால், அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர்வதும் தாமதப்படும்.

மார்பக மறு உருவாக்கலில் இந்தியாவின் நிலை!

இந்தியாவில் மார்பக மறு உருவாக்க சிகிச்சை கோரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணங்கள்...

நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் மார்பக மறு உருவாக்கத்தைச் செய்ய முடியாது.

இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு மிக அதிகம்.

நம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பலர் பலவிதமான யோசனைகளைச் சொல்வார்கள். அவர்களுடைய புரிதல் எல்லாம் முழுமையானதாக இருக்காது. ஆனால், அவை நோயாளியின் முடிவை வலுவாகப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

சிலிக்கான் செயற்கை மார்பகம் எளிதில் கிடைப்பதில்லை. நிறைய செலவும் ஆகும். அதோடு மார்பகத்தின் வடிவம் நன்றாக அமைய மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. இதற்கு ஆகும் செலவும் மிக மிக அதிகம்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறு உருவாக்கத்தை ஆர்வத்துடன் பரிந்துரைப்பதில்லை.
சா.வடிவரசு
___________________________________________________

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறையும்! 

எந்தவொரு நோயாக இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதுபோலத்தான் மார்பகப் புற்றுநோய்க்கும் அது அவசியமானது. குறிப்பாக, கீமோ தெரபி சிகிச்சையின்போது நோயாளி தன் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சமச்சீரான உணவே மிகச்சிறந்த மருந்து. அதை உண்டால்தான் நோய் சீக்கிரம் குணமாகும். அதோடு உடம்பும் சிகிச்சையை சந்திக்கும் அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பிடித்த உணவை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நார்ச்சத்து உட்பட அனைத்துவிதமான சத்துக்களும் கிடைத்துவிடும்.

சரியான உணவுப் பழக்கமும், முறையான உடற்பயிற்சியும் மார்பகப் புற்றுநோயாளிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோலாவில் உள்ள `UCSD' புற்றுநோய் மையத்தில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. 1,490 பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் 30 பெண்கள் மட்டுமே ஐந்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் உணவு உண்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். நோய் பாதிப்பில் இந்தப் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிடக் குறைவான அபாயமே உண்டு என்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புற்றுநோயாளிகள் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று ஜோன் பிளான் என்ற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. கோதுமைப் புல் சாறு அல்லது பவுடர், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படும்போது மட்டும் இவற்றைச் சாப்பிடக்கூடாது.

அதிகப் புரதச்சத்து கொண்ட உணவான சோயாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்பட்டாலும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மீன், கோழி போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்த சமையலாகச் சாப்பிடலாம். மாட்டுக் கறி வேண்டாம்.


துணை சிகிச்சைகள்!
மார்பகப் புற்றுநோயாளிகள் பலருக்கு வலியைக் குறைக்கவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் துணை சிகிச்சைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியல் இங்கே. இது முழுமையான பட்டியல் கிடையாது. மேலும், இதைச் செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது மிக மிக அவசியம்.   

தியானம் 

பிரானிக் ஹீலிங்  

ரெய்கி 

யோகா 

யோகா நித்ரா

சுவாசப் பயிற்சி

பிரணாயாமம்

மந்திரம் ஜெபித்தல்

ரெஃப்ளெக்ஸாலஜி

அரோமா தெரபி 

ஆயுர்வேத மசாஜ்

அக்குபஞ்சர்

இசை சிகிச்சை

கலை சிகிச்சை

ஜர்னலிங் 

உணர்ச்சிபூர்வ சிகிச்சை
________________________________________________
சிகிச்சையும் தாம்பத்ய உறவும்!

மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததில் இருந்து சிகிச்சை முடியும்வரை பெண்கள் பல வகைகளில் பாதிக்கப்படுவார்கள். அதில் தாம்பத்ய உறவும் அடங்கும். இது பற்றி மருத்துவர்கள்கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. இதைக் காரணம் காட்டி சில திருமண உறவுகள் முறிவதைக்கூட நாம் பார்த்திருக்கலாம். அதற்கான காரணங்களாக... உடல் அழகு போய்விடுவதால் ஏற்படும் பதற்றம்,  மார்பகம் மற்றும் பிறப்புறுப்பில் வரக்கூடிய வலி, சிகிச்சை காலகட்டத்தில் வரக்கூடிய மன அழுத்தம்... இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் இவையெல்லாம் கடந்த ஒரு புரிதல் இருந்தால் அது கொடுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவர மிகப்பெரிய மருந்தாக விளங்கும்!

நன்றி : அவள்விகடன் - 09.02.2016