disalbe Right click

Wednesday, June 14, 2017

(சட்டப்படி) போயஸ் வீடு யாருக்கு?

(சட்டப்படி) போயஸ் வீடு யாருக்கு? 

செல்வி ஜெ.ஜெயலலிதாபுரட்சித் தலைவிஅம்மாஇந்த மாயச் சொற்கள் மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. அ.தி.மு.க கட்சியில், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியில், ஜெயலலிதாவின் சொந்தக் குடும்பத்தில் இந்தப் பெயரையும், பட்டங்களையும் தவிர்த்து வேறு எந்தப் பெயரும் ஜொலித்ததில்லை; அதற்கு ஜெயலலிதா ஒருபோதும் அனுமதித்ததும் இல்லை.
Image result for தீபா
கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதைத் தவிர்த்து அந்தக் கட்சியின் மற்ற பொறுப்புகள் யாரிடம் இருக்கின்றன என்பது அர்த்தமற்றதாக இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா. அவ்வளவுதான்அதைத் தவிர்த்து மற்ற எல்லோரும் பூஜ்ஜியங்களே!
ஜெயலலிதா மரணமடைந்த அடுத்த நொடியே நிலைமை மாறத் தொடங்கியது. கட்சிக்குள் இருந்த ராணுவக் கட்டுப்பாடுகள் தகர்ந்து விழத் தொடங்கின. ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அது முற்றிலுமாகச் சிதைந்தது. கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆளுக்கொரு அறிவிப்பை வெளியிடத் தொடங்கினர். அமைச்சர்கள் ஆளுக்கொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். இன்னொரு பக்கம், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் தினமும் ஒரு குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். அதன் உச்சகட்டம்தான் கடந்த 11-ம் தேதி போயஸ் கார்டன் இல்லம் முன்பு நடந்த களேபரங்கள். இந்த நிலையில், ‘போயஸ் கார்டன் வீடு யாருக்குச் சொந்தம்என்ற கேள்விக்கான பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறது.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை என்று சொல்லப்படும் பல நிறுவனங்கள், எஸ்டேட்டுகள், சொத்துகள் வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவே உயிரோடு இருந்தால்கூட அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால், போயஸ் கார்டன் வேதா நிலையத்தைப் பொறுத்தவரை அந்தக் குழப்பமே கிடையாது. அது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. அந்த இடம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியது. ஆனால், ஜெயலலிதாவின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் வந்த தொகையில்தான் வேதா நிலையம் வீடு கட்டப்பட்டது. அதன்பிறகு அதில் கட்டப்பட்ட புதிய கட்டடம் எல்லாமும் சேர்த்து ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துகள் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்குச் சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும்.
ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துகள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்குச் சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துகள், அவருடைய தந்தை ஜெயராமின் மகனான ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோர முடியும். அந்தவகையில் தற்போது போயஸ் கார்டன் வீட்டில் தீபா, தீபக் இருவருக்கும் பங்கு உண்டு. 
Image result for தீபக் ஜெயகுமார்
ஆனால், மேலே சொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து உயிலோ, அல்லது வேறு ஆவணங்கள் எதுவுமோ  எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா தன்னுடைய சொத்துகளை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துகளை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக்கும், தீபாவும் உரிமை கோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துகள் போய்ச் சேரும்.
ஜெயலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அப்படி உயில்  இருந்தால்அது குறித்து  சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமாகச் சென்னையில் உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டு இருந்தால், அந்த உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புரொபேட்செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் புரொபேட்செய்யப்பட வேண்டும். தனது உயிலைச் செயல்படுத்தும் உரிமையை யாருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளாரோ, அவர்தான் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, உயிலில் இருக்கும் விஷயங்களைப் பொதுமக்கள் அறியுமாறு வெளியிட நீதிமன்றம் ஏற்பாடு செய்யும். அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியவரும். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம் நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துகளை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும் தீபாவும் அந்த உயிலின் செல்லும் தன்மைகுறித்தும், ‘புரொபேட்வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும். 
Image result for தீபக் ஜெயகுமார்
போயஸ் கார்டன் தங்களுக்கு மட்டும்தான் சொந்தம்என்று ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சமீபகாலமாகவே ஆசை வந்துவிட்டது. கடந்த 11-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென போயஸ் கார்டனுக்குத் தீபா விசிட் செய்தார். சொத்து உரிமைக் கோரல் பற்றிப் பேசுவதற்கு அன்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் தீபக், தனது சகோதரி தீபாவுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது, “நீ மட்டும் தனியாகப் போயஸ் கார்டன் வா. சொத்து விவகாரம் உள்பட பல விஷயங்களை உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்என்று கூறியிருக்கிறார். அதனால் தீபாவும் அதிகாலையிலேயே போயஸ் கார்டனுக்குள் வந்தார். இவர் தனியாகத் தீபக்கைச் சந்தித்துப் பேசும்வரை எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை.
அதன் பின்னே தீபாவின் கணவர் மாதவனும், தீபா பேரவை நிர்வாகி ராஜாவும் போயஸ் கார்டனுக்குள் சென்றுள்ளனர். வேதா நிலையத்தில் இருந்த, சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தாரின் புகைப்படங்களை அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் தீபா தரப்புக்கும், வேதா நிலைய காவலாளிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் தீபா தரப்பினரைக் காவலாளிகள் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இந்தப் பிரச்னையின்போது காவலாளிகளை ஏதும் சொல்லாமல், ‘‘உன்னை மட்டும் தனியாகத்தானே வரச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்தாய்?’’ எனத் தீபாவிடம் கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் தீபக். இதையடுத்து தீபா, அவர் கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி  ராஜா ஆகியோர் வேதா நிலைய வாசலின் முன் நின்று சசிகலா தரப்பினரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ‘‘சொத்துக்கு ஆசைப்பட்டு சசிகலாதான் என் அத்தையைக் கொன்றார். இதற்கு என் சகோதரனும் உறுதுணையாக இருந்தார்’’ எனக் கூச்சலிட்டார் தீபா. தொடர்ந்து தீபாவும் மாதவனும் தீபக்கும் ராஜாவும் நடத்திய கூத்துகள், மட்டரகமான அரசியல் காட்சிகளாக இருந்தன. 
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று யார் யாரோ சொல்லிவந்தார்கள். ஆனால், ‘என் அத்தையின் மரணத்தில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லைஎன அறிவித்து வந்தார் தீபா. இந்தச் சூழலில், தற்போது முதன்முறையாக ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார்கள்எனப் புகார் கூறியிருக்கிறார். அரசியலுக்குள் நுழைவது எப்படிஎன்ற வித்தையை இப்போதுதான் தீபா அறிந்துகொண்டிருக்கிறார்.
நன்றி : ஜூனியர் விகடன் - 18.06.2017

ஜோதிடம் என்பது உண்மையா?

ஜோதிடம் என்பது உண்மையா?
சத்குரு: வடக்கு கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இருக்கிறார்கள். உங்கள் முகத்தைப் பார்த்தே உங்கள் இறந்தகாலம் என்னவாக இருந்தது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று சொல்லக்கூடியவர்கள். அவர்கள் ஞானிகள் அல்லர். போதகர்கள் அல்லர். ஆனால், அவர்கள் சொல்வது நம்புவதற்குக் கடினமான அளவுக்கு கச்சிதமாக இருக்கும். அவர்களிடத்தில் இயல்பாகவே அந்தத் திறமை இருக்கிறது.
எனக்கு 17 வயது இருக்கும்போது, என் தமக்கையின் திருமணம் தொடர்பாக வீட்டுக்கு ஒரு ஜோசியர் வந்திருந்தார். அவர் என் முகத்தைப் பார்த்தார். 'நீ ஒரு கோயில் கட்டுவாய்' என்றார். 'கோயில்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருக்கும் கோயில்களுக்குள் நுழைந்ததுகூட இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் கோவில்களைத் தகர்ப்பேனே தவிர, நானாவது கோயில் கட்டுவதாவது' என்று அதை நிராகரித்தேன்.
ஆனால், ஏழெட்டு வருடங்களில் தியானலிங்கம் கோயில் கட்டுவது என்று தீர்மானித்தபோது, அன்றைக்கு வீட்டுக்கு வந்த ஜோசியர் பற்றி நினைத்து ஆச்சர்யப்பட்டேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டதற்காக வருத்தப்பட்டேன்.
வெறும் பத்துக்கும், இருபதுக்கும் ஆரூடம் சொல்பவர் ஒருவருக்கு முன்கூட்டித் தெரிந்திருந்த ஒரு விஷயம் எனக்குத் தெரியவில்லையே என்று அவமானகரமாக உணர்ந்தேன். ஏன் அப்படி ஆனது? கோயில்கள் பற்றி எனக்கு இருந்த அவநம்பிக்கையில் அமிழ்ந்து இருந்ததால், என் பார்வை பழுதாகிவிட்டதைப் புரிந்து கொண்டேன்.
சுய விருப்பு-வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால்தான், தெளிவு கிடைக்கும். கண்மூடித்தனமாக எதையும் ஆதரிக்கவும் கூடாது, எதையும் நிராகரிக்கவும் கூடாது என்று புரிந்து கொண்டேன்.
தென் இந்தியாவில் சில குடுகுடுப்பைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சில சமயம் சில காட்சிகள் தோன்றும். தங்களால் பார்க்க முடிந்ததை விடிவதற்குச் சற்று முன்பாகவே உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்று அறிவித்துவிட்டுப் போவார்கள். நீங்கள் அதை நம்புவீர்களா, மாட்டீர்களா என்பது அவர்கள் பிரச்சனை அல்ல. உங்களிடம் பணம் கேட்டுக் கூட அவர்கள் நிற்கமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இப்போது அருகிவிட்டார்கள். மூடநம்பிக்கையை சார்ந்திருக்கும் ஜோசியர்கள் பெருகிவிட்டார்கள். கிரகங்களைக் கட்டங்களில் சிறைப்படுத்தி, உங்கள் எதிர்காலத்தை இவர்கள் தீர்மானிக்கப் பார்ப்பார்கள்.
ஒரு கைக்குட்டைக்குக்கூட சில அதிர்வுகள் உண்டு. அந்த விதத்தில் நட்சத்திரங்கள், கோளங்கள், கிரகங்கள் இவற்றுக்கும் அதிர்வுகள் உண்டு. பூமி மீது கொஞ்சம் ஆதிக்கம் உண்டு. அதற்காக, உயிரற்ற அந்த ஜடப்பொருள்கள் உயிருள்ள நம் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடுவதா?
உங்களுக்குத் தெளிவும், ஸ்திரத் தன்மையும் இல்லையென்றால், எது வேண்டுமானாலும் உங்களை ஆட்டி வைக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள உயிரற்ற ஜடப்பொருள்கள் தங்களைப் போல் உங்களை ஆக்குவதற்கு முயற்சி செய்தால், அதற்குப் பணிந்து போவீர்களா? அல்லது புத்திசாலித்தனத்துடன் உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்வீர்களா? நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களை எந்தக் கிரகம் என்ன செய்துவிட முடியும்? எந்தச் சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால், நீங்கள் பயப்படமாட்டீர்கள்.
இந்திய எல்லையில், ஆர்மி அவுட் போஸ்ட். அங்கே சங்கரன்பிள்ளைதான் மேஜர்.
ஒருநாள், ஒரு சிப்பாய் பதைப்பதைப்புடன் ஓடி வந்தான். சல்யூட் அடித்தான். 'மேஜர், நம் கூடாரங்களை எதிரி ராணுவத்தினர் எல்லாப் பக்கங்களிலும் சூழந்துவிட்டனர்' எனப் பதறினான். சங்கரன்பிள்ளை தன்னம்பிக்கை மிளிர, உற்சாகத்தோடு சொன்னார், 'நல்லதாகப் போயிற்று. எந்தத் திசை பார்த்துச் சுட்டாலும், ஓர் எதிரி வீழ்வானே!
நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்றோ, எப்படி வாழ வேண்டும் என்றோ யாரோ ஒருவர் காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிடுவார். அதன்படி வாழ்வீர்கள் என்றால், உங்களுடைய புத்திசாலித்தனத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
விழிப்புணர்வு இல்லாமல், நீங்கள் தூவிய பல விதைகள்தான் பூச்செடிகளாகவும், விஷச் செடிகளாகவும் உங்களைச் சுற்றி வளர்ந்து நிற்கின்றன. நீங்களே அவற்றுக்கு வழி கொடுத்தீர்கள் என்பதை நீங்கள் உணர்வதில்லை என்பதுதான் பிரச்சனை.
கிரகங்கள் எப்படி நகரும் என்பது கணிக்கக்கூடியது. ஆனால், மனிதனையும் முன்கூட்டியே கணிப்பது அவனை ஜடப்பொருளாகக் கருதுவதற்குச் சமம். விழிப்புணர்வுடன் இருந்தால், உங்களை முன்கூட்டி யாரும் தீர்மானிக்க முடியாது.
கிருஷ்ண தேவராயன் நாட்டின் மீது எதிரிகளின் படை திரண்டு வந்தது
எதிரிகள் தங்கள் கடவுளின் பெருமையை நிலைநாட்டப் போரிடுவதாக நம்பினர். அதனால், தங்கள் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
கிருஷ்ண தேவராயருக்குத் தெனாலிராமன் ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.
'அரசேஎதிரிகளின் சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. பன்றி ரத்தத்தைத் தீண்டிவிட்டால், அதைச் சுத்தம் செய்து நீக்கும் வரை, கடவுளின் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். அதை நமக்குச் சாதகமாக்கிக் கொள்வோம்' என்றார்.
தெனாலிராமன் ஆலோசனைப்படி, பன்றிகளின் குருதி பெரும் பாத்திரங்களில் நிரப்பப்பட்டது. யானைகள் மீது, போர்க்களத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எதிரிகளின் மீது வீசப்பட்டது. அப்போது கடவுளின் பெயரை உச்சரிக்க முடியாமல் திகைத்து நின்றதால், எதிரிகளால் தாக்கப்பட்டனர். வீழ்த்தப்பட்டனர். அங்கு மூடநம்பிக்கையை புத்திசாலித்தனம் வெற்றி கொண்டது.
வனமோ, விழிப்புணர்வோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு வேண்டுமானால், கிரகங்கள் தீர்மானித்தபடி வாழ்க்கை நடக்கலாம். கொஞ்சம் விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுபவர்கள் தங்கள் வாழ்க்கையின் திசையைத் தாங்களேதான் தீர்மானித்துக் கொள்ள விரும்புவார்கள்.
அதற்காக கிரகங்களுக்கு நம் மீது ஆதிக்கமே இருக்காதா? இருக்கும். ஆனால் ஜோசியத்தில் மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு அல்ல. நீங்கள் உறுதியாக இருந்தால் எந்தக் கிரகம், எந்தத் திசையில் இடம் பெயர்ந்தால் என்ன? உங்கள் உடலின் மீது உங்களுக்கு முழுமையான ஆளுமை இருந்தால், உங்கள் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனத்தை ஆளத் தெரிந்துவிட்டால், ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் வரை விதி உங்கள் சொல்படி கேட்கும். உங்கள் உயிர்சக்தியை முழுமையாக ஆளக் கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்றால், பிறப்பு, மரணம் எல்லாவற்றையும் நீங்கள் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ள முடியும்.
ஆரூடம் என்பது வானிலை அறிக்கை போன்றது. எல்லா சமயங்களிலும் கணிப்பு சரியாக இருப்பதில்லை. மழை பெய்யும் என்று அது சொல்லட்டும். ஆனால் நான் நனைவேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நனைவதா வேண்டாமா என்பது என் கையில்தானே இருக்கிறது? 

நன்றி: தினமலர் நாளிதழ் – 12.06.2017 

ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?

 ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?
நிலம் ஆறு கிரவுண்ட். மறைமலை நகருக்கு அருகில் ஒப்பந்ததாரர் தேவை என்னும் விளம்பரத்தைப் பிரபல நாளிதழ்களிலும் உள்ளூர் இலவச இதழ்களிலும் கண்டிருக்கலாம். இதன் முழுமையான பொருளை விளங்கிக்கொள்ள இயலவில்லை எனினும் விசாரித்ததில் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்றரை அல்லது இரண்டு கிரவுண்ட் வைத்திருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு ஓரிரண்டு தளங்கள் கிடைக்கும். ஆனால், பெரும் பரப்பு கொண்ட மனையை விற்பவர்கள் லாபத்திலும் பங்கு பெற முடியும்.
உதாரண சம்பவம்
இதுபோன்று, கூட்டாக இணைந்து செயல்படுகிற தன்மையில் கட்டாயம் ஏதாவது சிக்கல் வரும். இதை உறுதிப்படுத்துவதுபோல் மூன்று மாதத்துக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் செய்தியொன்று வெளியானது. மிகப் பிரபல, பெரிய ஒப்பந்ததாரர் ஒருவர் நில உரிமையாளர் ஒருவருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒப்பந்ததாரர் பிரபலமானவர் என்பதாலேயே, பல வாடிக்கையாளர்கள் தாமாக வந்து சேர்ந்து முன்பணம் தந்திருக்கிறார்கள். ஆனால், நில உரிமையாளர் ஒப்பந்ததாரர் மீது வழக்கு தொடர்ந்ததாகச் செய்தி தெரிவித்தது. காரணம், ஒப்பந்ததாரர் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அசலாகக் கட்டுகிற தளங்களுக்கும் நிறைய வேறுபாடு இருந்ததே.

நாலைந்து தளங்கள் எழுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டவர்களுக்கே தொந்தரவு ஏற்படுகிறது. கையொப்பமிட்ட புரிந்துணர்வின்படி, கட்டும் தளங்களில் ஒன்றோ இரண்டோ நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கத் தாமதமாகிறது.
தேர்ந்தெடுக்கச் சில வழிகள்
இத்தகைய நிலைமையில் ஒப்பந்ததாரரை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்கு நடைமுறைக்கு ஏற்பச் சில வழிகள் உள்ளன:

குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெயரைச் செவி வழிச் செய்தியாகவோவிளம்பரம் மூலமோ அறிந்து இருப்பீர்கள். அவர் கட்டி முடித்த தளங்களைச் சென்று பார்வையிடுங்கள். ஓரிரண்டு ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட தளவரிசைகளைப் பார்க்கலாம்.
பொதுவாக எல்லா ஒப்பந்ததாரர்களும் தனி வலைத்தளம் வைத்திருப்பார்கள். அதில் நிறைய விவரம் கிடைக்கும். அவர் மூலம் கட்டிடம் கிடைத்துப் பயனடைந்தவர்களிடம் பணிவாகப் பேசினால் தகவல் கிடைக்கும்.
வீடு கட்டும் முறையே மாறிவிட்டது. ஏனென்றால், 30 ஆண்டுக்கு முன், தனி வீடுதான். சாதாரண ஒப்பந்ததாரர் கட்டினால் போதும். இப்போது அப்படியல்ல. மண்ணின் தரம், தண்ணீர், சுற்றுப்புறம் போன்ற பல சோதனைகளைச் செய்ய, முறையான பொறியாளர்கள் அவசியம். மேலும், சுனாமி, வர்தா போன்ற அசம்பாவிதங்களைத் தாங்கிக் கொள்கிற அளவுக்குத் தளங்கள் அமையுமா என்பதையும் சோதிக்க வேண்டும். (2000-க்கு முன் இவை அறிந்திராதவை).
சில தடங்கல்கள் எதிர்பாராத வகையில் வரும். அரசு மாற்றத்தால் நிலவுகிற தாமதம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இத்துடன் தற்போதைய தலைவிரித்தாடும் பிரச்சினை மணல் பற்றாக்குறை. இவற்றையெல்லாம் சந்தித்துச் சமாளிக்கிற அளவுக்கு ஒப்பந்ததாரருக்கு மன உறுதியும் பண பலமும் இருத்தல் அவசியம்.
ஒப்பந்ததாரரிடம் மனையைக் கொடுப்பது, கிட்டத்தட்ட சேலையை முள்ளிலிருந்து எடுப்பது போலத்தான். கட்டிடம் உறுதியாகவும் இருக்க வேண்டும். தொகையும் பட்ஜெட்டுக்கு மேல் போகக் கூடாது.
லலிதா லட்சுமணன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.06.2017

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!

நாவல்... ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில் தானாக வளரும் ஒரு மரம். இதற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் ஜம்பலம், பிளாக்பிளம் என்பார்கள். இதன் முழுத்தாவரமும் துவர்ப்புச்சுவை, குளிர்ச்சித்தன்மை கொண்டது.

நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும். இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நாவல் மரத்தில் அதன் பழம் நிறைந்த சக்தி கொண்டது. இதில் வெள்ளை நாவல் என்ற ஒருவகை மரம் சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது. மேலும் ரத்த சிவப்பு அணுக்களை பெருகச்செய்வதுடன் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இன்னொரு வகையான ஜம்பு நாவல் வாத நோய் மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது.
பழங்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கக் கூடியது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இதில் உள்ள குயுமின் என்ற ஆல்கலாய்டு தோலில் சுருக்கம் விழுவதைத் தடுக்கும். இதன்மூலம் வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும்.
நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன் சேர்த்து இரண்டு நாள்கள் காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு போன்றவை சரியாகும்.
நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.
பழம் மட்டுமல்லாமல் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை - மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும். வேப்பம்பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல்கொட்டை பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் பொடியுடன் நாவல் விதை சம அளவு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் குறையும். விதைச்சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.
இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டு வந்தால் பேதி கட்டுக்குள் வரும். இதன் பட்டையை அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கால் லிட்டராக ஆனதும் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்புளித்து வந்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு தொண்டை அழற்சி சரியாகும்.
மரிய பெல்சின்,
நன்றி : விகடன் செய்திகள் - 08.06.2017

Saturday, June 10, 2017

குதுப்மினார்

Image may contain: text
குதுப்மினார்
மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும்.
இந்த வரலாற்று காலம் நெடுகவும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது இருந்துவருகிறது டெல்லி. எத்தனையோ போர்கள், சதிகள், முற்றுகைகள், கவிழ்ப்புகளை சந்தித்திருக்கும் இந்நகரம் இன்று வரலாற்று பாரம்பரியம் கொண்ட பழமையான பாரதத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர மேற்கத்திய வாழ்க்கைமுறை கொண்ட நவீன இந்தியாவிற்கும் இடையில் இயங்கும் ஒரு கலாச்சார தொட்டிலாக இருக்கிறது.
இந்த நகரத்தின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு அத்தாட்சியாக வானுயர நிற்கும் குதுப்மினார் பற்றி இன்றைய கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா பகுதியில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
குதுப்மினாரின் சிறப்பு:
* 74மீ உயரம் கொண்ட குதுப்மினார் தான் உலகத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயரமான தூபி ஆகும்.
 * குதுப்மினார் மற்றும் இதனை சுற்றியிருக்கும் மற்ற வரலாற்று சிதலங்கள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
யாரால் எப்போது கட்டப்பட்டது?
* கி.பி 1200ஆம் ஆண்டு தில்லி சுல்த்தான் வம்சத்தை தோற்றுவித்தவரான குதுப் உதின் ஐபக் என்பவரால் குதுப்மினார் கட்டப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்னர் வந்த இல்துமிஷ் என்பவர் கி.பி 1220ஆம் ஆண்டு குதுப்மினாரில் மேலும் இரண்டு அடுக்குகளை கட்டியிருக்கிறார்.
* 1369ஆம் ஆண்டு இடி தாக்கியதன் காரணமாக சிதலமடைந்த குதுப்மினாரை பிரோஸ் ஷாஹ் துக்ளக் என்ற மன்னன் புனரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் செங்கற்கள் மற்றும் பளிங்கு கற்களை கொண்டு மேலும் இரண்டு அடுக்குகளை புதிதாக கட்டியிருக்கிறான்.
பெயர் காரணம்:
குதுப்மினாருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதற்கு இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
* இதை கட்டுவதற்கு உத்தரவிட்டது குதுப் உதின் ஐபக் என்பதால் அவரின் பெயரில் இருந்து குதுப்மினார் என்று சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
* குதுப்மினார் கட்டபப்ட்ட காலத்தில் டெல்லியில் மிகப்பிரபலமாக விளங்கிய சூபி ஞானி குதுபுதின் பக்தியர் காகி என்பவரின் பெயரில் இருந்தும் இக்கட்டிடதிற்க்கான பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கட்டிட அமைப்பு:
*தூபி என்பது இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மசூதிகளில் நாம் பார்க்கும் உயரமான தூண்கள் தான் தூபி எனப்படுபவை. அக்காலத்தில் செய்திகளை தெரிவிக்கவும், போர் பற்றிய எச்சரிக்கைகளை அனுப்பவும், தொழுகை செய்வதற்கான நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டவும் இந்த தூபிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
*அப்படிப்பட்ட தூபிக்களில் ஒன்றான குதுப்மினாரில் குரானின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களை உள்ளடக்கிய அழகியதொரு கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
துருப்பிடிக்காத தூண்:
* குதுப்மினார் வளாகத்தில் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இரும்புத்தூண் ஒன்றையும் நாம் காணலாம். இது கிட்டத்தட்ட 2000வருடங்களாக இதே இடத்தில் கொஞ்சம் கூட துருப்பிடிக்காமல் நிற்பது ஒரு அறிவியல் அதிசயமாகும்.
* குதுப்மினார் கட்டப்படுவதற்கு பல வருடங்கள் முன்பிருந்தே இருக்கும் இந்த இரும்புத்தூனில் 'பிராமி' எழுத்துக்குறிப்புகள் காணப்படுகின்றன.
விபத்து:
*அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையினுள் எப்படி படிக்கட்டுகள் மூலம் அதன் உச்சிக்கு சென்று பார்க்கலாமோ அதுபோலத்தான் குதுப்மினாரின் உள்ளும் அதன் உச்சி வரை மக்கள் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*ஆனால், டிசம்பர்4,1981ஆம் ஆண்டு இதனுள் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருக்கின்றனர். அதன் பிறகு பொதுமக்கள் இதனுள் சென்றுவர தடைவிதிக்கப்பட்டது.
குதுப் வளாகம்:
குதுப்மினார் இருக்கும் குதுப் வளாகத்தில் அலா இ மினார், குவாத்துல் இஸ்லாம் மசூதி, இமாம் ஜமின் டூம் (கல்லறை), அலாவுதீன் கில்ஜி கல்லறை, சுல்தான் காரி நினைவுச்சின்னம் போன்ற இடங்களும் இருக்கின்றன. 
குதுப்மினாரின் வரலாற்றோடு பின்னிப்பிணைத்த இந்த இடங்களுக்கும் சென்று கட்டாயம் பார்வையிடுங்கள்.

நன்றி : Nativeplanet » Tamil » Travel Guide - 18.12.2015