disalbe Right click

Sunday, August 13, 2017

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!

Image may contain: one or more people, people standing, ocean, text, water and outdoor
மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!
''பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.
10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.
10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் - மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
''சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.
மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).
ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், 'என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது. பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்'' என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.
குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது...
''உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல... உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.
கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.
கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது'' எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.
சிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வேலன், ''நம் கலாசாரத்தில், 'ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, 'ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
பருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.
சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.
தள்ளிப்போடுவது சாத்தியமே!
சென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ''சங்க காலத்தில், 'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.
நம் மூளையில் 'ஹைபோதலாமஸ்’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, 'ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.
குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!''
- ரேவதி (டாக்டர் விகடன் - 31.01.2012)

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!
இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
➤  இது கையெழுத்தே இல்லை.
➤  இது என்னோட கையெழுத்து இல்லை.
➤  இது அவருடைய கையெழுத்து இல்லை
➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.   
இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?
கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?
1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம். 
கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?
2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.
 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?
3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.
Tamilnadu Forensic Sciences Department and Lab.  Addresses:
1. The Director, 
    Forensic Sciences Dept, 
    30-A, Kamarajar salai, 
    Mylapore, 
    Chennai- 600 004. (Phone: 044-28447771, Fax: 28447767)
    E-mail:forensic(at)tn.nic.in  

2. The Asst. Director, 
    Forensic Sciences Dept, 
    Ezhilagam Annexe, 
    Chepauk, 
    Chennai- 600 005. (Phone: 044-28517217) 

3. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    219, Race course road, 
    Coimbatore- 641 018. (Phone: 0422-2214695)  

4. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Collector office road, 
    Madurai- 625 020. (Phone: 0452-2531966)  

5. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Thanjavur Medical College Campus 
    Thanjavur - 613 004. (Phone: 04362-240016)  

6. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Tirunelveli Medical College Campus 
    Tirunelveli - 627 011. (Phone: 0462-2575675)  

7. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Phase-3, Sathuvachery 
    Vellore - 636 009. (Phone: 0416-2253255)  

8. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    55, Chinaiah road, Maravaneri. 
    Salem - 636 007. (Phone: 0416-2253255)  

9. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    165/90,Thiru.vi.ka. nagar, Pudur 
    Trichy - 620 017. (Phone: 0431-2770400)  

10. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Master  Plan Complex, 
    Viluppuram - 605 602. (Phone: 0414-224680)  

11. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Master Plan Complex, Sethupathy Nagar,
    Ramanathapuram - 623 503. (Phone: 0467-230646)  


குறிப்பு:  கையெழுத்துக்களை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் அல்லது காவல்துறை மூலமாகவே மேற்கண்ட அலுவலகங்களை அணுக முடியும்.
***************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, August 12, 2017

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு எங்கள் சல்யூட்!

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு எங்கள் சல்யூட்!
(நீதியின் மாறுபட்ட கோணம் இது)
தச்சு வேலைக்காக, மதுரையில் இருந்து, தாராபுரம் வந்த வாலிபர் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் பசி தாளாமல் அங்கும், இங்கும் அலைந்தார். வேறு வழியின்றி, அங்கிருந்த ஒரு கடையில் பன்னை திருடி சாப்பிட்டார். கடைக்காரர், வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மறுநாள், நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் முன் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்த விபரத்தை போலீசாரிடம் கேட்டார், மாஜிஸ்திரேட், ஜியாவுதீன். 'ஐயா, பசிக்காக, பன்னை திருடி விட்டான்' என, போலீசார் கூறினர். 
அதை கேட்டு கடுப்பான அவர், 'பசின்னு ஒரு பன்னை திருடி விட்டான்; அதுக்குப் போய் சிறையா' என்றார்.'
இன்னும் புலன் விசாரணை முடியவில்லை' என்றனர், போலீசார். 
அதற்கு, மாஜிஸ்திரேட், 'இதிலே என்னய்யா இன்வஸ்டிகேஷன்' என்றார். வாலிபரை பார்த்த அவர், 'நேத்து காலை, ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனியா?' எனக் கேட்டார்.
ஆமாங்கய்யா போனேன்' என, வாலிபர் தலையாட்ட, 'அதெல்லாம் சரி, எங்க போன' எனக் கேட்டார், மாஜிஸ்திரேட்.
'போலீஸ் ஸ்டேஷன்லேதான்யா' என, வெட்கத்துடன் சொல்ல, போலீஸ் பக்கம் திரும்பினார், மாஜிஸ்திரேட்.
அப்புறம் இதிலென்னய்யா இன்வஸ்டிகேஷன்; அவன் திருடின பன்னை, உங்க ஸ்டேஷன்லே இன்னைக்கு வேறு விதமா விட்டுட்டு வந்துட்டான். ஆக, திருடு போன, 'பிராபர்ட்டி ரிகவரி' ஆயிடுச்சில்ல. அப்புறம் எதுக்கு ஜெயில்' என, மாஜிஸ்திரேட் கேட்க, இன்ஸ்பெக்டரும், ஏட்டும் 'திருதிரு'வென முழித்தனர்.
பசிக்கு திருடிய வாலிபருக்கு, பெரிய சைஸ் பன்னும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தர, மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். மேலும், சொந்த ஊர் திரும்ப, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.
நீதி என்பது, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேடும் சட்டப் புத்தகங்களில் இல்லை; இதயங்களில் தான் இருக்கிறது என, அனைவருக்கும் புரிய வைத்த, மாஜிஸ்திரேட்டிற்கு பெரிய வணக்கத்தை தெரிவிப்போம்!
க.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.08.2017

Friday, August 11, 2017

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
‘‘வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற நீங்கள் அலைந்ததெல்லாம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் கல்விக் கடன் பெற வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் அல்லது ஒரு கம்ப்யூட்டா் பிரவுஸிங் சென்டாில் இருந்தோகூட கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசு, கல்விக் கடனுக்காக பிரத்யேகமாகத் துவங்கியுள்ள வித்யா லட்சுமி இணையதளத்தில் (www.vidyalakshmi.co.in) சென்று முதலில் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தற்சமயம் 40-க்கும் மேற்பட்ட வங்கிகள் வழங்கும் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காலவிரயம், தட்டிக்கழித்தல்களை எளிதில் தவிா்த்துவிடலாம். இந்த இணையதளத்தில் பதிவு செய்யாமல் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டுமென்றால், அந்தந்த வங்கிகளின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்ல பலன் அளிக்கும்.
நாடு முழுக்க உள்ள 130-க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் 200-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன.
கிராம வங்கியிலும் வாங்கலாம்
கல்விக் கடன் என்றாலே பெரும்பாலானோர்களுக்கு ஒரு சில பொதுத் துறை வங்கிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். பொதுத் துறை வங்கிகள் மட்டுமல்லாமல், தனியாா் வங்கிகள், கிராம வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய அரசின் நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் கல்விக் கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவை தவிர இன்னும் சில அமைப்புகள்
1. தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
2. தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
3. தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
4. தேசிய தாழ்த்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
5. தேசிய துப்புரவுத் தொழிலாளா்கள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
6. தேசிய பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
அந்தந்தப் பிாிவினாின் மேம்பாட்டுக்காக இவை கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இவை நேரடியாக மக்களுடன் இணைந்து செயல்படுவதில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள், பொதுத் துைற மற்றும் தனியாா் வங்கிகளுடன் இணைந்து தங்களது கடன் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகின்றன.
வட்டி குறைவு
பொதுவாக, பிற வணிக வங்கிகளின் வட்டி விகிதங்களைவிட இந்த நிறுவனங்களின் வட்டி விகிதம் மிகவும் குறைவு. பிற வங்கிகளில் ஆண்டு வட்டி விகிதம் 12% மற்றும் அதற்கும் மேல் உள்ள நிலையில், இந்தப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்களின் ஆண்டு சராசாி வட்டி விகிதம் 6% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும்கூட மத்திய அரசின் வட்டி மானியத் திட்டத்துக்குத் தகுதியுடையதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிள்ளைகளுக்கான மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி மானியத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் படிக்க வாங்கும் கல்விக்கடனுக்கும் வட்டியை மத்திய அரசே பகிர்ந்துகொள்ளும் வகையில் பல்வேறு வட்டி மானியத் திட்டங்களும் உள்ளன.
எவ்வளவு கிடைக்கும்?
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள, அதாவது ஆண்டுக்கு சுமாா் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவான வருமானமுடைய பெற்றோா்களின் பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு செலுத்தும் (Central Scheme to Provide Interest Subsidy) திட்டம். மாணவா்கள் படிக்கும் காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்கள் கழித்து இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலான காலகட்டத்துக்கு உண்டான வட்டியை மாணவா்கள் சாா்பாக மத்திய அரசே வங்கிகளுக்கு நேரடியாகச் செலுத்தும்.
வெளிநாட்டில் படிக்க
அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெற்றோா்களின் பிள்ளைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெற்றோா்களின் பிள்ளைகள், வெளிநாடுகளில் படிக்க செல்ல வாங்கும் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம், டாக்டா் அம்பேத்கா் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம் (Dr.Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loan for Overseas studies for other backward classes (OBCS) and Economically Backward Classses (EBCS)) என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்கும் மாணவா்கள் இந்த வட்டி மானியத் திட்டத்தால் பயன் பெற முடியும்.
கிட்டத்தட்ட இதே அடிப்படையில் பதோ பிரதேஷ் (Padho Pradesh) என்ற பெயாில் வட்டி மானியத் திட்டம் சிறுபான்மை மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யாருக்குக் கடன் கிடைக்கும்?
சாி, யாா் யாரெல்லாம் கல்விக் கடன் வாங்கலாம் என்றால், இந்தியக் குடிமகன்கள் அனைவரும் கல்விக் கடன் வாங்கலாம். ஆனால், இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டவா்கள் கல்விக் கடன் வாங்க முடியாது.
பொதுவாக, கல்விக் கடன் வரையறைகளை மூன்று பிாிவுகளாகப் பிரித்துப் பாா்க்கலாம். இது இந்தியாவில் படிப்பதற்கும் வெளிநாட்டில் படிப்பதற்கும் பொதுவானது.
முதலாவது சுமாா் நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கடன். இதைப் பெறுவதற்கு பெற்றோா் அல்லது மாமனாா், மாமியாா் ஆகியோா்களில் ஒருவா் இணைக் கடன்தாரராகச் சோ்க்கப்பட்டு அவா்களது கையெழுத்து மட்டும் இருந்தால் போதுமானது. இந்தக் கடனைப் பெறுவதற்கு வேறு பிணையமோ, பொறுப்போ தேவையில்லை.
இரண்டாவதாக, சுமாா் ரூ.7.50 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெறுவதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுடன், மாதச் சம்பளம் பெறுபவரோ அல்லது வருமான வரிச் செலுத்துபவரோ யாராவது ஒருவா் கூடுதலாக ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டும்.
மூன்றாவதாக, ரூ.7.50 லட்சத்துக்கு மேற்பட்ட கல்விக்கடனுக்கு கட்டாயம் பிணையம் தேவைப்படும். அது கட்டடமாகவோ, நில மாகவோ, அரசாங்க முதலீட்டுப் பத்திரங்களா கவோ, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளா கவோ, மியூச்சுவல் ஃபண்டு களாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ யூ.டி.ஐ, என்.எஸ்.ஸி, கே.வி.பி மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களாகவோ இருக்கலாம்.
எப்போது கடன் வாங்கலாம்?
பொதுவாக, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க கால நிா்ணயம் எதுவும் கிடையாது. ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டில் கல்விக் கடன் வாங்காமல், இரண்டாம் ஆண்டோ அல்லது இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக் கடன் கிடைக்கவிட்டால்…?
கல்விக் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தபின் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள வழிகாட்டுதல்களின்படி வங்கிக் கிளைகள் செயல்படாவிட்டால், முதலில் மாவட்ட ஆட்சியரின் புகாா் மனுப் பிரிவில் வெள்ளைத் தாளில் எழுதி புகாா் அளிக்கலாம். அவா் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் உங்களது குறைகளைக் களைய நடவடிக்கை எடுப்பாா்.
இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளரை அணுகி, அவா் மூலம் உங்கள் குறைகளைத் தீா்த்துக்கொள்ளலாம். அடுத்ததாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பலாம்.
எல்.கே.ஜி-க்கும் உண்டு கல்விக் கடன்!
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்காக மட்டுமே கல்விக் கடன் பெற முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மையல்ல. எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள், ஐ.டி.சி மற்றும் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம். சிஏ படிப்பவர்கள், 55-வது வயது வரை கல்விக் கடன்கள் பெற முடியும். இதற்கான வாய்ப்புகளைச் சில வங்கிகள் வழங்குகின்றன. மேலும், வேலையில் இருப்பவர்கள் மேற்படிப்பு படிக்கவும், தங்கள் வேலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சிக் கல்வியைப் பெறவும் கடன் உதவி கிடைக்கும்.
நன்றி : நாணயம் விகடன் – 13.08.2017

தானாகவே மாறிவிடும் இனி பி.எஃப் கணக்கு!

தானாகவே மாறிவிடும் இனி பி.எஃப் கணக்கு!
இனி எந்த வேலைக்கு போனாலும் ஒரே பிஎப் கணக்குதான், மாறவே மாறது!
பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தங்கள் பணியியை மாற்றிக் கொண்டாலும் அவர்களது பிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு தானாகவே அந்நிறுவனத்துக்கு மாறிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளன. இச்சேவை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. பணியாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தங்கள் பணியியை மாற்றிக் கொள்ளும் போது, பலருக்கும் எவ்வாறு தங்களது பிஎப் கணக்கை புதிதாக மாறும் அலுவலகத்திற்கு மாற்றுவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்படும். இதனை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஎப் கணக்கு எண் 
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான வாழ்நாள் சிறுசேமிப்பு திட்டமான பிஎப் கணக்கு எனப்படும் சேமநல நிதி கணக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் முன்பெல்லாம் வேறு நிறுவனங்களுக்கு மாறினாலோ, வேலையை விட்டு திடீரென நின்று விட்டாலோ பிஎப் கணக்குகளை முடிக்கும் நிலை காணப்பட்டது. இதனால் வாழ்நாள் சேமிப்பை தொடர முடியாத நிலை காணப்பட்டது.
மத்திய அரசு அறிமுகம் 
தற்போது பிஎப் கணக்குகளில் பல்வேறு நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வேறு நிறுவனங்களுக்கு மாறினால், அவர்களது பிஎப் கணக்கும் மற்ற நிறுவனத்திற்கு தானாக மாறும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய நடைமுறை இதுகுறித்து பிஎப் தலைமை ஆணையர் வி.பி.ஜாய் கூறுகையில்
வேறு நிறுவனங்களுக்கு மாறுபவர்களின் பிஎப் கணக்கு தானாக மற்ற நிறுவனத்திற்கு மாறும் நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. முன்பு வேறு நிறுவனத்திற்கு மாறியவர்கள் தங்களது கணக்குகளை முடித்துக் கொள்வர். பின்னர் மற்ற நிறுவனத்தில் சேர்ந்த பிறகு மீண்டும் தொடங்குவர். தற்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
புதிய பணி 
தொழிலாளர்கள் புதிய பணிக்கு மாறும்போது அவர்களது பிஎப் கணக்கை அப்படியே விட்டு சென்றுவிடுகிறார்கள். அல்லது தங்களது கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொண்டு செல்கின்றனர். பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
விண்ணப்பம் தேவையில்லை 
தேவை இல்லாமல் கணக்குகள் மூடுவதை நாங்கள் விரும்புவதில்லை. இனிமேல் பிஎப் கணக்கு நிரந்தரமாகவே இருக்கும். தங்களது வருங்கால பாதுகாப்புகளுக்கென்று இந்த கணக்கை தொழிலாளர்கள் பயன்படுத்தலாம். புதிய பணிக்கு மாறிய மூன்றே நாட்களில் பணம் முதற்கொண்டு கணக்குகளும் மாற்றப்படும். இதற்கு விண்ணப்பங்கள் தேவையில்லை.
பிஎப் பணத்தின் அவசியம் 
மேலும், நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் ஆதார் எண்ணை வைத்து மாற்றிக் கொள்ளலாம். இந்த முறை விரைவில் அமலுக்கு வருகிறது. புது வீடு கட்டுவதற்கு, குழந்தைகளின் கல்வி மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தருணத்தில், பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டும்தான் தங்களது பிஎப் பணத்தை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். என்று அவர் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை:'அரசு அனுமதி பெறாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் போது, அதிகாரிகள் விரைந்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், அரசு அனுமதியின்றி துவங்கப்பட்ட பள்ளியில், 200 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
தஞ்சையில் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அனுமதி கேட்டு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது; ஆனால், ஒப்புதல் பெறவில்லை. அதனால் தான், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கபட்டது' என,கூறப்பட்டது.
நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பகுதியில், அரசு அனுமதியுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன என்பது, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரியும். அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்தால், அதிகாரிகள் உடனுக்குடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, அனுமதி கோரிய பள்ளியின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னே, கல்வித்துறை அதிகாரிகள் துாக்கத்தில் இருந்து விழித்து, மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள், சரியாக செயல்படாததால், இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு,பதிலளிக்க வேண்டும்.
➤ பள்ளிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வரும் போது, அதிகாரிகள் ஏன் முறையாக செயல்பட வில்லை.
 மாணவர்கள் சேர்க்கையை அந்த பள்ளிகள் துவங்கி விட்டதா, இல்லையா என்பதை ஏன் சரிபார்க்கவில்லை?
 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களின் நலன் கருதி, துவக்கத்திலேயே அதிகாரிகள் ஏன் விரைந்து செயல்படவில்லை?
 அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்த பள்ளிகள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
 அனுமதி பெறாமல், ரகசியமாக மாணவர் களை சேர்க்கும் பள்ளிகளை தடுக்க, சட்டத்தின் கீழ் எந்தெந்த வழிகள் உள்ளன?
➤ தமிழகம் முழுவதும், அரசின் அனுமதியின்றி எவ்வளவு பள்ளிகள் இயங்குகின்றன?
மேற்கூறிய விபரங்களை, வரும், 16க்குள் வழங்க வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பதை தடுக்க, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -11.08.2017