disalbe Right click

Tuesday, September 12, 2017

பொதுக்குழுக் கூட்டம் - சட்டம் என்ன சொல்கிறது?

பொதுக்குழுக் கூட்டம் - சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - பிரிவு:26
  1. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். 
  2. கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்னர் 21 நாட்களுக்கு முன்னதாக அந்த பொதுக்குழுக்குட்டம் கூட்டப்படுவது குறித்து பதிவு செய்யப்பட்ட சங்கமானது தனது உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
  3. அந்த அறிவிப்பில் கூட்டம் நடக்கும் நாள், நேரம், இடம் ஆகியவற்றையும், கூட்டத்தின் குறிக்கோளையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். 
  4. மேலும் பைலாவில் அடங்கியுள்ள துணை விதிகளுக்கு அல்லது குறிக்கோளூக்கு திருத்தம் ஏதாவது கொண்டுவர  ஷை சங்க நிர்வாகிகள் நினைத்தால், அத்தகைய திருத்தத்தின் நகல் ஒன்றையும் இணைத்து தெரிவிக்க வேண்டும்.
  5. மாவட்டப் பதிவாளர் அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னிலையாக தமக்கு கீழுள்ள ஒரு அலுவலரை நியமிக்கலாம்.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - விதி எண்:25
    1. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் பிரிவு:26ன் கீழ் கூட்டப்படுகின்ற பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பை அநதக்கூட்டம் நடைபெற உள்ள நாளுக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும்.
    2. கீழ்காணும் முறைகளில் ஒன்றால் அல்லது பலவற்றால் உறுப்பினர்களுக்கு அந்த அறிவிப்பை அனுப்ப வேண்டும்.

    • உள்ளூர் தபால் சேர்ப்பிப்பு வழியாக; அல்லது
    • தபால் மூலமாக; அல்லது 
    • உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வழியாக; அல்லது
    • அரசு இதழ் விளம்பரம் வழியாக.
    *************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

    தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

    தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
    நவோதயா வித்யாலயா பள்ளிகள்
    தமிழகத்தில் துவங்க தமிழகத்தில் மாவட்டந் தோறும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, அனுமதி வழங்குவது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
    குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
    கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி.மும்மொழி கொள்கைஆறாவது வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    மும்மொழிக் கொள்கையுடையது
    தமிழகத்தில் மாவட்டந்தோறும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயகுமார் தாமஸ் மனு செய்திருந்தார். 
    தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,
    தமிழ்நாடு தமிழ்வழி கற்பித்தல் - 2006 சட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
    நவோதயா பள்ளியானது பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மும்மொழிக் கொள்கையுடையது. தமிழுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்என குறிப்பிட்டு இருந்தது.மத்திய அரசு சார்பில் தாக்கலான பதில் மனுவில், ’நவோதயாவில் 6ம் வகுப்புமுதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயப் பாடம். ஆங்கிலம் உட்பட இதர பாடங்கள் உள்ளன.
    பிளஸ் 1 முதல், பிளஸ் 2 வரை, தமிழ் கூடுதல் மொழி. நவோதயாவில் தங்குமிடம், உணவு,கட்டணம் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை உண்டு. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் நவோதயா பள்ளிகள் துவக்கத் தயார்என, தெரிவித்து இருந்தது.
    நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ’இவ்விவகாரம் அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது; அமைச்சரவை கூடித்தான் இறுதி முடிவு எடுக்க முடியும்என்றார்.
    மாவட்டத்திற்கு, ரூ.20 கோடி
    புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி விளக்கமளிக்கையில்
    மாவட்டந்தோறும் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கதலா, 30 ஏக்கர் நிலம் தேவை. கட்டுமானத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு, 20 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும். கட்டுமானம் முடியும் வரை, முதல் மூன்று ஆண்டுகளில் தற்காலிக இடத்தில் பள்ளிகள் இயங்கும்.
    முதற்கட்டமாக, 6ம் வகுப்பில், 240 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் பிளஸ் 2 வரை படிப்பை தொடர்வர்.நவோதயா வித்யாலயாவில், 2018 - 19 கல்வியாண்டில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கேற்ப தமிழகத்தில், நவோதயா வித்யாலயாக்களை துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.
    30ஆண்டு நடைமறை சிக்கல்
    நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
    நவோதயாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதுஎன, மத்திய அரசு கூறுகிறது. நவோதயாவை தமிழகத்தில் துவங்க அனுமதிப்பதன் பயனாக, இவ்விவகாரத்தில், 30 ஆண்டுகளாக இருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும். இதில் மத்திய, மாநில அரசுகள் இடையே தகவல் தொடர்பில் இடைவெளி இருந்துள்ளது.
    இப்பள்ளிகளை அனுமதிப்பது, கட்டமைப்பு மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து, தமிழக அரசு, எட்டு வாரங்களில் தகுந்த முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்.
    நன்றி : தினமலர் - கல்விமலர் - 12.09.2017 

    ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி .....


    ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி .....
    குற்றங்களை வகைப்படுத்தி,  இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ்,  அதனைச் செய்தவர்களுக்கு உரிய தண்டணையை வழங்குவதற்கு நீதிமன்றங்களில் இந்திய சாட்சியச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. 
    சாட்சியம் என்று சொன்னால், ஒரு நீதிமன்றத்தில் ஒருவராலோ அல்லது பலராலோ கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள்  அல்லது சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் ஆகும்.
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 3
    எழுத்தால் எழுதப்பட்ட உரையையே நாம் ஆவணம் என்கிறோம். இதனை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கும்போது "ஆவண சாட்சியம்" (Documentary Evidence) என்று சொல்கிறோம்.  ஒரு ஆவணத்தில் கூறப்பட்டு உள்ள சங்கதிகளை நிரூபிப்பதற்கு, அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தவிர சிறந்தது ஏதுமில்லை. 
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 59
    ஆவணங்களில் உள்ள சங்கதிகளை வாய்மொழி சாட்சியங்கள் மூலம் மெய்ப்பிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த ஆவணத்தையே ஒரு சாட்சியமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அதில் உள்ள சங்கதிகளை மெய்ப்பித்து விடலாம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த சாட்சியம் ( Best Evidence) ஆவண சாட்சியம் ஆகும்.
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 61
    ஒரு ஆவணத்திலுள்ள சங்கதிகளை தலைநிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ நீதிமன்றத்தில் நாம் மெய்ப்பிக்கலாம்
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 62
    ஒருவர் ஆவண சாட்சியத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அந்த ஆவணத்தின் அசலையே தாக்கல் செய்ய வேண்டும்   இந்த  அசல்  ஆவணமானது  “தலை நிலை சாட்சியம்”      
     ( Primary Evidence) அல்லது “முதல் நிலை சாட்சியம்”  ஆகும்.  இதற்கு இணை ஏதுமில்லை. 
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 63
    ஆவண சாட்சியத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அந்த ஆவணத்தின் அசலை தாக்கல் செய்ய முடியாத சமயத்தில் அந்த அசல் ஆவணத்தின் உண்மை நகலை தாக்கல் செய்யலாம். இது சார்நிலை சாட்சியம் (Secondary Evidence)  ஆகும். ஆனால், இது  இரண்டாந்தரமான  சாட்சிய்ம் ஆகும்.
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 64
    ஆவணங்களை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்க தலைநிலை சாட்சியம் மூலமாகவே மெய்ப்பிக்க வேண்டும்.  
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 65
    சார்நிலை சாட்சியம்  எந்தெந்த சூழ்நிலைகளில் அளிக்கப்படலாம்? என்பது குறித்து இந்தப்பிரிவு விளக்குகிறது.
    1. எவர் ஒருவருக்கு அந்த ஆவணமானது பயன்படுத்தப்படுமோ, அந்த நபர் அந்த ஆவணத்தின் அசலை வைத்திருக்கும்போது அல்லது அவ்வாறு வைத்திருப்பதாக தோன்றும் போது.
    2. எவருக்கு எதிராக ஒரு ஆவணத்தின் சங்கதிகள் பயன்படுத்தப்படுமோ அவரே அதனை எழுத்து மூலமாக அந்த ஆவணத்தின் சங்கதிகளை ஏற்றுக் கொண்டுள்ளார்! என்று மெய்ப்பிக்கப்படும்போது.
    3. அசல் ஆவணமானது அழிந்து போயிருந்தாலோ அல்லது தொலைந்து போயிருந்தாலோ.
    4. அசல் ஆவணத்தை எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியாதபோது.
    5. அசல் ஆவணமானது இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-74ன்படி பொது ஆவணமாக இருக்கும்போது.
    6. அசல் ஆவணமானது எந்த ஒரு சட்டத்தாலும் அனுமதிக்கப்பட்ட வகையில் சான்றளிக்கப்பட்ட நகலாக இருக்கும்போது.
    7. அசல் ஆவணமானது நீதிமன்றத்தில்  வைத்து வசதியாக ஆய்வு செய்வத்ற்கு முடியாதவாறு ஏராளமான பக்கங்களை கொண்டிருக்கும்போது.
    தொல்லாவணம் ( Ancient Document) 
    ஒரு ஆவணமானது முப்பது ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்தால், அதனை தொல்லாவணம் என்கிறோம். எதிர் தரப்பினர் மறுப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் அதிலுள்ள சங்கதிகள் அனைத்தையும் நீதிமன்றம் உண்மையானது என்று  நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், சம்பந்தப்பட்ட ஆவணம் அது எழுதப்பட்ட நாளில் இருந்து முப்பது ஆண்டுகளை கடந்ததாக இருக்க வேண்டும். அது அந்த ஆவணத்தில் குறிக்கப்பட்டு இருக்கவேண்டும். 
    இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 90
    மேற்கண்ட தொல்லாவணத்தைப் பற்றி இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 90ல் கூற்ப்பட்டுள்ளது. மேலும், தொல்லாவணம் போல் ஐந்து ஆண்டுகள் ஆகிய மின்னியக்க பதிவேடுகள் (Online Documents) குறித்தும் நம்பிக்கை கொள்ளலாம் என்று புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 90-A-3 ல் கூறப்பட்டுள்ளது.
    ************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

    Monday, September 11, 2017

    வீட்டில் இருந்தபடியே சமபாதிக்க அழைக்கும் மோசடி விளம்பரங்கள்

    Image may contain: one or more people

    வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க அழைக்கும் மோசடி விளம்பரங்கள்

    இளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள் படிப்பும் திறமையும் வீணாகிறதே என்று வருந்துகிறார்கள்.
    குழந்தைகள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இனியாவது தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுடன், குடும்பத்தையும் மேம்படுத்தலாமே என்ற எண்ணம் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வந்துவிடுகிறது.
    கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எப்படியாவது தங்கள் திறமையை நிரூபித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பெண்களுக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.
    இவர்களைச் சுண்டி இழுப்பது ‘ஆன்லைன் ஜாப்’ என்ற விளம்பரம்.
    வலை விரிக்கும் வலைதளங்கள்
    ‘நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் டாலர்களில் சம்பாத்திய மாக மாற்ற வேண்டுமா?’
    ‘ஒரு மணிநேரம் வெப்சைட் லிங்க்கை மவுஸால் க்ளிக் செய்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்!’
    ‘உங்களுக்கு வருகிற இமெயில்களை க்ளிக் செய்து, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால், எத்தனை இமெயில்களுக்கு ஃபார்வேர்ட் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல உங்கள் அக்கவுண்ட்டில் பணம் ஏறும்.’
    ‘வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சம்பாதிக் கலாம். 2 மணிநேரம் வேலை செய்தால் போதும். முன்பணமாக இவ்வளவு கட்டுங்கள். மாதாமாதம் பணம் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும்.’
    இதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பார்க்கும்போது அனுபவம் இல்லாதவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். இத்தனை நாட்கள்தான் வீணடித்துவிட்டோம். இனியாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது இயல்பு.
    ‘உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு பல ஆயிரங்களை முன்பணமாகக் கட்டி, செலுத்திய பணத்துக்கு பிஸினஸும் முறையாகக் கிடைக்காமல், ஆர்டர் எடுத்து ஓரிரண்டு மாதங்கள் செய்து கொடுத்த வேலைக்கும் ஊதியம் கிடைக்காமல் கண்ணீர் விடுபவர்கள் பெருகிவருகிறார்கள். முன்பணம் பெற்றுக்கொண்டு, தலை மறைவாகி விடும் நிறுவனங்கள் ஏராளம்.
    இணையம் என்ற ‘அலாவுதீன் பூதம்’
    “என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா?’’ என்று பலரும் கேட்கிறார்கள். இவர்களில் 99% பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்து போனவர்களாகத்தான் இருப்பார்கள்.
    முகமே தெரியாத நபர்களுக்கு முன்பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மன உளைச்சலில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சில கேள்விகள்.
    # உங்கள் நேரத்தையும் உழைப்பையும் போட்டுச் செய்து கொடுக்கிற வேலைக்கு, நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?
    # யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப் பார்களா, அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுப்பார்களா?
    # வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யச் சொல்கி றார்கள் என்றால், அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்?
    # வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜெண்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால்?
    கவனமாகச் செயல்படுங்கள்!
    உங்களைப் பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?
    ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன் பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள்.
    வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜெண்ட்டாகச் செயல்படவும் சொல்கிற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் - அள்ளலாம் பணத்தை’ என்ற வார்த்தை ஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும்.
    அவை உங்கள் கண்களில் பட்டால், யோசிக்காமல் உதறித் தள்ளுங்கள். ‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதைச் செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.
    திறமைதான் அடிப்படை
    அப்படியானால் ஆன்லைனில் சம்பாதிக்கவே முடியாதா என்றால், முடியும். இப்படிக் குறுக்கு வழியில் அல்ல.
    உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள்.
    அதை நேரடியாகச் செய்கிற தொழிலாக்கி, அதற்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.
    உங்களுக்குத் தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் தொழிலை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்தத் தொழிலை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.
    எந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படிச் சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்!
    முதலில் உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு தொழிலாக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.
    கட்டுரையாளர்:காம்கேர் கே. புவனேஸ்வரி
    மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
    தொடர்புக்கு: compcare@hotmail.com

    நன்றி : தி இந்து நாளிதழ் - 11.09.2016

    Sunday, September 10, 2017

    அடித்த கொள்ளையில் ஆளுக்குப் பாதியா?

    அடித்த கொள்ளையில் ஆளுக்குப் பாதியா?
    தமிழக அமைச்சரின் பணமா
    ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்: அபராதம் கட்டியதால் தண்டனையில் இருந்து தப்பினார்
    பினாமி பெயரில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர், தாமாக முன்வந்து கறுப்பு பணம் கணக்கு காட்டும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அபராதம் கட்டி தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார்.

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. வங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக 1000, 500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறை திரட்டி, விசாரணை நடத்தி வருகிறது.

    50 சதவீதம் அபராதம்

    இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு தனிநபர் ரூ.246 கோடி டெபாசிட் செய்திருந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாதிட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வரி மற்றும் அபராதத்தினைச் செலுத்த ஒப்புக் கொண்டது தெரிந்தது.

    இந்தத் திட்டத்தின்கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமியாக இருப்பது தெரிய வந்தது.

    வருமான வரி நோட்டீஸ்
    நாடு முழுவதும் 27 ஆயிரத்து 739 வங்கி கணக்குகளில் தலா இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுளளது. இவர்கள் அனைவருக்கும், தங்களின் வருமானம் குறித்த விவரங்களை அளிக்கும்படி, வருமான வரித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
    இதில் 18 ஆயிரத்து 220 வங்கி கணக்குகளில் இருந்து வருமான வரித் துறைக்கு பதில் வந்துள்ளது. மற்றவர்கள் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. பலர் அளித்துள்ள பதில்கள் வருமானவரித் துறையினரை திருப்திப்படுத்தவில்லை. இந்த வங்கி கணக்குகளில் 3 ஆயிரத்து 600 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
    மேலும், அதிக தொகை டெபாசிட் செய்த 441 வங்கி கணக்குதாரர்கள் சரியான முகவரியைக் கொடுக்கவில்லை. அவர்களின் விவரங்களை சேகரிக்கவும் முடியவில்லை. இந்த 441 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.240 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிகமான தொகை டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். வங்கி கணக்கில் டெபாசிட் செய்த தொகையினை, இவர்கள் தங்களது மொத்த வருவாய் என கணக்கு காண்பித்துள்ளனர்.
    நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.09.2017

    Saturday, September 9, 2017

    ஆழ்மனதின் அற்புத சக்தி!

    Image may contain: 1 person, text
    ஆழ்மனதின் அற்புத சக்தி!
    அன்பு தோழமைகளே நலமா? இந்த வாரம் நம் வெற்றிக்கு மிகவும் உறுதுணையான ஆழ்மன சக்தியின் மகத்துவத்தை குறித்து காணப் போகின்றோம்..
    அன்பானவர்களே நம்மை கொஞ்சம் உற்று நோக்கினால் நாம் எப்பொழுதும் ஏதாவது ஒரு உணர்வுத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடியும.
    மகிழ்ச்சியாக இருப்போம், வருத்தத்தில் இருப்போம், டென்ஷனாக இருப்போம், எனவே உணர்வுகளைக் கையாளும் திறன் நம் நிறைவான வாழ்விற்கு மிக மிக
    அவசியமாகின்றது. உணர்வுகளால் தான் மனித வாழ்வே உதயமாகிறது.
    உணர்வுகளுக்கு சரியான ஆங்கிலச் சொல் Emotions ஆகும். Emotions என்ற சொல் emouvoir என்ற பிரஞ்சு அடிப்படைச் சொல்லிருந்து உருவானது emouvoir என்ற பிரஞ்சு சொல்லை to stir up என்று ஆங்கிலத்தில் பொருள்படுத்தலாம்.
    உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு.
    நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, உதாரணமாக நாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் ஆழ் மனது நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
    தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன.
    எந்த அளவிற்கு என்றால் நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு. ஆழ்மனம் இல்லையென்றால் முழுமையாக செயல்பட முடியாது. எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றது ,வரவேற்பாளர் போல் வீற்றிருக்கும் மேல் மனம் ..செயல்படுத்த ஆழ்மனதிற்கு அழைத்து செல்கின்றது.
    மேலாண்மையின் முக்கிய கடமை:
    மனித உணர்வுகளையும் உறவுகளையும் முரண்பட்ட எதிரெதிர் உணர்வுகள் ஒரே இடத்தில் வெளிப்படும் வேளையில் அந்த சூழலை நிர்வாகம் செய்வது மேலாண்மையின் முக்கியமான கடமைகளில் ஒன்று தன்னுடைய மற்றும் திறனே உணர்வுகளின் மேலாண்மை ஆகும் .
    பிறருடைய உணர்வுகளைப் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதனை நெறிப்படுத்தும் நம்முடைய உணர்வு என்ன என்று தெளிவாக அறிவதே உதாரணமாக நமக்கு பிறரின் வளர்ச்சியை கண்டு பொறாமை வருகின்றது என்றால் எனக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
    நம் எண்ணங்கள் நாம் விரும்பும் செயல்களைச் சிறப்பாகச் செய்ய உணர்வுகளை உருவாக்குதல்
    நம்முடைய லட்சியத்தை அடைய அதன் மீது விருப்பம் ஆசை என்ற உணர்வுகளை வளர்த்து அதை அடைவதில் எந்தச் சவால்கள் வந்தாலும் திடமான உணர்வுகளுடன் ஏற்றுக்கொள்ளுதல். பிறர் என்ன உணர்வில் உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்தல்.உணர்ந்து கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதுடன் அவற்றை நமக்கும் பிறருக்கும் வளர்ச்சி தரும் வகையில் வெளிப்படுத்துவது..
    நம் உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றை நீக்க வழி தேடுதல் என்ன விளைவு ஏற்பட்டாலும் திறந்த மனதுடன் இருத்தல், எதையும் தாங்கும் மனநிலையை வளர்த்தல். நம்முடைய உணர்வுகளுக்கு நேர்மையாய் நடத்தல் அகத்தில் ஒரு உணர்வும் வெளியில் மற்றோர் உணர்வையும் வெளிப்படுத்தாது இருத்தல்.
    புத்தரும் சீடர்களும்:
    ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
    ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
    புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
    அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
    இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்?
    இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
    ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
    ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
    தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
    நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
    நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
    ஆமாம் சுவாமி!
    நம் மனமும் அப்படிப்பட்டதுதான்.. மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
    It will happen. It is effortless.
    மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
    இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!
    it is an effortless process!
    ஆழ்மனச்சக்தி:
    நாம் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், ஆழ்மனதை வரம் கொடுக்கும் தேவதை என்றே கூறலாம்,
    அது ஆற்றல் மிக்க தேவதை, நமக்கு விசுவாசமான தேவதை. நாம் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு, ஆக நாம் கேட்பதை பொறுத்து செயல்கள் நடைபெறும் நம் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நாம் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும்.
    ஒருவிதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும்.
    விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு ஒரே நாளில் தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடிவரவில்லை, என்ன ஆயிற்று?” என்று எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
    ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா?
    இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை.
    ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
    A,ரோஸ்லின் Cell: 9842073219
    aaroseline@gmail.com
    நன்றி : தினமலர் - 07.09.2016

    Friday, September 8, 2017

    மக்களை ஏமாற்றும் மோசடி குற்றத்திற்கு இனி அபராதம் மட்டுந்தானா?

    மக்களை ஏமாற்றும் மோசடி குற்றத்திற்கு இனி அபராதம் மட்டுந்தானா?  
    அனுமதியில்லாத பிளாட்கள் விற்பனை - ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த ஒப்புதல் : உயர்நீதிமன்ற வழக்கால் விடிவு
    மதுரை: மதுரையில் அனுமதியின்றி பிளாட்கள் விற்பனை தொடர்பானவழக்கில், ரியல் எஸ்டேட் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒப்புதல் அளித்தார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் வழங்கினார்.
    மதுரை விவசாயக் கல்லுாரி அருகே நெல்லியேந்தல்பட்டி ராமநாதன் தாக்கல் செய்த மனு:
    கொடிக்குளம் பகுதி மக்கள் நெல்லியேந்தல் கண்மாய் நீரை நம்பியுள்ளனர். அது 21 எக்டேர் பரப்பளவு கொண்டது. ஐயப்பன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனசேகரன் கண்மாய் கரையோரம் பிளாட்கள் அமைத்து, மணிகண்டன் நகரை உருவாக்கினார். 'லேஅவுட்'டிற்கு நெல்லியேந்தல் ஊராட்சியில் அனுமதிபெறவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராமநாதன் மனு செய்திருந்தார். பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆய்வில், கண்மாய் கரையை ரோடாக பயன்படுத்தியது உறுதியானது. நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
    நீதிபதிகள்: 
    'லேஅவுட்'டிற்கு முறையான அனுமதியின்றி, மக்களை தனசேகரன் ஏமாற்றியுள்ளார். கண்மாய் கரையை ரோடாக மாற்றி பயன்படுத்த அனுமதித்துள்ளார். இதனால் இவர் மீது மோசடி உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
    ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனசேகரன்,' 
    எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன். குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க 25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தத் தயார். முன்பணமாக 5 லட்சம் செலுத்துகிறேன். மீதியை செலுத்த ஆறு வாரங்கள் அவகாசம் தேவை,' என மனு செய்தார். 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
    நீதிபதிகள் உத்தரவு : 
    5 லட்சம் ரூபாயை கண்மாய் பராமரிப்பு செலவிற்கு அரசு பயன்படுத்த வேண்டும். தனசேகரன் போன்றவர்களால், சட்டவிரோதமாக பிளாட்கள் விற்பனை செய்யப்படுவதால், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.மதுரையில் அனுமதியில்லாத கட்டடங்கள் முளைத்துள்ளது தெரியவருகிறது. இது மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு, தவறு செய்யும் அதிகார பலமிக்கவர் களிடமிருந்து சலுகைகள் கிடைப்பதை இது காட்டுகிறது என்றனர்.
    நன்றி : தினமலர் நாளிதழ் - 08.09.2017