disalbe Right click

Saturday, November 18, 2017

காவல்துறை - பொது நாட்குறிப்பு

காவல்துறை - பொது நாட்குறிப்பு
இது காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகும். இதனை காவல் உதவி ஆய்வாளர் முதலில் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.
⧭ தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு  மறுநாள் காலை 7 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
 மலைப்பகுதி காவல் நிலையங்களில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும் காலை பொது நாட்குறிப்பை ஆரம்பிக்கும்போது கையிருப்பு ஆயுதங்கள் மற்றும்  தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும்
⧭ அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம் மற்றும் தேதியுடன் பதிவு செய்ய வேண்டும்.
⧭ வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
⧭ பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் இல்லை என குறிப்பு எழுத வேண்டும்.
⧭ ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
⧭ வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
⧭ காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
⧭ இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றிய விவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வழக்கு விசாரணை அல்லது மனு அளிக்க யாரேனும் காவல் நிலையம் வந்தால்,  அவர்களை விசாரணை செய்த விபரம் / திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்
⧭ வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லது கழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
⧭ அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SHR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
⧭ பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை அடித்தல் மற்றும் திருத்தலுடன் எழுதக்கூடாது
⧭ புரியாத வண்ணமும் எழுதக்கூடாது
⧭ பக்க எண்கள் குறிப்பிடாமல் எழுதக்கூடாது
⧭ உடனுக்குடன் எழுதாமலும் இருக்கக்கூடாது.
(தமிழ்நாடு காவல்துறை, காவல் உதவி ஆய்வாளர் கையேடு என்ற புத்தகத்திலிருந்து)
நன்றி : முகநூல் நண்பர் திரு  Dhanesh Balamurugan அவர்கள் (வழக்குரைஞர்) 

‘அக்ரி’ படிப்பு

Image may contain: 4 people
அக்ரிபடிப்பு அள்ளித் தரும் வேலைவாய்ப்புகள்!

சமீப வருடங்களாக பி.எஸ்ஸி., அக்ரிகல்சர் படிப்புக்கு பெருகி வரும் வரவேற்பு கண்கூடு. அந்த கோர்ஸ் பற்றிய வழிகாட்டல்கள் வழங்குகிறார், தேனி, வேளாண் தொழில்நுட்ப கல்லூரியின் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் எம்.மணிமாறன்...

‘‘வருடத்துக்கு இரண்டு தனியார் வேளாண் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்படுவதையும்,எல்லா வேளாண் கல்லூரிகளிலும் ஸீட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நிரம்பிவிடுவதையும் பார்க்கிறோம். அந்தளவுக்கு வளமான எதிர்காலத்துக்கான உத்தரவாதப் படிப்பாக விளங்கும் அக்ரி படிப்பின் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்.
தகுதி
அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில்அக்ரி குரூப்பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த குரூப் எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பதினொன்றாம் வகுப்பில் பயோ மேத்ஸ் குரூப் எடுத்துப் படித்த மாணவர்களும் பி.எஸ்ஸி., அக்ரிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட் ஆஃப்

அக்ரி படிப்புக்கான கலந்தாய்வுத் தகுதி கட் ஆஃப் மதிப்பெண் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்ற கல்வி ஆண்டு நிலவரப்படி, பிற்படுத்தப்பட்டோர் 195 மற்றும் அதற்கு மேலும், எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினர் 190 மற்றும் அதற்கு மேலும் எடுத்திருந்த நிலையிலேயே, அரசுக் கல்லூரிகளில் அக்ரி படிப்பு சாத்தியம் ஆனது. தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் 60 ஸீட்டுக்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுகிறது. அதற்கான நன்கொடை, பெரிய தொகை!

சிலபஸ்

விவசாயமும், அதில் பயன்படுத்தவல்ல நவீன தொழில்நுட்பங்களும்தான் சிலபஸ். நான்கு வருட அக்ரி படிப்பில், இறுதியாண்டின் இறுதி செமஸ்டர் முழுக்க களப்பணிதான். அதில் இரண்டு மாதங்கள் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள விவசாயிகளோடு தங்கி அனுபவப் பாடங்கள் கற்க வேண்டும். அவர்களுக்கு உதவியாக விவசாய வேலைகளில் ஈடுபட வேண்டும்.

வேலைவாய்ப்பு

 வேளாண் அலுவலர், வேளாண் உதவி அலுவலர் என அரசுப் பணியிடங்கள் காத்துக்கிடக்கின்றன.

 அரசு வேலையைவிட, உரம் தயாரிக்கும் நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், டீ, காபி, ஏலக்காய் எஸ்டேட்கள் என தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணிவாய்ப்புகள் உள்ளன.
 மத்திய, மாநில அரசின் போட்டித் தேர்வுகளில் அக்ரி படித்தவர்கள் பெரும்பான்மையாக தேர்ச்சி பெறுகிறார்கள்.
 வங்கிப் பணியிடங்களில் அக்ரி படித்தவர்களுக்கு என தனித் தேர்வு உண்டு.
 சுயதொழில் செய்ய சிறந்த படிப்பு அக்ரி என்பதால், அவர்களுக்கு வங்கிகள், நபார்டு அனைத்தும் உதவ முன்னுரிமை அளிக்கின்றன. கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, உயிரி உரம் தயாரிப்பு, உரக்கடை வைக்க, நர்சரி தொடங்க என எண்ணற்ற தொழிற் கடன்கள் வழங்கப்படுகின்றன.
 அக்ரி படித்தவர்கள்அக்ரி க்ளினிக்வைத்து, பயிர் நோய்கள், உரம் மேலாண்மை போன்ற ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கலாம். இதற்கும் வங்கிகளில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
 முதுகலை எம்.எஸ்ஸி., அக்ரி முடித்தால், தனியார் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட வாய்ப்புகள் கிடைக்கும். முனைவர் பட்டம் பெற்றால் வேளான் விஞ்ஞானி என உயரலாம்.

 ஆல் இண்டியா ரேடியோ மற்றும் கம்யூனிட்டி ரேடியோக்களில் விவசாயத்தைப் பற்றிப் பேசும் தொகுப்பாளர் வாய்ப்புகளும் உள்ளன.

ஸ்டூடன்ட்ஸ் வாய்ஸ்!

‘‘நாங்க,தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி பி.எஸ்ஸி., அக்ரி ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்ஸ். கிராம தங்கல் திட்டத்துக்காக சின்னமனூர் விவசாயி ராஜா நிலத்துல நடவுக்கு வந்திருக்கோம். விவசாயிகள்கிட்ட இருந்து நாங்க கத்துக்கிறதோட, நாங்களும் அவங்களுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்குறோம். அக்ரி படிச்சிட்டு அரசு, தனியார் பணியையே குறி வைக்காம, மாணவர்கள் விவசாயம் செய்ய முன்வரணும். யார்கிட்டயும் கைகட்டி நிற்கத் தேவையில்ல... நம்ம நெலத்துல நாமதான் முதலாளி, தொழிலாளி எல்லாம்!’’

சா.நித்யகுமரன்
நன்றி : அவள்விகடன் - 17.11.2015