disalbe Right click

Wednesday, December 6, 2017

'லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு குண்டாஸ்!”

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
சரமாரி கேள்விகள் தொடுத்தார் நீதிபதி கிருபாகரன்
சென்னை : ''லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை, ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது,'' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரன்சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்த பூபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:
என் தாத்தாவின் சொத்து களை பாகப்பிரிவினை செய்து, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, ஓராண்டான பின்னும், பத்திரப் பதிவு செய்யப்படவில்லை. எனவே, பத்திரப்பதிவை முடித்து, பத்திரங்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் கூறியதாவது:பத்திரப்பதிவு துறை, ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது. லஞ்சம் லாவண்யங்களை தடுக்க, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குள், வெளி நபர்கள் செல்வதை தடுக்கும் வகையில், நவீன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.மனுதாரருக்கு மூன்று வாரத்திற்குள் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
மேலும்,
😺 10 ஆண்டுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - அலுவலகங்களில் எத்தனை முறை திடீர் சோதனை நடத்தினர்?
😺 அதில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,
😺 இடைத்தரகர்களை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
இவ்வாறு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், நீதிபதி, என்.கிருபாகரன் முன், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த, 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற, 77 அரசு அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடாகஇந்தியா உள்ளது. அரசு அலுவலகங்களில் தான், இந்த ஊழல் அதிகமாக உள்ளது,'' என, வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
😺 ஊழலில் திளைக்கும் லஞ்ச அதிகாரிகள், மற்றும் பொது ஊழியர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது?
😺 அதற்கு ஏற்ப ஏன் புதியதாக சட்டத் திருத்தம் கொண்டு வரக் கூடாது?
😺 கடந்த, 10 ஆண்டுகளில், பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் 
எத்தனை முறை சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன?
😺 எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
😺 எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
😺 எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?
😺 அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல், ஐந்து அரசு துறைகள் என்னலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் என்ன?
😺 ஊழியர் பற்றக்குறை உள்ளதா?
😺 சோதனையின்போது, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
😺 லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா?
😺 ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பொது ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
உள்ளிட்ட கேள்வி களுக்கு, வரும்., டிச., 11ம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.2017 

Tuesday, December 5, 2017

டாக்டர் C.சைலேந்திரபாபு, IPS.,

டாக்டர் C.சைலேந்திரபாபு, IPS.,
தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த காவல்துறை அதிகாரிகளில் இவர் முதன்மையானவர். இன்னும் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. இவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். ஊடகங்களில் பார்த்துள்ளேன். நேர் கொண்ட பார்வை, தெளிவான, புன்னகை மாறாத பேச்சு, மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்று இவர் செய்யும் செயல்கள், எழுதிய புத்தகங்கள் இவை அனைத்தும் இவரை பார்க்காமலேயே மிகுந்த மரியாதையை என்னுள் ஏற்படுத்தியது. நான் அறிந்து கொண்ட இந்த மாமனிதரைப் பற்றிய செய்திகள் உங்களுக்காக.
இளமைப் பருவம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் குழித்துறையில் 05.06.1962 அன்று பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர்கள். இவர் ஆறாவது குழந்தை. ஏழாம் வகுப்பு வரை சராசரி மாணவனாக இருந்த இவரை சிறந்த மாணவனாக மாற்றியது ஆசிரியை சதானந்தவள்ளி அவர்களின் கண்டிப்புதான்.

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில ஆசிரியராக இருந்த திரு ராமசாமி அவர்கள் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஆங்கில மொழியில் இவருக்குள்ள  புலமையைக் கண்டு வியந்து, இவரை தேசிய மாணவர் படை(NCC)யில்  சேர்த்து 100 மாணவர்களுக்குத் தலைவனாக நியமித்து முக்கிய பொறுப்பைக் கொடுத்தார்.  காவல்துறையில் ஈடுபாடு வருவதற்கு அவரே முக்கியக் காரணம். குழித்துறை - விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.   
கல்லூரி வாழ்க்கை
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் விவசாயப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக அண்ணாமலைக் கழகத்தில் பொது சட்டம் பிரிவில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகைக் கல்வி பிரிவில் முதுகலையும் படித்துள்ளார். அதன் பின்னர், “குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.ஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். 
இவருக்குப் பிடித்த செயல்கள்
இளைஞர்களோடு பேசுவதும், கலந்து உரையாடுவதும் அவர்களை சரியான இலக்கை நோக்கிய லட்சியம் கொண்டவர்களாக   உருவாக்குவது இவருக்கு மிகவும் பிடிக்கும். 

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

சாதிக்க வேண்டும் என்ற ஆசையை மாணவர்கள் மனதில் ஏற்படுத்துவது இவருக்கு மனநிறைவைத் தருகின்ற செயலாகும். 
கல்லூரிகளில் பேச
கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் மத்தியில் பேச வேண்டும் என்றால் இவரை அழையுங்கள். நாம் மதிக்கின்றவர் பேசுவதையே ஏற்க, நமது மனது எப்போதும் விரும்பும். 
இவரது பணிகள்
முதலில் இவர்  திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியாகத்தான் வேலை பார்த்துள்ளார். அதன்பிறகே இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகடாமியில் பயிற்சி பெற்றுள்ளார். பயிற்சிக்குப் பிறகு கோபிசெட்டி பாளையம், சேலம், தர்மபுரி ஆகிர ஊர்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை  கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 
Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
மனித நேயம் மிக்கவர்
கடந்த 2014ம் ஆண்டு ஒரு சாலை விபத்து நடந்தது. அந்த இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்து அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸிற்காக காத்துக் கொண்டு இருந்தனர். அங்கு வந்த திரு சைலேந்திரபாபு அவர்கள் எப்போது ஆம்புலன்ஸ் வருவது? எப்போது இவர்களை காப்பாற்றுவது? என்று யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களை தானே தூக்கி, தனது வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவுக்கு மனித நேயம் மிக்கவர் இவர்.   
அஷ்ரப்: திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ்
மண்டல ஐ.ஜி.
சென்னை அடையார் துணை கமிஷனராக சிலகாலம் பணியாற்றிவிட்டு, அதன்பிறகு விழுப்புரம் பகுதியில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும்,  சென்னை காவல்துறையில்  இணை கமிஷனராகவும்  பணியாற்றியுள்ளார். அதன்பிறகு திருச்சி டி.ஐ.ஜி.ஆகவும், கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சிறப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். 
அதன்பிறகு கோவை மாநகர கமிஷனராக பணியாற்றியுள்ளார். 
தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மண்டலத்திற்கு ஐ.ஜி.யாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
எந்தப் பதவியில் இருந்தாலும், போலீஸ் என்ற பொறுப்பு என்பது முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்து இவர் எப்போதும் மாறியதில்லை. தான் ஏற்றுக் கொண்ட பதவிகளுக்கு சிறப்பையே  இவர் அளித்து வருகிறார்.
 இவர் பெற்ற விருதுகள்
கடமை உணர்வுக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது, சிறப்புப் பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது  உயிர் காத்த செயலுக்காக இந்தியப் பிரதமரின் விருது, வீரதீரச் செயலுக்காக தமிழக முதல்வரின் விருது 

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
எழுத்தாளராக
எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், உடலினை உறுதி செய், நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம்!, அமெரிக்காவில் 24 நாட்கள், உனக்குள் ஒரு தலைவன்,  என்ற தலைப்புகளில் தமிழிலும், 
You too can become an IPS officer, Principles of Success in Interview, A guide to health and happiness, Boys and Girls be ambitious என்ற தலைப்புகளில் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அழைக்கிறது காவல்துறை
இப்போது கூட காவல்துறை பணியில் சேர்வது எப்படி? என்பதை விளக்கும் விதமாக தினமலர் நாளிதழில், “அழைக்கிறது காவல்துறை” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவரது பார்வையில், இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும்? 
சமுதாயமும், குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். செய்கின்ற செயல்கள் ஒவ்வொன்றையும் நாம் என்ன செய்கின்றோம், எதற்காக செய்கின்றோம்? என்பதை அறிந்து செய்ய வேண்டும். தன்னிடம் உள்ள பண்புகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள குறைகளை களைந்து சரிசெய்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு துறையில் ஒவ்வொரு இளைஞனும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்களை மன்னிக்க முடியாது.
இணையதளம் மூலமாகவும் சேவை  
இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகின்ற இந்த இனிய மனிதர் இணையதளம் மூலமாகவும் சேவை செய்து வருகிறார். இந்த இணையதளத்தில் உங்களது குறைகளைக் கூறி நிவர்த்தி பெறலாம். இவரது இணையதளம்
*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி -05.12.2017 

Monday, December 4, 2017

வன அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

மேகமலையில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்
மதுரை: தேனி மாவட்டம் மேகமலை சரணாலயத்தில் மரங்கள் வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத்தவறிய வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கைகோரி தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதி வைகை ஆறு உற்பத்தியாகும் இடமாகும். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடைகின்றன. மேகமலையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சில நிறுவனங்களின் தேயிலை, காபி எஸ்டேட்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளால் மலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேகமலையில் வன சம்பந்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனுாத்து, நொச்சி ஓடை, அஞ்சரப்புலி, காந்திகிராமம், வெள்ளிமலை பகுதிகளில் சட்டவிரோதமாக வன நிலத்தை அழித்து, விவசாய நிலமாக மாற்றுகின்றனர். பொம்மராஜபுரம் பகுதியில் பலாப்பழத்தில் விஷம் வைத்து ஏழு சிங்கவால் குரங்குகளை கொன்றுள்ளனர்.
பொம்மராஜபுரம் சிற்றாறு மற்றும் கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதியில், 100ஆண்டுகள் பழமையான 300 மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர். அப்பகுதியில் மூன்று முதல் 4 கி.மீ.,துாரத்திற்கு ரோடு அமைக்கின்றனர். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, சிறப்புக்குழுவை தேனி கலெக்டர் அமைத்தார். அக்குழு,'நவீன இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக 300 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில மரங்களை தீ வைத்து எரித்துள்ளனர்,' என அறிக்கை சமர்ப்பித்ததுவனத்துறையினருக்கு தெரியாமல் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.
மேகமலையில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வனத்தைவிட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து அரசிடம் மனு அளித்தனர். அவர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வேலையாட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகமலையின் உயிர்ச்சூழலை ஏற்கனவே இருந்த பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். மரங்கள்வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய மேகமலை சரணாலய வன உயிரின காப்பாளர், உதவி வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாண்டி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வு மத்திய, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகசெயலாளர்கள், மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தேனி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,10 க்கு ஒத்திவைத்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.201