disalbe Right click

Sunday, February 25, 2018

மத்திய அரசின் தொழிற் கடன் திட்டம்

பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் 
நீங்கள் வேலை பார்த்துக் கொண்டே தொழில் ஒன்றை செய்ய விரும்புகிறீர்களா? அல்லது முழுநேர வேலையாக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறீகளா? அல்லது வேலை இல்லாமல் இருக்கும் நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காக இந்திய அரசு ஒரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா என்ற இந்தத் திட்டம் வேலை இல்லாமல் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் இளைஞர்கள் கடன் பெற்று உற்பத்திவணிகம்சேவை   அல்லது டிரேடிங்  நிறுவனம்    போன்றவற்றைத் துவக்கலாம்
இந்த திட்டத்தில் என்ன விசேஷம்?
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் வாங்கும் போது உங்களது சம்பளம் அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோர்  சரியாக இருக்க வேண்டும். தொழில் துவங்கி நடத்துவதற்கான திட்டம் (Project Report) முறையாக இருக்க வேண்டும். நீங்கள் கேட்ட கடன் உங்களுக்கு வழங்கப்படும்.
இதற்கான தகுதிகள் என்ன?
  1. விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக 10 வருடங்கள் விலக்கு உண்டு.  
  2. நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குறைந்தது 3 வருடங்கள் வரை தொடர்ந்து குடி இருந்து இருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
  3.  குறைந்தது 8வது வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்
  4. மத்திய அரசு சார்ந்த டிரேடிங் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  5.  விண்ணப்பதாரருடைய மற்றும்  அவரைச் சார்ந்தவர்களுடைய,  பெற்றோர்களுடைய   வருட வருமானம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது
யாருக்கெல்லாம் தகுதி கிடையாது?
  1. பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் ஏற்கனவே கடன் பெற்று, அதனைச் செலுத்தாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதைப் போல இருக்கும் வேறு அரசு திட்டங்களின் கீழ் ஏதாவது கடன் வாங்கி இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது. 
  2.  விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படாது.    விவசாயப் பொருட்கள் மூலமாக நடைபெறும் வணிகத்திற்குக் கடன் வழங்கப்படும்
அளிக்கப்படும் கடன் தொகை எவ்வளவு?
வணிகத் துறை என்றால் ரூ. 2 லட்சமும், சேவை துறை என்றால் ரூ. 5 லட்சமும்,  தொழிற்துறை என்றால்  ரூ. 5 லட்சமும், கூட்டு நிறுவனங்கள் என்றாலோ அல்லது இரண்டு அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் துவங்கும் போது 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இதற்கான வட்டி விகிதம் எவ்வளவு? 
இடத்திற்குத் தகுந்தாற்போல், காலத்திற்குத் தகுந்தாற்போல், வங்கிக்கு தகுந்தாற்போல் இது மாறக்கூடியது. விண்ணப்பிக்கும் போது இதனை அங்கு விண்ணப்பதாரர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது நிர்வாகியை நீங்கள் அணுகுங்கள்.  அவர் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?  மற்றும் கடன் சம்பந்தமான விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பார்.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018 

வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால்....?

எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கக்கூடாது!
இந்த வழக்கில் கண்ட நாகராஜன் என்பவர் தனக்கு வர வேண்டிய பணம் ரூ. 18 லட்சத்தை வட்டியுடன் வசூலிக்க கனகராஜ் என்பவர் மீது ஒரு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது
வழக்கறிஞர் ஆஜராகவில்லை
ஆனால் அன்றைய தினம் நாகராஜனின் வழக்கறிஞர் கவனக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே கீழமை நீதிமன்றம் சாட்சியங்களை பரிசீலித்து நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்
அதனை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. M. M. சுந்தரேஷ் மற்றும் N. பால் வசந்தகுமார் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உச்சநீதிமன்ற வழங்கியிருந்த தீர்ப்பு - 1 
உச்சநீதிமன்றம் "மல்கெய்ட் சிங் Vs ஜோகிந்தர் சிங் (1997-3-CTC-SC-619)" என்ற வழக்கில் பத்தி 7ல், ஒரு வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்து முறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில் அவர்களுடைய வழக்கறிஞர்கள் வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் (Reported No Instructions) வழக்கு நடத்துபவர்களுக்கு (Parties to the Suit) ஒரு அறிவிப்பினை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் வழக்கினை மேற்கொண்டு நடத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற வழங்கியிருந்த தீர்ப்பு - 2 
அதேபோல் உச்சநீதிமன்றம் "சண்டிகர் அரசு Vs ரகுராஜ் (AIR-2009-SC-514)" என்ற வழக்கில், வழக்கு சம்மந்தப்பட்டவர் தன்னுடைய வழக்கை நடத்துவதற்கு வழக்கறிஞரை நியமித்து விட்டால் அந்த வழக்கறிஞரின் அந்த வழக்கில் ஆஜராக தவறிவிட்டால் அதற்காக வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜராக தவறிவிட்டால் பிரதிவாதிக்கு நீதிமன்றம் ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும், மாறாக விசாரித்து அல்லது பரிசீலித்து வழக்கில் தீர்ப்பளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
O. S. A. NO - 391/2011
A. நாகராஜன் Vs P. P. M. கனகராஜ் 2013-1-MWN-CIVIL-867

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு  Dhanesh Balamurugan

Saturday, February 24, 2018

கலெக்டர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

நிலத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை: சென்னை மாவட்ட கலெக்டர் ஆஜராக உத்தரவு
நிலத்தை ஆர்ஜிதம் செய்து, 30 ஆண்டுகள் ஆகியும் அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்காததால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலம்

சென்னை, மயிலாப்பூரில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான, 487 சதுர அடி இடம் இருந்தது. இந்த இடம் பறக்கும் ரயில் திட்டத்துக்காக, 1986ம் ஆண்டில் அரசால் கையகப்படுத்தப்பட்டது; 1993-ம் ஆண்டில், அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு ரூபாய் 2..33 லட்சம் இழப்பீடாக அரசால் நிர்ணயிக்கப்பட்டது.

குறைவான இழப்பீட்டுத் தொகை

அந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையாளர் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2017 ஜூலையில் 35.44 லட்சம் ரூபாயாக இழப்பீட்டு தொகையை நிர்ணயித்து,உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், 'இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகியும், அதற்கான பலனை அதன் உரிமையாளர் அனுபவிக்க வில்லை. .

'எனவே, ஒரு லட்சம் ரூபாய், அவரது வழக்கு செலவு தொகையாக அளிக்க வேண்டும். மொத்த தொகையை 12 வாரங்களில் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டது.

கண்டு கொள்ளாத கலெக்டர்

உயர்நீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்ததும், இழப்பீட்டு தொகையை வழங்கும்படி, 2017 டிசம்பரில், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, ராமசாமி, 'நோட்டீஸ்' அனுப்பினார்; ஆனால், எந்த பதிலும் இல்லை. 2018 ஜனவரியில், நினைவூட்டும் கடிதத்தையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார்.நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக, அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:

சொத்தை இழந்தும், இழப்பீட்டின் பலனை, 30 ஆண்டுகளாக அதன் உரிமையாளரால் அனுபவிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் மீறியிருப்பது தெரிகிறது.

நேரில் ஆஜராக வேண்டும்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. உத்தரவுகள் எப்படி எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். எனவே, மார்ச், 5ம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி, நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018