disalbe Right click

Wednesday, August 1, 2018

பிரிந்தவர் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்?

மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம்!
மணவாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்
ஈகோவினாலோ, சொந்தங்களின் தலையீட்டாலோ பெரிதாக்கப்பட்ட குடும்பப் பிரச்னை, கோபம், வெறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் தம்பதிகள் பலர். ஒருகட்டத்தில் பிரிவு வாழ்வின் கசப்பு தாங்காமல், ‘நாம் சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்று மனைவி கணவருடனோ, கணவர் மனைவியுடனோ சேர்ந்து வாழ விரும்பினால், அவருக்குப் பக்கபலமாக நிற்கிறது மண வாழ்வு மீட்புரிமைச் சட்டம்.
மீண்டும் இணைவதற்கு துணை புரியும் சட்டங்களின் பிரிவுகள்
இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 9, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச் சட்டம் 1869, பிரிவு 32, இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தால் சிறப்புத் திருமணச்சட்டம் 1954 பிரிவு 22 மற்றும் இஸ்லாமிய மத சம்பிரதாயத்தின்படி நிக்காஹ் செய்துகொண்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியத் தனிச் சட்டங்கள்என இந்தச் சட்டங்கள் எல்லாம் பிரிந்து வாழும் தம்பதி மீண்டும் சட்டப்படி இணைய துணை நிற்கின்றன.
இதற்கு எப்படி மனு செய்ய வேண்டும்?
கணவனோ, மனைவியோ வலுவான காரணமில்லாமல் பிரிந்து வாழ்கிறார்கள் என்றால், சேர்ந்து வாழ ஆசைப்படும் இருவரில் யாராவது ஒருவர், மேலே குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் வசிப்பிடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். பொதுவாக, கணவனோ, மனைவியோ, ‘என் துணையை என்னோடு சேர்த்து வையுங்கள்என்று நீதிமன்றம் செல்கிறார் என்றால், அந்த ஒரு காரணமே அவர்மீது இன்னொருவருக்கு அன்பை ஏற்படுத்தும். ஈகோ உடையவும், அவர்கள் மீண்டும் இணையவும் வாய்ப்புகள் உருவாகும்.
இந்தச் சட்ட நடைமுறை யாருக்கெல்லாம் பொருந்தும்?
  • அங்கீகரிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். லிவிங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.
  • இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். ஆனால், எங்களுக்குள் எப்போதும் சண்டை; சேர்ந்து வாழ மறுக்கிறார். எங்களைச் சேர்த்து வையுங்கள்என்று இச்சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியாது.
  • இருவரும் இரு வேறு வசிப்பிடத்தில் பிரிந்து வாழ்கின்றனர் என்பது நிரூபணமாக வேண்டும்.
  • சேர்த்துவைக்க மனு செய்திருக்கும் மனுதாரர், அவரது தரப்பை மெய்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் தரப்பில் நீதிமன்றம் திருப்தி அடைந்தால் மட்டுமே எதிர்த்தரப்பை நீதிமன்றத்துக்கு அழைக்கும்.
  • எதிர்த்தரப்பு, பிரிந்து வாழ்வதற்கான நியாயமான காரணத்தை முன் வைக்கும் பட்சத்தில், அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்
  • நியாயம் மனுதாரரின் தரப்பில்தான் இருக்கிறது எனில் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனத் தீர்ப்பாகும்.
  • தம்பதிகள் இல்லறத்தில் இணைய வேண்டும்என்ற தீர்ப்பை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.08.2018 

Tuesday, July 31, 2018

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
கடந்த 1993ம் ஆண்டு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,
பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது. இந்த ஆணையம் நமது மாநிலத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆணையத்தின் குறிக்கோள்கள்கள் என்னென்ன?
1. மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
2. பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.
3. பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.
மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள் என்னென்ன?
1. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.
2. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்
3. பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.
4. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம்.
என்ன தீர்வு கிடைக்கும்?
யாராவது மனு கொடுத்தார்கள் என்றால், எதிர் மனுதாரருக்குச் சம்மன் அனுப்பி, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், உரிய துறைகளுக்கு மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அவர்களுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருக்குமானால் அதில் திருத்தங்கள் செய்யும்படி பரிந்துரைக்கவும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வமான தண்டனையோ, தீர்ப்போ சொல்லுகின்ற அதிகாரம் இந்த ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் அடங்கிய அதிகாரங்களாகவேதான் இருக்கின்றன.
இதன் முகவரி:
தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்,
தேவநேயப் பாவாணர் நூலகம், 2வது மாடி,
735, அண்ணா சாலை,
சென்னை
தொலைபேசி எண்: 044 25264568