disalbe Right click

Wednesday, March 6, 2019

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 101

இந்திய சாட்சியச் சட்டத்தில் - மெய்ப்பிக்கும் சுமையைப் பற்றி .....
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
காவல்நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ எவர்மீதும், யாரும் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரினை மெய்ப்பிக்கும் சுமை யாருடையது? என்ற கேள்விக்கு இந்திய சாட்சியச் சட்டம் விடை தருகிறது. ஏனென்றால், நீதிமன்றமானது தன்னிடம் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஒரு வழக்கையும் அளிக்கப்படும் சாட்சியங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும்,  தீர்த்து வைக்கிறது.
பேனா இருக்கிறது, பேப்பர் இருக்கிறது, எழுதுவோம் புகாரை! என்று பொய்புகாரை எழுதி காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ ஒருவர் வழக்கு தொடுக்கலாம். ஆனால், அந்தப் புகாரிலுள்ள சங்கதிகளை மெய்ப்பிக்கும் சுமையானது புகார்தாரருக்கே உள்ளது. நாம் தொடுக்கின்ற வழக்குகளை நாம்தான் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு மெய்ப்பிக்க முடியாவிட்டால், அந்த வழக்கு காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்படும். 
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 101
சட்டப்படியான உரிமை அல்லது பொருள் எதையாவது பற்றி ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று ஒருவர் வழக்கு தாக்கல் செய்தால், அது அந்த வழக்கில் கூறியுள்ள சங்கதிகளின் உண்மையைப் பொறுத்து இருக்குமானால், அந்த உண்மைகளை அவரேதான்    மெய்ப்பிக்க   வேண்டும். 
உதாரணம் :
ஒரு குற்றம் செய்ததற்காக ராஜா என்பவர் மீது குமார் என்பவர் வழக்குத் தொடுக்கிறார்! என்று வைத்துக் கொள்வோம். அந்த ராஜா என்பவர் குற்றம் செய்தார்! என்பதை குமார்தான் மெய்ப்பிக்க வேண்டும். 
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 102
ஒருவர் தொடுத்த வழக்கை அவரேதான் நிரூபிக்க வேண்டும் என்பது பற்றி இந்திய சாட்சியச் சட்டம் 101ல் நாம் பார்த்தோம். அவ்வாறு நிரூபித்துவிட்டால் வழக்குத் தொடுத்தவருக்கு வெற்றி கிடைத்துவிடும். ஆனால், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் சங்கதிகளைப் பற்றிக் கூறினால் அந்த சங்கதிகளைக்கூறிய குற்றம் சாட்டப்பட்டவரே அதனை  மெய்ப்பிக்க வேண்டும்
உதாரணம் : 1
பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்ததாக பயணச் சீட்டு பரிசோதகர் ஒருவரால் ரயில் பயணி ஒருவர் குற்றம் சாட்டப்படுகிறார். தன்னிடம் பயணச்சீட்டு உள்ளதாக விசாரணையில் அந்தப் பயணி கூறுகிறார். தன்னிடம் பயணச்சீட்டு இருப்பதை அந்தப் பயணிதான் மெய்ப்பிக்க வேண்டும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு - 211
பொய்யான புகாரினை  ஒருவர் நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ அளித்தால்  பாதிக்கப் பட்டவர் இந்திய   தண்டணைச் சட்டம் பிரிவு 211ன் கீழ் அவருக்கு  இரண்டு வருட தண்டணை பெற்றுத் தரலாம்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.03.2019

Monday, February 25, 2019

சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: 'சட்டவிரோத கைதுக்காக, போலீசாருக்கு எதிராகவும், இயந்திர கதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட தயங்காது' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
செம்மர கட்டைகள் கடத்தியதாக, ஒரு வாகனத்தை பிடித்து, ஐந்து பேருக்கு எதிராக, வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், சென்னை பாரிமுனை அருகில் நின்ற, மாநில, 'பில்லியட்ஸ்' விளையாட்டு வீரரும், அவரது பயிற்சியாளரும், கைது செய்யப்பட்டனர். இவர்கள், 2016, பிப்., 22ல் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பில்லியட்ஸ் வீரர், தாக்கல் செய்த மனு:
பயிற்சி முடித்த பின், தங்கச் சாலையில் இறக்கி விடும்படி, பயிற்சியாளர் கேட்டார். வரும் வழியில், பாரிமுனை தம்புசெட்டி தெருவில், வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். மொபைல் போனில், அவரது நண்பருடன் பேசினார். அப்போது, முத்தியால்பேட்டை போலீசார், எங்களை கைது செய்தனர். எதற்காக கைது செய்து, காவலில் வைத்தனர் என்பது தெரியாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பொறியியல் கல்லுாரி மாணவரான மனுதாரர், பில்லியட்ஸ் விளையாட்டு வீரராக உள்ளார். ஏன் கைது செய்யப்பட்டோம் என, தெரியாமல், சிறையில் உள்ளார். அவரது மனதில், இந்த சம்பவம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அவர் மட்டுமின்றி, அவரது பெற்றோர், குடும்பத்தினரும் அதிர்ந்து போயிருப்பர்.
சட்டவிரோத கைது, ஒருவரது சுதந்திரத்தை மீறுவதாகும். இதனால் தான், ஒருவரை கைது செய்யும் போது, போலீசார் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை, நீதிமன்றம் அவ்வப்போது உணர்த்தி வருகிறது.
மாஜிஸ்திரேட்டும், இயந்திரகதியாக காவலில் வைக்கும்படி, உத்தரவு பிறப்பிக்கின்றனர்.எனவே, சட்டவிரோதமாக கைது செய்யும் போலீசாருக்கு எதிராகவும், இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதற்கு, நீதிமன்றம் தயங்காது. இதை, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும், சுட்டிக் காட்டுகிறோம். நீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகளை மீறியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரியிடம் விளக்கம் கோரி, ஒழுங்கு நடவடிக்கையை, மாவட்ட வனத்துறை அதிகாரி எடுக்க வேண்டும். மனுதாரரை காவலில் வைக்க உத்தரவிட்ட, எழும்பூர் மாஜிஸ்திரேட், வரும், 2௮ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் போது, ஆஜராக வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
***********************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 26.02.2019

Tuesday, February 19, 2019

இனி அவசர உதவிக்கு 112

இனி அவசர உதவிக்கு 112
தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 112 எண் சேவை தொடக்கம்: இனி அவசர உதவிகளுக்கு இந்த ஒரே எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை  19.02.2019 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி சேவை, நமது நாட்டில் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 19.02.2019   செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவிக்கும் ஒவ்வொரு எண்
இதற்கு முன்னர் காவல்துறைக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்புத்துறைக்கு 101 என்ற எண்ணையும், சுகாதாரத் துறையினருக்கு 108என்ற எண்ணையும், பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு வந்தனர்.
இனி 112 என்ற ஒரு எண் போதும்
பொதுமக்கள் இனி 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும்  கோர முடியும்.
நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், (லேண்ட் லைன்) தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினால் போதும், அந்த அழைப்பானது   அவசரகால   உதவி சேவை   மையத்துக்கு  அழைப்பு செல்லும்
ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி என்றால், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினால், அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும்
சாதாரண செல்லிடப்பேசி எனில், 5ஆம் எண் பொத்தான் அல்லது 9ஆம் எண் பொத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். 
மேலும், செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம்அந்த அழைப்பு, 112 சேவை மையத்துக்கு செல்லும்
தொடர்பு கொண்டபின்னர் என்ன நடக்கும்?
தொடர்பு கிடைத்த பின்னர், அதன் மூலம் பேசும் அதிகாரிகள், பொதுமக்கள் கோரும் உதவி வகைகளை குறித்துக் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார நிலையம் மற்றும் பிற உதவிகள் மையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு தகவல் அனுப்புவார்கள்.  அதன்மீது சம்பந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வர்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.02.2019