disalbe Right click

Thursday, February 13, 2020

2வது திருமணம் - பெண்களுக்கு சட்டம் தரும் பாதுகாப்பு

2வது திருமணம் - பெண்களுக்கு சட்டம் தரும் பாதுகாப்பு
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
சட்டம் பெண் கையில்! - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது?
நமது நாட்டில் ஒரு கணவன் அல்லது ஒருமனைவி உயிருடன் இருக்கும்போது, அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த திருமண பந்தத்தை சட்டப்படி முறித்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட கணவரோ அல்லது மனைவியோ  இன்னொரு திருமணம் செய்துகொள்வதை, சட்டம் குற்றச்செயலாகவே கருதுகிறது.
சட்டப்படி தவறுதான்! இருந்தாலும்……
இருதார திருமணம் சட்டப்படி தவறுதான்! இருந்தாலும், பெரும்பாலான இடங்களில்,  அது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமணமாகத்தான் கருதப்படுகிறது. சட்டப்படி செல்லாத திருமணம் என்றாலும்கூட,சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் நியாயத்தை நீதிமன்றத்தால் புறந்தள்ள முடிவதில்லை. அதுபோன்ற நேரங்களில், வழக்கின் தன்மைக்கேற்ப நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கும் கணவனின் சொத்து மற்றும் பணி ஓய்வு ஊதியப் பங்குகளில் சாதகமான தீர்ப்புகளை சில நேரங்களில்  வழங்கியுள்ளது..
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 மற்றும் பிரிவு 495  என்ன சொல்கிறது?
ஒரு மனைவியோ அல்லது ஒரு கணவனோ உயிருடன் இருக்கும்போதே தனது துணைக்குத் தெரியாமல், புதிதாக  மணம் முடிக்க இருப்பவரிடமும் அதைப்பற்றி சொல்லாமல் தனக்கு திருமணமானதை மறைத்து அவர்களில் யாராவது ஒருவர் இன்னொரு திருமணம் செய்துகொள்வது கிரிமினல் குற்றம் ஆகும். அதற்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494-ன் கீழ், பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்து அது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். மேலும், 495-ன் கீழ் புகார் அளித்து அது நிரூபிக்கப்பட்டால், முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்தவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.
இந்து திருமணச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்து மதத்தை சேர்ந்தவர்கள், முதல் திருமணம் நடைமுறையில் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்துகொண்டால், இந்து திருமணச் சட்டம் பிரிவு 17-ன்படி அது குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 மற்றும் 495ல் விளக்கப்பட்டுள்ள தண்டனை இதற்கும் பொருந்தும்
சிறப்பு திருமணச் சட்டம் 1954 என்ன சொல்கிறது?
எந்த மத சம்பிரதாயங்களையும் பின் பற்றாமல், சிறப்புத்திருமணச் சட்டத்தின் கீழ் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்தவர் எவரும் இரண்டாவது திருமணம் குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு சிறப்பு திருமணச் சட்டம் 1954 பிரிவு 43, 44 மற்றும்  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 ,495-ன் படி தண்டனை வழங்கப்படும்.
கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 என்ன சொல்கிறது?
இரண்டாவது மணத்துக்கு எதிராக கிறிஸ்தவர் திருமண சட்டத்தில்  ஏதும் சொல்லப்படவில்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவர் தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அந்தத் தவறுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 193-ன் கீழ் சிறைத்தண்டனை வழங்கப்படும்
இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?
முதல் திருமண உறவில் இருக்கும்போது, ஒருவர் மற்றொரு திருமணம் செய்து கொள்வதை இஸ்லாமியச் சட்டம் குற்றச் செயலாக கருதுவதில்லை.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு
காவல்துறைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற  ஒருஅதிகாரியின் இரண்டாவது மனைவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மறைந்த தன் கணவரின் ஓய்வூதியத் தொகை மற்றும் இதர பணப்பலன்களில் முதல் மனைவிக்கு இணையாகத் தனக்கும் உரிமை வழங்க வேண்டும்என்று ரிட் வழக்கு தாக்கல் செய்தார்,  தனது கணவர், அவரது முதல் திருமணத்தையும், குழந்தைகளையும் மறைத்து, தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகவும், உண்மை தெரிந்த பின்பு சமரச மன்றத்தில் தாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தன் வழக்கில் விளக்கமும் அளித்திருந்தார்.
அரசாங்கத்தில் இருந்த ஆவணங்களில், அந்த காவல் அதிகாரியின் மனைவி என்ற இடத்தில் வழக்கு தொடர்ந்த இரண்டாவது மனைவியின் பெயர் எந்த இடத்திலும் இல்லை என்பதால், கணவரின் ஓய்வூதியப் பலனை தனக்கு அளிக்கக் கோரிய இந்த இரண்டாவது மனைவியின் வழக்கை நீதிமன்றம்  நிராகரித்தது.
தமிழ்நாடு பென்ஷன் ரூல்ஸ் 1978 என்ன சொல்கிறது?
ஒரு அரசு ஊழியரின் குடும்ப ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கு இறந்தவரின் மனைவியை மட்டுமே சேர்க்க முடியும் என்று  சொல்கிறது.
நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, அரசாங்க ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பைகேமி குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் தமிழக அரசுக்கு  உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.  மேலும், அரசு ஊழியர்கள் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்கும்போது, அவர்கள் கொடுக்கும் மனைவி தொடர்பான விவரங்களை  ஏற்கனவே உள்ள அரசு ஆவணங்களின்படி சரிபார்த்துக் கொண்ட பிறகே அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இரண்டாவது திருமணம் - கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்!
மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில்தான், முதல் திருமணத்தை ரத்து செய்யாமல், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்வது கிரிமினல் குற்றம் என்றும், இது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இரண்டாவது திருமணம் செய்த அரசு ஊழியரின் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது.

இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றப்பட்டால்...

ஒரு பெண், தான் ஏமாற்றப்பட்டு இரண்டாவது திருமணம் செய்யப்பட்டால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று உடல் உறவுக்கு உட்படுத்தப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 493, 496, 497, 498 வரையுள்ள பிரிவுகள் மற்றும் 415 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.

*************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.02.2020 

Wednesday, February 12, 2020

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - விதிமுறைகள்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - விதிமுறைகள்
பிளஸ் 2 பொது தேர்வு, வருகின்ற மார்ச், 2ல் துவங்க இருக்கிறது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க இருக்கிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுக்கான விதிமுறைகள் அடங்கிய கையேடு  அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்:
  1. தேர்வு அறை கண்காணிப்பு பணிக்கு, அங்கீகாரம் பெற்ற, அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்
  2. முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் பணிக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமிக்க கூடாது.
  3. அனைத்து தேர்வு மையங்களிலும், அந்த பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட யாரும், தேர்வின்போது இருக்கக் கூடாது
  4. வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏர்பாடு செய்து கொள்ள வேண்டும்
  5. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள்களை மாற்றுவது, கிரிமினல் குற்றமாகும். அந்த தேர்வர்கள் மீது, காவல்துறையில் புகார் செய்ய வேண்டும்.
  6. பறக்கும் படையில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பிற கல்வி மாவட்டங்களில், பணி வழங்க வேண்டும்
  7. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் எடுத்துச் செல்லும் பணி - நம்பத் தகுந்தவர்களை நியமிக்க வேண்டும். அவர்களுடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருக்க வேண்டும்.
  8. கட்டுக்காப்பு மையங்களில், விடைத்தாள்களை பத்திரமாக, 'சீல்' இட்டு வைக்க வேண்டும்
  9. தேர்வு மையங்களின் வாயில் கதவுகளை பூட்டி வைக்கக் கூடாது
  10. பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள், ஆய்வுக்கு வரும் வகையில், எந்த தடைகளும் இருக்கக் கூடாது
  11. மாணவ - மாணவியரை பயமுறுத்தும் வகையில், ஆய்வு பணி செய்யக் கூடாது.
  12. மாணவியரை சோதனையிட, பெண் ஆசிரியைகள் நியமிக்கப்பட வேண்டும்
  13. அனைத்து தேர்வர்களையும், கட்டாயம் சோதிக்க தேவையில்லை; சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் சோதிக்கலாம்
  14. தேர்வு மைய வளாகம், தேர்வறை, கழிப்பறை, பெஞ்ச், மேஜை உள்பட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
  15. தேர்வு எழுதும் அறைக்குள் மாணவர்கள், 'மொபைல் போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச்' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வரக்கூடாது
  16. சாதாரண, 'வாட்ச்' அணிந்து கொள்ளலாம். ஆனால், தேர்வறையில் இயங்கும் கடிகாரம் காட்டும் நேரத்தையே பின்பற்ற வேண்டும்
  17. தேர்வு மைய கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தங்கள் மொபைல் போனை, 'ஸ்விட்ச் ஆப்' செய்து, முதன்மை கண்காணிப்பாளிடம் ஒப்படைத்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?
சட்ட போராளிகளிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆயுதம்....
சென்னை மாநகரில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை அல்லது நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம்  அமைந்து  உள்ளது.  இந்தத் துறையானது  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கிராமங்களின் வரைபடங்கள்
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்குரிய கிராம வரைபடம் இங்கு விலைக்கு  கிடைக்கிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரைபடங்களை உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாங்கலாம்! என்றாலும். அங்கு கிடைக்காத வரைபடங்கள்  இங்கு கட்டாயம் கிடைக்கும்.
இந்த கிராம வரைபடங்கள் சுமார் 1970 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை ரீசர்வே செய்யப்பட்ட வரைபடங்களாகும். எனவே முழு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

இந்த வரைபடத்தின் மூலமாக,  நமது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான  குளம்குட்டைகால்வாய்ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாம் எளிதாக  கண்டறியலாம். 
மேலும், இந்த கிராம வரைபடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் மற்றும்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விஸ்தீரனத்தையும் தற்போது ( நடப்பு ஆண்டில் ) உள்ளபதிவேடுகளில் உள்ள விஸ்தீரனத்தையும் ஒப்பிட்டு, எங்கெங்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக கண்டறிய முடியும்.
உங்களால் நேரில் சென்று வாங்க முடிந்தால், தேவைப்பட்ட வரைபடத்தை அரைமணி நேரத்திற்குள் வாங்கிவிட முடியும். 
நேரடியாக சென்று அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச்செய்து மட்டுமே வரைபடங்களை வாங்க முடியும்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.02.2020